என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, October 30, 2011

பேங்க் ஆஃப் மெட்ராஸ்

கடற்கரை ரயில்நிலையத்திற்கு எதிரில் பிரம்மாண்டமாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் ஒரு சிகப்பு கட்டடத்தில் தற்போது பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டதே ஒரு வங்கிக்காகத்தான். அந்த வங்கிதான் மெட்ராஸ் ராஜதானியின் தலைமை வங்கியாக ஒரு காலத்தில் செயல்பட்டு வந்த பேங்க் ஆஃப் மெட்ராஸ். அன்றைய மெட்ராஸ்வாசிகளின் கைகளில் புரண்டு கொண்டிருந்த ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விநியோகித்த அந்த புராதன வங்கியின் கதையைத் தான் இந்த வாரம் பார்க்க இருக்கிறோம்.

இந்தியாவில் பண்டைய காலந்தொட்டு வசதி படைத்த சில தனியார் தான் வங்கித் தொழில் செய்து வந்தனர். பொதுவங்கிகள் என்ற விஷயமே பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில்தான் தொடங்கப்பட்டது. 1786ஆம் ஆண்டு தி ஜெனரல் பேங்க் ஆஃப் இந்தியா, மற்றும் பேங்க் ஆப் ஹிந்துஸ்தான் ஆகியவை முதலில் துவங்கப்பட்டன. ஆனால் அவ்வங்கிகள் தற்பொழுது செயல்பாட்டில் இல்லை. இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருப்பவற்றில் மிகப்பழமையான வங்கி பாரத ஸ்டேட் வங்கியாகும் (State Bank of India).

அப்படிப் பழம்பெருமை பெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் தாய்தான் பேங்க் ஆப் மெட்ராஸ். இதன் கதை சுமார் 200 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர்கள் மெட்ராசில் குடியேறி நிர்வாக வசதிகளுக்காக பல்வேறு விஷயங்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தபோது, நிதி விவகாரங்களை கையாள ஒரு வங்கி தேவை என்பதை உணர்ந்தனர்.

முதன்முதலில் 1683இல் ஆளுநர் வில்லியம் ஜிப்போர்டும், அவரது குழுவினரும் மெட்ராசில் ஒரு வங்கியை தொடங்கினர். இதன் அடுத்த கட்டமாக 1805இல் அப்போதைய ஆளுநர் சர் வில்லியம் பெண்டிக் நிதிக் குழு ஒன்றை கூட்டினார். அக்குழுவின் ஆலோசனையின்படி 1806இல் ஒரு வங்கி உருவாக்கப்பட்டது. அதுதான் மெட்ராஸ் வங்கி (பேங்க் ஆப் மெட்ராஸ் என்பது வேறு), இதனை அரசு வங்கி என்றும் மக்கள் அழைத்தனர்.

அந்தக் காலத்தில் இதைப் போல வேறு சில வங்கிகளும் செயல்பட்டு வந்தன. பின்னர் 1843ஆம் ஆண்டு, மெட்ராஸ் வங்கி, கர்நாடிக் வங்கி, பிரிட்டிஷ் பேங்க் ஆஃப் மெட்ராஸ், ஆசியாடிக் வங்கி ஆகிய நான்கையும் இணைத்து ரூ.30 லட்சம் முதலீட்டில் ஒரு மத்திய வங்கி தொடங்கப்பட்டது. அதுதான் பேங்க் ஆஃப் மெட்ராஸ்.

கிட்டத்தட்ட சென்னை மாகாணம் முழுவதற்குமான ரிசர்வ் வங்கியைப் போன்று இது செயல்பட்டது. இதேபோல பம்பாய் மற்றும் வங்காள மாகாணங்களுக்காக பேங்க் ஆஃப் பம்பாய், பேங்க் ஆஃப் பெங்கால் ஆகிய வங்கிகள் உருவாக்கப்பட்டன. கிழக்கிந்திய கம்பெனி வழங்கிய உரிமை சாசனத்தின் கீழ், மூன்று தலைமை மாகாணங்களுக்குரிய வங்கிகளாக இவை நிறுவப்பெற்றன.

