என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, June 30, 2013

மெட்ராஸ் சாலைகள்

எந்த ஒரு நகரின் வளர்ச்சிக்கும் அங்கிருக்கும் சாலைகள் மிக முக்கிய காரணமாக இருக்கின்றன. மெட்ராசும் இதற்கு விதிவிலக்கல்ல. மெட்ராசில் ஆங்கிலேயர்கள் காலடி வைத்து சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சாலைகள் முறையாக அமைக்கப்பட்டன. அதுவரை மனிதர்கள் நடந்து செல்லவும், மாட்டு வண்டிகளில் செல்லவும் போதுமான அளவில்தான் சாலைகளின் அகலமும், தரமும் இருந்தன.

இன்று வாகனங்கள் மின்னல் வேகத்தில் விரையும் மவுண்ட் ரோடு எனப்படும் அண்ணா சாலையும், பூந்தமல்லி நெடுஞ்சாலையும் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பிருந்தே மக்கள் பயன்பாட்டில் இருந்தன. மெட்ராஸ் என்ற நிலப்பகுதியை சுற்றியிருந்த திருவொற்றியூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற கிராமங்கள் பல நூற்றாண்டுகளாக இருக்கின்றன என்பதற்கு இங்குள்ள புராதன கோவில்களே சாட்சி. இங்குள்ள மக்கள் செங்கல்பட்டு, பூந்தமல்லி உள்பட தொண்டை மண்டலத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல இந்த சாலைகளைத் தான் பயன்படுத்தினர். இருந்தாலும் சாதாரண புறவழிச்சாலையாக இருந்த இவை, மாநகரின் முக்கிய சாலைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்தது ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகுதான்.
மவுண்ட் ரோடு 1905இல்

1856இல் பொதுப்பணித்துறை வேலைகளை கவனிக்க ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனின் அறிக்கை அப்போதைய மெட்ராஸ் சாலைகளின் நிலை எப்படி இருந்தது என்பதை தெளிவாகக் கூறுகின்றன.

'இங்கிலாந்தைவிட இரண்டரை மடங்கு அதிக நிலப்பரப்பும், மக்கள்தொகையும் கொண்ட இந்த ராஜதானிக்கு, 3400 மைல்களுக்குத்தான் தெருக்கள் இருக்கின்றன. அவை கூட உண்மையில் சரியாக அமைக்கப்பட்ட வீதிகள் அல்ல. வெறும் கை வண்டி அல்லது மாட்டு வண்டிகள் செல்லக்கூடிய வழிகள்தான். கோடைகாலத்தில் தரை கெட்டியாக இருக்கும்போது மட்டும்தான் அவற்றை பயன்படுத்த முடியும். பாலங்களும் சரியாக கட்டப்படவில்லை. இவை அனைத்துமே மராமத்து பார்க்க வேண்டியவை' என்று அந்த கமிஷன் தெரிவித்திருக்கிறது.

இந்த கமிஷன் வருவதற்கு முன்பே மவுண்ட் ரோடு வந்துவிட்டது. ஜார்ஜ் கோட்டையில் இருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை சுமார் 15 கிலோ மீட்டர்களுக்கு நீ......ண்டு கிடக்கும் இந்த சாலை காலப்போக்கில் அசுர வளர்ச்சி அடைந்தது. ஏசுநாதரின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார், கிபி 72இல் செயிண்ட் தாமஸ் மவுண்டில்தான் கொல்லப்பட்டார். இதனையடுத்து கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த மலை வழிபாட்டுத் தலமாக இருந்து வருகிறது. எனவே மெட்ராஸ் வந்த ஆங்கிலேயர்களும் கூட்டம் கூட்டமாக இங்கு வந்து வழிபடத் தொடங்கினர்.
போக்குவரத்து நெரிசல் இல்லாத மவுண்ட் ரோடு

இதனிடையே 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் மெட்ராஸ் ஆளுநர்கள் கிண்டியில் உள்ள அரசினர் இல்லத்தில் அடிக்கடி வந்து தங்க ஆரம்பித்ததால், இந்த பகுதியில் போக்குவரத்து அதிகரித்தது. எனவே சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக மவுண்ட் ரோடு சீரமைக்கப்பட்டது. அரசு மட்டுமின்றி சில தனி நபர்களும் மவுண்ட் ரோட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளனர்.

மெட்ராசில் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஆர்மீனிய வணிகரான பெட்ரூஸ் உஸ்கான், செயிண்ட் தாமஸ் தேவாலயத்திற்கு வருபவர்களின் வசதிக்காக தனது சொந்த செலவில் அடையாற்றின் குறுக்கே 1726இல் ஒரு பாலத்தை கட்டிக் கொடுத்தார். அதுதான் அடையாறு மர்மலாங் பாலம். பின்னர் இந்த பாலம் சேதமடைந்துவிட்டதால் 1950-களில் இதன் அருகிலேயே தற்போது இருக்கும் மறைமலை அடிகள் பாலம் கட்டப்பட்டது.

