என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, December 29, 2012

மெட்ராஸ் - பெயர் வந்த கதை


நீங்கள் மெட்ராஸ்காரரா, சென்னைக்காரரா என யாராவது கேட்டால் அவர்களை ஏற இறங்கத்தான் பார்க்கத் தோன்றும். ஆனால் மெட்ராஸ், சென்னை ஆகியவை இரண்டு தனித்தனிப் பகுதிகள் என்பதுதான் உண்மை. இந்த இரண்டின் பெயருக்குப் பின்னாலும் ஏராளமான கதைகள் இருக்கின்றன.

மெட்ராசை மெட்ராஸ்பட்னம், மதராபட்னம், மத்ராஸ்படான், மதராஸ்படம், மதரேஸ்பட்னம், மத்தராஸ், மதராஸ், மதரேஸ்படான், மதராஸாபடான், மாத்ரிஸ்பட்னம், மதேராஸ், மதிராஸ் என ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் அவரவர் வசதிக்கேற்ப அழைத்திருக்கிறார்கள்.

1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி, பிரான்சிஸ் டே என்ற கிழக்கிந்திய கம்பெனி ஏஜெண்ட் சோழமண்டலக் கடற்கரையில் ஒரு துண்டு பொட்டல் நிலத்தை வாங்கினார். பிரிட்டீஷார் அந்த இடத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர். கோட்டையை சுற்றி மெல்ல வளர்ந்து விரிவடைந்ததுதான் இன்றைய சென்னை மாநகரம். இதுதான் சென்னையின் 'சுருக்' வரலாறு.
அந்தக்கால மெட்ராஸ்

பிரான்சிஸ் டே வாங்கிய நிலம், சில மீனவக் குடும்பங்களும், இரு பிரெஞ்சு பாதிரியார்களும் வசித்த சிறிய கிராமத்திற்கு தெற்கே இருந்தது. அந்த கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் பெயர் மாதராஸன் என்றும், எனவே அந்த கிராமம் மாதராஸ்பட்னம் என்றும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தலையாரியின் வாழைத் தோட்டத்தை, தொழிற்சாலை அமைப்பதற்காக டே வாங்கினார். நிலத்தை கொடுக்க அவர் முரண்டு பிடித்ததால், அங்கு அமையவிருக்கும் தொழிற்சாலைக்கு மாதராஸன்பட்னம் எனப் பெயரிடுவதாக வாக்களித்து, டே நிலத்தை வாங்கியதாக சொல்லப்படுகிறது.

மதராஸ் என பெயர் வந்ததற்கு வேறு ஒரு சுவையான காரணமும் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு முன்பே சாந்தோம் பகுதியில் போர்த்துகீசியர்கள் வசித்து வந்தனர். இங்கு பிரான்சிஸ் டேவிற்கு ஒரு காதலி இருந்தார். காதலிக்கு அருகிலேயே வசிக்க வேண்டும் என்பதாலேயே டே அந்த துண்டு நிலத்தை தேர்வு செய்தார் என்று ஒரு கதை உள்ளது. டேவின் காதலி சாந்தோமில் அந்நாட்களில் செல்வாக்குடன் வாழ்ந்துவந்த மாத்ரா குடும்பத்தை சேர்ந்தவர். கடற்கரை ஓரத்தில் இருந்த நிறைய குப்பங்கள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தன. எனவே, டே தனது காதலியின் குடும்பப் பெயரை இந்நகருக்கு சூட்டியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

1909இல் மெட்ராஸ் வரைபடம்

எக்மோர் ஆற்றுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம்சந்திரகிரி ராஜாவிற்கு சொந்தமானது. அதனை வாங்க அவரது உள்ளூர் நாயக்குகளான தாமர்லா சகோதரர்களிடம் பிரான்சிஸ் டே பேரம் பேசினார். அவர்கள் தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை, புதிதாக அமையவிருக்கும் குடியிருப்புக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நிலத்தை கிழக்கிந்திய கம்பெனிக்கு பட்டா எழுதிக் கொடுத்ததாகவும், அதனால் அந்த பகுதிக்கு சென்னப்பட்டினம் எனப் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆக, மதராஸபட்டினம் வடக்கிலும், சென்னப்பட்டினம் தெற்கிலும் இருந்த இருவேறு பகுதிகள். பின்னர் காலப்போக்கில் இரண்டையும் ஒருங்கிணைத்து மதராஸ் என ஆங்கிலேயர்கள் அழைக்கத் தொடங்கினர்.

இவை தவிர வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன. சோழமண்டல கடற்கரையில் வரும் இப்பகுதி, சோழப் பேரரசின் சிற்றரசர்களான முத்தரையர்கள்வசம் கொஞ்ச காலம் இருந்ததால், இது முத்தராசபட்டினம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது முத்தராசா, முத்ராஸ், மத்ராஸ் என மருவியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆற்காடு நவாப்புகள் மதராஸ்பட்டினத்தில் இருந்த மதராஸா எனும் சமயப் பள்ளிகளுக்கு பல தலைமுறைகளாக காப்பாளர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். மதராஸா என்றால் சமயப்பள்ளி என்று பொருள். அதனால் மதராஸா என்ற சொல்லில் இருந்துதான் மதராஸ் எனும் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

இதேபோன்று சென்னை பெயருக்கு பின்னாலும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் சென்னையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் செம்மை நிறத்தில் காணப்பட்டன. அதனால் அந்தப் பகுதிக்கு செம்மை என்று பெயர் வைக்கப்பட்டது. நாளடைவில் செம்மை என்பது சென்னையாக மாறிப்போனது என்பது ஒரு கருத்து.

ஆரம்ப நாட்களில் ஜார்ஜ் கோட்டைக்குள்தான் காளிகாம்பாள் கோயில் இருந்தது. பின்னர்தான் தம்பு செட்டித் தெருவிற்கு அம்மன் இடம் மாறினாள். ஏற்கனவேகோட்டைப் பகுதிக்குள் இருந்ததால் கோட்டையம்மன் என்ற பெயரும் அவளுக்கு உண்டு. இந்த காளிகாம்பாளுக்கு பக்தர்கள் செந்தூரம் பூசி வழிபட்டதால், சென்னம்மன்’ என்று அழைத்தார்கள். ‘சென்னம்மன்’ குடியிருக்கும் இடம் படிப்படியாக வளர்ச்சி கண்டது. நாளடைவில் சென்னம்மன் சென்னையாக மாறியதாக ஒரு தரப்பினர் சொல்கின்றனர். சென்னம்மன் என்பதை 'செம் அன்னை' என்றும் சிலர் அழைத்தனர். இந்தச் செம் அன்னை தான் சென்னை என மாறியதாகவும் கூறப்படுகிறது.

சென்னைப் பகுதியில் சென்னக் கேசவப் பெருமாள் கோயில் எனும் பெயரில் ஒரு கோயில் இருந்தது. இப்போதும் இருக்கிறது. இந்தக் கோயில் நகரத்தின் முதன்முகப்பில் இருந்ததால், இக்கோயில் இருந்த நகரத்திற்கு சென்னை என்ற பெயர் வந்ததாகச் சிலர் கூறுகின்றனர். சென்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா, சின்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா எனத் தெரியவில்லை. ‘சின்ன’ என்ற சொல் ‘சென்ன’ என்று மாறிப் போனதாகவும் செய்திகள் உள்ளன.

இப்படி தனது பெயருக்கு பின்னால் ஏராளமான மர்மங்களை ஒளித்து வைத்தபடி, ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றும், தமிழில் சென்னை என்றும் அழைக்கப்பட்டு வந்த இந்நகரம், இனி அனைத்து மொழிகளிலும் சென்னை என்றே அழைக்கப்படும் என 1996ஆல் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று பெயர் மாற்றம் பெற்றது.

நன்றி - தினத்தந்தி

* மசூலிப்பட்டணத்து ஆங்கிலேயர்கள் 1639ஆம் ஆண்டு சூரத்திற்கு எழுதிய கடிதத்தில் 'மதராசபட்டம் என்ற ஒரு இடம் செயின்ட் தோமுக்கு அருகில் இருக்கிறது' எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

* அமெரிக்காவின் ஒரெகான் மாகாணத்தில் 'மெட்ராஸ்' என்று ஒரு ஊர் இருக்கிறது. நமது மெட்ராசில் இருந்து அங்கு சென்ற துணிகளில் அச்சடிக்கப்பட்டிருந்த சொல்லில் இருந்துதான், 1903இல் அந்த ஊருக்கு இந்த பெயர் வந்தது.

Sunday, December 23, 2012

பாவப்பட்ட பிகட்


ஒருமுறை கதாநாயகன் வேடம் போட்டுவிட்டு அதே நாடகத்தில் மறுமுறை வில்லன் வேடம் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு வாழ்க்கையோடு போராடியவர்தான் சென்னையின் ஆளுநராக இருந்த ஜார்ஜ் பிகட் (George Pigot).
ஜார்ஜ் பிகட்

ஜார்ஜ் கோட்டைக்குள் இருக்கும் புனித மேரி தேவாலயத்தின் முன்புறம் ஏராளமான கல்லறைக் கற்கள் இருக்கின்றன. மெட்ராசில் வாழ்ந்து மறைந்த பல முக்கியப் பிரமுகர்களின் பரலோக விசிட்டிங் கார்டுகளைப் போல இருக்கும் இந்த கற்களின் பின்னால் ஒரு கதை இருக்கிறது.

1758-59இல் பிரெஞ்சுப் படைகள் சென்னையை முற்றுகையிட்ட போது, இன்றைய சட்டக்கல்லூரி இருக்கும் இடம் சுடுகாடாக இருந்தது. எனவே இங்கிருந்த கல்லறை மேடைகளை பீரங்கி நிறுத்தவும், கல்லறை ஸ்தூபிகளை மறைந்துகொண்டு சுடவும் பிரெஞ்சுப் படையினர் பயன்படுத்தினர். இதனால் கடுப்பான கம்பெனியினர், போர் ஓய்ந்ததும் இந்த கற்களை அகற்றி புனித மேரி தேவாலயத்தின் முற்றத்தில் பதித்துவிட்டனர். மற்றபடி தேவாலய வளாகத்திற்குள் புதைக்கப்பட்டவர்கள் வெகு சிலரே. அப்படி தேவாலயத்திற்குள்ளேயே புதைக்கப்பட்ட முதல் நபர் ஜார்ஜ் பிகட்தான்.

பதினேழு வயது சிறுவனாக எழுத்தர் வேலை பார்ப்பதற்காக இங்கிலாந்தில் இருந்து மெட்ராசிற்கு வந்தவர்தான் பிகட். கடின உழைப்பு அவரை 36 வயதில் மெட்ராசின் ஆளுநர் ஆக்கியது. இவர் ஆளுநராக இருந்தபோதுதான் பிரெஞ்சுப் படைகள் தளபதி லாலி தலைமையில் ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட்டன. 65 நாட்கள் நீடித்த இந்த முற்றுகையை பிகட் திறமையாக சமாளித்தார்.

போர் முடிந்ததும் மெட்ராசின் வளர்ச்சிப் பணிகளிலும் பிகட் மும்முரமாக ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து திரும்ப முடிவெடுத்த அவர், தமது 45வது வயதில் பதவியைத் துறந்துவிட்டு தாயகத்திற்கு கப்பல் ஏறினார். அவரின் சேவையைப் பாராட்டி, அயர்லாந்தின் பிரபுப் பட்டம் வழங்கப்பட்டது. இந்தியாவில் சேர்த்த 45 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு, அயர்லாந்தில் சொகுசான எஸ்டேட்டில் கடைசி காலத்தில் ஹாயாக ஓய்வெடுக்கலாம் என்று பிகட் நினைத்தார். ஆனால் விதி வேறுவிதமாக நினைத்தது.