பேங்க் ஆஃப் மெட்ராஸிற்கு கோவை, நாகை, தூத்துக்குடி, பெங்களூர், மங்களூர், கொச்சி, ஆலப்புழை, குண்டூர் என தென்னிந்தியா முழுவதும் கிளைகள் இருந்தன. இதுமட்டுமின்றி இலங்கையின் கொழும்பு நகரிலும் இந்த வங்கி கிளை விரித்திருந்தது. ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது உள்பட சென்னை மாகாணத்தின் அனைத்து நிதித் தேவைகள் மற்றும் சேவைகளை இந்த வங்கி கவனித்துக் கொண்டது.

இந்த வங்கியின் தலைமை அலுவலகம் கட்டுவதற்காக 1895ஆம் ஆண்டு மெரினா கடற்கரைக்கு எதிரில், தெற்கு கடற்கரைச் சாலையில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து நிலம் வாங்கப்பட்டது. அங்கு நம்பெருமாள் செட்டி என்ற மெட்ராசின் புகழ்பெற்ற காண்ட்ராக்டரைக் கொண்டு ரூ.3 லட்சம் செலவில் ஒரு பிரம்மாண்ட கட்டடம் கட்டப்பட்டது. பாரிமுனையில் உள்ள ஐகோர்ட், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவற்றை எல்லாம் கட்டியவர் இந்த நம்பெருமாள் செட்டிதான். கர்னல் சாமுவேல் ஜேக்கப் வடிவமைப்பில் கட்டப்பட்ட பேங்க் ஆஃப் மெட்ராஸ் கட்டிடம், விக்டோரியா காலத்து இந்தோ சாராசனிக் கட்டடக் கலைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

1921ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி, பேங்க் ஆஃப் மெட்ராஸ், பேங்க் ஆஃப் பெங்காள், பேங்க் ஆஃப் பம்பாய் ஆகிய மூன்று மாகாண வங்கிகளையும் இணைத்து இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா (Imperial Bank of India) உருவாக்கப்பட்டது. இம்பீரியல் வங்கி நியமனம் செய்த முதல் இந்திய டைரக்டர் யார் தெரியுமா? நம்பெருமாள் செட்டிதான். இந்த வங்கி 1955இல் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எனப்படும் இன்றைய பாரத ஸ்டேட் வங்கியாக மாறியது.

கடற்கரை ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் இந்த பழைய பேங்க் ஆஃப் மெட்ராஸ் கட்டடம் சென்னையின் பல முக்கிய நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கது முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள். உலகப் போர்களுக்கும் இந்த வங்கிக்கும் ஒரு எதிர்பாராத தொடர்பு ஏற்பட்டது. 1914ஆம் ஆண்டு, முதல் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது, ஜெர்மனின் எம்டன் கப்பல் சென்னை துறைமுகம் மீது குண்டு வீசியது. ஒரு சில நிமிடங்களில் 125 குண்டுகளை எம்டன் அள்ளி வீசியது. இந்த தாக்குதலில் ஒரு குண்டு சிதறல், சென்னை உயர்நீதிமன்றத்தின் பின்புற சுற்றுச்சுவரில் விழுந்த இடம் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எம்டன் வீசிய ஒரு குண்டு கடற்கரையில் விழுந்து சிதறி பேங்க் ஆப் மெட்ராசின் சுவற்றில் மண்ணை அப்பியது. எம்டன் போய்விட்டாலும் வங்கியின் சுவற்றில் அது விட்டுச் சென்ற அடையாளம் மெட்ராஸ்வாசிகளை கதிகலங்க வைத்தது. சுவற்றில் அப்பியிருந்த மணலை அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அச்சத்துடன் பார்த்துச் சென்றனர்.