இந்தியாவின் தற்போதைய வரைபடத்திற்கு ஆணிவேராக இருந்ததே மவுண்ட் ரோடுதான். காரணம், இந்தியாவின் நீள அகலத்தை அளப்பதற்காக 1802ஆம் ஆண்டு தொடங்கிய 'இந்தியாவின் பெரும் முக்கோணவியல் அளவீடு' (The Great Trigonometrical Survey of India) பணிக்கு மவுண்ட் ரோட்டில்தான் பிள்ளையார் சுழி போடப்பட்டது. ஜார்ஜ் கோட்டையை செயிண்ட் தாமஸ் மவுண்டுடன் இணைக்கும் 7 மைல் நீளம் கொண்ட நேர்க் கோட்டை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த வேலை ஆரம்பமானது.

மெட்ராசின் மற்றொரு முக்கிய சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை. சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களின் வருகைக்கு பிறகு இந்த சாலையின் பயன்பாடு அதிகரித்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள் தங்குவதற்காக ராஜா சர் ராமஸ்வாமி முதலியார் சத்திரம், அப்துல் ஹகீம் சாகிப் சத்திரம் (சித்திக் செராய்) ஆகியவை இங்கு கட்டப்பட்டன. இந்த இரண்டு சத்திரங்களும் இன்று வணிக வளாகமாக உருமாறி இருக்கின்றன. சித்திக் செராயில் ஒரு பெரிய மசூதி இருக்கிறது.
பாரிமுனை 1890இல்

இவை மட்டுமின்றி விக்டோரியா ஹால், மூர் மார்க்கெட், ரிப்பன் மாளிகை, அரசு பொது மருத்துவமனை, தினத்தந்தி அலுவலகம், பச்சையப்பன் கல்லூரி, ஆண்ட்ரூஸ் தேவாலயம், ஆங்கிலோ-இந்தியன் பள்ளி என பல முக்கிய கட்டடங்கள் இந்த சாலையின் பயன்பாட்டை அதிகரித்தன.

ஆரம்ப நாட்களில் கோட்டைக்குள்ளேயே இருந்து மூச்சு முட்டிய ஆங்கிலேயர்கள், பின்னர் மெல்ல வெளியில் வந்து பெரிய பெரிய தோட்ட வீடுகளைக் கட்டி குடியேற ஆரம்பித்தனர். தேனாம்பேட்டை, வேப்பேரி, புரசைவாக்கம், சேத்துபட்டு என அவர்கள் வீடு கட்டிய இடங்களில் எல்லாம் சாலைகள் முளைத்தன. இப்படித்தான் இன்றைய சென்னையின் பல சாலைகள் உருப்பெற்றன.

அறிஞர்களின் சிலைகள் வரிசை கட்டி நிற்கும் பிரம்மாண்டமான கடற்கரைச் சாலையில் தொடங்கி சென்னையின் சின்ன சின்ன தெருக்கள் வரை ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. இந்த கதைகளை சுமந்தபடி மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஓடிக் கொண்டிருந்த சாலைகளில், டிராம்கள் அறிமுகமாகி ஓடி ஓய்ந்துவிட்டன. அடுத்து சாலைகளை ஊடறுத்து ஓட மெட்ரோ ரெயில்கள் தயாராக இருக்கின்றன. மொத்தத்தில் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைத்தபடி, வரலாறுகளால் நிறைந்து கிடக்கின்றன மெட்ராஸ் சாலைகள்.

நன்றி - தினத்தந்தி

* எழும்பூர் பாந்தியன் சாலையை உள்ளடக்கிய 43 ஏக்கர் நிலம்
1778இல் ஹால் பிளம்மர் என்பவருக்கு மெட்ராஸ் அளுநரால் வழங்கப்பட்டது.

* நுங்கம்பாக்கத்தில் ஒருகாலத்தில் மாட்டு வண்டிகள் பயணிக்கும் ஒற்றையடி பாதையாக இருந்ததுதான் ஸ்டெர்லிங் ரோடு. சாதாரண சிப்பாயாக இருந்து, படிப்படியாக முன்னேறி செஷன்ஸ் நீதிபதியாகிவிட்ட ஸ்டெர்லிங்கின் (L. K. Sterling) நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டது. இப்படி பல ஆங்கிலேயர்களின் நினைவுகளைத் தாங்கியபடி நிறைய சாலைகள் இன்றும் இருக்கின்றன.


Sunday, June 23, 2013

கந்தசாமி கோயில்

போக்குவரத்து நெரிசல்மிக்க இன்றைய சென்னையிலும் அமைதி தவழும் சில இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் முக்கியமானது பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் எனப்படும் கந்தசாமிக் கோயில்.
கந்தசாமி கோயில்

பாரிமுனை ராசப்ப செட்டித் தெருவில் அமைந்துள்ள இந்த கோயில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. வேலூர் மாரி செட்டியார் என்பவர்தான் இந்த கோயில் உருவாகக் காரணமானவர். கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகராக இருந்த மாரி செட்டியார், ஒரு தீவிர முருக பக்தர். அவர் திருப்போரூரில் உள்ள முருகனை அடிக்கடி சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். குறிப்பாக கிருத்திகை நாளில் கண்டிப்பாக திருப்போரூரில் இருப்பாராம்.

