என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Tuesday, August 24, 2010

பழையனூர் நீலி

முதல் ஜென்மத்தில் ஏமாற்றியவனை அடுத்த ஜென்மத்தில் பழிவாங்கிய பழையனூர் நீலியின் கதையை எழுதுவதாக சொல்லியிருந்தேன், அல்லவா. அதை எழுத இப்போது தான் நேரம் கிடைத்தது. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

உண்மையைச் சொல்வதென்றால் நான் திருவாலங்காடு சிவன் கோவிலை பார்ப்பதற்காகத் தான் புறப்பட்டேன். சிவன் கோவிலை நெருங்க இன்னும் சில கிலோ மீட்டர்கள் இருக்கும்போது சாலையின் இடதுபுறம் பழையனூர் என்ற பெயர்ப் பலகை தெரிந்தது. அதைப் பார்த்ததும், எப்போதோ சிறு வயதில் நான் இரவில் கேட்டு பயந்து நடுங்கிய பழையனூர் நீலியின் நினைவு திடீரென தோன்றியது. அந்த பழையனூராக இருக்குமோ என்ற சந்தேகம் என்னை மேற்கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

அருகில் பாழடைந்த பேருந்து நிறுத்தம் ஒன்றில் அமர்ந்துகொண்டிருந்த சிலரிடம் நீலியைப் பற்றி விசாரித்தேன். என்ன ஆச்சர்யம், நான் பயந்த அதே பழையனூர்தான் இது. நீலிக்கு கோவில் கூட இருக்கிறது என்றார்கள். சரி முதலில் நீலியைப் பார்த்துவிடுவோம் என்று வண்டியைத் திருப்பினேன். அதற்கு முன்னால் உங்களுக்கு நீலியின் கதையை சொல்லிவிடுகிறேன்.

அன்றைய காஞ்சி மாநகரில் புவனபதி என்று ஒரு அந்தணர் இருந்தார். சிறிது காலம் இல்லறம் நடத்திய அவர் புனித யாத்திரை செல்லத் திட்டமிட்டார். அதனையடுத்து காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டு கொஞ்ச காலம் அங்கேயே தங்கியிருந்தார். அங்கிருந்த சத்தியஞானி என்பவர் நம்ம புவனபதியை ஒருநாள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். விருந்துக்கு போன இடத்தில் நம்மாள் விருந்து கொடுத்தவரின் மகள் நவக்கியானியின் மனதை மயக்கி கல்யாணமும் செய்துகொண்டார். தனக்கு காஞ்சிபுரத்தில் ஒரு குடும்பம் இருப்பதைப் பற்றி மூச்சுகூட விடவில்லை.

சிறிது காலம் கழித்து ஊர் ஞாபகம் வரவே காஞ்சிக்கு புறப்பட்டார் புவனபதி. நவக்கியானி நானும் வர்ரேன் என அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார் புவனபதி. போதாக் குறைக்கு நவக்கியானியின் சகோதரன் சிவக்கியானியும் கூட கிளம்பிவிட்டான். சொந்த ஊர் நெருங்க நெருங்க புவனபதிக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது.

ஒரு மாலைப் பொழுது திருவாலங்காட்டை அடைந்த அவர்கள் அங்கேயே இரவு தங்க முடிவு செய்தனர். அப்போதுதான் புவனபதிக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவருமாறு கூறி மைத்துனனை அனுப்பிவிட்டு, இரண்டாவது மனைவியின் கழுத்தை நெறித்து பரலோகம் அனுப்பிவிட்டார் நம்மாள். அடுத்து ஊரைப் பார்த்து ஓட்டம்பிடித்தார்.

தண்ணீருடன் வந்த அண்ணன், தங்கை இறந்துகிடப்பதைப் பார்த்து துடித்தான். பக்கத்தில் இருந்த புளிய மரத்தில் தூக்குப் போட்டு தானும் இறந்துவிட்டான். அவர்கள் இருவரும் நீலன், நீலி என்ற பேய்களாக அந்த ஆலங்காட்டையே சுற்றி சுற்றி வந்தனர்.

ஒரு பிறவி முடிந்தது. அடுத்த பிறவியில் புவனபதி வைசிய குலத்தில் தரிசனன் என்ற பெயரில் பிறந்தான். அவனது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள், இவனைப் பழிவாங்க வடக்கில் ஒரு பேய் காத்துக் கொண்டிருப்பதாக எச்சரித்தார்கள். அந்த பேயிடம் இருந்து தப்பிக்க மந்திரித்த கத்தி ஒன்றையும் கொடுத்தனர். முடிந்தவரை வடக்கு பக்கமாக போவதை தவிர்க்குமாறும் அறிவுரை கூறினர்.

தரிசனனுக்கு உரிய வயது வந்ததும் காஞ்சிபுரத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. தரிசனனின் அப்பா சாவதற்கு முன், அவனுக்கு இருக்கும் ஆபத்தைப் பற்றி விளக்கி அந்த மந்திரக் கத்தியையும் கொடுத்துவிட்டு மண்டையைப் போட்டார்.

இது இப்படி இருக்க நீலனும், நீலியும் திருவாலங்காட்டில் ஒரு தம்பதிக்கு குழந்தைகளாகப் பிறந்தனர். இருவரும் பகலில் தொட்டிலில் படுத்து உறங்குவார்கள். இரவானதும் பேயாகி ஆடு, மாடுகளை கொன்று ரத்தத்தைக் குடிப்பார்கள். ஊரில் இருந்து ஆடு, மாடுகள் மர்மமான முறையில் இறப்பதைக் கண்ட ஊர்காரர்கள் ஒரு நாள் இரவு மறைந்திருந்து பார்த்தபோது நீலன், நீலியின் குட்டு வெளிப்பட்டு விட்டது.....

மீதி அடுத்த பதிவில்....
(நீலி ஒரு ஜென்மம் காத்திருந்தாள், நீங்க ஒருநாள் பொறுத்துக்கங்க பாஸ்...)

1 comment:

  1. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்...

    ReplyDelete