என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, August 11, 2010

அசத்தும் அஜந்தா குகைகள்

மகாராஷ்டிராவின் மலைப் பிரதேசங்களில் 1819-ம் ஆண்டு வேட்டையாடச் சென்ற ஆங்கிலேய ராணுவ அதிகாரி ஜான் ஸ்மித் தற்செயலாக கண்டுபிடித்த கலைப் பொக்கிஷங்கள் தான், அஜந்தா குகைக் கோயில்கள். சஹ்யாத்ரி மலைத் தொடரில் வகோரா நதியை ஒட்டி, குதிரை லாடம் போன்ற வடிவத்தில் இந்த குகைக் கோயில்களை அமைத்திருக்கிறார்கள். இங்கு மொத்தம் உள்ள 30 குகைகளை கோயில்கள், துறவி மடங்கள் என இரண்டு விதமாகப் பிரிக்கலாம். இங்குள்ள சிற்பங்களும், ஓவியங்களும் புத்தரின் பெருமைகளைப் பேசும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

அஜந்தா குகைகளின் ஆரம்பப் பணிகள் கிமு இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கியுள்ளன. பின்னர் கிபி ஐந்தாவது, ஆறாவது நூற்றாண்டு வரை அந்தந்த காலத்தைச் சேர்ந்த கலைஞர்கள் தங்களின் கற்பனையையும், கைத்திறனையும் கொட்டி இந்த குகைகளை சொர்க்கபுரியாக மாற்றி இருக்கிறார்கள். இங்கு சுவர்களிலும், தூண்களிலும், கூரைகளிலும் தீட்டப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள் நம்மை வாய் பிளக்க வைக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை காலத்தால் அழிந்து விட்டாலும், போதிசத்துவர், வஜ்ரபாணி போன்ற சில முக்கிய ஓவியங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.

இந்த குகைக் கோயில்களின் சிற்ப வேலைப்பாடுகளும் காண்போரை பிரமிக்க வைக்கின்றன. விரல்களில் தர்மசக்கர முத்திரையுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மாபெரும் புத்தர், ஒரே பொதுவான தலையுடன் காட்சியளிக்கும் நான்கு மான்கள் ஆகிய சிற்பங்கள் அந்தக் கலைஞர்களின் கற்பனைத் திறனுக்கு சாட்சியாக காட்சியளிக்கின்றன. அதேபோல பதினாறாவது குகையின் கூரையில், பாறையிலேயே மிக நேர்த்தியாக உத்தரம் போல செதுக்கியிருக்கிறார்கள். இருபத்தாறாவது குகையில் வலது கையை தலைக்கு வைத்தபடி படுத்திருக்கும் மகாபரிநிர்வாண புத்தரின் சிலை மிக அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. புத்தரின் தலை அழுத்துவதால் தலையணையில் ஏற்படும் அழுத்தங்கள் கூட தெரியும் அளவுக்கு நுட்பமாக இந்த சிற்பத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

மலைப் பாறைகளை குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் அலங்கார நுழைவாயில்கள், இருபத்தெட்டு தூண்களுடன் கூடிய மிகப் பெரிய பிரார்த்தனைக் கூடம், ஏழு தலை நாகத்தின் கீழ் தனது மனைவியுடன் ஒய்யாரமாக அமர்திருக்கும் நாகராஜா சிற்பம் என இங்கு காணக் கிடைக்கும் காட்சிகள் அனைத்தும் கண்களை வியப்பால் விரிய வைத்துவிடுகின்றன. இப்படி பல அற்புதங்களை தன்னுள் ஒளித்து வைத்திருப்பதால், நூற்றாண்டுகளைக் கடந்த நிலையிலும், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகின்றன இந்த அஜந்தா குகைக் கோயில்கள்.

No comments:

Post a Comment