அப்படி ஒருமுறை அவர் தனது நண்பர் கந்தப்பா ஆசாரியுடன் திருப்போரூர் சென்றபோது, ஒரு இடத்தில் ஓய்வெடுத்தாராம். அப்போது தெய்வத்தின் அருளால் அவர்களுக்கு அங்கிருந்த வேப்ப மரத்தின் அடியில் இருந்த புற்றுக்குள் இருந்து ஒரு முருகன் சிலை கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அந்த சிலையை எடுத்துவந்து ஏற்கனவே முத்தையால்பேட்டையில் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தனர். இந்த சம்பவம் 1673ஆம் ஆண்டு நடைபெற்றதாக ஆங்கிலேயே குறிப்புகளில் காணப்படுகிறது.

இதனிடையே இந்த கோயில் இங்கு எப்படி வந்தது என்பதற்கு கிட்டத்தட்ட இதேபோல ஒரு தல வரலாறு கூறப்படுகிறது. அதன்படி, இந்த பகுதியில் வசித்த சிவாச்சாரியார் ஒருவர் அருகிலுள்ள திருப்போரூர் தலத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்அவருடன் சில ஆச்சார்யார்களும் வந்து கொண்டிருந்தனர்வழியில் பலத்த மழைபெய்துவெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லைஎனவே, வழியில் ஓர் மடத்தில் தங்கினர்
முத்துக்குமார சுவாமி

அன்றிரவு சிவாச்சாரியாரின் கனவில் காட்சிதந்த முருகன்தான் அருகிலுள்ள புற்றில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டும்படியும் கூறினாராம். கண்விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன், சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அந்த சிலையை எடுத்துக் கொண்டுஊருக்கு புறப்பட்டார்வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர்பின் சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லைஎனவேஅந்த இடத்திலேயே முருகனுக்கு கோயில் கட்டப்பட்டது. சுவாமி இந்த இடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்துதரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் என்கிறார்கள்இதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.

சரி, மீண்டும் மாரி செட்டியாரிடம் வருவோம். தான் கொண்டு வந்த சிலையை வைப்பதற்காக மாரி செட்டியார் ஒரு சிறிய கோயிலைக் கட்டினார். இதற்காக அவர் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்துக் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கோயிலுக்கான இடம் மட்டும் முத்தையாலு நாயக்கரால் கொடுக்கப்பட்டதாம்.

சுமார் 100 ஆண்டுகள் கடந்த பின்னர் 1780ஆம் ஆண்டில் இந்த கோயில் பதினெண் செட்டியார்களால் திருத்தி அமைக்கப்பட்டது. இன்னும் 100 ஆண்டுகள் கடந்த பிறகு, 1860இல்தான் இந்த கோயில் நன்கு விஸ்தரிக்கப்பட்டு கற்கோயிலாக மாற்றப்பட்டது. அதுவரை ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள், இது சாதாரண செங்கற் கோயிலாகத்தான் இருந்தது. 1869ஆம் ஆண்டு வையாபுரி செட்டியார் என்பவர் இந்த கோயிலுக்கு ரூ66,000 நன்கொடையாக வழங்கினார். அவர் இந்த கோயிலுக்காக ஒரு தேரும் செய்ய வைத்ததாக நரசய்யா தனது மதராசபட்டினம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

1880ஆம் ஆண்டு அக்கம்மாபேட்டை கோவிந்த செட்டியார் என்பவர் நாராயண செட்டியாருடன் இணைந்து கோயிலின் அருகில் இருந்த நிலத்தை கோயிலுக்காக அளித்தார். அந்த நிலத்தில் தான் வசந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பின்னர் 1901ஆம் ஆண்டு காளி ரத்தின செட்டியார் என்பவர் ரூ.50,000 நன்கொடை கொடுத்திருக்கிறார். அந்த காசில்தான் கோயிலின் ராஜகோபுரம் கட்டப்பட்டது. இதுமட்டுமின்றி கோயிலுக்காக காளி ரத்தினம் செட்டியார் ஒரு கிண்ணம் நிறைய வைரங்களும், விலை உயர்ந்த கற்களும் கொடுத்தாராம்.

இந்த கோயிலுக்கும் வள்ளலாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வள்ளலார் சென்னையில் வசித்த போது தமிழ் கற்பதற்காக இந்த கோயிலுக்கு அருகில் உள்ள சபாபதி முதலியார் வீட்டுக்கு வருவார். பல நேரங்களில் தமிழ் கற்கப் போகாமல் முருகனைத் தரிசிக்கக் கோயிலிலேயே தங்கிவிடுவாராம். மன முருகிப் பாடலும் பாடுவார்.

திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்என்ற பாடலில் கந்த கோட்ட முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார் வள்ளலார். தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளேஎன்று கந்த கோட்டத்து முருகனை புகழ்ந்து பாமாலை சூட்டியுள்ளார். வள்ளலாரைப் போன்றே சிதம்பரசாமிபாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள்தண்டபாணி சுவாமிகள் போன்றோரும் இங்கு வந்து பாடியுள்ளனர்.