12 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடுவதற்கு அவருக்கு அழைப்பு வந்தது. இந்த அழைப்பின் பின்னால் இருக்கும் ஆபத்து தெரியாமல் பிகட் இதனை ஏற்றுக் கொண்டார். மீண்டும் ஆளுநராக பதவி ஏற்பதற்காக மெட்ராஸ் வந்து இறங்கினார். ஆனால் மெட்ராஸ் வெகுவாக மாறியிருந்தது. இங்கிருந்த அரசியல் சூழலும் அதற்கேற்ப பல்வேறு மாற்றங்களை சந்தித்திருந்தது.

இந்த மாற்றங்களை ஏற்க மறுத்ததுதான் பிகட்டின் ஏமாற்றங்களுக்கான தொடக்கமாக அமைந்தது. முதல் முறை ஆளுநராக இருந்தபோது பிகட்டிற்கு உதவி செய்ய, உறுதுணையாக நிற்க நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் பிகட்டோடு சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கியவர்கள், சம வயதுக்காரர்கள். ஆனால் இம்முறை பிகட் தனி மரமாக நின்றார். வயோதிகம் அவரை சற்று சிடுசிடுப்பு மிக்கவராகவும் மாற்றியிருந்தது.

வந்த உடனேயே இங்கிருந்த கவுன்சிலர்களோடு மோதினார். விளைவு சில மாதங்களிலேயே பலரின் பகையை சம்பாதித்துக் கொண்டார். முதல்முறை ஆளுநராக இருந்தபோது தனது உத்தரவுகளை நிறைவேற்ற ஆட்கள் அடித்துப் பிடித்து ஓடுவதைப் போல இப்போதும் நடக்கும் என பிகட் எதிர்பார்த்தார். ஆனால் அவரவர் தங்கள் அதிகாரங்களை நிலைநிறுத்துவதிலும், இந்திய ராஜாக்களின் சண்டையில் எப்படி ஆதாயம் அடையலாம் என கணக்குப் போடுவதிலும் மும்முரமாக இருந்ததால் இவரது ஆணைகளை காது கொடுத்துக் கூட கேட்கவில்லை.

கடுப்பாகிப் போக பிகட் ஒருகட்டத்தில் சில கவுன்சிலர்களை கைது செய்ய உத்தரவிட்டார். ஒருமுறை கோபத்தின் உச்சிக்கு போய் கோட்டையின் தளபதியையே கைது செய்யச் சொன்னார். ஆனால் கவுன்சிலர்கள் ஒன்றுகூடி முடிவெடுத்து பிகட்டை கைது செய்துவிட்டனர். இரவு விருந்து ஒன்றில் கலந்துகொள்வதற்காக குதிரை வண்டியில் சென்றுகொண்டிருந்த பிகட்டை திடீரென சிலர் வழிமறித்தனர். என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் செயின்ட் தாமஸ் மலையில் உள்ள வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்று சிறை வைத்துவிட்டனர்.
கைது செய்யப்படும் பிகட்

சுமார் ஒன்பது மாதங்கள் அந்த வீட்டுச் சிறையில் இருந்த பிகட் உடல்நலம் குன்றியதால் அரசு இல்லத்திற்கு மாற்றப்பட்டார். ஆனாலும் உடல்நலனில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் 1777ஆம் ஆண்டு ஒருநாள் திடீரென உயிரை விட்டார். பிகட்டின் உடலை சிறப்பு (!) மரியாதைகளுடன் புனித மேரி தேவாலயத்திற்குள் புதைத்துவிட்டனர்.

இதனிடையே பிகட்டை சிறை வைத்தது குறித்த விசாரணை இங்கிலாந்தில் நடைபெற்றது. இறுதியில் பிகட்டை சிறை வைத்த 7 கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். நான்கு பேருக்கு தலா ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது. பிகட்டிற்கு மீண்டும் ஆளுநர் பதவி அளிக்க வேண்டும், அதனை அவரே ராஜினாமா செய்வார் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு ஊரெல்லாம் சுற்றிக் கொண்டு இந்தியா வருவதற்குள் பிகட் உலகை விட்டே போய்விட்டார்.

இறுதியில், என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் மாற்றங்களை ஏற்க மறுத்தால் ஒருவனின் நிலை என்னவாகும் என்பதற்கு உதாரணமாகிவிட்டார் லார்ட் பிகட்.

நன்றி - தினத்தந்தி

* பிகட் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருந்தாலும் அவருக்கு நிறைய குழந்தைகள் இருந்தனர்.

* பிகட்டிடம் ஒரு விசேஷமான வைரம் இருந்தது. அது அந்த காலத்தில் பிகட் வைரம் என்றே அழைக்கப்பட்டது.

Saturday, December 15, 2012

மெட்ராஸ் பாஷை


இன்னாபா... ஷோக்கா கீறியா?... நாஸ்டா துன்னுக்கினியா? என்று யாராவது விசாரித்தால் மெர்சலாகிவிடாதீர்கள்.. அதாவது மிரண்டு விடாதீர்கள். அக்மார்க் மெட்ராஸ்வாசிகளின் அன்பின் வெளிப்பாடாக கரைபுரண்டு வரும் வார்த்தை வெள்ளத்தின் நட்புத்துளிகள்தான் அவை. மூன்றரை நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட மெட்ராஸ் மாநகரின் அடையாளங்களில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ராஸ் பாஷை.

மெட்ராஸ் பாஷையின் அழகே அதன் வேகமும், எளிமையும்தான். ஆங்கிலம், தெலுங்கு, உருது என இந்த பகுதியில் புழங்கிய அனைத்து மொழிகளிலும் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து எடுத்து தமிழோடு பிசைந்து உருவாக்கிய கூட்டாஞ்சோறு மொழிதான் மெட்ராஸ் பாஷை. எவ்வளவு பெரிய சொற்றொடரையும் அப்படியே நசுக்கி பிசுக்கி ஒற்றைச் சொல்லாய் வார்த்து எடுக்கிற வார்த்தைச் சித்தர்களால் உருவானதுதான் இந்த அழகிய மொழி.
மெட்ராஸ் பாஷையின் வாத்தியார்கள்
உதாரணத்திற்கு, 'இங்கே அழைத்துக் கொண்டு வந்து விடு' என்பதை மெட்ராஸ் பாஷையில் ரத்தினச் சுருக்கமாக 'இட்டாந்துடு' என்று சொல்லிவிடலாம். அதேசமயம் 'இட்டுக்குனு வா' என்பதற்கும் 'இஸ்துகுனு வா' என்பதற்கும் கடலளவு வித்தியாசம் இருக்கிறது. முன்னது அழைத்துக் கொண்டு வருவது, பின்னது இழுத்துக் கொண்டு வருவது. இந்த வார்த்தை விளையாட்டுகள் தமிழோடு நின்றுவிடுவதில்லை. ஆங்கிலத்தின் பங்களிப்பும் இதில் பெருமளவு இருக்கிறது.

அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களோடு அதிகம் பழகிய ரிக்ஷாக்காரர்கள்தான் மெட்ராஸ் பாஷையின் வாத்தியார்கள். உன்னோட படா பேஜாரா பூட்ச்சுபா... என அலுத்துக் கொள்பவர்கள் அதற்குள் ஒரு ஆங்கிலச் சொல் இருக்கிறது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வந்திறங்கும் ஆங்கிலேயர்களை, இன்று வெளியூர்வாசிகளை ஆட்டோக்காரர்கள் கையைப் பிடித்து இழுப்பதைப் போல, ரிக்ஷாக்காரர்கள் அன்புத் தொல்லையில் பிய்த்தெடுத்திருக்கிறார்கள். இதனால் கடுப்பாகும் சில ஆங்கிலேயர்கள் dont badger me (என்னை நச்சரிக்காதே) என்று சொல்லி தவிர்த்திருக்கிறார்கள். வெள்ளைக்காரன் சொன்ன அந்த badger-ஐ, நம்ம ரிக்ஷாக்காரர்கள் அப்படியே தங்களின் குப்பத்திற்கு எடுத்துச் சென்று பேஜார் ஆக்கிவிட்டார்கள். இவை போக பக்கெட்டு (BUCKET), பாமாயிலு (PALM OIL), பிஸ்கோத்து (BISCUIT), என நிறைய சொற்களை அப்படியே ஆங்கிலத்தில் இருந்தும் எடுத்தாண்டு கொண்டு இருக்கிறார்கள்.

ஆங்கிலம் மட்டுமின்றி மற்ற மொழிகளும் மெட்ராஸ் பாஷையில் கலந்திருக்கின்றன. 'பஜாரி' என்ற சொல் உருது மொழியில் இருந்து உருவானது. உருதுவில் பஜார் என்றால் சந்தை என்று அர்த்தம். இதனால் சந்தைக்கடையில் நின்று சத்தம் போடுபவள் பஜாரி ஆகிவிட்டாள். ஆனால் பஜாரன் என்று ஒரு சொல் இல்லை. ஆக இதிலும் ஆணாதிக்கம் இருந்திருக்கிறது என்பதை கவனிக்கவும். பேக்கு என்பது கூட உருதுவில் இருந்து வந்ததுதான். பேவ்கூஃப் என்றால் உருது மொழியில் முட்டாள் என்று அர்த்தம். சென்னைவாசிகள் இந்த பேவ்கூஃபைத் தான் சுருக்கி பேக்கு என்று ஆக்கிவிட்டார்கள். இப்படி ஒவ்வொரு சொல்லுக்கு பின்னும் ஒரு மொழியியல் வரலாறே இருக்கிறது.

சென்னையின் ஒரு பகுதியில் மட்டும் புழங்கிக் கொண்டிருந்த இந்த பாஷையை நாடறியச் செய்த பெருமை தமிழ் திரையுலகிற்கு உண்டு. எம்.ஆர். ராதா, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன் தொடங்கி லூஸ் மோகன், கமலஹாசன் வரை பலரும் இந்த பாஷையைப் பேசி இதன் பெருமையை பறைசாற்றி இருக்கிறார்கள். 'வா வா வாத்யாரே ஊட்டாண்ட..' என்ற மெட்ராஸ் பாஷை பாடல் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் அலறியது.

ஜெயகாந்தன் போன்றவர்கள் இதே பணியை எழுத்து மூலம் செய்திருக்கிறார்கள். ஜெயகாந்தனின் 'சினிமாவுக்கு போன சித்தாளு' பேசிய பல சொற்கள் இன்று வழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டன. ஆனால் இன்றும் அந்த சித்தாள் நமது நினைவுகளில் நிழலாடிக் கொண்டிருக்கிறாள்.

தமிழகத்தின் பிற பகுதியினராலும் மெட்ராஸ் பாஷை ரசிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் அதில் இருக்கும் வேகமும், ஒலிநயமும்தான். 'அடக் படக் டிமிக் அடிக்கிற டோலு மையா டப்ஸா' போன்ற சொற்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாவிட்டாலும் அந்த ஓசைநயம் கேட்பவர்களை திக்குமுக்காட வைத்துவிடுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேபோல எவ்வளவு அரிய கருத்தையும் பாமரனுக்கும் புரியும் வகையில் பந்தி வைக்கவும் இந்த மெட்ராஸ் பாஷையால் முடிகிறது என்பது இதன் கூடுதல் பலம்.

ஆரம்ப நாட்களில் பேசப்பட்ட மெட்ராஸ் பாஷைக்கும் இன்று பேசப்படும் பாஷைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அன்று புழக்கத்தில் இருந்த பல சொற்கள் மறைந்து தற்போது அந்த இடத்தில் ஃபீல் பண்ணி, செக் பண்ணி, டிபன் பண்ணி என நிறைய பண்ணிவிட்டார்கள். ஆனாலும் புதுப்புது சொற்களை அப்படியே அல்லது சற்று நமது வசதிக்கேற்ப உருமாற்றி பயன்படுத்துவது என்ற பாரம்பரியம் மட்டும் இன்றளவும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதனால்தான் மெட்ராஸ் பாஷை ஷோக்கா கீதுபா!

நன்றி - தினத்தந்தி


மெட்ராஸ் பாஷை அகராதியில் சில...

