என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, July 14, 2012

சர் தாமஸ் மன்றோ


அண்ணாசாலையில் ஒரு குதிரை மீது சேணம் இல்லாமல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் மன்றோவின் சிலையைப் பார்க்கும் போதெல்லாம், யார் இந்த மனிதர், அப்படி என்ன சாதித்துவிட்டார் என்று சுதந்திர இந்தியாவில் ஒரு ஆங்கிலேயரின் சிலையை தொடர்ந்து இருக்க அனுமதித்திருக்கிறோம் என்ற கேள்வி எழும். இதற்கான விடையைத் தேடியபோது, உண்மையிலேயே ஆச்சரியமான ஒரு மனிதரின் வரலாறு கிடைத்தது.

இங்கிலாந்தில் இருந்து 1780களில் சென்னைக்கு ஒரு சாதாரண படை வீரராக வந்தவர் தாமஸ் மன்றோ. 1792 இல் திப்பு சுல்தானுக்கு எதிரான போரில் துணை நிலை ஆளுநராக பணியாற்றினார் மன்றோ. அதில் வெற்றி பெற்றதால், பாரமகால் பகுதி முழுவதும் (தற்போதைய சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகள்) நிர்வகிக்கும் உரிமை தளபதி அலெக்ஸாண்டர் ரிட், தாமஸ் மன்றோ ஆகிய இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

ஆட்சி செலுத்தும் உரிமை பெற்றதால் அந்த பகுதியில் வரிவசூல் செய்யும் அதிகாரமும் இவர்களிடம் வந்தது. இந்த நிலையில், தாமஸ் மன்றோ தனது ஆளுகைக்குட்பட்ட பகுதி முழுவதும் ஆய்வு செய்து நிலத்திலிருந்து பெறப்படும் வரிவசூல் மிகவும் அதிகம் என்ற முடிவுக்கு வந்தார். எனவே விவசாயிகளுக்கு நிலத்தை அளித்து, அதற்கான வரியை அரசாங்கம் நேரடியாக வசூல் செய்யும் ரயத்துவாரி என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் விவசாயிகள் இடைத் தரகர்களிடம் சிக்கி சீரழியும் வேதனை முடிவுக்கு வந்தது.

1807 ஆம் ஆண்டு மன்றோ இங்கிலாந்து சென்றபோது, இந்தியாவில் அவர் சொன்னபடி வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் மன்றோவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டதால் ரயத்துவாரி முறை சென்னை மாகாணத்தில் செயல்பாட்டிற்கு வந்தது.

1814 ஆம் ஆண்டு சென்னை திரும்பிய மன்றோ மாவட்ட நிர்வாகம் மற்றும் நிதி ஆகிய இரண்டு துறைகளை சீர்திருத்தும் குழுவின் தலைவராக பொறுப்பேற்றார். 1820 ஆம் ஆண்டு அவர் சென்னை மாகாணத்தின் ஆளுநராகப் பதவி உயர்வு பெற்றார். அவருடைய ஆட்சியின்பொழுது மாவட்ட நிர்வாக முறையில் நிறைய ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

மன்றோ பற்றி ஒரு சுவையான செவி வழிச் செய்தியும் சொல்லப்படுகிறது. கி.பி.19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு முன்பு மானியமாக வழங்கப்பட்ட நிலங்களை எல்லாம் மீண்டும் அரசுடைமை ஆக்கும் சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனம் அமைந்துள்ள மந்த்ராலய கிராமத்தை அரசுடைமை ஆக்குவதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த கிராமம் நவாப் சித்தி மசூத்கான் என்பவரால் திவான் செங்கண்ணரின் மூலம் ஸ்ரீ ராகவேந்திரருக்கு தானமாக அளிக்கப்பட்டது. எனவே இதனை ஒப்படைக்க முடியாது என பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுபற்றி நேரில் விசாரிக்க மன்றோ அனுப்பி வைக்கப்பட்டார். தனது காலணிகளையும் தொப்பியையும் அகற்றி விட்டு பிருந்தாவனத்திற்குள் சென்றார் மன்றோ. சிறிது நேரத்திற்கெல்லாம் மன்றோ ராகவேந்திரரின் நினைவிடம் முன்பு நின்று தனியாக பேச ஆரம்பித்துவிட்டாராம். பின்னர்
தன் உரையாடலை முடித்துக் கொண்ட மன்றோ பிருந்தாவனத்தை வலம் வந்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். காரணம், ராகவேந்திரரே அவர் முன் தோன்றி பேசியதாக நம்பப்படுகிறது.

ராகவேந்திரர் தோன்றியது உண்மையோ இல்லையோ ஆனால் பின்னர் தனது இருப்பிடத்திற்கு திரும்பிய மன்றோ, பிருந்தாவனத்தை அரசுடமை ஆக்கத் தேவையில்லை என அறிக்கை தந்துவிட்டார் என்பதற்கு ஆவணங்கள் இருக்கின்றன. இதுபற்றிய குறிப்பு மதராஸ் அரசாங்க கெஜட்டில் பக்கம் 213ல்ஆதோனி தாலுகா’ எனும் தலைப்பின் கீழ் விளக்கமாக தரப்பட்டிருக்கிறது.