இந்த கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த காலத்திலேயே மெட்ராசின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்களாம். கந்த சஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரம் போன்றவையும் இங்கு மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.
கோயில் குளம்

8 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த கோயிலில் சரவண பொய்கை என்ற பெயரில் ஒரு அழகிய குளம் இருக்கிறது. இது கட்டப்பட்ட காலத்தில் இருந்து இதில் உள்ள நீரின் அளவு கூடாமல், குறையாமல் அப்படியே இருப்பதாக சொல்கிறார்கள். இந்த குளத்தில் கை நிறைய பொறியை அள்ளி வீசினால், மீன்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொறியை கவ்விக் கொண்டு மின்னல் வேகத்தில் நீருக்குள் மறைகின்றன. இங்கு ஒவ்வொரு முறை வரும்போதும், அந்தக் கால மெட்ராஸ் பற்றிய எனது நினைவுகளும் இந்த மீன்களைப் போலவே மூளை நியூரான்களில் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு ஒரே நேரத்தில் பாயும் பரவசத்தை அனுபவிக்க முடிகிறது.

நன்றி - தினத்தந்தி

* உற்சவர் முத்துக்குமார சுவாமி தனிக்கொடிமரத்துடன் உள்ளார்இவர் முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார்விசேஷ காலங்களில் இவருக்கே பிரதான பூஜை நடத்தப்படுகிறது

* தோல் நோய் மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சரவணப் பொய்கையில் வெல்லம் கரைக்கின்றனர்


Friday, June 14, 2013

ராயபுரம் நெருப்புக் கோவில்

தனிமனிதத் தேவைகள் காரணமாக எழும் சில விஷயங்கள் வரலாற்றில் நின்று நிலைத்து விடுகின்றன. அப்படி மெட்ராசில் பார்சி இனத்தவரின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வதுதான் ராயபுரத்தில் இருக்கும் நெருப்புக் கோவில்.
ராயபுரம் நெருப்புக் கோவில்

உலகின் பழமையான இனங்களில் பார்சி இனம் முக்கியமானது. கி.மு. 1200க்கு முன்பே இந்த இனம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. பாரசீகத்தை (தற்போதைய ஈரான், ஈராக்) பூர்வீகமாகக் கொண்ட இவர்கள், ஜொராஷ்டிரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து, இவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் புலம்பெயரத் தொடங்கினர்.

அந்த வகையில் 1795ஆம் ஆண்டில் மெட்ராஸ் மண்ணில் பார்சிகள் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தனர். விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் சிறு குழுவாக இருந்த அவர்கள், ராயபுரத்தில் தேவாலயத்திற்கு எதிரில் இடம் வாங்கி, வீடு கட்டிக் குடியேறினர். அவர்களைத் தொடர்ந்து மேலும் சில பார்சிகள் மெட்ராஸ் வந்தனர். அவர்களில் ரஸ்தோம்ஜி, நவ்ரோஜி ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு நிறுவனத்தை தொடங்கினர். அதற்காக அப்போதைய ஜார்ஜ் கோட்டை ஆளுநரிடம் இருந்து ராயபுரம் பகுதியில் 24 கிரவுண்ட் நிலத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தனர்.

மெட்ராசில் இப்படி மெல்ல காலூன்றிய பார்சிகள், 1876இல் தங்களுக்கென பார்சி பஞ்சாயத்து என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினர். இதன் முதல் கூட்டத்தில் 11 பேர் கலந்துகொண்டதாக ஆவணங்கள் கூறுகின்றன. பார்சி இன மக்கள், நெருப்பை கடவுளாக வழிபடுபவர்கள். ஆனால் இவர்கள் வழிபாடு நடத்துவதற்காக, அப்போது மெட்ராசில் எந்த கோவிலும் இல்லை. எனவே பார்சிகளுக்கென ஒரு கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை மெல்ல வலுப்பெறத் தொடங்கியது.

இதற்காக நிதி வசூலிக்கும் வேலையும் ஆரம்பமானது. பார்சிகளின் கோரிக்கையை ஏற்று பூனாவில் இருந்த சர் தின்ஷா பெட்டிட் என்பவர் 1896இல் ரூ3600 நன்கொடையாக அளித்தார். அந்த காலத்தில் இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததும் கோவில் கட்டும் முயற்சி தீவிரமடைந்தது. பார்சி பஞ்சாயத்தின் அப்போதைய தலைவராக இருந்த சொராப்ஜி பிராம்ஜி தன் பங்கிற்கு ரூ1000 நன்கொடையாக அளித்ததும், அதுவரை சேர்ந்த பணத்தைக் கொண்டு ராயபுரத்தில் கோவிலுக்கென ஒரு இடம் வாங்கப்பட்டது.

ஆனாலும் கோவில் கட்டும் பணி இழுத்துக் கொண்டே போனது. இந்நிலையில் பிரோஜ் கிளப்வாலா என்பவரின் 13 வயது மகன் ஜல், 1906ஆம் ஆண்டு திடீரென மரணமடைந்தான். பார்சிகள் இறுதிச் சடங்கை நெருப்புக் கோவிலில் செய்வது வழக்கம். ஆனால் ஜல்லின் இறுதிச் சடங்குகளை செய்ய, முறையான பூசாரியோ, கோவிலோ அப்போது மெட்ராசில் இல்லை. இதனால் மனமுடைந்துபோன பிரோஜ் கிளப்வாலா, தனக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் வரக் கூடாது எனக் கருதி நெருப்புக் கோவில் கட்டும் பணியை துரிதப்படுத்தினார். இதனையடுத்து அடுத்த ஆண்டே ராயபுரத்தில் நெருப்புக் கோவில் ஒன்றை கட்டிக் கொடுத்ததுடன், பூசாரியை நியமிப்பதற்கென தனியாக ரூ2000 நன்கொடையும் வழங்கினார்.