கில்லி - திறமையான ஆள்
ஜல்பு - ஜலதோஷம்
மட்டை - போதையில் மயங்கி விழுவது
மால் - கமிஷன்
பீட்டர் - பெருமைக்காக ஆங்கிலம் பேசுபவர்
பீலா - பொய் சொல்வது
கலீஜ் - அசுத்தம்

ஆனந்தரங்கப் பிள்ளை


நமது தாத்தாவின் டைரி திடீரென நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்? நூறு ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது? மக்கள் அன்றாடம் என்ன செய்தார்கள்? அரசியல், பொருளாதார, சமூக சூழல் எப்படி இருந்தது என்பதெல்லாம் ஒரு கதை மாதிரி அதில் எழுதப்பட்டிருந்தால் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்? அப்படி ஒரு அனுபவத்தை தேடுபவர்கள் ஆனந்தரங்கப் பிள்ளையின் டைரிக் குறிப்புகளை படிக்கலாம்.

ஆனந்தரங்கப் பிள்ளை சென்னையைச் சேர்ந்த பெரம்பூரில், சர்வதாரி ஆண்டு பங்குனித் திங்கள் 21-ஆம் நாள் சனிக்கிழமை (கி. பி. 1709) பிறந்தார். அவரது தந்தை திருவேங்கடப் பிள்ளை சிறிது காலத்துக்குப் பின் புதுச்சேரியில் குடியேறி அங்கேயே தங்கிவிட்டார். புதுச்சேரியில் இந்து சம்பிரதாயங்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளை எதிர்த்து போராடியதால் மக்கள் மத்தியில் கதாநாயகனாகத் திகழ்ந்த அவரை பிரெஞ்சுக்காரர்கள் உதவித் தரகராக நியமனம் செய்தனர்.

சிறிது காலத்திற்குப் பின் அவர் திவானாக உயர்ந்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே திருவேங்கடப் பிள்ளை காலமானதால் அவருக்குப் பதிலாகக் கனகராய முதலியார் என்பவர் திவான் ஆனார். அவரும் கி.பி. 1746-ஆம் ஆண்டில் இறந்துவிடவே, அடுத்து திருவேங்கடப் பிள்ளையின் மகன் ஆனந்தரங்கப் பிள்ளை அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். திருவேங்கடம் திவானாய் இருந்தபோது ஆனந்தரங்கம் கூடவே இருந்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்ததால் நன்றாக தொழில் கற்று வைத்திருந்தார். இதுவே, அவருக்குத் திவான் பதவி கிடைக்கக் காரணமாயிற்று.

புதுச்சேரியை ஆண்டுவந்த பிரெஞ்சு கவர்னர் துய்ப்ளேயின் (Marquis Joseph-Francois Dupleix) துபாஷியாக இருந்த ஆனந்தரங்கப் பிள்ளை, பிரதம மந்திரியாகவும், இராணுவ ஆலோசகராகவும், பிரெஞ்சுக்காரர்களின் வியாபாரப் பங்காளியாகவும் மெல்ல மெல்ல உயர்ந்தார். இந்த காலகட்டத்தில் 1736 முதல் 1761-ல் தான் இறக்கும்வரை அவர் நாட்குறிப்புகளை எழுதிவைத்தார். இதற்கு  'தினப்படிச் செய்திக்குறிப்பு, சொஸ்த லிகிதம்' என்று பெயரிட்டிருந்தார்.  அன்றைய அரசியல் அரங்கை அறிந்துகொள்ள இந்த குறிப்புகள் மிகவும் உதவியாக இருக்கின்றன.

நாள்தோறும் காலையில் கவர்னர் துய்ப்ளேக்ஸ் சிற்றுண்டி அருந்தியதும் ஆனந்தரங்கப் பிள்ளையைத் தமது அவைக்கு வரவழைத்து, நாட்டு நடப்புகளைப் பற்றிய செய்திகளையும் யோசனைகளையும் கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார். சென்னைப் பட்டணத்தின் மீது பிரெஞ்சு துருப்புகள் படையெடுத்த போது, அதனை துயிப்ளே ஆனந்தரங்கப்பிள்ளையிடம் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். "பூந்தமல்லி சீமை வகையிரா, மயிலாப்பூர் உள்பட பரங்கிமலை பெரிய மலை, சின்ன மலை வகையிரா கொள்ளையிட்டார்கள். கொள்ளையிட்டவர்களுக்கு விஸ்தாரமாய் தினுசுகள், தானியங்கள், மாடுகள் வகையிரா அகப்பட்டதெல்லாம் அங்கங்கே தானே சரிப்போனபடிக்கெல்லாம் வித்துப் போடுகிறார்களாம். ஆனால் நம்முடவர்களுக்கு கொள்ளை நன்றாய் வாய்க்குது. ஒவ்வொருத்தன் கூலிக்காறன் கூட ஆஸ்திக்காறனாக சுகப்பட்டார்கள்".

இதன் விளைவாகக் குடிமக்கள் அங்குமிங்கும் இடம்பெயர்வதை, "தாமரை யிலையிலே யிருக்கிற செலம் மூலைக்கி மூலை ஆதரவன்றி யிலே ஓடி தளும்புகிறாப் போலே செனங்களும் அலையுறார்கள்" என்று ஆனந்தரங்கப்பிள்ளை கூறியிருக்கிறார். அவரின் நாட்குறிப்புகளின் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரிக்கின்றன. நீதி வழங்கல், தண்டனை அளித்தல் ஆகிய செய்திகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

1748ஆம் ஆண்டு செப்டம்பரில் புதுச்சேரி நகரை சென்னையிலிருந்து வந்த ஆங்கிலப்படை முற்றுகையிட்டுப் பீரங்கிகளால் தாக்கியது. இதுபற்றி 1748 செப்டம்பர் 9ம் நாள் எழுதிய நாட்குறிப்பில் ஆனந்தரங்கம் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
"மற்றபடி அவன் (இங்கிலீஷ்காரன்) போட்ட தீக்குடுக்கைகள் எல்லாம் நாற்பதுக்கும் உண்டு. இந்த தீக்குடுக்கை 1-க்கு சிறிது நூற்றைம்பது ராத்தல் முதல் இருநூத்தி பத்து, பதினைந்து மட்டுக்குமிருக்கிறது. இது வரும்போது ஒரு சோதி போல புறப்படுகிற வேடிக்கையும், அப்பாலே மெள்ள அசைந்து அசைந்து கொண்டு அப்பாலே விழுந்தவுடனே வெடிக்கிற வேடிக்கையும், பார்க்கிறதற்கு ஒரு வேடிக்கையாகத் தானே இருந்தது. இத்தனை தீக்குடுக்கை விழுந்தும் ஒரு மனுஷருக்குச் சேதமில்லை. ஒருத்தருக்கும் காயம் பட்டதுமில்லை. சுட்டதும் ஒரு சப்தம், புறப்படும்போது ஒரு சூரியன் தோன்றுகிறதென்று வருகிறாப் போலே வருகிறது. வருகிறது வெகு சப்தத்துடனே வருகிறதுமல்லாமல் வெகு தொந்தியுள்ளவன் நடக்க மாட்டாமல் மெள்ள வருவானே அப்படி வருகிறபடியினாலே சமீபத்திலே வரும்போது மனுஷர் தப்பித்துக்கொள்ள விலகிப் போகலாமென்று வெகு பேருக்கெல்லாம் தைரியமுண்டாகி தீக்குடுக்கையென்றால் அதை சட்டை பண்ணி அது வருகிறதோ போகிறதா என்கிறதுகூட கேழ்க்கிறதுகூட விட்டுவிட்டார்கள். ஆனாலின்றையதினம் பயந்தவர்களுக்குள்ளே வெள்ளைக்காரர் வெள்ளைக்கார்ச்சிகளுக்கு நம்முடைய தமிழர்கள் வெகு தைரியவான்களென்று நூறு தரம் சொல்லலாம்." இவ்வாறு சுவையான பல்வேறு செய்திகள் ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு, சம்ஸ்கிருதம், போர்ச்சுகீசு எனப் பல மொழிகளை அறிந்து வைத்திருந்த ஆனந்தரங்கப் பிள்ளை, தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிம்ம மகாராஜாவுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு பெரும் பணக்காரராகத் திகழ்ந்தார். தென்னிந்திய அரசியலில் சாணக்கியராகத் திகழ்ந்த அவர் "ஆனந்த புரவி" என சொந்தமாக கப்பல் ஒன்றையும் வைத்திருந்தார். கலைஞர்களை ஆதரித்த ஆனந்தரங்கப் பிள்ளையைப் புகழ்ந்து நிறைய பாடல்களும் எழுதப்பட்டிருக்கின்றன.

ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகளை 1846-ல் கலுவா-மொம்பிரேன் (Gallois-Montbrun) என்ற வருவாய் அதிகாரிதான் முதலில் கண்டெடுத்து பிரதியெடுத்தார். இப்படித்தான் இந்த அரிய வரலாற்றுப் பொக்கிஷம் வெளி உலகிற்கு தெரியவந்தது. ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பைப் படிக்கும்போது, 18ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய - பிரெஞ்சு இந்தியா அப்படியே ஒரு திரைப்படம் போல கருப்பு வெள்ளையில் நம் கண்முன் ஓடுகிறது.

நன்றி - தினத்தந்தி

* பல்லக்கில் மேள வாத்தியத்தோடு கவர்னர் மாளிகையினுள் போகவும், தங்கப் பிடியிட்ட கைத்தடி வைத்திருக்கவும், பாதரட்சை அணிந்து கவர்னரின் அலுவலகத்திற்குச் செல்லவும் ஆனந்தரங்கப் பிள்ளைக்கு சிறப்பு உரிமை அளிக்கப்பட்டிருந்தது.

* ஆனந்தரங்கப் பிள்ளையின் சுவாரஸ்யமான வாழ்க்கை வரலாறு ரா.தேசிகன் என்பவரால் எழுதப்பட்டு 1941-ல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 

திருவல்லிக்கேணி பெரிய தெரு


வெள்ளைச்சாமி என்ற பெயருடன் பளீரென சிரிக்கும் கருப்பு பெரியப்பா மாதிரி தான் இருக்கிறது திருவல்லிக்கேணி பெரிய தெரு. பேருக்கும் தெருவின் அகலத்திற்கும் சம்பந்தமே இல்லை. இந்த தெருவின் உண்மையான பெயர் வீரராகவ முதலி தெரு. ஆனால் இந்தப் பெயர் இப்போது பெரும்பாலானோருக்கு தெரியாது என்றே தோன்றுகிறது. இங்குள்ள பெயர்ப்பலகை கூட BIG STREET (பெரிய தெரு) என்றுதான் இருக்கிறது.

திருவல்லிக்கேணி பெரிய தெரு

திருவல்லிக்கேணியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த தெருவில் பெரும்பாலும் மேன்ஷன்கள்தான் இருக்கின்றன. எனவே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் இளைஞர்களின் சரணாலயமாக இருக்கிறது இந்த தெரு. ஒருவேளை இப்படி பெரிய மனதுடன் பலருக்கும் அடைக்கலம் தருவதால் இதற்கு பெரிய தெரு என்று பெயர் வைத்துவிட்டார்களோ என்னவோ.

பெரிய தெருவின் மிக முக்கிய அடையாளம் இங்கிருக்கும் இந்து மேல்நிலைப் பள்ளி. திருவல்லிக்கேணி என்ற ஊர் ஆரம்ப நாட்களில் இருந்தே கல்விக்கு முக்கியத்துவம் அளித்துவரும் பகுதியாகவே இருந்திருக்கிறது. எனவே 17ஆம் நூற்றாண்டிலேயே இந்த பகுதியில் முறையான பள்ளி வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. விளைவு இரண்டு பள்ளிகள் தொடங்கப்பட்டன.

தமிழ் பையன்கள் படிப்பதற்காக 'திராவிட பாடசாலை' என்று ஒன்றும், தெலுங்கு பையன்களுக்காக 'இந்து ஆந்திர பாலரு பாடசாலையும்' ஆரம்பிக்கப்பட்டன. 1852ஆம் ஆண்டு ஆவணங்களின்படி இவை இரண்டும் தனித்தனி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தன. தமிழ் பள்ளியில் குறள், நைடதம், நன்னூல் கண்டிகை, நிகண்டு, வரலாறு, புவியியல், கணக்கு ஆகிய பாடங்கள் கற்றுத்தரப்பட்டன. விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் ஆங்கிலம் படிக்கலாம். ஆண்டு இறுதியில் பொதுத்தேர்வு மூலம் மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.

