என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, August 11, 2010

பூலோகக் கைலாசம்

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எல்லோரா. இங்குள்ள அற்புத குகைக் கோயில்களை பௌத்தம், சமணம், இந்து மதம் என மூன்று பிரிவினரும் போட்டி போட்டு செதுக்கித் தள்ளி இருக்கிறார்கள். கிபி ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை இங்கு தொடர்ந்து உளிச் சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கிறது.
முதல் 12 குகைக் கோயில்களை புத்த மதத்தினர் உருவாக்கியிருக்கிறார்கள். இங்குள்ள குகைகளில் பெரும்பாலும் புத்தர் மற்றும் போதி சத்துவர்களின் உருவங்கள் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. பத்தாவது குகையில் பார்ப்பவர்கள் அசந்து போகும் அளவுக்கு அற்புதமான மண்டபம் ஒன்றை வடிவமைத்திருக்கிறார்கள். இதன் அலங்காரமான நுழைவு வாயிலில் தொடங்கி உள்ளே உயரமான கூரையில் செய்யப்பட்டுள்ள நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் வரை அந்த தெய்வீகக் கலைஞர்களின் கைவண்ணத்திற்கு சாட்சியாக விளங்குகின்றன. இந்த மண்டபத்தின் மையத்தில் அமைதியாக காட்சியளிக்கும் புத்தர் சிலை நம்மை அப்படியே அழகில் கட்டிப் போட்டி விடுகிறது. அடுத்துள்ள இரண்டு குகைகளிலும் அந்த காலத்திலேயே இரண்டடுக்கு, மூன்றடுக்கு மண்டபங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இந்துக்கள் வடிவமைத்த குகைக் கோயில்கள் காட்சியளிக்கின்றன. இங்குள்ள பதினாறாவது குகையில் பூலோக கைலாசம் ஒன்றையே உருவாக்கியிருக்கிறார்கள். அந்த பிரம்மாண்ட ஆச்சர்யத்தைப் பார்க்கும் போது, நாம் பூமியில்தான் இருக்கிறோமா என சந்தேகம் வந்துவிடுகிறது. ஒற்றைப் பாறையைக் குடைந்து ஒரு கோயிலையே வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த ஒற்றைப் பாறைக் கோயில் மூன்று தனித்தனி ஆலய மண்டபங்களுடன் கூடிய இரண்டடுக்கு கோயில் என்பதுதான் இதன் சிறப்பம்சம். இங்குள்ள சிற்பங்களில் பத்து தலை ராவணன் கைலாயத்தை உலுக்கும் சிற்பம், இரண்யனை வதம் செய்யும் நரசிம்மர், வாலி - சுக்ரீவன் யுத்தம் போன்ற சிற்பங்கள் இந்திய சிற்பக் கலைக்கே எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

முப்பது முதல் முப்பத்து நான்கு வரை சமணர்களின் குகைக் கோயில்கள். பதினோறாம் நூற்றாண்டில், சமணர்கள் அமைத்த இந்த கோயில்கள் தான் எல்லோராவின் கடைசிக் குகைக் கோயில்கள். இங்குள்ள இந்திர சபை என அழைக்கப்படும் முப்பத்திரண்டாவது குகை சொக்க வைக்கும் அழகுடன் காட்சியளிக்கிறது. சமணர்கள் இந்த குகைகளில் உள்ள தூண்களை மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைத்துள்ளனர். இங்குள்ள பரசுநாதர் சிலையும், மகாவீரர் சிற்பமும் அற்புத கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால் எல்லோராவில் காலத்தாலும், பல காரணங்களாலும் சிதைந்து விட்ட சிற்பங்கள், நாம் மீட்டெடுக்க முடியாத கலைப் பொக்கிஷங்களை இழந்துவிட்டதை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கின்றன.

No comments:

Post a Comment