என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, August 11, 2010

தேவதைகளின் நகரம்


எத்தியோப்பியாவின் கலைப் பொக்கிஷங்களில் ஒன்று லாலிபெலா(லிணீறீவீதீமீறீணீ) நகரம். வோலோ மாகாணத்தின் வடக்கு எல்லையில் கரடுமுரடான மலைகளுக்கு இடையே 2600 அடி உயர சமதளத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. கீழே சாலையில் இருந்து பார்த்தால் மலை மேல் இப்படி ஒரு நகரம் இருப்பதே தெரியாது. ஒரு காலத்தில் தலைநகரமாக புகழ்பெற்று விளங்கிய இந்த நகரம் இப்பொழுது ஒரு சிறிய கிராமம் போல ஆகிவிட்டது. எதிரிகளின் பார்வையில் படாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக இந்த நகரம் உருவாக்கப்பட்டதாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

லாலிபெலா நகர் முதலில் ரோஹா என்ற பெயரில் தான் விளங்கியது. பின்னர் 12-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இப்பகுதியை ஆண்ட அரச பரம்பரையில் லாலிபெலா என்பவர் இளைய மகனாக பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும்போது ஒருநாள் இவரைச் சுற்றி தேனீக்கள் கூட்டம் ஒன்று மொய்த்துக் கொண்டிருந்தது. விலங்கினங்கள் எதிர்காலத்தை முன்கூட்டியே உணரக் கூடியவை என எதியோப்பியர்களிடையே ஒரு நம்பிக்கை உண்டு. அதன்படி வருங்காலத்தில் லாலிபெலா சிறந்த மன்னராக வருவார் என்பதை இந்த தேனீக்களின் வருகை குறிப்பதாக அவரது தாயார் மகிழ்ச்சி அடைந்தார். இதை அறிந்ததும் லாலிபெலா அரியணை ஏறாமல் தடுக்க அவரைக் கொல்லும் முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டன.

பல ஆண்டுகளாக தொடர்ந்த இந்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்தன. ஒரு முறை ஏதோ பானத்தை அருந்திய லாலிபெலா ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தார். தொடர்ந்து 3 நாட்கள் மயக்கத்திலேயே இருந்தார். அப்பொழுது சில தேவதைகள் அவரை கடவுளிடம் அழைத்துச் சென்றதாகவும், கடவுள் அவரை மீண்டும் ரோஹாவிற்கு திரும்பிச் சென்று உலகமே வியக்கும் வகையில் தேவாலயங்களைக் கட்டச் சொன்னதாகவும் இங்கு ஒரு நாட்டுப்புறக் கதை உள்ளது. இந்த தேவாலயங்களை எங்கு, எப்படி கட்ட வேண்டும் என்பதையும் கடவுளே சொன்னாராம். அதன்படி தான் மன்னராக அரியணை ஏறியதும், முதல் வேலையாக லாலிபெலா கலைநயமிக்க தேவாலயங்களை நிர்மாணிக்கத் தொடங்கி விட்டார். இந்த தேவாலயங்கள் மிக வேகமாக கட்டி முடிக்கப்பட்டன. பகலில் கட்டடக் கலைஞர்கள் பாதியில் விட்ட வேலையை, இரவில் தேவதைகள் தொடர்ந்து செய்ததாலேயே இந்த பணி வெகு விரைவில் முடிந்ததாக எதியோப்பியர்கள் நம்புகிறார்கள்.

இந்த கதையை நம்பாதவர்கள் கூட இங்குள்ள தேவாலயங்களைப் பார்த்தால் உண்மையில் இவை தேவதைகள் கட்டியவைதான் என்பதை ஒப்புக் கொள்வார்கள். அதனால் தான் இதனை தேவதைகளின் நகரம் என்று அழைக்கிறார்கள்.

No comments:

Post a Comment