என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, December 31, 2011

மவுண்ட் ரோடு

ஞாயிற்றுக்கிழமை மத்தியான நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக காட்சியளிக்கும் மவுண்ட் ரோடு எனப்படும் அண்ணா சாலையைப் பார்க்கும்போது, மனம் மெல்ல பின்னோக்கிச் செல்கிறது. இது சுமார் 400 ஆண்டுகால ஃபிளாஷ்பேக். ஆம், சென்னையின் இந்த முக்கியமான சாலை 370 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் இன்று வரை மவுண்ட் ரோட்டின் மாறுபட்ட காட்சிகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம், தொடர்ந்து பார்த்தும் வருகிறோம். இன்று நவீன ரக கார்களும், சொகுசுப் பேருந்துகளும் ஓடும் இந்த சாலையில் ஒரு காலத்தில் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும், டிராம் வண்டிகளும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தன.

கிழக்கிந்திய கம்பெனியார் சென்னை நகரில் கோட்டை கட்டிக் குடியேறிய உடனே உருவான வெகு சில விஷயங்களில் இந்த சாலையும் ஒன்று. ஜார்ஜ் கோட்டைக்கு தெற்கே கூவம் ஆற்றிற்கு அருகில் தொடங்கி பரங்கிமலை வரை சுமார் 15 கி.மீ நீளத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் புனித தோமையார் மலையில் சென்று வழிபாடு நடத்துவதற்கு வசதியாக இந்த அகன்ற சாலை அமைக்கப்பட்டது. 1781-1785 காலகட்டத்தில் சார்லஸ் மெக்கார்டினி (Charles MaCartney) என்பவர் மெட்ராஸ் ஆளுநராக இருந்தபோதுதான், மவுண்ட் ரோடு இன்றைய வடிவத்தைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்த சாலையின் இருபுறமும் வணிக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் முளைக்கத் தொடங்கின. இந்து பத்திரிகை அலுவலகம், ஹிக்கின்பாதம்ஸ், ஆயிரம் விளக்கு மசூதி, பிரிட்டீஷ் கவுன்சில், அண்ணா அறிவாலயம் என இந்த பட்டியல் மிக நீளமானது. சென்னையின் முதல் 14 மாடிக் கட்டடமான எல்ஐசியும் இந்த சாலையில் தான் இருக்கிறது.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சில கட்டடங்கள் கடந்துபோன காலத்தை நினைவுபடுத்தியபடியே இன்றும் நின்று கொண்டிருக்கின்றன. 'தி மெயில்' பத்திரிகை அலுவலகம், சிதிலமடைந்து காணப்படும் பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம் ஆகியவை அவற்றில் சில. இங்கிருக்கும் பி.ஆர் அண்டு சன்ஸ் கடிகார கம்பெனி இன்றும் தனது புராதனக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

மவுண்ட் ரோட்டின் மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம், இங்கிருக்கும் சிலைகள். சாலையின் ஆரம்பத்திலேயே இருக்கிறது மேஜர் ஜெனரல் சர் தாமஸ் மன்றோவின் சிலை. 1820 - 1827இல் சென்னையின் ஆளுநராக இருந்தவர் மன்றோ. லண்டனின் எஃப் சான்ட்ரீ என்பவர் 1838இல் உருவாக்கிய இந்த சிலைக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. அதாவது, பண்டைய ரோம சிற்ப சாஸ்திர அடிப்படையில் இந்த சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

மன்றோவைத் தொடர்ந்து காமராஜர், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், முத்துராமலிங்கத் தேவர், ராமசாமிப் படையாச்சி, தீரன் சின்னமலை, நேரு என மக்கள் மனதில் நின்ற தலைவர்கள் இந்த சாலை நெடுகிலும் சிலைகளாக நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த சாலையில் இருக்கும் ஜெமினி மேம்பாலம்தான் சென்னையின் முதல் மேம்பாலம்.

அண்ணா, சாந்தி, தேவி என சினிமா ரசிகர்களுக்கும் இந்த சாலை விருந்து படைக்கிறது. அருகில் இருக்கும் காஸினோ திரையரங்கில் அந்தக் காலத்தில் படம் பார்க்க டிக்கெட் கிடைக்காதவர்கள் பக்கத்து சந்துகளில் நின்றுகொண்டு படத்தின் வசனங்களையும், பாடல்களையும் கேட்பார்களாம். இதற்கு அருகில் இருந்த சென்னையின் பழமையான கெயிட்டி திரையரங்கு இன்று இடிக்கப்பட்டு விட்டது. இதேபோன்று ஆனந்த், குளோப், வெலிங்டன், சஃபயர் காம்பிளக்ஸ் போன்ற திரையரங்குகளும் மவுண்ட் ரோட்டில் இருந்து மறைந்துவிட்டன.