1909ஆம் ஆண்டு பிப்ரவரி 9ந் தேதி இந்த கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பார்சி பஞ்சாயத்தின் அப்போதைய தலைவர் நவ்ரோஜி ஒரு சிவில் என்ஜினியர் என்பதால், அவரே கோவிலுக்கான வரைபடத்தை தயாரித்துக் கொடுத்தார். இதனையடுத்து 1910ம் ஆண்டு மத்தியில் கட்டி முடிக்கப்பட்ட நெருப்புக் கோவிலுக்கு ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர் என்று பெயரிடப்பட்டது. எர்வாட் தோசாபாய் பாவ்ரி என்பவர் இந்த கோவிலின் முதல் பூசாரியாக பணியாற்றினார். அவருக்கு மாதந்தோறும் ரூ40 சம்பளமாக வழங்கப்பட்டது.
ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்
இந்தக் கோவில் பிறகு பார்சி சமூகத்தவர்கள் சந்திப்பதற்கான இடமாகவும் மாறியது. இந்த நெருப்புக் கோயிலில் 100 ஆண்டுகளைக் கடந்தும் நெருப்பு அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை விளக்கு ஏற்றுகிறார்கள்.

முதல் உலகப் போரின்போது ஜெர்மானிய போர்க்கப்பலான எம்டன், மெட்ராஸ் மீது குண்டுகளை வீசியது. எம்டன் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற பீதி காரணமாக மெட்ராசில் இருந்து ஏராளமானோர் அவசர அவசரமாக வெளியேறினர். அத்தகைய இக்கட்டான நிலையிலும் இந்த கோவிலின் பூசாரியாக இருந்த பெஷோதான் என்பவர் வெளியேற மறுத்துவிட்டாராம். கோவிலில் இருக்கும் நெருப்பு அணையாமல் தொடர வேண்டும் என்பதற்காக தனது உயிரையும் பணயம் வைத்து கோவிலிலேயே இருந்தாராம்.
அணையாத நெருப்பு

இப்படி பலரும் போற்றிப் பாதுகாத்த அந்த நெருப்பு இன்றும் அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. சற்று கூர்ந்து பார்த்தால், மெட்ராசின் வர்த்தக வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை அளித்த பார்சிகளின் நினைவும் அந்த நெருப்பில் சுடர்விடுவதை உணர முடிகிறது.

நன்றி - தினத்தந்தி

* தமிழ்நாட்டில் உள்ள ஒரே நெருப்புக் கோயில் இதுதான். மும்பையில் 55 நெருப்புக் கோவில்கள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 100 நெருப்புக் கோவில்கள் உள்ளன.

* சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தாதாபாய் நௌரோஜி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கணவர் ஃபெரோஸ் காந்தி, ரத்தன் டாடா ஆகியோர் பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள். 

Saturday, June 8, 2013

காயிதே மில்லத் கல்லூரி

சென்னையின் மிக உயரமான கட்டடம் எது என்று கேட்டால், கேள்வி முடியும் முன்பே எல்ஐசி என்று பதில் வந்துவிடும். ஆனால் எல்ஐசி வருவதற்கு முன் சென்னையின் உயரமான கட்டடமாக இருந்தது எது? அது எங்கிருக்கிறது தெரியுமா? அதைத் தேடி நீங்கள் வெகு தூரம் செல்ல வேண்டாம். அதுவும் எல்ஐசிக்கு மிக அருகில்தான் இருக்கிறது.

எல்ஐசிக்கும், ஸ்பென்சருக்கும் இடையில் உள்ள சிக்னலில் காத்திருக்கும்போது, நடுவில் சிவப்பு வண்ணத்தில் நின்று கொண்டிருக்கும் சிறிய அரண்மனை போன்ற புராதன கட்டடத்தை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். அகர்சந்த் மேன்சன் (Agurchand Mansion) என்று தற்போது அறியப்படும் அந்த 100 அடி உயர கட்டடம்தான் ஒருகாலத்தில் சென்னையின் உயரமான கட்டடமாக இருந்தது.
அகர்சந்த் மேன்சன்

இந்த கட்டடத்தின் வரலாற்றை புரட்டிக் கொண்டே போனால் அது கர்நாடக கடைசி நவாப்பின் வீட்டு வாசலில் போய் நிற்கிறது. நவாப் குலாம் முகமது கவுஸின் மனைவி, பேகம் அஸீம் உ நிசா. நவாப் தனது மனைவிக்கு நிறைய சொத்துகளை விட்டுச் சென்றிருந்தார். அவற்றில் முக்கியமானது தற்போது அகர்சந்த் மேன்சனும் எதிரில் காயிதே மில்லத் கல்லூரியும் உள்ள இடங்கள்.

