என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, August 8, 2010

ஆதிமனிதனின் வீட்டிற்கு ஒரு விசிட்

சென்னை நகரின் உருவாக்கம், பிரம்மாண்ட வளர்ச்சி, அதன் அரசியல், அங்கு வாழ்ந்த, வாழும் மனிதர்கள், அவர்களின் கலாச்சாரம், பண்பாடு, புராதன கட்டடங்கள், அவை சொல்லும் சுவாரஸ்யமான கதைகள் என சென்னையின் முழு பரிமாணத்தையும் உள்ளடக்கிய ஒரு புத்தகம் எழுதும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். இவை குறித்து ஏற்கனவே பல புத்தகங்கள் வந்திருந்தாலும் அவற்றில் சொல்லப்படாமல் விடுபட்டுப் போன சுவையான, பயனுள்ள, மறைக்கப்பட்ட பல விஷயங்கள் இருப்பதாக உணர்கிறேன். எனவே அவற்றையும் பதிவு செய்யும் முயற்சிதான் இது. இதன் ஒரு பகுதியாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அலைந்து திரிந்து தகவல்களை திரட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த பணியில் ஈடுபட்டிருக்கும்போது எனக்கு எதிர்பாராமல் ஒரு புதையல் கிடைத்தது.

கலைஞர் தொலைக்காட்சியின் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் திரு. அருள்பிரேம் தாஸுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகை ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இருப்பதாகவும், அதை சென்று பார்ப்பது ஒரு பரவச அனுபவமாக இருக்கும் என்றும் கூறினார். உடனே புறப்படுவது என்று முடிவெடுத்து அடுத்த நாள் (03-10-09, சனிக்கிழமை) காலை பயணத்தை தொடங்கினேன். காட்டுப் பகுதிக்குள் சுமார் 4 கி.மீ நடக்க வேண்டியிருக்கும், தனியாக போகாதீர்கள் என்று எச்சரித்திருந்ததால் எனது மைத்துனர் திரு. சந்திரசேகரையும் உடன் அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.

சந்துருவின் பைக்கை எடுத்துக்கொண்டு எங்களின் மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கினோம். பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஆதிமனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் அகழ்வைப்பகம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டு முதலில் அங்கு சென்றோம். ஓடு வேய்ந்த ஒரு சிறிய கட்டடம். பெரியவர்களுக்கு ரூ. 5 கட்டணம் வசூலிக்கிறார்கள். சிறுவர்களுக்கு கட்டணம் ரூ. 3. வெளிநாட்டினராக இருந்தால் கட்டணம் ரூ. 50 (சிறுவர்களுக்கு ரூ. 25). வெள்ளிக்கிழமை விடுமுறை.

தொல் பழங்காலத்தைப் பற்றி மட்டும் தனியாக விளக்கும் வகையில் அமைந்துள்ள தொல்லியல் அகழ்வைப்பகம் இந்தியாவிலேயே இது ஒன்றுதானாம். இந்தியாவிலேயே பூண்டிக்கு அருகில் உள்ள அதிரம்பாக்கத்தில் தான் அதிக அளவில் பழைய கற்கால கருவிகள் கிடைத்திருப்பதால் இந்த அகழ்வைப்பகத்தை இப்பகுதியில் அமைத்துள்ளனர்.

இங்கு பழைய கற்கால (Paleolithic Age) கருவிகள் உரிய விளக்கங்களுடன் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல நுண்கற்காலம் (Microlithic Age), புதிய கற்காலம் (Neolithic Age), பெருங்கற்காலம் (Megalithic Age) ஆகியவற்றைச் சேர்ந்த பிற தொல்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அகழ்வைப்பகத்தின் காப்பாட்சியர் திரு. துளசிராமனிடம் நாங்கள் ஆதிமனிதர்களின் குகையைக் காண வந்திருப்பது பற்றி கூறினோம். மிகுந்த உற்சாகத்துடன் எங்களை வரவேற்ற அவர், அகழ்வைப்பகத்தில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் நிதானமாகவும், விரிவாகவும் விளக்கினார். இங்கு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பலவகை கைக்கோடாரிகள், கிழிப்பான்கள், சுரண்டிகள், வட்டுகள், துளைப்பான்கள், சிறு கத்திகள், அம்பு முனைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 80 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லுயிர் எச்சங்களும் இங்கு காணக் கிடைப்பது இந்த அகழ்வைப்பகத்தின் சிறப்பம்சம். இந்த வரிசையில் மிகப் பெரிய நத்தை ஒன்று கண்ணாடி பெட்டிக்குள் அமைதியாக சுருண்டபடி நம்மைப் பார்த்து 'என்னடா பேராண்டி, எப்படி இருக்கிறே?' என்கிறது.