இந்த இரண்டு பள்ளிகளுமே மக்கள் அளித்த நிதியில்தான் ஓடிக் கொண்டிருந்தன. எனவே ஆசிரியர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமே வழங்க முடிந்தது. இருந்தாலும் அவர்கள் கல்வியை சேவையாகக் கருதி கண்ணும் கருத்துமாக கற்பித்திருக்கிறார்கள். தமிழ் பள்ளிக்கு ஆரம்ப நாட்களில் அரசும், பச்சையப்பர் அறக்கட்டளையும் நிதி உதவி அளித்து வந்தன. ஒருகட்டத்தில் இரண்டு பள்ளிகளுக்கும் நிதி அளிக்க பொதுமக்கள் சிரமப்பட்டதால் இரண்டு பள்ளிகளையும் ஒன்றாக்கிவிட்டால் என்ன என்று ஆலோசிக்கப்பட்டது. இப்படித்தான் 'திருவல்லிக்கேணி ஆந்திர திராவிட பாலரு பாடசாலை' உருவானது. 1864ஆம் ஆண்டு இதே நிர்வாகத்தின் கீழ் பெண்கள் பள்ளி ஒன்றும் தொடங்கப்பட்டது.

1897இல் இது இந்து உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்து தற்போதைய கட்டடத்தை வந்தடைந்தது. செக்கச்செவேலென இந்தோ - கோதிக் (Indo Gothic style) பாணியில் கட்டப்பட்டிருக்கும் இந்த மூன்று மாடிக் கட்டடத்தை ஹென்றி இர்வின் என்ற ஆங்கிலேய கட்டடக் கலைஞர் வடிவமைத்துக் கொடுத்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், அரசு அருங்காட்சியகம் போன்ற பல முக்கிய கட்டடங்களை வடிவமைத்தவர் இவர். இவரது வடிவமைப்பில் 40 ஆயிரம் சதுர அடியில் நம்பெருமாள் செட்டியால் கட்டப்பட்டது தான் இன்று பெரிய தெருவில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்து மேல்நிலைப் பள்ளி.

இந்து மேல்நிலைப் பள்ளி
இந்தியாவின் ஆரம்பகால கூட்டுறவு சங்கங்களில் முக்கியமானதாக கருதப்படும், திருவல்லிக்கேணி நகர்ப்புற கூட்டுறவு சங்கம் (TUCS) இந்த தெருவில்தான் உதயமானது. ஸ்ரீனிவாச சாஸ்திரி, சிங்காரவேலர் உள்ளிட்டோர் சேர்ந்து 1904ஆம் ஆண்டு இந்த சங்கத்தை தொடங்கினர். பல்பொருள் அங்காடி முதல் நியாய விலைக் கடை வரை மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்க வகை செய்த இந்த கூட்டுறவு சங்கத்திற்கு பெரிய தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலங்கள் இருக்கின்றன.

பல்துறை கலைஞர்களுக்கும் பெரிய தெரு முகவரியாக விளங்கி இருக்கிறது. ஆண்கள் மட்டுமே ஹரிகதாகாலட்சேபம் செய்து வந்த காலத்தில் பொது இடத்தில் தைரியமாக களமிறங்கிய முதல் பெண் பாகவதரான சரஸ்வதி பாய் இந்த தெருவில்தான் வசித்து வந்தார். டிகேஎஸ் சகோதரர்களும் இங்கு வசித்திருக்கிறார்கள். அதேபோல 1940களில் இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி தமது கணவர் சதாசிவத்துடன் இங்கிருந்த வீடு ஒன்றில் வாழ்ந்திருக்கிறார். இசைபட வாழ்தல் என்பார்கள், ஆனால் இசையே வாழ்ந்த தெரு இது.

இப்படி இந்த தெருவைப் பற்றிய வரலாறு இந்த தெருவின் நீளத்தை விட பல மடங்கு அதிகம். இவை அனைத்தையும் விட சிறந்தது இந்த தெருவின் பன்முகத்தன்மைதான். பல்வேறு மதம் மற்றும் கலாச்சாரங்களை சார்ந்தவர்களை பல ஆண்டுகளாக ஒன்றிணைத்து தன்னகத்தே வைத்திருக்கும் இந்த தெரு உண்மையில் 'பெரிய தெரு' தான்.

நன்றி - தினத்தந்தி

* நோபல் பரிசு பெற்ற எஸ். சந்திரசேகர் முதல் உலக நாயகன் கமலஹாசன் வரை பல சாதனையாளர்களை இந்த பள்ளி உருவாக்கித் தந்திருக்கிறது.

* பாரதியின் தன்னுடைய ஞானரதத்தில்-

"கண்ணை விழித்துப் பார்த்தேன். மறுபடி மண்ணுலகத்திலே,
திருவல்லிக்கேணி
வீரராகவ முதலி தெருவில், கிழக்கு முகமுள்ள வீட்டு மேன்மாடத்தில், நானும்
என் பக்கத்தில் சில வர்த்தமானப் பத்திரிகைகள், எழுதுகோல், வெற்றிலைபாக்கு
முதலிய என்னுடைய பரிவாரங்களும் இருப்பது கண்டேன்.'' என்று எழுதி இருக்கிறார்.

Friday, November 23, 2012

காளிகாம்பாள் கோவில்


சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக காற்று வாங்கிக் கொண்டு நிம்மதியாக குடியிருந்தாள்.

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. பின்னர் 1640இல் ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்துவிட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
காளிகாம்பாள் கோவில்

ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்புசெட்டித் தெருவிற்கு இடம்மாறினாள் இந்த அம்மன். தம்புசெட்டித் தெருவில் உள்ள கோவிலை முத்துமாரி ஆச்சாரி என்பவர் நிர்மாணித்தார். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டே இருந்தனர். அப்படி வந்த ஒரு விஐபி பக்தர்தான் சத்ரபதி சிவாஜி.

1677இல் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தார் சத்ரபதி சிவாஜி. அப்போது சென்னையின் ஆளுநராக இருந்தவர் ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர் (Streynsham Master). இவர் ஏற்கனவே சிவாஜியின் வீரத்தைப் பார்த்திருக்கிறார். 1670இல் சிவாஜி சூரத் நகரில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையைத் தாக்கியபோது அதனை எதிர்கொண்டவர் இதே ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர்தான்.

தனது தென்னகப் படையெடுப்பால் வேலூர், செஞ்சி, ஆற்காடு ஆகியப் பகுதிகளை கைப்பற்றிய சிவாஜியின் அடுத்த குறி சென்னைதான் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் மெட்ராஸ்வாசிகள் அடுத்து என்ன எனத் தெரியாமல் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர். இப்படி நிமிடங்கள் திக்..திக்.. என கடந்து கொண்டிருந்த நிலையில், 1677, மே 14ஆம் தேதி சிவாஜியின் தூதர் ஒருவர் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்தார்.
கோவிலுக்கு வந்த சிவாஜி

சத்ரபதி சிவாஜி சில விலை உயர்ந்த கற்களையும், விஷமுறிவு மருந்துகளையும் கேட்பதாகவும், அதற்குரிய பணத்தை அளித்து விடுவதாகவும் அந்த தூதர் தெரிவித்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் பணம் எதையும் பெறாமல் சிவாஜி கேட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். சிவாஜி சென்னையைத் தாக்காமல் இருக்க என்ன விலையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர்.

சில நாட்கள் கழித்து மீண்டும் சில கோரிக்கைகளோடு திரும்பி வந்தார் சிவாஜியின் தூதர். இம்முறை வாங்கும் பொருட்களுக்கு உரிய விலையை கண்டிப்பாக கொடுக்கும்படி சிவாஜி வலியுறுத்தியதாக கூறினார். ஆனால் இரண்டாம் முறையும் விலையில்லா பொருட்களே அவருக்கு வழங்கப்பட்டன. மூன்றாவது முறையாக மீண்டும் வந்த தூதர், இம்முறை சில ஆங்கிலேய பொறியாளர்களை சிவாஜி அழைத்து வரச் சொன்னதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாதென மிகவும் பணிவாக மறுத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். இதனால் ஆத்திரமுற்று சிவாஜி சென்னை மீது படையெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே சில அரசியல் மாற்றங்கள் காரணமாக சிவாஜி மீண்டும் தனது ராஜ்ஜியத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டி இருந்தது.

இந்த இடத்தில்தான் வரலாற்றில் ஒரு புதிர் அவிழ்க்கப்படாமல் நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. சிவாஜி சென்னைக்குள்ளேயே வரவில்லை என்கிறார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால் காளியின் பக்தரான சிவாஜி, யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வந்து தம்புசெட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாளை தரிசித்துவிட்டுச் சென்றார் என்கிறார்கள் சிலர். அக்டோபர் 3, 1677இல் சிவாஜி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு உறுதியான வரலாற்று ஆவணங்கள் எதுவும் இல்லை.

மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில், பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிராட்வேயில் தங்கியிருந்தார். அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவாராம். ‘‘யாதுமாகி நின்றாய் காளி’’ என்ற அவரது பாடலில் வருவது காளிகாம்பாள்தான்.

சத்ரபதி சிவாஜி, பாரதியார் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரையும் ஆசிர்வதித்த காளிகாம்பாள், 3 நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தனது அன்பால் சென்னையை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள்.

நன்றி - தினத்தந்தி

* கடற்கரைக் கோவிலில் காளி உருவம் உக்கிரமாக இருந்ததாகவும், தம்புசெட்டித் தெருவிற்கு மாறியபோது காளியின் உருவம் சாந்த சொரூபியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

* கோவிலின் வாசலில் இருக்கும் கிழக்கு ராஜகோபுரம் 1983இல் கட்டப்பட்டது. 

Sunday, November 18, 2012

மெட்ராசின் பறக்கும் டாக்டர்


பறந்து பறந்து வேலை செய்வது என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. ஆனால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே மெட்ராசில் ஒரு டாக்டர் உண்மையிலேயே பறந்து பறந்து மருத்துவம் பார்த்திருக்கிறார். இதனால் அவரை மெட்ராஸ்வாசிகள் 'பறக்கும் டாக்டர்' என்றே அழைத்திருக்கிறார்கள்.

பின்னாட்களில் பறக்கும் டாக்டர் எனப் பெயரெடுத்த ரங்காச்சாரி கும்பகோணம் அருகே சருக்கை என்ற கிராமத்தில் 1882ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை கிருஷ்ணமாச்சாரி ஒரு பொறியாளர். சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் மற்றும் சென்ட்ரலுக்கு எதிரில் இருக்கும் அரசு பொதுமருத்துவமனை ஆகியவற்றை கட்டியதில் இவரின் பங்களிப்பும் உள்ளது.

ரங்காச்சாரியின் மாமா கோபாலாச்சாரி, ஒரு வழக்கறிஞர். திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக பணியாற்றியவர். இப்படி கல்வியின் மேன்மை அறிந்த குடும்பத்தில் பிறந்ததால் ரங்காச்சாரிக்கும் இயல்பிலேயே படிப்பின் மீது அதீத ஆர்வம் இருந்தது. கும்பகோணம் டவுன் ஐ ஸ்கூலில் படிப்பை முடித்ததும், கல்லூரியில் சேர்வதற்காக சென்னை வந்தார்.
சிலையாக ரங்காச்சாரி

மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ரங்காச்சாரியை மருத்துவம் படிக்கும்படி இரண்டு ஐரோப்பிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஊக்கப்படுத்தினர். அவர்கள் அளித்த உற்சாகத்தால் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ரங்காச்சாரி, 1904ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இரண்டே ஆண்டுகளில் துணை அறுவை சிகிச்சை மருத்துவராக அரசு பணியில் சேர்ந்தவர் எழும்பூர், ஐதராபாத், மாயவரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், பெர்ஹாம்பூர் என பல ஊர்களிலும் மாறி மாறி பணியாற்றினார்.