காயிதே மில்லத் கல்லூரி இருக்கும் இடத்தில் தான் பேகம் அஸீம் உ நிசா தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த மாளிகை உம்தா பாக் (Umda Bagh) என்று அழைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நிலம் கோல சிங்கண்ண செட்டிக்கு சொந்தமாக இருந்தது. 1816இல் வெளியான மெட்ராஸ் வரைபடத்தில் இந்த நிலம் சிங்கண்ண செட்டியின் நிலம் என்றுதான் குறிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் 19ஆம் நூற்றாண்டில்தான் இது பேகம் அஸீம் உ நிசா வசம் வந்தது (அவர் வாடகைக்குதான் இருந்தார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது). இவர் செய்த தான தர்மங்கள் காரணமாக பேகமின் பெயர் அன்றைய மெட்ராசில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது. நவாப் வாலாஜாவால் சேப்பாக்கம் அரண்மனை வளாகத்தில் தொடங்கப்பட்ட இஸ்லாமிய பள்ளி, பேகம் காலத்தில் அவரது உம்தா பாக் மாளிகைக்கு மாற்றப்பட்டது. அதுதான் இன்றும் மவுன்ட் ரோட்டில் இயங்கி வரும் மதராஸா-இ-ஆஸாம் பள்ளி.
மதராஸா இ ஆஸாம் பள்ளி

1901இல் மெட்ராசில் நடைபெற்ற அனைத்திந்திய இஸ்லாமிய கல்வி மாநாட்டில், இந்த இடத்தை அரசு வாங்கி ஒரு சிறந்த கல்வி நிலையத்தை நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசும் இதனை ஏற்று அப்போது இந்த நிலத்தின் உரிமையாளராக இருந்த திவான் பகதூர் கோவிந்த்தாஸ் முகன்தாஸிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு நிலத்தை வாங்கியது.

பின்னர் இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டதுடன், அருகில் ஒரு பள்ளிவாசலும் கட்டப்பட்டது. பள்ளியின் அருகிலேயே கட்டப்பட்ட தங்கும் விடுதிக்கு உம்தா பாக் என்றே பெயரிடப்பட்டது. 1918இல் இங்கு ஒரு கல்லூரியும் தொடங்கப்பட்டது. 1934இல் இந்த கல்லூரிக்கென தனிக்கட்டடம் கட்டப்பட்டது. அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் லார்ட் எர்ஸ்கின் இதனைத் திறந்து வைத்தார். ஆரம்ப நாட்களில் இஸ்லாமிய மாணவர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்பட்டனர். 1938ஆம் ஆண்டிற்கு பிறகு 25% இஸ்லாமியர் அல்லாத மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

சுதந்திரத்திற்கு பிறகு 1948இல் இது அரசு கலைக் கல்லூரி எனப் பெயர் மாற்றப்பட்டு, அனைத்து சமூக மாணவர்களும் சேரலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 1974இல் தமிழக அரசு இதனை பெண்கள் கல்லூரியாக மாற்றி, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி எனப் பெயரிட்டது. ஆனால் கல்லூரி விடுதியின் பெயர் மட்டும் இன்றும் உம்தா பாக் என்றே இருக்கிறது.
கடைசி கர்நாடக நவாப்

சரி, இப்போது சாலைக்கு எதிர்புறம் இருக்கும் அகர்சந்த் மேன்சனின் கதைக்கு வருவோம். பேகம் நிசா இந்த சொத்தை 1910இல் அகா முகமது கலீலி சிராஸி என்ற வணிகருக்கு விற்றுவிட்டார். ஈரானில் இருந்து வந்திருந்த இந்த பணக்கார வணிகர், பல வியாபாரங்களில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக கட்டுமானத் துறையில் சிறந்து விளங்கினார். எனவே பேகத்திடம் வாங்கிய இடத்தில் மெட்ராசிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் 1925இல் ஒரு வானளாவிய அழகிய கட்டடத்தை கட்டி வாடகைக்கு விட்டார். 100 அடி உயரத்தில் கம்பீரமாக நின்ற அந்த கட்டடம் கலீலி மேன்சன் என்று அழைக்கப்பட்டது.

கடைசி காலத்தில் கலீலி தனது இரண்டு மகன்களுக்கு சொத்துகளை பிரித்துக் கொடுக்கும்போது, மூத்த மகன் அப்பாஸ் கலீலிக்கு இந்த கட்டடம் கிடைத்தது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது அப்பாஸ் பாகிஸ்தான் செல்ல முடிவெடுத்ததால், இடம்பெயர்ந்தோர் சொத்து சட்டப்படி அரசு இந்த கட்டடத்தை ஏலம் விட்டது. அப்போது இதனை ஏலத்தில் எடுத்தவர்தான் அகர்சந்த் என்ற வியாபாரி. அப்படித்தான் கலீலி மேன்சன் அகர்சந்த் மேன்சனாக அவதாரம் எடுத்தது. இந்தோ - சராசனிக் பாணியில் இரண்டு தளங்களோடு நின்று கொண்டிருக்கும் இந்த கட்டடத்தில் இன்றும் பல வணிக நிறுவனங்கள் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.

அந்திசாயும் நேரத்தில், அகர்சந்த் மேன்சனின் நீண்ட வராந்தாவில் நின்றபடி எதிரில் தெரியும் காயிதே மில்லத் கல்லூரியைப் பார்க்கும்போது, கர்நாடக நவாப் குடும்பத்தாரும், ஆங்கிலேய அதிகாரிகளும் அரூபமாய் அங்கே தொடர்ந்து நடமாடிக் கொண்டிருப்பதைப் போலவே தோன்றுகிறது.