இரண்டாம் உலகப் போரின்போது மெட்ராஸ் மீது ஜப்பான் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. குறிப்பாக துறைமுகப் பகுதியில் அவை குண்டுகளை வீசின. இந்த தாக்குதலையும் பேங்க் ஆஃப் மெட்ராஸ் மௌன சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்தது. இப்படி சென்னையுடன் தொடர்புடைய பல அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை இந்த புராதன கட்டடம் பார்த்திருக்கிறது, இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

---------

* 1969ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி நாட்டின் மிகப்பெரிய 14 வங்கிகள் நாட்டுடைமைக்கப்பட்டன. அப்போது நாட்டிலிருந்த வங்கிக் கிளைகள் 8260 மட்டுமே.

* பேங்க் ஆஃப் மெட்ராஸ் வெளியிட்ட ரூபாய் நோட்டுகளில் மெட்ராஸ் ஆளுநராக இருந்த சர் தாமஸ் மன்ரோவின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.

Wednesday, October 26, 2011

பிரசிடென்சி கல்லூரி

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாயாக கருதப்படும் பிரசிடென்சி கல்லூரி எனப்படும் மாநிலக் கல்லூரி சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. மெரினா கடற்கரைக்கு எதிரில் வங்கக் கடலை வேடிக்கை பார்த்தபடி கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் இந்த சிகப்பு நிறக் கட்டிடத்திற்கு 140 வயதாகிறது. எத்தனையோ அறிஞர் பெருமக்களை உருவாக்கி இருக்கும் இக்கல்லூரி, சென்னைக்கு கிடைத்த மாபெரும் வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இத்தாலிய அரண்மனை போல் காட்சியளிக்கும் இந்த கல்லூரியின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. 1826இல் அப்போதைய மெட்ராஸ் ஆளுநராக இருந்த தாமஸ் மன்றோ, Committee of Public Instruction என்ற குழு ஒன்றை அமைத்தார். பத்து ஆண்டுகள் கழித்து 1836இல் இந்த குழுவின் பணிகளை Committee of Native Education என்ற கல்விக் குழு ஏற்றுக் கொண்டது. அந்தக் குழு கல்வி தொடர்பாக சில யோசனைகளை முன்வைத்தது. ஆனால் அவை அப்போதைய ஆளுநர் லார்ட் எல்ஃபின்ஸ்டோனுக்கு பிடிக்கவில்லை. அதற்கு பதில் அவரே 19 தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றினார். அதில் முக்கியமான தீர்மானம், மெட்ராசில் ஒரு பல்கலைக்கழகத்தை தொடங்குவது என்பது.

இதன் முதல்படியாக, 1840ஆம் ஆண்டு அக்டோபர் 15ந் தேதி, எழும்பூரில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் பிரசிடென்சி பள்ளி தொடங்கப்பட்டது. கல்வி ஆர்வம்மிக்க தனியார் சிலர் சேர்ந்து இந்த பள்ளியைத் தொடங்கினர். இந்த பள்ளியின் நிர்வாகம் அன்று மெட்ராஸில் வசித்த ஆங்கிலேய மற்றும் முக்கிய இந்தியப் பிரமுகர்கள் அடங்கிய குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்த பள்ளியின் முதல்வராக இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் ஹானர்சில் தேர்ச்சி பெற்ற இ.பி. பவுல் என்பவரை நியமிக்க எல்ஃபின்ஸ்டோன் விரும்பினார். ஆனால் விதி விளையாடியதில் பவுலுக்கு அந்த வரலாற்றுப் பெருமை கிடைக்காமல் போய்விட்டது.

