என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, August 11, 2010

வேலி போட்ட நகரம்



எத்தியோப்பியாவில் உள்ள மதில் சூழ்ந்த ஹரார் (பிணீக்ஷீணீக்ஷீ) நகரம் வெகு காலம் வரை வெளிநாட்டினரின் கால்களே பதியாத இடமாக இருந்துவந்தது. ஒரு காலத்தில் இந்த நகரத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கழுதை மீது பல நாட்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று சில மணி நேர சொகுசுப் பயணத்தில் இந்த அற்புதமான நகரை அடைந்து விடலாம். 3342 மீட்டர் சுற்றளவுள்ள மதில் சுவருக்குள் அமைந்துள்ள இந்த நகரத்தில் பழங்கால பள்ளி வாசல்கள், அவற்றின் அற்புதமான கோபுரங்கள், கடைத் தெருக்கள், கல்விச் சாலைகள் என ஒரு தனி உலகமே இயங்கி வந்தது. அவ்வளவு ஏன், இந்த நகருக்கென தனி மொழி மட்டுமின்றி பிரத்யேக ரூபாய் நோட்டுக்களே அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் இருந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த நகருக்குள் வர வேண்டும் என்றால் பிரசித்தி பெற்ற அந்த 3 ஆயிரத்து சொச்சம் மீட்டர் சுற்றுச்சுவருக்குள் நுழைந்து தான் வர வேண்டும். அந்த சுவற்றில் இஸ்லாம் மதத்தின் ஐந்து தூண்களைக் குறிக்கும் வகையில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட ஐந்து வாசல்கள் உள்ளன. பல நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இவற்றில் ஏதேனும் ஒன்றின் வழியாகத் தான் ஹரார் நகருக்குள் வருவார்கள். 16-ம் நூற்றாண்டில் நூர் இபின் - முஜாஹிதீன் என்ற உள்ளூர் ஆட்சியாளர் எதிரிகளிடம் இருந்து ஹரார் நகரை பாதுகாப்பதற்காக இந்த சுற்றுச் சுவரை எழுப்பினார்.

ஹரார் நகர் முழுவதையும் நடந்தே கூட சுற்றிப் பார்த்து விடலாம். நகரின் கற்கள் பதித்த வளைந்து வளைந்து செல்லும் குறுகிய பாதையில் நடந்து செல்லும் போது நாம் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இங்குள்ள இரண்டு அருங்காட்சியகங்களில் ஹரார் நகரின் கலை, கலாச்சார, வரலாற்று சிறப்புகளை எடுத்துக்காட்டும் பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அடிப்படையில் இது ஒரு இஸ்லாமிய நகரம் என்றாலும், உலகின் ரட்சகர் தேவாலயம் என்ற அற்புதமான கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றும் இங்கு உள்ளது. 1887-ம் ஆண்டு ஹராரை கைப்பற்றிய மெனிலிக் என்ற அரசர், நான்கு படிகளின் மீது எண் கோண வடிவில் இந்த தேவாலயத்தைக் கட்டினார்.

இந்த தேவாலயத்தின் இரண்டு கூரைகளும் கூட எண்கோண வடிவில் தான் கட்டப்பட்டுள்ளது. இந்த கூரைகளின் மீது நெருப்புக் கோழியின் முட்டைகளை வைத்துள்ளனர். நெருப்புக் கோழி தன்னுடைய முட்டைகளை மிகுந்த அக்கறையுடன் பாதுகாக்கும் என்பதால் அதேபோல இங்கு வரும் பக்தர்களும் உலகின் துன்பங்களில் இருந்து அக்கறையுடன் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை தெரிவிக்கவே கூரை மீது இவை வைக்கப்பட்டிருப்பதாக இங்குள்ள மக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது.

No comments:

Post a Comment