நன்றி - தினத்தந்தி

* நிறைய இஸ்லாமிய பிரபலங்கள் உம்தா பாக்கில் தங்கிச் சென்றுள்ளனர். அலிகார் பல்கலைக்கழகத்தின் நிறுவனரான செய்யது அகமது கான், மெட்ராஸ் வந்தபோது இங்குதான் தங்கினார்.
* கண்ணியம் மிக்க காயிதே மில்லத்தின் மணிமண்டபம் மகளிர் கல்லூரிக்கு பின்புறம் அமைந்துள்ளது.

* 2012ஆம் ஆண்டு அகர்சந்த் மேன்சனின் முதல் தளத்தில் உள்ள புத்தக கடையில் தீ பிடித்தது. ஆனால் இதனால் கட்டடத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

Saturday, June 1, 2013

மெட்ராஸ் போர்

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டியது போல... என்ற பழமொழியை மெட்ராஸ் 1746இல் அனுபவரீதியாக உணர்ந்தது. எங்கோ ஐரோப்பாவில் பிரிட்டீஷாருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையில் வெடித்த யுத்தத்தின் அதிர்வுகள் மெட்ராசில் உணரப்பட்டன.

1746ஆம் ஆண்டு ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் மோதிக் கொண்டன. வரலாற்றில் 'ஆஸ்ட்ரியன் சக்சஷன் போர்' (War of Austrian succession) என்று அழைக்கப்படும் இந்த யுத்தத்தில் பிரிட்டனுக்கு எதிராக ஃபிரான்ஸ் களமிறங்கியதுதான் மெட்ராஸ் போரைத் (Battle of Madras) தொடங்கி வைத்தது.

1720களில் இருந்தே பிரிட்டீஷாருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே வாய்க்கால் தகராறு இருந்தது. இந்நிலையில் ஆஸ்ட்ரியன் போரில் ஃபிரான்ஸ் களமிறங்கியதும், பிரிட்டீஷ் கப்பற்படை இந்தியாவில் இருந்த பிரெஞ்சு குடியிருப்புகளை அடித்து நொறுக்கத் தொடங்கியது. இதைப் பார்த்துக் கொண்டு பிரெஞ்சுக்காரர்கள் சும்மா இருப்பார்களா, அவர்களும் களத்தில் குதிக்க வங்கக்கடல் குஸ்திக்களமானது.
மெட்ராசின் யுத்தகளக் காட்சி

இருநாட்டு கப்பற்படைகளும் கடலில் கட்டிப் புரண்டதில் இருபுறமும் சில பல சேதங்கள் ஏற்பட்டன. சண்டையில் கிழிந்த சட்டையை தைக்க பிரெஞ்சு படைகள் தங்கள் தளமான பாண்டிச்சேரியை அடைந்தனர். பிரிட்டீஷார் தங்கள் சேதத்தை சரி செய்ய இலங்கைப் பகுதிக்குச் சென்றனர். இதனால் சென்னை கரையோரப் பகுதி மொட்டை மாடி வத்தல் போல போதிய பாதுகாப்பின்றி இருந்தது.

இந்த தருணத்தை பயன்படுத்தி மெட்ராஸை பிடித்துவிட பிரெஞ்சு கவர்னர் ஜோசப் பிரான்கோயிஸ் டுப்லிக்ஸ் (Dupleix) விரும்பினார். இதற்கு அப்போதைய கர்நாடக நவாப் தடையாக இருக்கக் கூடாதென, பிரிட்டீஷாரை வென்று அவர்கள் கொட்டத்தை அடக்கியதும், மெட்ராசை நவாப்பிடம் ஒப்படைப்பதாக டுப்லிக்ஸ் உறுதியளித்தார்.
பிரெஞ்சு கவர்னர் டுப்லிக்ஸ்

1746ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி காலையில் பிரெஞ்சு கடற்படை மெட்ராஸ் கடற்பகுதியில் நின்று கொண்டிருந்ததுகோட்டையை நோக்கி தாக்குதல் ஆரம்பமானது. ஆனால் முதலில் பிரெஞ்சுகாரர்களின் தாக்குதல் இலக்கை சென்று அடையவில்லை. பிரிட்டீஷாரின் பதில் தாக்குதல் சும்மா பெயரளவுக்கு இருந்தாலும், பிரெஞ்சுக்காரர்கள் சரியாக குறி பார்த்து தாக்குவதற்குள் இரவாகி விட்டது. அடுத்தநாள் காலை, பிரெஞ்சுப் படை கரையிலும் இறங்கிவிட்டது. கடலில் இருந்தும், கரையில் இருந்தும் கோட்டையை சரமாரியாக தாக்கினார்கள். பிரிட்டீஷாரின் பதில் தாக்குதல் பெரிதாக எடுபடவில்லை. பிரெஞ்சுப் படை வென்றுவிட்டது.