திறமையான மருத்துவர் எனப் பெயரெடுத்த ரங்காச்சாரி, எழும்பூரில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளராக 1917இல் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் இந்த பதவியை அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். 1919இல் அறுவை சிகிச்சை நிபுணராக பதவி உயர்வு பெற்ற அவர், 1922 வரை அரசு பணியில் இருந்தார். பின்னர் ராஜினாமா செய்துவிட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியாக மருத்துவம் பார்க்கத் தொடங்கினார்.

சிறந்த மருத்துவராகத் திகழ்ந்த ரங்காச்சாரி மிகச்சிறந்த மனிதராகவும் இருந்தார். ஒரு நாளில் கிட்டத்தட்ட 18 மணி நேரம் மருத்துவம் பார்ப்பார். அதிகாலை 4 மணி தொடங்கி 11 மணி வரை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வார். அதன் பின்னர் தனது கிளினிக்கிற்கு வந்திருக்கும் நோயாளிகளை கவனிப்பார். இதனிடையே நடக்க முடியாத நோயாளிகளின் வீட்டிற்கும் சென்று மருத்துவம் பார்ப்பார். அதிக பணம் சம்பாதிப்பதற்காக நிறைய நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்திருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

வறுமையால் வாடும் நோயாளிகளுக்கு ரங்காச்சாரி வழக்கமாக இலவசமாகத் தான் மருத்துவம் செய்வார். சிலருக்கு மருத்துவமும் பார்த்து ஆரோக்கியமான உணவுகளை வாங்கி சாப்பிடச் சொல்லி பணமும் கொடுத்து அனுப்புவாராம். ஆரம்ப நாட்களில் ரங்காச்சாரி ஒரு சைக்கிள் வைத்திருந்தார். அதில் தான் மருத்துவமனைக்கு சென்று வருவார். பின்னர் மோட்டார் பைக்கிற்கு மாறிய அவர், 1920களின் பிற்பகுதியில் அந்த காலத்திலேயே ரூ.52,000 கொடுத்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக் கார் ஒன்றை வாங்கினார். அடிக்கடி பயணிக்க வேண்டி இருந்ததால், பல சமயங்களில் அந்த காரே அவரின் வீடாக மாறிவிட்டது. நேரம் இல்லாததால் மதிய உணவை காரில் செல்லும்போதே சாப்பிட்டுவிடுவாராம்.

இப்படி மாய்ந்து மாய்ந்து மருத்துவம் பார்த்தும் ரங்காச்சாரிக்கு மனத்திருப்தி ஏற்படவில்லை. இன்னும் நிறைய பேருக்கு மருத்துவம் பார்க்க என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தபோது அவருக்கு அந்த எண்ணம் தோன்றியது. யாருமே நினைத்துப் பார்க்காத வகையில், ஒரு சிறிய விமானத்தை விலைக்கு வாங்கினார் ரங்காச்சாரி. அந்நாட்களில் பறந்து விரிந்திருந்த சென்னை மாகாணம் முழுவதும் பறந்து சென்று மருத்துவம் பார்க்க இது அவருக்கு பெரிதும் உதவியது. இப்படித் தான் சென்னைக்கு ஒரு பறக்கும் டாக்டர் கிடைத்தார்.

ரங்காச்சாரி இவ்வாறு மருத்துவத்தில் சாதனை புரிந்து கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு நாள் டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்டார். எவ்வளவு முயன்றும் நோயில் இருந்து மீள முடியாமல் 1934ஆம் ஆண்டு தமது 52வது வயதில் இயற்கை எய்தினார். மனிதநேயமிக்க அந்த மருத்துவரை இழந்த சென்னைவாசிகள் மீளாத்துயரில் ஆழ்ந்தனர். அவரை கௌரவிக்கும் வகையில் 1939ஆம் ஆண்டு சென்னை அரசு பொதுமருத்துவமனை வாயிலில் ஒரு சிலை வைத்தனர். அந்த சிலையின் பீடத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது, 'அவரின் சிறந்த மருத்துவ ஆற்றலையும், எல்லையற்ற மனிதநேயத்தையும் கௌரவிக்கும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது'.

தந்தை கட்டிய மருத்துவமனையின் வாயிலில் மகன் சிலையாக நின்று கொண்டிருக்கிறார். 'மருத்துவம் தொழில் அல்ல சேவை' என சிலையாக நிற்கும் ரங்காச்சாரி உரக்க சொல்லிக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. ஆனால் எத்தனை மருத்துவர்களுக்கு இது காதில் விழுகிறது என்பதுதான் தெரியவில்லை.

நன்றி - தினத்தந்தி

* டாக்டர் ரங்காச்சாரி மேல்படிப்பிற்காக இங்கிலாந்து செல்ல ஆசைப்பட்டார். ஆனால் ஆச்சாரமான இந்துகள் கடல் கடந்து செல்லக் கூடாது என்று சொல்லி குடும்பத்தார் அவரது ஆசைக்கு தடை போட்டுவிட்டனர்.

* மருந்து, மாத்திரைகளே இல்லாமல் வெறும் ஆலோசனைகள் மூலமே நிறைய பேரின் மருத்துவப் பிரச்னைகளை டாக்டர் ரங்காச்சாரி தீர்த்திருக்கிறார்.

Saturday, November 10, 2012

மெட்ராஸை மிரட்டிய எம்டன்


சினிமாவை மிஞ்சும் காட்சிகள் சில நேரங்களில் நிஜ வாழ்விலும் அரங்கேறி விடுகின்றன. 1914ஆம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி இரவு சென்னைவாசிகள் அப்படி ஒரு காட்சியைத்தான் மிரண்டு போய் பார்த்தார்கள். முதல் உலகப் போரால் பல நாடுகளும் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நவராத்திரி கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்த மெட்ராஸ்வாசிகளை அச்சத்தில் உறைய வைத்தது அந்த காட்சி.

1914, செப்டம்பர் 22, இரவு 9.30 மணி... சென்னை துறைமுகத்திற்கு மிக அருகில் திடீரென காட்சி கொடுத்தது ஜெர்மானிய போர்க்கப்பலான எம்டன். பிரிட்டீஷ் கப்பற்படையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு துறைமுகத்தை நெருங்கிய அந்த கப்பல், சென்னை மாநகரை நோக்கி குண்டு மழை பொழியத் தொடங்கியது. துறைமுகத்திற்குள் இருந்த பர்மா ஆயில் கம்பெனியின் எண்ணெய் கிடங்குகள் கொழுந்துவிட்டு எரிந்தன.
எம்டனால் எரியும் எண்ணெய் கிடங்குகள் 
எண்ணெய் டாங்குகளை கபளீகரம் செய்த எம்டன் அடுத்தபடியாக துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய வணிகக் கப்பல் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. கப்பலில் இருந்த 3 பணியாளர்கள் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பிரிட்டன் படைகள் சுதாரித்து எதிர்தாக்குதல் நடத்த அரை மணி நேரம் ஆகிவிட்டது. அதற்குள் மேலும் சில குண்டுகளை சென்னைக்கு பரிசளித்துவிட்டு எம்டன் பத்திரமாக வங்கக் கடலில் விரைந்து மறைந்துவிட்டது.

அடுத்தநாள் காலை, சென்னையில் காட்சிகள் வேகமாக மாறின. எம்டன் வீசிச் சென்ற குண்டுகள் உயர்நீதிமன்றம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சூலை, நுங்கம்பாக்கம் என பல கிலோ மீட்டர் தூரம் சிதறிக் கிடந்தன. மக்கள் இதனை பீதியுடன் பார்த்தனர். எம்டன் பற்றிய செய்தி காட்டுத்தீயாய் பரவியது. மீண்டும் எம்டன் தாக்கலாம் என்ற வதந்தி இறக்கை கட்டிப் பறந்தது. அச்சத்தில் உறைந்த மக்கள் அவசர அவசரமாக நகரை விட்டு வெளியேறத் தொடங்கினர். தினமும் சுமார் 20 ஆயிரம் பேர் நகரை காலி செய்துவிட்டு கிளம்பியதாக அன்றைய செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

ரயில்களில் இடம் கிடைக்காதோர் சாலை மார்க்கமாக பயணித்தனர். எங்கு பார்த்தாலும் மூட்டை முடிச்சுகளோடு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர். கடைகள் அடைக்கப்பட்டன. திறந்திருந்த ஒரு சில கடைகளில் விலைகள் திடீரென விண்ணில் பறந்தன. அடுத்து என்ன எனத் தெரியாத ஒரு குழப்ப மேகம் நகரை சூழ்ந்திருந்தது. வதந்தி கிளப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தும் எந்த பயனும் இல்லை. வதந்திகள் பரவிக் கொண்டே இருந்தன, மக்கள் வெளியேறிக் கொண்டே இருந்தார்கள்.

அப்போதைய மெட்ராஸ் ஆளுநரான லார்ட் பெண்ட்லாண்ட் எம்டன் தாக்குதல் நடத்தியபோது ஊட்டியில் இருந்தார். தகவல் கிடைத்த பிறகும் அவர் உடனே சென்னைக்கு வரவில்லை. பொறுமையாக செப்டம்பர் 25ந் தேதி வந்து தாக்குதல் நடந்த இடங்களைப் பார்வையிட்டார். 'எம்டன் திரும்பி வராது, பயப்படாதீர்கள்' என்று நம்பிக்கை அளித்துவிட்டு, மீண்டும் ஊட்டிக்குத் திரும்பிவிட்டார். 'எம்டன் வராது என்றால் ஆளுநர் இங்கேயே இருக்க வேண்டியதுதானே, ஏன் நகரில் இருப்பதை தவிர்க்கிறார்?' என்று பொதுமக்கள் கேட்டார்கள். ஆனால் பதில் சொல்லத்தான் யாரும் இல்லை.

அந்த காலத்தில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் மகுடமாகக் கருதப்பட்ட இந்தியாவில், அதுவும் அவர்கள் முதன்முதலாக காலடி வைத்த சென்னைக்கே வந்து ஒரு எதிரி தாக்கிவிட்டு பத்திரமாகத் திரும்பியது ஆங்கிலேயப் படைக்கு மிகப் பெரிய அவமானமாக கருதப்பட்டது. இந்த ஒரு காரணத்திற்காக இந்திய மக்கள் எம்டனை ஹீரோவாகப் போற்றினார்கள். அதன்பின்னர் அசகாய சூரர்களை எம்டன் என்று தமிழக மக்கள் அழைக்கத் தொடங்கினர்.

ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த எம்டன், தனது பணிக் காலத்தில் 31 கப்பல்களை மூழ்கடித்திருக்கிறது. தனது வசீகரத் தோற்றத்தால் 'கிழக்கின் அன்னப்பறவை' என எதிரிப் படைகளாலும் வர்ணப்பட்ட பெருமை எம்டனுக்கு உண்டு. ஜெர்மானிய கப்பற்படையில் முக்கிய அங்கம் வகித்த இந்த கப்பலுக்கு, 1913ஆம் ஆண்டு வான் முல்லர் (Karl Von Muller) கேப்டனாக பொறுப்பேற்றார்.
கம்பீரமான எம்டன்
அந்த காலத்தில் இந்துமா சமுத்திரம் முழுவதும் பிரிட்டீஷ் கப்பல்கள் நிறைந்திருக்கும். ஒட்டுமொத்த சமுத்திரத்திலும் தாங்களே ஆதிக்கம் செலுத்தியதால் இந்துமா சமுத்திரத்தை 'பிரிட்டனின் ஏரி' என்று ஆங்கிலேயர்கள் கர்வத்துடன் அழைத்துக் கொண்டிருந்தனர். இந்த கர்வத்திற்குதான் மரண அடி கொடுத்தார் முல்லர். எம்டன் கப்பலில் இருந்த செண்பகராமன் என்ற விடுதலைப் போராட்ட வீரரின் கோரிக்கையை ஏற்றே சென்னை மீது முல்லர் தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி உறுதியான ஆவணங்கள் எதுவும் இல்லை.
ஜலசமாதியாகும் எம்டன்
எம்டனை வீழ்த்த பல நாட்டு கப்பல்களும் எவ்வளவோ முயற்சித்தன. ஆனால் முடியவில்லை. இறுதியில், வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் எம்டனுக்கு போட்டியாக ஒரு கப்பல் களமிறங்கியது. முதல் உலகப் போர் உச்சத்தில் இருந்த போது, ஆஸ்திரேலியாவின் சிட்னி என்ற நவீன போர்க்கப்பலுடன் எம்டன் மோதியது. கடுமையான சண்டைக்குப் பிறகு எம்டன் சுட்டு வீழ்த்தப்பட்டது. கேப்டன் முல்லர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கடலில் பல வெற்றிகளை நிலைநாட்டிய எம்டன், அதே கடலில் அமைதியாக ஜலசமாதியானது.