அகழ்வைப்பக கட்டடத்திற்கு வெளியே 'தொல்மாந்தர் வாழ்வகம்' என்ற பெயரில் பழைய கற்கால மனிதர்களின் ஆளுயர மாதிரி சிலைகள் நான்கும், பாறை குகை மாதிரி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

திரு. துளசிராமனிடம் விடைபெறும் போது, சிறப்பு ஆணையர் திரு. ஸ்ரீ. ஸ்ரீதரை பதிப்பாசிரியராகக் கொண்டு, தான் எழுதிய 'தமிழகத் தொல் பழங்காலமும் பூண்டி அகழ்வைப்பகமும்' என்ற நூலில் ஆதிமனிதர்களின் வாழ்க்கை முறை, தமிழக அகழ்வாராய்ச்சிப் பணிகள் பற்றிய பல அரிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டோம். (விலை ரூ.30). மேலும் நாங்கள் பார்க்கப்போகும் குடியம் குகை (குடியம் என்ற ஊருக்கு அருகில் இருப்பதால் இந்த பெயர்) அல்லிகுழி மலைத்தொடரில் அமைந்திருப்பதாகவும், அதைப் போல 16 குகைகள் அந்த மலைத்தொடரில் இருக்கின்றன என்றும் கூறினார். ஆனால் மற்ற குகைகளை இனங்காணுவது கடினம் என்றார்.

அங்கிருந்து குடியம் குகையைத் தேடிப் புறப்பட்டோம். ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் சீத்தஞ்சேரி என்ற இடத்தில் இடப்பக்கம் திரும்ப வேண்டும் என்று சொல்லியிருந்தார் திரு. அருள்பிரேம் தாஸ். அதேபோல் திரும்பி தூரத்தில் தெரியும் மலைகளை நோக்கி சென்றுகொண்டே இருந்தோம். முடிவே இல்லாதது போல சாலை நீண்டு கிடந்தது. இடையிடையே மிகச் சிறிய கிராமங்கள் குறுக்கிட்டன.

வழியில் தொல்லியல் துறை வைத்துள்ள போர்டு நம்மை வலப்பக்கம் செல்லும்படி வழிகாட்டியது. ஒரு சிறிய கிராமத்திற்குள் நுழைந்தோம். சாலையோரத்தில் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த சிறுவர்களிடம் கொஞ்சம் தண்ணீர் வாங்கி தாகத்தை தணித்துக் கொண்டோம். இந்த பாட்டிலை கொண்டு போங்கண்ணா... என்று ஒரு பாட்டில் தண்ணீரை நீட்டினார்கள் அந்த பெரிய மனதுக்காரர்கள். பரவாயில்லை, தாகம் தீர்ந்துவிட்டது என்று தெம்பாக கிளம்பினோம். மிகப்பெரிய தவறு செய்கிறோம் என்று அப்போது எங்களுக்கு உறைக்கவில்லை.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் சாலை முடிவுற்றது. அருகில் இருந்த வீட்டில் குகைக்கு வழி கேட்டோம். மனிதர்கள் போன வழித்தடம் இருக்கும் அதைப் பின்பற்றி போக வேண்டியதுதான் என்றார் அந்த வீட்டுக்காரர். இரு சக்கர வாகனத்தில் வந்திருப்பதால் இன்னும் சிறிது தூரம் வரை வண்டியிலேயே போகலாம். முடிந்த வரை போங்கள், பிறகு இறங்கித்தான் நடக்க வேண்டும் என்றார். இங்கிருந்து குகைக்கு வெறும் நான்கு கிலோ மீட்டர் தான் என்று சொல்லிவிட்டு, பாதியில் விட்டு வந்த தொலைக்காட்சித் தொடரை பார்க்க மீண்டும் உள்ளே சென்றுவிட்டார்.