சர் தாமஸ் மன்றோ இந்தியர்களின் மதவழிபாடுகளுக்கும் சடங்குகளுக்கும் அதிக மரியாதை அளித்தவர். இதன் காரணமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒரு அறக்கட்டளையினை உருவாக்கி சித்தூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களின் வரிவசூல் முழுவதும் அதற்கு சென்றடைய வழிவகை செய்தார். இன்றும் திருப்பதி தேவஸ்தானத்தில் நண்பகல் வழிபாட்டுக்குப் பின்னர் வழங்கப்படும் நைய்வேத்தியம்மன்றோ பெயரில் அவர் ஏற்படுத்திய அறக்கட்டளை வழியே நடைபெற்று வருகிறது.

ஒருமுறை பெல்லாரி மாவட்டத்தில் ஆங்கிலேய துணைக் கலெக்டர் ஒருவர் விவசாயிகளை மதம் மாற்றுவதற்கு முயற்சி செய்தபோது, அப்போது கவர்னராக இருந்த மன்றோ, "மக்களை மதம் மாற்றும் முயற்சி மதகுருமார்கள் சார்ந்த விஷயம். அதிகாரி ஒருவர் மக்களைத் தன் அலுவலகத்தில் கூட்டி, மதப் பிரசாரம் செய்வது அதிகாரத் துஷ்பிரயோகம்' என்று தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அதேபோல, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே, ''இந்தியர்களுக்கு நாம் சுதந்திரம் அளிக்கத்தான் வேண்டும், அவர்களே தங்கள் நாட்டை ஆண்டு கொள்வார்கள்'' என்றும் சொன்னவர் தாமஸ் மன்றோ.

தென்னிந்தியாவை குறிப்பாகத் தமிழகத்தை நேசித்த மன்றோ, நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இங்கேயே பணிபுரிந்தார். தனது 67-ம் வயதில் தாயகம் திரும்ப விரும்பியதால், இங்கிலாந்து அரசு தர விரும்பிய கவர்னர் ஜெனரல் பதவியையும் வேண்டாம் என மறுத்துவிட்டார். இங்கிலாந்து திரும்பி கடைசி காலத்தில் அமைதியாக ஓய்வெடுக்க வேண்டும் என விரும்பினார் மன்றோ. ஆனால் விதி அவரை இங்கிலாந்து செல்ல விடவில்லை.

அவர் அனைத்து தரப்பு மக்களுடமும் குறிப்பாக ஏழைகளிடம் மிகவும் கருணையோடும் பாசத்தோடும் நடந்து கொண்டார். அந்த அன்பு காரணமாக, நாடு திரும்பும் முன், தான் ஆறாண்டு காலம் கலெக்டராகப் பணிபுரிந்த ஆந்திராவின் கடப்பா பகுதிக்குச் சென்றுவர விரும்பினார் மன்றோ. அப்போது, அந்த பகுதியில் காலரா பரவியுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்தனர். இருந்தும் அங்கு சென்று மக்களோடு பேசி மகிழ்ந்தார். காலன் காலரா வழியாக வந்தான். 1827-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி காலையில் காலரா தாக்கி அன்றிரவே மன்றோ மரணமடைந்தார்.

அந்த காலத்தில் ஆந்திர மக்கள் மன்றோ மீது இருந்த பெருமதிப்பு காரணமாக தங்களின் குழந்தைகளுக்கு "மன்றோலப்பா' என்று பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கின்றனர். அப்படி இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட அந்த ஆங்கிலேயரின் கதையை அறிந்த பின், இப்போது அவரது சிலையைப் பார்க்கும்போது மன்றோ இன்னும் கொஞ்சம் கூடுதல் கம்பீரத்துடன் தெரிகிறார்.

நன்றி - தினத்தந்தி

* அண்ணாசாலையில் இருக்கும் மன்றோவின் சிலைக்கான மொத்த செலவும் பொதுமக்கள் நன்கொடையாக அளித்தது.

* ஃபிரான்சிஸ் சாண்ட்ரி என்பவர் செய்த இந்த சிலை, இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டு கப்பல் மூலம் 1839ஆம் ஆண்டு சென்னை கொண்டு வரப்பட்டது.

* ராஜாஜி தன்னை சந்திக்க வரும் அரசியல் தலைவர்களிடம் மன்றோவின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்படி அறிவுறுத்துவாராம்.

4 comments:

  1. நல்லதொரு தகவலுக்கு நன்றி சார்...
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. அருமையான தகவல். (நீண்ட காலமாக தேடிக்கொண்டிருந்தேன்) மிக்க மகிழ்ச்சி.
    நன்றி...

    ReplyDelete
  3. சார். அவர் சமாதி அனந்தப் பூ மாவட்டத்தில் உள்ள கூடி கோட்டையில் அமைந்துள்ளது என்று My சுற்றுலா ytube பக்கத்தில் பார்த்தேன்.M.SUNDARAVADIVELU

    ReplyDelete