நன்றி - தினத்தந்தி

* முதல் உலகப் போரின்போது இந்தியாவில் தாக்குதலுக்கு உள்ளான ஒரே நகரம் சென்னை தான்.

* எம்டன் தாக்கியதில் உயர்நீதிமன்ற சுற்றுசுவரின் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்தது. இதன் நினைவாக நீதிமன்றத்தில் இன்றும் ஒரு கல்வெட்டு இருக்கிறது.

* ஜெர்மனியின் எம்ஸ் நதிக்கரையில் உள்ள எம்டன் நகரின் நினைவாக இந்த கப்பலுக்கு எம்டன் எனப் பெயரிடப்பட்டது.

Saturday, November 3, 2012

கொள்ளைக்காரன் ராபர்ட் கிளைவ்


வரலாறு வெற்றியாளர்களாக பதிவு செய்திருக்கும் சிலர் சொந்த வாழ்க்கையில் படுதோல்வியடைந்து பரிதாபத்திற்குரியவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆழமாக காலூன்ற மிக முக்கியக் காரணகர்த்தா என்று ஆங்கிலேயர்களால் கொண்டாடப்பட்ட ராபர்ட் கிளைவ் அப்படிப்பட்ட ஒருவர்தான். மிக இளம் வயதிலேயே வாழ்வின் உச்சங்களைத் தொட்ட கிளைவ், திடீரென ஒரு நாள் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதே இதற்கு சாட்சி.
ராபர்ட் கிளைவ்
இங்கிலாந்தின் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ராபர்ட் கிளைவ், 17 வயதில் கிளர்க் வேலைக்காக பாய்மரக் கப்பல் ஒன்றில் இந்தியாவுக்கு பயணமானார். பயணத்தின் போது, குடித்துவிட்டு கலாட்டா செய்த கிளைவ் சொந்த ஊரில் இருந்தபோதும் கிட்டத்தட்ட அதையேதான் செய்து கொண்டிருந்தார். எனவேதான் அவரது தந்தை ரிச்சர்ட் கிளைவ் பையன் கொஞ்சம் உருப்படட்டுமே என்ற எண்ணத்தில் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் கிளைவ் இந்தியாவை உருப்பட விடாமல் செய்யப் போகிறார் என்பது அந்த தந்தைக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

துடுக்குத்தனத்தைப் போலவே இளைஞர் கிளைவிடம் நிறையவே புத்திசாலித்தனமும் இருந்தது. லத்தீனும் ஆங்கிலமும் கற்றிருந்த கிளைவ், புயலால் சேதமடைந்து கப்பல் சில மாதங்கள் பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நின்றபோது, போர்த்துக்கீசிய மொழியையும் கற்றுக் கொண்டார். அது, மெட்ராஸில் அவருக்கு பெரிதும் கை கொடுத்தது.

18 மாத நீண்ட பயணத்திற்கு பிறகு, ஒரு வழியாக 1744இல் மெட்ராஸில் காலடி வைத்த கிளைவ், குறுகிய காலத்திலேயே இந்திய வரலாற்றிலும் அழுத்தமாக கால் பதித்தார். வாழ்வில் முன்னேற குறுக்கு வழிதான் சுலபமானது என முடிவெடுத்த கிளைவ், அந்த வழியில் மிக வேகமாக தனது பயணத்தை தொடர்ந்தார். கொடுக்க வேண்டியதைக் கொடுத்து காரியங்களை சாதித்தார். இதன் மூலம் கிளர்க் வேலையில் இருந்து ராணுவப் பணிக்கு மாறிய கிளைவ், பதவிப் படிகளில் கிடுகிடுவென ஏறினார். 1749இல் பிரெஞ்சுப் படையினரைத் தோற்கடித்து ஆற்காடு பகுதியைக் கைப்பற்றினார். அடுத்தடுத்து போர்களை நடத்தி தென்னிந்தியாவின் பல பகுதிகளை ஆங்கிலேய வசமாக்கினார் ராபர்ட் கிளைவ்.

வெற்றிகளைக் குவித்த கிளைவ், சொந்த வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவெடுத்தார். தனது நண்பரின் சகோதரியான மார்க்ரெட்டைக் கரம் பிடித்தார். வரலாற்று சிறப்புமிக்க அந்த திருமணம் 1753-ம் ஆண்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது.

திருமணம் ஆனதும் மனைவியுடன் கிளைவ் தாயகம் திரும்பினார். ஆனால் அவரால் அங்கே அதிக காலம் இருக்க முடியவில்லை. இதனிடையே வங்காளத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பிரெஞ்சுப் படைகளுடனான போரில் வெற்று பெற ஒரு திறமையான தளபதி வேண்டும் என்று நினைத்த ஆங்கிலேயர்கள் கிளைவிற்கு அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்ற கிளைவ் 1756இல் மீண்டும் இந்தியா வந்தார்.

மெட்ராசில் இருந்து படை திரட்டிக் கொண்டு கல்கத்தா சென்றார். அங்கே யுத்தக் கைதியாகப் பிடிபட்ட கிளைவ், லஞ்சம் கொடுத்து சிறையில் இருந்து தப்பினார். பணத்தின் பலத்தை நன்றாகப் புரிந்துகொண்ட கிளைவ், பலரையும் 'கவனித்து' சரித்திரப் புகழ்பெற்ற பிளாசி யுத்தத்தில் வெற்றியை 'வாங்கினார்'. இந்த வெற்றிதான் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை நிலைநிறுத்த உதவியது.
பிளாசி யுத்தம்
வளமான வங்காளத்தின் ஆளுநரான கிளைவ், தனிப்பட்ட முறையிலும் எக்கச்சக்கமான செல்வத்தைக் குவித்தார். இப்படி முப்பது வயதுக்குள் கிழக்கிந்திய கம்பெனியின் பெரும் பதவிகளை வகித்து, லட்சக்கணக்கில் பணத்தையும் வைரங்களையும் குவித்த கிளைவ் 1760இல் பெரும் செல்வந்தராக நாடு திரும்பினார். இருக்கும் பணத்தைக் கொண்டு பல தோட்ட வீடுகளை வாங்கிய கிளைவ் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகி பேரும் புகழும் அடைந்தார். ஆனால் இதுவும் நீடிக்கவில்லை. 1764இல் காலம் மீண்டும் கிளைவை இந்தியாவிற்கு அனுப்பியது.

மூன்றாவது பயணத்திலும் முடிந்த வரை கொள்ளையடித்தார் கிளைவ். பெரும் செல்வத்துடன் நாடு திரும்பிய கிளைவிற்கு அங்கு ஒரு சோதனை காத்திருந்தது. அதிகாரத்தைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இங்கிலாந்து நாடாளுமன்றம் அவர் மீது விசாரணை நடத்தியது. அன்றைய வங்காளத்தின் மொத்த வருமானம் 1 கோடியே 30 லட்சத்து 66,761 ரூபாய். செலவு 9 லட்சத்து 27,609 ரூபாய். இதில் ராபர்ட் கிளைவ் அடைந்த ஆதாயம் 2 லட்சத்து 50,000 ரூபாய் என்று அந்த குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மகத்தான ஊழல் விசாரணையில் தப்பித்துவிட்டாலும், அவரால் மனசாட்சியிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை.

கிளைவின் உடல்நலம் நலிவடையத் தொடங்கியது. ரத்தக் கொதிப்பால் தூக்கமின்றி அவதிப்பட்ட கிளைவிற்கு பித்தப்பை கோளாறும் இருந்தது. தூக்கம் வருவதற்காக தினமும் போதை ஊசி போட்டுக் கொண்டதால் நரம்புத் தளர்ச்சி அதிகமானது. வலியாலும் வேதனையாலும் அழுது கதறிய கிளைவ், தன்னைக் கொன்று விடும்படி மன்றாடினார். இறுதியில் 1774-ம் ஆண்டு 49-ம் வயதில் தனது பகட்டான பண்ணை வீடு ஒன்றில் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட பரிதாபமாக செத்துப் போனார் ராபர்ட் கிளைவ்.

படுக்கையில் சிந்திக் கிடந்த ரத்தத்தில், கிளைவ் இந்தியாவில் செய்த பாவங்கள் அமைதியாக பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

நன்றி - தினத்தந்தி

* கிளைவ் முதன்முறையாக இந்தியா வந்தபோது, கப்பலில் இருந்து கடலில் விழுந்துவிட்டார். உடன் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றியதால் உயிர் பிழைத்தார்.

* கிளைவ் இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற அரிய கலைப் பொக்கிஷங்கள் இங்கிலாந்தில் உள்ள கிளைவ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

* சுமார் 260 ஆண்டுகளுக்கு முன் கிளைவ் தனது மனைவியுடன் வசித்த வீடு, புனித ஜார்ஜ் கோட்டைக்குள் 'கிளைவ் இல்லம்' என்ற பெயரில் இன்றும் இருக்கிறது.

Sunday, October 28, 2012

சென்னையின் சர்ச்சை சிலை


வரலாறு மிகவும் விசித்திரமானது. அது சிலரை உயர உயரத் தூக்கி கடைசியில் அதல பாதாளத்தில் வீசி எறியும். அப்படி வீசி எறியப்பட்ட ஒருவர் தான் கர்னல் ஜேம்ஸ் நீல். நகரின் பிரதான சாலையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த நீலின் சிலை அருங்காட்சியகத்தில் அடைபட்டுப் போன கதை மிகவும் சுவாரஸ்யமானது.

'அலகாபாத் கசாப்புக்காரன்' என்று பிற்காலத்தில் பெயர் எடுத்த ஜேம்ஸ் நீல், ஸ்காட்லாந்தில் ஒரு சிறிய கிராமத்தில் 1810இல் பிறந்தார். கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நீல், கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் ஃபுசிலியர்ஸ் ரெஜிமண்ட் படைப் பிரிவில் சேர்ந்தார். இரண்டாவது பர்மியப் போரில் சூறைக் காற்றாய் சுழன்றடித்த நீலுக்கு லெப்டினன்ட் கர்னலாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

கிழக்கிந்திய படையின் துடிப்பான அதிகாரி எனப் பெயர் பெற்ற நீல், 1857ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். தனது பெயர் இந்திய சரித்திரத்தின் கருப்புப் பக்கத்தில் இடம்பெறப் போகிறது என்பதை நீல் அப்போது அறிந்திருக்கவில்லை. அவர் இந்தியா வந்த சமயம் கிழக்கிந்திய படையில் இருந்த சில இந்திய வீரர்கள் தலைமைக்கு எதிராக கொந்தளிக்கத் தொடங்கி இருந்தனர். விளைவு, இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழ்ந்த வெள்ளையர் எதிர்ப்புகளிலேயே அளவிலும் பங்கேற்பிலும் பெரியதாக கருதப்படும் சிப்பாய் கலகம் வெடித்தது.
சிப்பாய் கலகம்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முதல் மாபெரும் கிளர்ச்சியான இந்த கலகம் கிழக்கிந்திய படையை கலக்கமடையச் செய்தது. வட மாநிலங்களில் வேகமாகப் பரவிய கலகத்தை ஒடுக்க திறமையான அதிகாரிகள் உடனடியாக கலவரப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவ்வாறு பனாரஸ் நகருக்கு அனுப்பப்பட்டவர்தான் நீல்.

