என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, August 8, 2010

சரியான நேரத்தில்

நானும், வேணுவும் குதிரைகளில் வேகமாக பறந்து கொண்டிருந்தோம். நாங்கள் எங்கு இருக்கிறோம், எப்போது இந்த குதிரைகள் மீது ஏறினோம் என்பதெல்லாம் நினைவில்லை. அவை இப்பொழுது முக்கியமும் இல்லை. அவற்றை யோசித்துக் கொண்டிருந்தால், அதற்குள் அவர்கள் தப்பித்து விடுவார்கள். எங்களுக்கு சுமார் 100 அடி முன்னால் மின்னல் வேகத்தில் பறந்துகொண்டிருந்த சாரட்டு வண்டியின் உள்ளே இருந்து ஒரு தேவதை அடிக்கடி வெளியில் எட்டிப் பார்த்து தன்னை காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தால். உள்ளே இருந்து யாரோ அவளை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு சண்டையிடுவதில் பழக்கம் இல்லை. சிஏ பவுண்டேஷன். இன்டர் என மாய்ந்து மாய்ந்து படிப்பதற்கே நேரம் சரியாக இருந்ததால், தற்காப்புக் கலைகளின் பக்கம் தலைவைத்து கூட படுத்ததில்லை. வேணுவும் என் அலுவலகத்தில் தான் அக்கவுன்டன்டாக பணியாற்றுகிறான். அவனுக்கும் இதெல்லாம் தெரியாது. இருந்தாலும் ஏதோ குருட்டு தைரியத்தில் இருவரும் குதிரையை விரட்டிக் கொண்டிருந்தோம். அந்த தேவதையை நிச்சயம் காப்பாற்றிவிட முடியும் என்று அடிமனதில் மட்டும் ஒரு பலமான நம்பிக்கை இருந்தது.

காட்டுப்பகுதியில் வேகமாக சென்றுகொண்டிருந்த சாரட் வண்டி திடீரென ஒற்றையடிப் பாதை வழியாக பயணித்து பிரதான சாலை ஒன்றில் ஏறியது. நாங்களும் விடாமல் துரத்தினோம். தூரத்தில் காணப்பட்ட ஒரு கோட்டையை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருப்பதை அப்பொழுது தான் கவனித்தோம். இந்த வண்டியைப் பார்த்ததும் கோட்டைக் கதவுகள் திறந்தன. கோட்டை மதில் மேல் இருந்தவர்கள் எங்களைப் பார்த்துவிட்டார்கள். உடனே உள்ளே இருந்து 10 குதிரைகளில் வாளும், ஈட்டியும் ஏந்திய வீரர்கள் எங்களை நோக்கி விரைந்து வந்தார்கள். திரும்பிப் போயிடலாம் கோபால் என்றான் வேணு. அந்த தேவதையை காப்பாற்றாமல் போக என் மனம் இடம்கொடுக்கவில்லை. வருவது வரட்டும் என தொடர்ந்து முன்னேறினேன்.

யார் நீங்கள் என குரல் கொடுத்த படி எங்களை நெருங்கி வந்தவர்கள், என்னை உற்றுப் பார்த்ததும் சடசடவென்று குதிரைகளில் இருந்து கீழிறங்கினார்கள். அவர்களில் தலைவன் போல் இருந்தவன், இளவரசே தாங்களா என்றபடி நெடுஞ்சாணாக விழுந்து வணங்கினான். ஆம், முதலில் அந்த பெண்ணை விடுவியுங்கள் என்றேன். வேணு எல்லாவற்றையும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். விடுதலை பெற்ற தேவதை கண்ணீரும், நன்றியும் மிதக்கும் கண்களுடன் என்னருகில் வந்து மெல்ல வாய் திறந்தாள்...

என்னங்க எழுந்திருங்க, ஆபிஸ்ல ஆடிட்டிங் இருக்கு சீக்கிரம் போகனும்னு சொல்லிட்டு, குறட்டை விட்டு தூங்கிக்கிட்டு இருக்கீங்களே என என் தர்மபத்தினியின் குரல் கேட்டது. சே... அந்த தேவதை என்ன சொல்ல வந்தாள்னு இப்ப எப்படி தெரிஞ்சிக்கிறது.

No comments:

Post a Comment