மதியம் 1 மணி. வெயில் மண்டையைப் பிளந்தது. மிகப் பெரிய காடு வாயை அகல திறந்துகொண்டு எங்களை விழுங்க காத்திருப்பது போல் இருந்தது. வனவிலங்குகள் இருக்குமா என்று கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றும் கிடையாது, கரடி, நரி மட்டும் இருக்கும், தைரியமா போங்க என்று வழியில் சிலர் சொன்னது இப்போது ஞாபகம் வந்தது. லேசான பயம் கலந்த விறுவிறுப்புடன் உள்ளே நுழைந்தோம். வாயில் இருந்து தொண்டைக்கு போவது போல் பாதை குறுகியது, வெயிலும், அதனால் வெளிச்சமும் சற்று குறைந்தது. கரடுமுரடான கூழாங்கற்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையில் சந்துரு வாகனத்தை லாவகமாக செலுத்திக் கொண்டு போனார். பாறைகளால் போடப்பட்ட ஒற்றையடிப் பாதையில் குலுங்கியடி மெதுவாக ஊர்ந்து சென்றோம். ஓரிடத்தில் ஒரு ஸ்பிளண்டர் வாகனம் நின்று கொண்டிருந்தது. எங்களுக்கு முன் ஒரு சாகச விரும்பி வந்து சைட் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியிருந்தார். அன்னாரின் அடியொற்றி நாங்களும் எங்கள் வாகனத்தை அங்கேயே பார்க் செய்தோம். காட்டிற்குள் பார்க் என்று கிண்டலடித்தபடி நடக்கத் தொடங்கினோம்.

கூழாங்கல் பாதை எங்களை வழிநடத்தி அழைத்துச் சென்றது. மிகவும் அடர்த்தியான காடு என்று சொல்ல முடியாது. ஆனால் சில இடங்களில் 10 அடி தொலைவிற்கு அப்பால் இருப்பது தெரியாத அளவு புதர்கள் அடர்ந்திருந்தன. ஏதோ பெயர் தெரியாத குருவி விட்டுவிட்டு கத்தும் சத்தம் மட்டும் கேட்டது. உயரமான புதர்கள் நிறைந்த காடாக இருக்கிறது. நமக்கு பரிச்சயமான மரங்கள் எதுவும் காணப்படவில்லை. பூஞ்சை பிடித்த நிலையில் இருந்த சில சப்பாத்தி கள்ளிச்செடிகள் பால்யத்தை நினைவூட்டின.

மெல்ல சுற்றிப் பார்த்தால் நான்கு புறமும் பெரிய பெரிய குன்றுகளுக்கு இடையில் நின்று கொண்டிருப்பது புலப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்தோம். நடக்க, நடக்க பாதை நீண்டது. நாக்கு வறண்டது. தண்ணீர் பாட்டில் தானத்தை ஏற்காதது எவ்வளவு பெரிய தவறு என்பது இப்போது நன்றாகவே புரிந்தது. வியர்த்து வழிந்தாலும் விடாமல் நடந்தோம். சில இடங்களில் இரண்டு பாதைகள் பிரிந்தன. எதில் போவது எனத் தெரியவில்லை. மேலே ஒரு சுனை இருப்பதாக கேள்விப்பட்டிருந்தோம். அதற்கான வழியாக அவை இருந்திருக்கலாம். ஆனால் நாங்கள் குகையைப் பார்ப்பதிலேயே ஆர்வமாக இருந்தோம். வழிகாட்டவும் ஆளில்லை. குடியம் குகையில் ஒரு அம்மன் சிலையை வைத்து அங்குள்ள மக்கள் வழிபடுவதாகவும், அதற்காக அந்த குகைக்கு மனிதர்கள் அடிக்கடி வந்து போவதாகவும் கேள்விப்பட்டிருந்தோம். இந்த தகவல் தான் எங்களுக்கு வழி கண்டுபிடிக்க பெரிதும் உதவியது.

இரண்டு பாதைகள் பிரியும் இடங்களில் சிறிது தூரம் சென்று பார்ப்போம். கூழாங்கல் பாதையில் கால்தடத்தை வைத்து வழி கண்டுபிடிக்க முடியாது. சிகரெட் அட்டை, ஸ்வீட் பாக்ஸ் மூடி என ஏதேனும் வழியில் தென்படும். அந்த பாதையில் தொடர்ந்து நடப்போம். சில இடங்களில் சிறு பாறைகளைக் குவித்துவைத்து பொங்கல் வைத்த அடையாளங்கள் தென்பட்டன. குகையை நெருங்கிவிட்டோம் என்ற எண்ணம் தோன்றியதும் உள்ளத்தில் இனம்புரியாத படபடப்பு. ஒரு இடத்தில் பாதை வளைந்தது, அந்த சிறிய கொண்டைஊசி வளைவில் நுழைந்து திரும்பியபோது, லட்சக்கணக்கான ஆண்டுகளை கண்ட அந்த குகை எங்கள் முன் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. ஒரு கணம் மூச்சுவிட மறந்துவிட்டோம். நமது மூதாதையர்கள் வாழ்ந்த அந்த குகைக்குள் காலடி எடுத்து வைக்கும்போது வார்த்தைகளில் வடிக்க முடியாத ஒரு பரவசம்.