ஜூன் 4ந் தேதி பனாரஸ் சென்றடைந்த நீலின் படை, ஒரே இரவில் ஏராளமான கிளர்ச்சியாளர்களை கொன்று குவித்தது. பின்னர் அலகாபாத்திலும் நீல் இதே வெறியாட்டத்தை வெளிப்படுத்தி கிளர்ச்சியை அடக்கி ஒடுக்கினார். நீலின் இந்த படுபாதக செயல்தான் அவருக்கு 'அலகாபாத் கசாப்புக்காரன்' என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தது.

இப்படிப்பட்ட நீலுக்குத் தான் கிழக்கிந்திய கம்பெனி மவுண்ட் ரோடில் சிலை வைத்து அழகு பார்த்தது. 1861 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி நீலனின் வெண்கலச் சிலையை ஆளுநரின் ஆலோசனைக்குழு உறுப்பினர் எட்வர்டு மால்ட்பி திறந்து வைத்து, நீலனை வானளாவப் புகழ்ந்தார். இன்றைய ஸ்பென்சர் பிளாசாவுக்கு எதிரில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த நீலின் 10 அடி உயர பிரம்மாண்ட சிலை, தேச பக்தர்களை கொந்தளிக்கச் செய்தது. இதனை அகற்றக் கோரி ஆரம்பித்ததுதான் நீலன் சிலை சத்தியாகிரகம்.
மவுண்ட் ரோடில் இருந்த நீல் சிலை
இந்த அறவழிப் போராட்டம் 1927இல் நடத்தப்பட்டது. சென்னை மகாஜன சபையும்இந்திய தேசிய காங்கிரசின் சென்னை மாகாணக் குழுவும் நீல் சிலையை அகற்றக் கோரி தீர்மானங்கள் இயற்றின. பின் அதற்காகத் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டன. திருநெல்வேலியைச் சேர்ந்த சோமையாஜூலு இதற்கு தலைமை வகித்தார். சென்னை மாகாணம் முழுவதிலும் இருந்து வந்த போராட்டக்காரர்கள் இதில் பங்கேற்றனர். அவர்களில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு சில வாரங்கள் முதல் ஒரு வருடம் வரை சிறை தண்டனைகள் வழங்கப்பட்டன.

சோமையாஜுலு, சாமிநாத முதலியார் போன்ற முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின், செப்டம்பர் 1927இல் காமராஜர் களத்தில் இறங்கினார். அந்த சமயம் சென்னை வந்திருந்த மகாத்மா காந்தியை சந்தித்து இதற்கான அனுமதியையும் பெற்றார். சிலை அகற்றலுக்கு ஆதரவாக சென்னை சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. ஆனாலும் நீலை அங்கிருந்து அசைக்க முடியவில்லை.

அந்த சமயத்தில் சைமன் குழு புறக்கணிப்புப் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியதால், இது உரிய கவனம் பெறாமல் போய்விட்டது. நீல் பல ஆண்டுகள் மவுண்ட் சாலையில் மவுனமாக நின்று கொண்டிருந்தார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து நீலை இடம்மாற்றி ரிப்பன் கட்டிட வளாகத்தில் வைத்தனர்.

பின்னர் 1937இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜாஜி சென்னை மாகாண முதல்வரானதும் முதல் வேலையாக நீல் சிலையை அகற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நீல் சிலையை அகற்றி சென்னை அருங்காட்சியகத்தில் வைக்க உத்தரவிடப்பட்டது. ஆனாலும் 1952ஆம் ஆண்டுதான் நீலின் சிலை முறைப்படி அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு வீரனின் சிலை என்று ஆங்கிலேயர்களால் வியந்து பார்க்கப்பட்ட ஒன்று, இந்தியர்களால் அவமானச் சின்னமாகப் பார்க்கப்பட்டது. விளைவு, காலம் அந்த காலனை தற்போது அருங்காட்சியகத்தின் மானுடவியல் பிரிவில் நிற்க வைத்திருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* லக்னோ நகரில் குதிரை மீது அமர்ந்தபடி களத்தில் கட்டளையிட்டுக் கொண்டிருந்த நீல், இந்தியச் சிப்பாய்களின் பீரங்கித் தாக்குதலுக்கு இரையாகி செத்து விழுந்தார்.

* நீலின் சிலையை லண்டனைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சிற்பி எம் நோபிள் வடித்துக் கொடுத்தார்.

Saturday, October 27, 2012

மேப் போட்ட மெட்ராஸ்


மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் நிகழ்வுகள் சில நேரங்களில் அதிசயமாக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்து விடுகின்றன. எவரெஸ்ட் தான் உலகின் உயரமான சிகரம் என்ற கண்டுபிடிப்புக்கான விதை மெட்ராசில் விதைக்கப்பட்டதும் அப்படி ஒரு நிகழ்வுதான்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது இந்த தேசம் பல்வேறு ராஜ்ஜியங்களாக பிரிந்து கிடந்தது. எனவே இதற்கு முறையான வரைபடங்கள் எதுவும் கிடையாது. இதனை மெல்ல தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், இதன் நிலப்பரப்பு குறித்த துல்லியமான தகவல்கள் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதினர். இந்த கருத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டது தான் 'இந்தியாவின் பெரும் முக்கோணவியல் அளவீடு' (The Great Trigonometrical Survey of India). நிலத்தை முக்கோணங்களாக பிரித்து அளந்ததால், இந்த பெயர் கொடுக்கப்பட்டது.
கர்னல் லாம்ப்டன்
1802ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இந்த பெரும் பணி தொடங்கியது. இந்தியாவின் நீள அகலத்தையே அளக்கப் போகும் இந்த மெகா திட்டம் தொடங்கிய இடம் மெட்ராஸ். புனித ஜார்ஜ் கோட்டையை பரங்கி மலையுடன் இணைக்கும் 7 மைல் நீளம் கொண்ட நேர்க் கோட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலை ஆரம்பமானது. ஆனால் சென்னையைப் பொறுத்தவரை இதற்கு முன்னரே சில வரைபடங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. 1673-லேயே குத்துமதிப்பாக ஒரு வரைபடம் இருந்தது. இருந்தாலும் 1710இல் ஆளுநர் தாமஸ் பிட்டின் முயற்சியால் உருவான வரைபடமே நகரின் நம்பகமான முதல் வரைபடமாக கருதப்படுகிறது.

இந்தியாவின் பெரும் முக்கோணவியல் அளவீடு தொடங்கிய போது, இந்த பணியை முடிக்க 5 ஆண்டுகள் ஆகலாம் என்று நினைத்தனர். ஆனால் இந்த பணி 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கப் போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை. காரணம் இந்த பணியை அவ்வளவு துல்லியமாக மேற்கொண்டனர். ஒரு நிலத்தின் பரப்பை அளக்கும் போது, இயற்கை உட்பட எந்தெந்த காரணங்களால், எந்தெந்த அளவு தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று கணக்கிட்டு அதற்கேற்ப அளவீடு சீர் செய்யப்பட்டது.

நூற்றுக்கணக்கான ஆங்கிலேய அதிகாரிகளும், ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களும் இரவு பகலாக இந்த பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷப் பூச்சிகள் கடித்தும், மலேரியா போன்ற நோய்கள் தாக்கியும் பலர் உயிரிழந்தனர். இருப்பினும் பணி தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த திட்டத்தின் மேற்பார்வையாளராக லாம்ப்டன் என்பவர் நியமிக்கப்பட்டதும் வேலை இன்னும் சூடு பிடித்தது. 'எத்தகைய சோதனை வந்தாலும் தொடர்ந்து முன்னே தான் செல்ல வேண்டும்' என்ற விதியை லாம்ப்டன் வகுத்தார். அதாவது மலை, ஆறு என எது குறுக்கிட்டாலும் அதில் ஏறி அல்லது நீந்தி முன்னே சென்று அளக்க வேண்டும். இதற்காக கோணங்களை அளக்க வசதியாக லாம்ப்டன் 'தியோடலைட் (Theodolite) என்ற புதிய கருவியுடன் களம் இறங்கினார்.
தியோடலைட்
இந்த கருவி இங்கிலாந்தில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டது. ஒருமுறை தஞ்சாவூரில் ஒரு கோவிலின் கோபுர உச்சிக்கு கொண்டு சென்றபோது, இந்த கருவி கீழே விழுந்து சேதமடைந்தது. பின்னர் இது சரி செய்யப்படும் வரை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனிடையே 1818இல் ஜார்ஜ் எவரெஸ்ட் என்ற பொறியாளர் நியமிக்கப்பட்டார். இவரும் லாம்ப்டனுக்கு சளைக்காமல் பணியில் பின்னி எடுத்தார்.

மத்திய இந்தியா வரை நில அளவைப் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்திருந்தபோது, ஓய்வில்லாமல் உழைத்து வந்த தாமஸ் லாம்டன், தனது 70வது வயதில் நிரந்தரமாக ஓய்வெடுத்துக் கொண்டார். அதன்பிறகு, முழுப் பொறுப்பும் எவரெஸ்ட்டிடம் அளிக்கப்பட்டது. அவர், இங்கிலாந்துக்குச் சென்று புதிய கருவிகளைக் கொண்டு வந்து, மிக துல்லியமான நில அளவைப் பணியை மேற்கொள்ளத் துவங்கினார்.

இப்படி அளந்துகொண்டே எவரெஸ்ட், இமயமலை வரை சென்று விட்டார். இமய மலையில் உள்ள சிகரங்களை கடும் சிரமங்களுக்கு மத்தியில் அளவிட்டார். ஆனாலும், அவற்றின் உயரத்தை அவரால் துல்லியமாக அறிய முடியவில்லை. இந்நிலையில் 1843-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பினார்.

அதன்பிறகு, ஆண்ட்ரு ஸ்காட் வாக் என்ற அதிகாரி நில அளவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவரது வழிகாட்டுதலில் இமயமலையின் சிகரங்கள் அளவிடப்பட்டன. பல்வேறு இன்னல்களுக்கு இடையில் தியோடலைட் கருவிகளை, இமயமலை மீது தூக்கிச் சென்று அதன் சிகரங்களை கணக்கெடுக்கத் துவங்கினார். அப்போதுதான், கஞ்சன் ஜங்கா சிகரம் கண்டுபிடிக்கப்​பட்டது.

ஜார்ஜ் எவரெஸ்ட்டின் பணிக் காலத்தில் ராதா நாத் சிக்தார் என்ற வங்காள இளைஞர் இந்த பணியில் சேர்ந்தார். கணிதத் திறமையும் துடிப்பும் நிறைந்த அந்த இளைஞர் நில அளவையைத் துல்லியமாகக் கணக்கிட தானே ஒரு புதிய முறையை உருவாக்கினார். டார்ஜிலிங்கில் இருந்து இமயமலையின் சிகரங்களை ஆறு கோணங்களில் துல்லியமாக அளந்து, முடிவில் 1852-ம் ஆண்டு, ராதாநாத் சிக்தார் இந்தியாவின் மிக உயரமான சிகரமாக இமயமலையின் 15-வது சிகரம் உள்ளது என்பதைக் கண்டறிந்தார். அப்படி, அவர் கண்டுபிடித்த சிகரம் 29,002 அடி உயரம் இருந்தது. தனக்கு முந்தைய சர்வேயர் ஜெனரலின் நினைவாக ஆண்ட்ரு ஸ்காட் வாக், உலகின் மிக உயரமான அந்த சிகரத்துக்கு 'ஜார்ஜ் எவரெஸ்ட்டின் பெயரைச் சூட்டினார்.
ஜியார்ஜ் எவரெஸ்ட்
ஆனால் இதை, எவரெஸ்ட்டே ஏற்க மறுத்தார். தனது பெயரை இந்தியர்களால் முறையாக உச்சரிக்க முடியாது என்பதே எவரெஸ்டின் எதிர்ப்புக்கு காரணம். ஆனால் ஆண்ட்ரு ஸ்காட் விடாப்பிடியாக உலகின் மிக உயரமான சிகரத்துக்கு எவரெஸ்ட் என்றே பெயர் சூட்டினார். இதை, ராயல் ஜியாகிரஃபி சொசைட்டி 1857-ல் அங்கீகரித்தது. இதுதான் மெட்ராசில் தொடங்கிய பணி எவரெஸ்ட் வரை நீண்ட கதை.

