என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, August 11, 2010

காற்று மாளிகை


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ளது இந்த வானுயர்ந்த காற்று மாளிகை. 1799-ம் ஆண்டு மகாராஜா சவாய் பிரதாப் சிங், இந்த ஐந்து அடுக்கு மாளிகையை கட்டினார். லால் சந்த் உஸ்தா என்ற கட்டிடக் கலை நிபுணர் வடிவமைத்த இந்த மாளிகை, ராஜஸ்தானிய கட்டிடக் கலையின் அற்புத சாட்சியாக காட்சியளிக்கிறது. ஜெய்பூர் அரண்மனையின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த மாளிகையில் இருந்து பார்த்தால் அரண்மனையைச் சுற்றியுள்ள சாலைகளையும், ஜெய்பூர் நகரையும் நன்கு பார்க்க முடியும். மகாராஜா சவாய் பிரதாப் சிங், இந்த மாளிகையை கட்டியதே அதற்குத் தான். ஆம், அரச குடும்பத்து பெண்கள் இந்த மாளிகையில் இருந்தபடியே யார் கண்ணிலும் படாமல், ராஜ வீதிகளில் வரும் ஊர்வலங்களையும், நடைபெறும் நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்க வேண்டும் என்று தான் அவர் இந்த காற்று மாளிகையை கட்டினார்.

காற்று மாளிகையின் முன் நின்று பார்த்தால் ஏதோ அலங்கரிக்கப்பட்ட திரைச்சீலை தொங்க விடப்பட்டதை போலத் தான் இருக்கிறது. பிரமிடு வடிவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாளிகையில் ஐந்து தளங்களிலும் சேர்த்து அடுக்கடுக்காக 953 சாளரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய ஜன்னல் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர ஒவ்வொரு சாளரத்தை சுற்றிலும் பால்கனியும், உச்சியில் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறிய ஜன்னல் வழியாக உட்புகுந்து வரும்போது, வெப்பக் காற்றும் குளிர் காற்றாக மாறிவிடும் வகையில் இந்த ஜன்னல்களை வடிவமைத்துள்ளனர்.

சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறக் கற்களைக் கொண்டு இந்த காற்று மாளிகையை கட்டியிருப்பதால் தூரத்தில் இருந்து பார்க்கும் போது, வானில் சிவப்புத் திரைச்சீலை தொங்குவது போல காட்சியளிக்கிறது. ஜெய்பூர் அரண்மனைக்குள் நுழைந்து வந்தால் இந்த மாளிகையை அடையலாம். இதன் மேல் மாடிகளுக்கு செல்ல படிகள் எதுவும் இல்லை, வெறும் சரிவான பாதை மட்டுமே உள்ளது. அவற்றின் மூலம் தான் மேல் தளங்களுக்கு செல்ல வேண்டும்.
இந்த மாளிகையின் சாளரங்கள் வழியாக ஜெய்பூர் நகரின் அற்புதக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம். இங்குள்ள அலங்கார சாளரங்கள் மூலம் சூரிய உதயத்தைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை இந்த மாளிகையைக் காண ஏற்ற காலம் என இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காற்று மாளிகை தற்போது ராஜஸ்தான் மாநில தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் பராமரிப்பில் உள்ளது.

No comments:

Post a Comment