எல்ஃபின்ஸ்டோனின் அழைப்பை ஏற்று உடனடியாக இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு வந்த பவுல், 1840 செப்டம்பர் 20ந் தேதி பம்பாய் துறைமுகத்தை அடைந்துவிட்டார். ஆனால் அங்கிருந்து மெட்ராஸ் துறைமுகம் வருவதற்கு அவருக்கு 4 வார காலம் ஆகிவிட்டது. அதுவரை பொறுக்க முடியாத கல்விக் குழுவினர், கல்கத்தா ஹூக்லி கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த கூப்பர் என்பவரை தற்காலிக முதல்வராக இருக்கும்படி கேட்டுக் கொண்டனர். அவரும் மாதம் ரூ.400 சம்பளத்திற்கு பிரசிடென்சி பள்ளியின் முதல்வராக வந்து சேர்ந்தார்.

பவுல் வந்த பிறகு சில மாதங்களிலேயே கூப்பர் மீண்டும் கல்கத்தா சென்றுவிட்டார். 1841ல் பிரசிடென்சி பள்ளி, உயர்நிலைப் பள்ளியானது. இடமும் எழும்பூரில் இருந்து பிராட்வேவிற்கு மாறியது. மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து 1853இல் பிரசிடென்சி பள்ளி, பிரசிடென்சி கல்லூரியாக உயர்ந்தது. சிறுவர், சிறுமியர் உலவிக் கொண்டிருந்த வளாகத்தில் வளர்இளம் பருவ பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கத் தொடங்கின. 1857இல் சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது, அதன் கீழ் இந்த கல்லூரி இணைந்தது. அப்போதும்கூட பிரசிடென்சி கல்லூரி பிராட்வேயில் தான் இருந்தது.

கல்லூரிக்கு இந்த சிறிய இடம் போதாது என்பது சில ஆண்டுகளிலேயே உணரப்பட்டது. எனவே பெரிய கட்டிடம் ஒன்றை மெரினா கடற்கரைக்கு எதிரில் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த கட்டடத்திற்காக சிறப்பான வரைபடம் தயாரித்துக் கொடுப்பவருக்கு ரூ.3000 சன்மானம் அளிக்கப்படும் என 1864இல் ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ரூ 3000 என்பது எவ்வளவு பெரிய தொகை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அருமையான ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என விரும்பியதால், இத்தனை பெரிய சன்மானம் கொடுக்க முன்வரப்பட்டது. இந்த ஜாக்பாட் பரிசு யாருக்கு என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க, அந்த பரிசைத் தட்டிச் சென்றார் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணரான ராபர்ட் சிஸ்ஹோம்.

இதனைத் தொடர்ந்து கல்கத்தாவில் இருந்த அவர் மெட்ராஸ் வந்தார். மெட்ராசில் ராபர்ட் சிஸ்ஹோம் வடிவமைத்துக் கொடுத்த முதல் கட்டடம் பிரசிடென்சி கல்லூரி. பின்னர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், விக்டோரியா பப்ளிக் ஹால், தலைமைத் தபால் நிலையம் என அந்தக் கால மெட்ராசின் பல கட்டடங்கள் இவரது கைவண்ணத்தில் உருவாகின. அவர் மெட்ராஸ் வந்த புதிதில் வடிவமைத்துக் கொடுத்த கட்டிடம் என்பதால், பிரசிடென்சி கல்லூரி கட்டடத்தில் இத்தாலிய பாணியின் தாக்கம் அதிகம் இருக்கும். காரணம், அப்போதைய இங்கிலாந்தில் இத்தாலிய பாணி கட்டடங்கள் பிரபலமாக இருந்தன. பின்னர் அவர் வடிவமைத்த கட்டிடங்களில் பலவகை பாணிகள் காணப்படுகின்றன.

1867இல் அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் லார்ட் நேப்பியர் அடிக்கல் நாட்ட கட்டுமானப் பணி தொடங்கியது. மூன்று ஆண்டு கால கடும் உழைப்பில் கட்டி முடிக்கப்பட்ட பிரசிடென்சி கல்லூரி கட்டடத்தை 1870ஆம் ஆண்டு மார்ச் 25ந் தேதி எடின்பர்க் கோமகன் திறந்துவைத்தார்.