60 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த இந்த பணியால் இந்திய நிலவியல் துறை பயனடைந்ததைப் போல, இதில் ஈடுபட்ட சர்வேயர்களும் பயனடைந்தனர். ஆன்ட்ரூ சாம்ரெட் (Andrew Chamrette), அவரைத் தொடர்ந்து அவரது மகன், பின்னர் அவரது மகன் என ஆன்ட்ரூ குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக இந்த பணியில் ஈடுபட்டனர். இவர்கள் மூவரும் சேர்ந்து மகராஷ்டிர மாநிலத்தில் 1800 ஏக்கருக்கும் அதிகமாக வளைத்துப் போட்டனர். இதேபோல ஜார்ஜ் எவரெஸ்ட் அவர் பங்குக்கு டேராடூனில் 600 ஏக்கர் வாங்கிப் போட்டார். இப்படி இந்தியாவை அளந்தவர்கள் தனியாக தங்களுக்கென சில பல ஏக்கர்களை ஒதுக்கியது தனிக்கதை.

நன்றி - தினத்தந்தி

* நில அளவைக் குழு வைத்திருந்த டெலஸ்கோப் மூலம் பார்த்தால் பெண்கள் நிர்வாணமாகத் தெரிவார்கள் என்று யாரோ சொன்னதை நம்பி, ஒரு வணிகன் அவற்றைப் பிடுங்கி சோதித்துப் பார்த்த சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.

* பூமிக்கடியில் உள்ள புதையல்களைக் கண்டுபிடிக்க இந்த கருவி உதவும் என நினைத்து திருட்டுக் கும்பல் ஒன்று நில அளவைப் பணி​யாளர்களை மடக்கி வாரக்கணக்கில் பூமியைத் தோண்டச் செய்து இருக்கிறார்கள். புதையல் கிடைக்கவில்லை என்றவுடன் கருவிகளை உடைத்ததோடு, பணியாளர்களின் கை கால்களையும் முறித்திருக்கிறார்கள்.

Saturday, October 13, 2012

கவர்னர் ஜெனரலான காதல் மன்னன்


சாதாரண பேட்டையில் இருந்து அதிகார கோட்டைக்கு போகும் சாகசக் கதாநாயகனின் கதையை போன்று விறுவிறுப்பானது, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான வாரன் ஹேஸ்டிங்சின் வாழ்க்கை. சுமார் 300 ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சியில் ராபர்ட் கிளைவுக்கு அடுத்தபடியாக பெரிதும் பேசப்பட்டவர் வாரன் ஹேஸ்டிங்ஸ். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு அவர் போட்ட பலமான அஸ்திவாரமே இதற்கு காரணம்.

வாழ்ந்து கெட்ட ஒரு அரச குடும்பத்தில் 1732இல் பிறந்தார் வாரன் ஹேஸ்டிங்ஸ். எனவே இந்தியாவிற்கு சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என கப்பல் ஏறிய அந்தக்கால இங்கிலாந்து இளைஞர்களைப் போல, 18வது வயதில் தனது பயணத்தை தொடங்கினார் ஹேஸ்டிங்ஸ். கிழக்கிந்திய கம்பெனியின் சாதாரண எழுத்தராக அவர் வந்திறங்கியது முதலில் கல்கத்தாவில் என்றாலும், வாழ்வில் அனைத்து விதமான ஆட்டங்களையும் ஆடிப் பார்த்தது மெட்ராசில்தான்.

1750ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்கத்தா வந்த வாரன் ஹேஸ்டிங்ஸ், தனது கடின உழைப்பால் விரைவில் நல்ல பெயர் எடுத்தார். இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்வதிலும், உருது, பாரசீகம் ஆகிய மொழிகளைக் கற்பதிலும் ஓய்வு நேரத்தை செலவிட்டார். இதனிடையே சில பல பதவி உயர்வுகளைப் பெற்று வாழ்க்கையில் சற்று மேலே போனாலும் கல்கத்தாவில் அன்று நிலவிய அரசியல் குழப்பங்கள் ஹேஸ்டிங்ஸை மன உளைச்சலுக்கு உள்ளாக்கின. எனவே 1764ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியை உதறிவிட்டு இங்கிலாந்திற்கு திரும்பிவிட்டார்.

தனது மற்ற சகாக்களைப் போல தாயகம் திரும்பும்போது பெரும் செல்வத்தை அவர் சேர்த்துக் கொண்டு செல்லவில்லை. அவர் சேர்த்த சிறிதளவு பணமும் விரைவிலேயே கரைந்துவிட கடனாளியான ஹேஸ்டிங்ஸ், வட போச்சே என்று வருந்தினார். அப்போதுதான் மீண்டும் இந்தியா செல்வது என முடிவு எடுத்தார். அந்த முடிவு அவரது வாழ்வை மட்டுமின்றி இந்தியாவின் எதிர்காலத்தையே மாற்றி அமைத்தது.

இந்த முறை அவருக்கு மெட்ராசில் வேலை கிடைத்தது. இதற்காக 1769இல் ட்யூக் ஆஃப் கிராஃப்டன் என்ற கப்பலில் ஏறிய போதுதான் அவரது வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கியது. அதே கப்பலில் இம்ஹோஃப் என்பவர் தனது மனைவியுடன் பயணம் செய்தார். பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் வசதியில் குறைந்த இம்ஹோஃப் நன்றாக ஓவியம் வரைவார். எனவே சென்னையில் ஓய்வு நேரத்தில் ஆங்கிலேய அதிகாரிகளை படம் வரைந்து நன்றாக சம்பாதிக்கலாம் என்ற நினைப்போடு, சிபாரிசு மூலம் ராணுவத்தில் பயிற்சியாளர் வேலை பெற்று, கனவுகளோடு கப்பலில் வந்துகொண்டிருந்தார்.

நீண்ட கப்பல் பயணத்தில் வாரன் ஹேஸ்டிங்ஸும், இம்ஹோஃபின் மனைவி மரியாவும் நெருங்கிய நண்பர்களானார்கள். கடல் பயணம் ஒத்துக் கொள்ளாமல் ஹேஸ்டிங்ஸ் நோய்வாய்ப்பட்டபோது, மரியா மருந்துகளோடு சேர்த்து அன்பையும் கொடுத்து அரவணைத்தார். ஏற்கனவே மனைவியை இழந்திருந்த ஹேஸ்டிங்ஸுக்கு மரியாவின் துணை பெரும் ஆறுதலாக இருந்தது. சென்னையில் வந்து இறங்குவதற்கு முன்பே இவர்களின் நட்பு காதலாக பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டது.
வாரன் ஹேஸ்டிங்ஸ்

சென்னைக்கு வந்ததும் வாரன் ஹேஸ்டிங்ஸ் அடிக்கடி மரியாவின் வீட்டிற்கு சென்று வந்தார். 1771இல் மரியா தனது கணவருடன் கல்கத்தா செல்லும் வரை இது நீடித்தது. ஹேஸ்டிங்ஸ் தனக்கு ஆளுநர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்னையிலேயே தங்கி இருந்தார். ஆனால் விதி அவரையும் கல்கத்தாவிற்கு இழுத்துச் சென்றது. அவருக்கு கல்கத்தாவின் ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது. மச்சக்கார ஹேஸ்டிங்ஸிற்கு அவர் விரும்பிய ஆளுநர் பதவி மரியா வசிக்கும் நகரிலேயே கிடைத்துவிட்டது.

ஹேஸ்டிங்ஸ் கல்கத்தா சென்றதும் மீண்டும் உறவு தொடர்ந்தது. அந்நாட்களில் கல்கத்தா முழுவதும் இதுதான் பேச்சாக இருந்தது. இதனிடையே ஹேஸ்டிங்ஸ் தனது நிர்வாகப் பணிகளையும் சிறப்பாக செய்துவந்தார். அந்தக் காலத்தில் நிலவிய பல்வேறு அரசியல் சிக்கல்களையும் திறம்பட சமாளித்தார். எனவே 1773இல் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அதுநாள் வரை மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று மாகாணங்களுக்கும் தனித்தனி ஆளுநர்கள்தான் இருந்து வந்தனர். ஹேஸ்டிங்ஸின் முயற்சியால்தான் இந்த மூன்றையும் ஒருங்கிணைத்து கவர்னர் ஜெனரல் என்ற பதவி உருவாக்கப்பட்டது.

இதனிடையே கணவனை விவாகரத்து செய்துவிட்டு வந்த மரியாவை 1777இல் முறைப்படி திருமணம் செய்துகொண்டார் வாரன் ஹேஸ்டிங்ஸ். பின்னர் இவர்களின் இல்வாழ்க்கை கடைசி வரை இனிமையாகத் தொடர்ந்தது. மரியாவின் மனதில் இடம் பிடித்துவிட்டால் கவர்னர் ஜெனரலிடம் காரியம் சாதித்துக் கொள்ளலாம் என சிறு குழந்தைக்கு கூட தெரிந்திருந்தது. இதனால் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார் ஹேஸ்டிங்ஸ்.
வாரன் ஹேஸ்டிங்ஸ் நினைவிடம்

இந்த சூழலில்தான் 'பெங்கால் கெஜெட்' என்ற இந்தியாவின் முதல் செய்தித்தாளைத் தொடங்கினார் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி. ஹிக்கியின் பத்திரிகை ஹேஸ்டிங்ஸையும், மரியாவையும் சரமாரியாக கிழித்தது. இப்படித்தான் இந்தியாவின் முதல் பத்திரிகை கிசுகிசு சூடு பிடித்தது. கவர்னர் ஜெனரல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஹிக்கியை சிறையில் அடைத்தார். அப்போதும் அடங்காமல் அவர் அவதூறுகளைப் பிரசுரித்துக் கொண்டே இருந்தார். இதனால் அவரது அச்சகத்தையும் அரசு அபகரித்துக் கொண்டது. இறுதியில் தனது போரில் ஹிக்கி தோற்றார்.

ஹிக்கியின் பத்திரிகைக்கு தீனி போடுவதைப் போல ஹேஸ்டிங்சும் நிறைய அதிகார துஷ்பிரயோகங்களிலும், ஊழல்களிலும் ஈடுபட்டார். ஓர் எழுத்தராக ஐந்து பவுண்ட் பணத்துடன் வந்த வாரன் ஹேஸ்டிங், இந்தியாவில் கொள்ளை அடித்த பணத்தின் மதிப்பு குறைந்தபட்சம் 20 மில்லியன் பவுண்ட் என்கிறார்கள். இது போன்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி இங்கிலாந்தின் காமன் சபையில் விசாரிக்கப்பட்டது. ஏழு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் முடிவில், வாரன் ஹேஸ்டிங் குற்றமற்றவர் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பை விலைக்கு வாங்கினார் வாரன் என்றும் சொல்லப்படுகிறது.

எது எப்படியோ ஓட்டாண்டியாய் இந்தியா வந்து ஓஹோவென வாழ்ந்து, பெரும் செல்வத்துடன் ஓட்டம் பிடித்த ஆங்கிலேயர்கள் வரிசையில் வாரன் ஹேஸ்டிங்ஸும் இடம்பிடித்துவிட்டார்.

நன்றி - தினத்தந்தி

* பகவத் கீதையால் கவரப்பட்ட வாரன் ஹேஸ்டிங்ஸ் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்தார்.

* மெட்ராசிற்கு ஒரு துறைமுகம் தேவை என்ற கருத்தை முதன்முதலில் வலியுறுத்தியவர் வாரன் ஹேஸ்டிங்ஸ்தான்.