என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, August 11, 2010

எகிப்தில் ஒரு தாஜ்மகால்

யமுனை நதிக்கரையோரம் அமைந்திருக்கும் தாஜ்மகாலைப் போலவே ஆப்ரிக்காவின் நைல் நதிக்கரை ஓரத்திலும் ஒரு அழியாத காதல் சின்னம் காலத்தை வென்று நின்று கொண்டிருக்கிறது. சுமார் 3300 ஆண்டுகளுக்கு முன்னால் கி.மு 1290 முதல் 1224 வரை எகிப்தை ஆண்டை இரண்டாம் ராமசேஸ் மன்னன் தன் மனைவி நெஃபர்டேரி நினைவாக (இதை சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்), நைல் நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள மலைகளைக் குடைந்து இந்த அற்புத குகைக் கோவில்களை உருவாக்கினான்.

அபு சிம்பெல் கோவில்கள் என்று அழைக்கப்படும் இவற்றில் மொத்தம் இரண்டு கோவில்கள் உள்ளன. இதில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது மன்னர் கோவில் என்றும், சிறியதாக உள்ளது அரசி கோவில் என்றும் வழங்கப்படுகிறது. பெரிய கோவிலின் வாயிலில் மன்னர் ராமசேஸின் 20 அடி உயர சிற்பங்கள் நான்கு உள்ளன. இவற்றுடன் ராஜ மாதா, அரசி நெஃபர்டேரி ஆகியோரின் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன.
அதேபோல வாயிலின் மேல் ராஜாளி தலையுடன் கூடிய சூரியக் கடவுள் ராவின் சிலை உள்ளது. உள்ளே நுழைந்ததும் கூரையைத் தாங்கிப் பிடித்தபடி மன்னர் ராமசேஸின் 8 சிற்பங்களும், சுவர்களில் மன்னரின் போர்க்கள வெற்றிகளைக் குறிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அடுத்த அறையில் மன்னர் ராமசேஸும் அரசி நெஃபர்டேரியும் கடவுள்களுக்கு முன்னால் நிற்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்து உள்ள கர்ப்பகிரகத்தில் மன்னர் உள்பட கடவுளர்கள் தங்கள் ஆசனங்களில் அமர்ந்துள்ள அற்புதமான சிற்பங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 22 மற்றும் அக்டோபர் 22 ஆகிய தேதிகளில் சூரிய உதயத்தின்போது, சூரியனின் ஒளிக்கற்றைகள் இந்த குகைக் கோவிலுக்குள் ஊடுருவி இந்த சிலைகளின் முகத்தில் படுவது போல அமைத்திருக்கிறார்கள்.
1960களில் எகிப்தில் அஸ்வன் அணை கட்ட முயன்றபோது இந்த குகைக் கோவில்களுக்கு சேதம் ஏற்படும் நிலை உருவானது. எனவே ஒரு சர்வதேச குழு அமைக்கப்பட்டு அவர்கள் இந்த கோவில்களை மேடான இடத்திற்கு நகர்த்தினார்கள். ஆமாம், ஒட்டுமொத்த மலையை அப்படியே பாளம் பாளமாக பெயர்த்து பாதுகாப்பான ஓர் இடத்தில் முன்பிருந்தது போலவே அமைத்துவிட்டார்கள். இதற்கு 40 மில்லியன் டாலர் பணமும், நான்கு ஆண்டுகளும் செலவானது.

கடும் உழைப்பில் விளைந்த அற்புதங்கள் அவ்வளவு சீக்கிரம் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதில்லை என்பதை இன்றும் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கின்றன இந்த அபு சிம்பெல் கோவில்கள்.

No comments:

Post a Comment