என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, August 11, 2010

மலைக்க வைக்கும் அபு மலை


இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான அபு மலை, ராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்குள்ள சமண ஆலயங்கள் தான் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுத்துக் கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க வெண்பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட இந்த ஆலயங்களில் உள்ள சிற்பங்களின் அழகை பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரிவதில்லை. மொத்தம் இங்கு ஐந்து ஆலயங்கள் அமைந்துள்ளன.

முதல் ஆலயமான விமல் வசாஹி கோயிலை குஜராத் மன்னர் முதலாம் பீமதேவின் அமைச்சர் விமல்ஷா, பதினோராம் நூற்றாண்டில் கட்டினார். ஆயிரக்கணக்கான கலைஞர்கள் தங்கள் கற்பனையையும், கைத் திறனையும் கொட்டி சுமார் பதினான்கு ஆண்டுகள் பாடுபட்டு இந்த கோயிலை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்காக அருகில் உள்ள அரசூரி மலையில் இருந்து பளிங்குப் பாறைகளை வெட்டி எடுத்து யானைகள் மீது ஏற்றி இங்கு கொண்டு வந்துள்ளனர். இந்த யானைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், இந்த ஆலயத்தின் எதிரே முப்பது யானைகள் அணிவகுத்து நிற்கும் அற்புதமான யானை மண்டபம் ஒன்றையும் கட்டியிருக்கிறார்கள்.

விமல் வசாஹி கோயிலில் சமணர்களின் முக்கிய கடவுளான ஆதிநாதர் எனப்படும் ரிஷபதேவரை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இந்த கருவறைக்கு முன்னால் கம்பீரமாக காட்சியளிக்கும் ரங் மண்டபத்தில் உள்ள தூண்களும், பளிங்குத் தோரணங்களும், வேலைப்பாடுகள் அமைந்த குவிமாடமும் உலக அதிசயங்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவை. இவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களை மனிதர்கள் தான் உருவாக்கினார்கள் என்பது நம்புவதற்கு சிரமமாகக் கூட இருக்கிறது.

அடுத்துள்ள லுனா வசாஹி கோயிலை இரண்டாம் பீமதேவின் அமைச்சர்களான வஸ்துபால், தேஜ்பால் ஆகிய இரு சகோதரர்கள் உருவாக்கியுள்ளனர். விமல் வசாஹி கோயிலை விட சற்று சிறியதாக இருக்கும் இந்த கோயிலில் இருபத்து இரண்டாவது தீர்த்தங்கரரான நேமிநாதர் பிரதானமாக வீற்றிருக்கிறார். இங்கும் ரங் மண்டபம், யானை மண்டபம் ஆகிய அனைத்து அதிசயங்களும் காட்சியளிக்கின்றன. மூன்றாவது உள்ள மஹாவீரர் கோவில் எளிமையாகக் கட்டப்பட்டுள்ளது. இதனை 1582-ம் ஆண்டில் கட்டியிருக்கிறார்கள்.

மஹாவீரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கோயிலின் மேல் சுவர்களிலும் முன் மண்டபத்திலும் உள்ள ஓவியங்கள் விழிகளை விரிய வைக்கின்றன.
ஆலய வளாகத்தின் இடப்பக்கத்தில் உள்ளது மூன்றடுக்குகளைக் கொண்ட பார்ஷ்வநாதர் ஆலயம். இதன் ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு பக்கங்களிலும் பார்ஷ்வநாதரின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து அகமதாபாத் சுல்தான் பேகடாவின் அமைச்சர் பீமாஷா கட்டிய பீத்தள்ஹார் கோயில் உள்ளது. இங்கு பஞ்ச லோகத்தில் வார்க்கப்பட்ட பிரம்மாண்ட ரிஷ்பதேவரின் சிலை உள்ளது. இதில் அதிகளவில் பித்தளையே இருப்பதால் இதனை பீத்தள்ஹார் கோயில் என அழைக்கிறார்கள்.

No comments:

Post a Comment