1940இல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, கல்லூரி கட்டடத்தில் நான்கு முகங்களைக் கொண்ட கடிகார கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த தானியங்கி எலெக்ட்ரிக் கடிகாரத்தில் சிறப்பு தானியங்கி விளக்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. கல்லூரியின் இயற்பியல் பேராசிரியர் பரமேஸ்வரன் தலைமையில் இயற்பியல் துறையிலேயே அந்த கடிகாரம் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலத்தில் மணிக்கொரு தரம் இந்த கடிகாரம் இசைக்கும் இனிய இசை திருவல்லிக்கேணி முழுவதும் எதிரொலிக்குமாம்.

பிரசிடென்சி கல்லூரியின் மற்றொரு சிறப்பு இங்கு பணிபுரிந்த வரலாற்று சிறப்புமிக்க ஆசிரியர்கள். கரையானுக்கும், செல்லரிப்புக்கும் பலியாகிக் கொண்டிருந்த அரிய தமிழ் சுவடிகளைக் காப்பாற்றிக் கொடுத்ததால், தமிழ் தாத்தா என்று கொண்டாடப்படும் உ.வே. சாமிநாத அய்யர், இங்கு 16 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கல்லூரியின் முன்புறத்தில் 1948ஆம் ஆண்டு அவருக்கு சிலை வைக்கப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வள்ளலாரின் திருவருட்பா வெளியாகக் காரணமாக இருந்த தொழுவூர் வேலாயுதம் முதலியார், இலங்கை தமிழறிஞர் சி.வை. தாமோதரன் பிள்ளை, பேராசிரியர் சி. இலக்குவனார் (இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தொல்காப்பியத்தை அண்ணா யேல் பல்கலைக்கழகத்திற்கு செல்லும்போது கொண்டு சென்றார்) என பலப் பிரபலங்கள் இங்கு ஆசிரியர்களாக பணிபுரிந்திருக்கின்றனர்.

அக்காலத்தில் நிலவிய சாதிய ஏற்றத் தாழ்வுகள் பிரசிடென்சி கல்லூரியையும் விட்டுவைக்கவில்லை. இங்கு தமிழ்ப் பேராசிரியராக வேலை பார்த்த கா. நமச்சிவாயம் முதலியார் அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.81 ஆகவும், அதே நேரத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக வேலை பார்த்த குப்புசாமி சாஸ்திரி அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.300 ஆகவும் இருந்திருக்கிறது. இதுகுறித்து அறிந்ததும், இந்தக் கொடுமையை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் எழுத அதன் அடிப்படையில் நீதிக்கட்சி ஆட்சியில் முதலமைச்சராக இருந்த பனகல் அரசர் அந்த வேறுபாட்டை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

நோபல் பரிசு பெற்ற சர். சி.வி.ராமன், டாக்டர் சுப்பிரமணிய சந்திரசேகர் ஆகியோர் இந்த கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள். சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர், மூதறிஞர் ராஜாஜி, இந்தியாவின் முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.கே. கிருஷ்ண மேனன், என இக்கல்லூரியின் பிரபலமான மாணவர்கள் பட்டியலும் மிக மிக நீளமானது.

இப்படி எண்ணற்ற மாணவர்களை உருவாக்கியபடி, தனது 200வது பிறந்தநாளை நோக்கி அதே இளமையுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது சென்னை மாநிலக் கல்லூரி.

நன்றி : தினத்தந்தி

* 1891இல் இந்த கல்லூரியின் பொன்விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி முதல்வரான டாக்டர் டேவிட் டங்கன், கல்லூரியின் 50 ஆண்டு சாதனைகளை புத்தகமாக வெளியிட்டார். இதுதான் கல்லூரியின் வரலாறை நன்கு அறிந்துகொள்ள இப்போது நமக்கு உதவுகிறது.

* இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆரம்பித்த இரண்டு பிரசிடென்சி கல்லூரிகளில் இதுவும் ஒன்று. மற்றொன்று கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரி

* 1987ஆம் ஆண்டு இந்த கல்லூரிக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.

Friday, October 7, 2011

விக்டோரியா பப்ளிக் ஹால்

மெட்ராஸ் ராஜதானியில் முதல் திரைப்படம் திரையிடப்பட்ட அரங்கம்தான் விக்டோரியா பப்ளிக் ஹால். எட்வர்ட் என்ற ஆங்கிலேயர் 1897இல் மவுனமாக ஓடும் சலனப்படக் காட்சிகளை முதன்முறையாக இங்கு திரையிட்டுக் காட்டினார். ரயில் நிலையத்தில் ரயில் வந்து நிற்பதும், தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்கள் வெளியே வருவதும்தான் இங்கு திரையிடப்பட்ட முதல் சலனப்படக் காட்சிகள்.

திரையில் படங்கள் நகர்வதைப் பார்த்தவர்களுக்கு தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. திடீரென ஒரு வெள்ளைத் திரையில் எப்படி ரயில் ஓடுகிறது, இத்தனை பேர் எங்கிருந்து வந்து போகிறார்கள் என்ற சூட்சுமம் புரியாமல் விழிகள் வியப்பில் விரிய, ஒரு மாயாஜால மயக்கத்தில் கிறங்கிப் போனார்கள் மெட்ராஸ்வாசிகள். இந்த அமோக வரவேற்பின் விளைவுதான் மெட்ராசில் தொடங்கப்பட்ட நிரந்தர திரையரங்குகள்.

இப்படி சென்னையின் திரையரங்குகளுக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்த இந்த விக்டோரியா பப்ளிக் ஹாலின் அஸ்திவாரம் போடப்பட்ட கதையும் சுவையானதுதான். 1882இல் ஜார்ஜ் டவுன் பகுதியில் கூட்டம் போட்ட முக்கியப் பிரமுகர்கள், மெட்ராசிற்கென ஒரு பிரத்யேக டவுன் ஹால் வேண்டுமென தீர்மானித்தனர். அதற்கென முக்கியஸ்தர்கள் சிலரிடம் நிதி வசூலிக்கப்பட்டு ரூ. 16,425 திரட்டப்பட்டது. இதற்கென 12 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. 1886ஆம் ஆண்டு பீப்பிள்ஸ் பார்க் (People's Park) பகுதியில் 57 கிரவுண்டு நிலம் 99 ஆண்டு லீசுக்கு எடுக்கப்பட்டது. லீசுக்கான தொகை எவ்வளவு தெரியுமா? ஒரு கிரவுண்டுக்கு எட்டணா வீதம் மொத்தம் ரூ 28.

விஜயநகர மன்னர் சர் ஆனந்த கஜபதி ராவ் அடிக்கல் நாட்ட கட்டுமானப் பணி தொடங்கியது. இதற்கு நிதி அளித்தவர்களில் திருவாங்கூர் மகாராஜா, மைசூர் மகாராஜா, புதுக்கோட்டை அரசர் ஆகியோர் முக்கியமானவர்கள். இந்தோ - சாராசெனிக் பாணியில் அமைந்த இந்த கட்டிடத்தை ராபர்ட் பெல்லாஸ் சிஸ்ஹோம் என்ற கட்டிடக் கலை வல்லுநர் வடிவமைத்துக் கொடுக்க, நம்பெருமாள் செட்டி கட்டினார். இத்தாலியப் பாணி கோபுரத்தில் கேரளப் பாணி கூரை அமைக்கப்பட்டது இதன் சிறப்பம்சம். திருவாங்கூர் மகாராஜாவும் நிதி அளித்ததால், கேரளப் பாணி கூரை அமைத்துவிட்டார்கள் போல் இருக்கிறது.