5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வேட்டையாடுவதை தொழிலாக கொண்ட மனிதர்கள் வாழ்ந்த குகை. மரப்பட்டைகளையும், விலங்குகளின் தோலையும் ஆடையாக அணிந்திருந்த அவர்களுக்கு நெருப்பின் பயன்பாடு கூடத் தெரியாது. தங்கள் கூட்டத்தில் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் உடலை இயற்கையாக அழியும்படி அப்படியே விட்டுவிடும் அளவிற்கு இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதர்களின் குகை. அப்படியே கண்களை மூடி 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வேகமாகப் பயணித்தேன். குகைக்குள் அமர்ந்திருந்த அந்த கற்கால மனிதர்கள் கள்ளம் கபடமில்லாமல் சிரித்தபடி என்னை கனிவுடன் பார்த்தனர். இதையாவது விட்டுவிடுங்கள் என்று மன்றாடுவது போலவும் அந்த பார்வை இருந்தது. அந்த குகையின் எளிய கம்பீரமும், காடு கொடுத்த கனத்த மௌனமும் எங்களை சூழ்ந்துகொண்டன.

குகைக்குள் நுழைந்தபோது தாயின் அரவணைப்பில் இருப்பது போல இருந்தது. எதிரில் உள்ள பாறைகளில் வெயில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, இந்த குகையில் மட்டும் குளிர்ச்சி நிறைந்திருந்தது. சுமார் 200 பேர் அமரக் கூடிய அளவிற்கு உள்ளே இடமிருந்தது. மூன்று புறமும் பெரிய பெரிய பாறைகள் அணிவகுத்திருப்பதால் மிகவும் பாதுகாப்பான இடம் என இதனைத் தேர்வு செய்திருப்பார்கள் போலிருக்கிறது.

சிலர் இந்த குகைக்குள் ஒரு அம்மன் சிலையை வைத்து, மதமற்ற மனிதர்கள் வாழ்ந்த இடத்தை ஒரு மதத்திற்கு உரியதாய் மாற்ற முயற்சித்திருக்கிறார்கள். அந்த அம்மனுக்கு அடிக்கடி வழிபாடு நடப்பது அங்கிருக்கும் பொருட்களைப் பார்க்கும் போது புரிகிறது. குகையின் வெளிப்புறத்தில் பெரிய பெரிய தேன் கூடுகள் காற்றில் மெல்ல அசைந்து நமக்கு பீதியூட்டின. குகையின் உட்புறமும் நிறைய தேன் கூடுகள் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. சிறிது நேரம் குகைக்குள் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தோம். வாழ்வின் அரிய பெரிய தத்துவங்களை அந்த குகை நொடிப்பொழுதில் அநாயாசமாக எடுத்து வீசியது. அங்கு வெறுமனே அமர்ந்திருப்பதே ஒரு பெரிய வாழ்வானுபவத்தை கொடுத்தது.

தாத்தா, பாட்டி வீட்டிற்கு வந்த சிறுவர்கள், விடுமுறை முடிந்ததும் வேறு வழியின்றி வீடு திரும்புவதைப் போல, மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். நிறைவும், ஏக்கமும் கலந்த கலவையாக மனம் மாறிப் போனதை உணர முடிந்தது. ஒரு பட்டாம்பூச்சி வழிகாட்டியபடியே முன்னால் பறந்து சென்றது. தங்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர்களை அந்த ஆதிமனிதர்களே மிகுந்த கருணையோடு காட்டிற்கு வெளியே வரை வந்து வழியனுப்புவது போல அது இருந்தது.

1 comment:

  1. பரபரப்பான சென்னைக்குப் பக்கத்தில் இப்ப்டியொரு இடமா? ஆர்வத்தைத் தூண்டும்வகையில் ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க.

    பகிர்வுக்கு நன்றி பார்த்திபன்!

    ReplyDelete