பிரெஞ்சு கடற்படைக்கு தலைமையேற்ற லா பௌர்டான்னைஸ் (la bourdannais ) கொஞ்சம் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார். கோட்டையையும்பண்டக சாலையையும் மட்டும் எங்களுக்கு கொடுத்துவிட்டு மெட்ராசின் ஆளுமையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றார். இது தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தையும் போட்டுவிட்டார். ஆனால் டுப்லிக்ஸிற்கு இது பிடிக்கவில்லை. மெட்ராஸை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வர விரும்பினார். விதியும் அதைத் தான் விரும்பியது போல.

அக்டோபர் மாதம் வங்கக்கடலில் ஒரு புயல் வலுவடைந்ததால், கடற்படையை பாதுகாப்பதற்காக லா பௌர்டான்னைஸ் பாண்டிச்சேரி புறப்பட்டார்இப்போது டுப்லிக்ஸ் தனது வேலையைக் காட்டத் தொடங்கினார். ஒப்பந்தத்தை தூக்கி தூர வைத்துவிட்டு, பிரிட்டிஷ் படைகளையும், மெட்ராஸ் மக்களையும் தாக்கினார்பலரை சிறை வைத்தார் அவர்களில் அப்போது எழுத்தராக இருந்த ராபர்ட் கிளைவும் ஒருவர். ஆனால் கிளைவ் வேறு சிலரையும் சேர்த்துக் கொண்டு நைசாக சிறையில் இருந்து நழுவிவிட்டார். பின்னர் 3 நாட்கள் இரவில் மட்டும் பயணித்து, கடலூரில் உள்ள செயிண்ட் டேவிட் கோட்டைக்கு சென்று, மெட்ராசில் நடந்தவற்றை விளக்கினார். இந்த நிகழ்ச்சிதான் ராபர்ட் கிளைவ் என்ற இளைஞனின் வாழ்க்கையையே மாற்றியது.

இதனிடையே டுப்லிக்ஸ் கர்நாடக நவாப்பிற்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. இதனால் கடுப்பான கர்நாடக நவாப் அன்வருதீன், 10 ஆயிரம் பேர் கொண்ட பெரும் படையை தனது மகன் மஃபூஸ் கான் தலைமையில் மெட்ராஸ் நோக்கி அனுப்பி வைத்தார். கர்நாடக இளவரசரை எதிர்த்து இரண்டு பீரங்கிகளும் 400 வீரர்களும் கொண்ட பிரெஞ்சுப் படை களமிறங்கியது. நவீன பீரங்கிகளின் முன் நவாப்பின் வீரர்களால் ஒருநாள் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.  

மெட்ராசில் அடி வாங்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த கர்நாடக இளவரசர், எதிரில் மற்றொரு சிறு பிரெஞ்சுப் படை பாண்டிச்சேரியில் இருந்து மெட்ராஸ் நோக்கி வருவதைக் கேள்விப்பட்டு அவர்களைத் தாக்கலாம் என்று சாந்தோமில் காத்திருந்தார். நவாப்பின் படை அடையாறு ஆற்றின் கரையோரத்தில் அணிவகுத்து நின்றிருந்தது. கோட்டை அருகே நடந்த போரில் பெரிய உயிர்ச்சேதம் இல்லை என்பதால் அந்த படையில் ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் அப்படியே இருந்தனர். ஆனால் எதிர்தரப்பில் 250 பிரெஞ்சு வீரர்களும், 700 இந்திய வீரர்களும் தான் இருந்தனர். சிறிய படையாக இருந்தாலும் நவீன ஆயுதங்கள் இருந்ததால் இதுவும் நவாப்பின் படையை அடித்து துவைத்து அடையாறு ஆற்றங்கரையில் காயப் போட்டது.

இந்த அடையாறு போர் வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது. காரணம், இந்திய வீரர்களுக்கு முறையாக பயிற்சியளித்து நவீன ஆயுதங்களைக் கொடுத்து களமிறக்கிவிட்டால் பெரிய படையைக்கூட வெல்ல முடியும் என்பதை இந்த போர் நிரூபித்துக் காட்டியது. 3 நாட்களில் இரண்டு தோல்விகளோடு கர்நாடக நவாப்பின் படை ஆற்காட்டிற்கே திரும்பிச் சென்றுவிட்டது.

இப்படியே இரண்டு ஆண்டுகாலம் மெட்ராஸ் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் இது எல்லாவற்றிற்கும் காரணமான War of Austrian Succession 1748இல் முடிவுக்கு வந்தது. இதனையொட்டி ஆக்ஸ்-லா-சாப்பல் (Treaty of Aix-la-Chapelle ) என்றொரு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி, வடக்கு அமெரிக்காவில் உள்ள லூயிஸ்பர்க் என்ற இடத்தை பிரெஞ்க்காரர்களிடம் கொடுத்துவிட்டு, பிரிட்டீஷார் மெட்ராசை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவானது. மீண்டும் மெட்ராஸ் பிரிட்டீஷ் வசம் வந்தது.

நன்றி - தினத்தந்தி

* 1758இல் பிரெஞ்சுப்படைகள் மீண்டும் ஒருமுறை மெட்ராஸை கைப்பற்ற முயன்றன. ஆனால் 3 மாதங்கள் கோட்டையை முற்றுகையிட்டுப் பார்த்தும் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.


* மெட்ராஸ் போர்தான் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை ஆங்கிலேயர்களுக்கு புரிய வைத்தது. பின்னர்தான் கோட்டையை பலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்றது.