விக்டோரியா அரசியின் பொன்விழா 1887ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டதை நினைவுகூறும் வகையில், இந்த கட்டிடத்திற்கு அவரின் பெயரை சூட்ட வேண்டும் என முக்கியப் பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனை அடுத்து 1888ஆம் தொடங்கி 1890ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடத்திற்கு விக்டோரியா பப்ளிக் ஹால் எனப் பெயர் சூட்டப்பட்டது.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் ஆங்கிலேயர் காலத்து மெட்ராஸை நினைவுபடுத்தியபடி நின்று கொண்டிருக்கும் இந்த சிவப்பு நிறக் கட்டிடம், சலனப்படக் காட்சி திரையிடப்பட்டது முதல் அரசியல் கூட்டங்கள் அரங்கேறியது வரை மெட்ராசின் பல முக்கிய நிகழ்வுகளை பார்த்திருக்கிறது.

தமிழ் நாடக உலகின் முன்னோடிகளான சங்கரதாஸ் சுவாமிகளும், பம்மல் சம்மந்த முதலியாரும் தங்களின் நாடகங்களை இங்கு மேடையேற்றி இருக்கின்றனர்.

அக்கால மெட்ராஸ்வாசிகளின் மாலைப் பொழுதை இனிமையாக்கும் பணியை இந்த சிவப்பு கட்டிடம் செவ்வனே செய்திருக்கிறது. அவர்களின் நினைவுகளில் உற்சாகம் பாய்ச்சக் கூடிய கனவுப் பிரதேசமாகவே இந்த ஹால் திகழ்ந்திருக்கிறது. மரங்கள் நிறைந்த பீப்பிள்ஸ் பார்க்கில், கலைநயமிக்க கட்டிடத்தில், ரம்மியமான மாலை நேரத்தில், வங்கக் கடல் காற்று வருடிக் கொடுக்க, ஹாயாக அமர்ந்து நாடகம் பார்ப்பது என்பது நினைக்கும்போதே சுகமான மயக்கம் தரக்கூடிய விஷயம்தானே. அதனால்தான் இங்கு நடைபெறும் நாடகங்களைக் காண மக்கள் ஆர்வமாகக் கூடினர். பெரும்பாலான நாடகங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே நடைபெற்றிருக்கின்றன. சில காட்சிகளுக்கு முன்பதிவு செய்தும் பார்த்திருக்கிறார்கள். அன்றைய மெட்ராசில் தெலுங்கர்கள் அதிகம் வசித்ததால், தெலுங்கு நாடகங்கள் பெருமளவில் அரங்கேறின.

பம்மல் சம்பந்த முதலியாரின் சுகுண விலாஸ சபாவினர் இந்த அரங்கில் முதன்முதலில் நாடகம் போட்டபோது அதனை பிரபலப்படுத்துவதற்காக 25,000 பிட் நோட்டீஸ்களை அச்சடித்து, ஒரு குதிரையை வாடகைக்கு அமர்த்தி, ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மூலம் தெருத்தெருவாக கொடுத்திருக்கின்றனர். அந்தக் காலத்தில் இங்கு நடைபெறும் நாடகங்கள் இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.30 மணிக்கு முடியும்.

இதனால் அடுத்தநாள் வேலைக்கு செல்ல முடியவில்லை என அரசு ஊழியர்களும், வியாபாரிகளும் புலம்பியதால், நாடக நேரம் மாற்றப்பட்டது. 1906இல் சுகுண விலாஸ சபாவினர், தங்களின் 'காதலர் கண்கள்' என்ற நாடகம் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு முடியும் என அறிவித்தபோது பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்த முயற்சிக்கு வரவேற்பு கிடைக்காது என்றனர். ஆனால் மக்கள் இதனை விரும்பி ஏற்றுக்கொண்டனர். பின்னர் மெட்ராசில் சினிமா அரங்குகள் தொடங்கப்பட்டபோது மாலைக் காட்சிக்கு இதேநேரம்தான் தேர்வு செய்யப்பட்டது.

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஜூலியஸ் சீசர் போன்ற ஆங்கில நாடகங்களும் இங்கு மேடையேறி இருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களை தமிழில் மொழிமாற்றம் செய்தும் அரங்கேற்றி இருக்கின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஷேக்ஸ்பியர் தினம் கொண்டாடி, பின்னாளில் அதனை ஷேக்ஸ்பியர் வாரமாக மாற்றினர். அரங்கில் இடமில்லாத அளவிற்கு கூட்டம் வந்ததால், விக்டோரியா அரங்கத்திற்கு பின்புறம் உள்ள டென்னிஸ் மைதானத்தில் நாடகம் போட வேண்டியதாகிவிட்டது.

விக்டோரியா ஹாலில் ஒருமுறை பம்மல் சம்பந்த முதலியாரின் மனோகரா நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிளைமாக்ஸில் மனோகரன் தன்னை பிணைத்திருக்கும் சங்கிலிகளை அறுத்தெறியும் காட்சி. மனோகரனாக நடித்தவர் சங்கிலிகளை அறுத்தெறிந்த சத்தம் கேட்டு, தனது குவார்டர்ஸில் தூங்கிக் கொண்டிருந்த விக்டோரியா ஹாலின் கண்காணிப்பாளர் எல்லிஸ் ஏதோ கலவரம் வந்துவிட்டது என எண்ணி அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தாராம். இப்படி நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் இந்த ஹாலில் அரங்கேறி இருக்கின்றன.

நாடகங்கள் மட்டுமின்றி பொதுக் கூட்டங்களும் இங்கு நடைபெற்றிருக்கின்றன. சுவாமி விவேகானந்தர், சர்தார் வல்லபாய் படேல், கோபால கிருஷ்ண கோகலே, பாரதியார் போன்ற தலைவர்கள் இங்கு உரையாற்றி உள்ளனர். 1902ஆம் ஆண்டு இந்த அரங்கில் மாறுவேடப் போட்டி கூட நடந்திருக்கிறது.

மெல்ல சிதிலமடைந்து வந்த இந்த புராதன கட்டிடத்தை 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபொழுது புனரமைத்து திறந்து வைத்தார். ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக இது பயன்பாடின்றி இருந்தது. தற்போது மீண்டும் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாடிப்படிகள், பழுதடைந்த ஜன்னல், கதவுகள், சுவர்களில் உடைந்த செங்கற்கள் ஆகியவை கலைநயத்துடன் வடிவமைப்பு மாறாமல் புனரமைக்கப்படுகின்றன. பணிகள் நிறைவடைந்ததும் கலை, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் ஒரு பொன்மாலைப் பொழுதிற்கு தயாராகிறது விக்டோரியா பப்ளிக் ஹால்.

நன்றி - தினத்தந்தி

-----------------------------


* விக்டோரியா அரசியின் பெயர் கொண்ட கட்டடிடத்தில் அவரின் படம் இருக்க வேண்டும் எனக் கருதி சுகுண விலாஸ சபாவினர் ரூ. 200 செலவழித்து 1910ஆம் ஆண்டு அவரது படத்தை நிறுவினர்.

* 1908ஆம் ஆண்டு இங்கு ஒரு நூலகமும் ஏற்படுத்தப்பட்டது. ஆங்கிலம் மட்டுமின்றி நான்கு தென்னிந்திய மொழி நூல்கள் இதில் இடம்பெற்றிருந்தன. அந்நாட்களில் நாடகங்கள் தொடர்பான புத்தகங்கள் இருந்த நூலகம் சென்னையிலேயே இது ஒன்றாகத் தான் இருக்கும் என்கிறார்கள்.