ஒருகாலத்தில் மவுண்ட் ரோட்டில் இரவில் ரிக்ஷாவில் போனால் பிசாசு பின்தொடரும் என்ற பயம் இருந்ததாம். அருகில் இருக்கும் பெரிய கிறிஸ்தவ இடுகாடு, கவர்ன்மென்ட் எஸ்டேட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆகியவை இந்த பயத்தின் பின்னணியாக இருக்கலாம் என தன்னுடைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் அசோகமித்திரன்.

இப்படி மவுண்ட் ரோடாக உருவாகி இன்று அண்ணா சாலையாக மாற்றம் பெற்றிருக்கும் இந்த சாலையைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. அவற்றை எல்லாம் பட்டியலிட்டால் அது முடிவுறாமல் நீண்டு கொண்டே செல்லும்.

நன்றி - தினத்தந்தி

* மெட்ரோ பணிகள் நடைபெறுவதையொட்டி இந்த சாலையில் விரைவில் ரயில்களும் பயணிக்க இருக்கின்றன.

* இந்த சாலையில் இருந்த ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் என்பவரின் சிலை மக்கள் போராட்டம் காரணமாக 1937இல் நீக்கப்பட்டுவிட்டது.

* அண்ணாசாலை தபால் நிலையத்தில் தற்போது சிறப்புத் தபால் தலைகள் காப்பிடமாக இயங்கும் கட்டடத்தில்தான் நூறாண்டுகள் முன்பு எலெக்ட்ரிக் தியேட்டர்இருந்தது. தமிழகத்தின் முறையானமுதல் சினிமாக் கொட்டகை இதுதான்.

Saturday, December 24, 2011

கருப்பர் நகரம்

மெட்ராஸ் ஆரம்ப நாட்களில், வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் என இரண்டு நகரங்களாகத்தான் இருந்தது. ஜார்ஜ் கோட்டைக்குள் இருந்தது வெள்ளையர் நகரம், கோட்டைக்கு வெளியில் கருப்பர் நகரம். கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் சென்னையில் கோட்டை கட்டி குடியேறியவுடனேயே கோட்டைக்கு வெளியில் வெள்ளையர் அல்லாதவர்கள் தங்குவதற்கென ஒரு நகரம் உருவானது. இப்படித்தான் சென்னை என்ற மாபெரும் நகரம், கோட்டைக்கு வெளியில் முதல் அடி எடுத்து வைத்தது.

ஆரம்பத்தில் தமிழர்களும், தெலுங்கர்களுமே அதிகளவில் குடியேறியதால், இது கருப்பர் நகரம் என்று அழைக்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் நெசவாளர்கள். இவர்கள் மட்டுமின்றி ஆர்மீனியர்கள், போர்த்துகீசியர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பினரும் இங்கு வசித்து வந்தார்கள். இதன் தாக்கத்தை இங்குள்ள தெருக்கள் இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. கோவிந்தப்ப நாயக்கன், அங்கப்ப நாயக்கன், லிங்கி செட்டி, தம்பு செட்டி என தெலுங்கு பெயர்களைத் தாங்கி நிற்கும் தெருக்களுக்கு அருகிலேயே இஸ்லாமியர்களின் மூர் தெருவும், ஆர்மீனியர்களை நினைவூட்டும் ஆர்மீனியன் தெரு எனப்படும் அரண்மனைக்காரத் தெருவும் இருக்கின்றன.

ஆங்கில-பிரெஞ்சு யுத்தங்களுக்குப் பிறகு, 18-ம் நூற்றாண்டில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி அதிகரித்தது. முத்தயால்பேட்டை, பெத்தநாயக்கன் பேட்டை என இரு புதுப் பகுதிகள் உருவாகின. பின்னர் மெல்ல மெல்ல கருப்பர் நகரம் விரிவடையத் தொடங்கியது. ராஜஸ்தான், குஜராத், மகராஷ்டிரா ஆகிய வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் இன்றைய சௌகார்பேட்டையும் அன்றைய கருப்பர் நகரத்தின் ஒரு அங்கமாகத்தான் இருந்தது. பூக்கடை, ஏழுகிணறு, மண்ணடி, பாரீஸ் கார்னர், பிராட்வே என சென்னை மாநகரின் இதயப் பகுதி முழுவதும் கருப்பர் நகரத்திற்குள் அடக்கம்.

கோட்டைக்கு மிக அருகில் இருந்ததால், சுமார் 850 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் முக்கியமான வியாபார மையமாக மாறியது. கோட்டைக்குள் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியருடன் வணிகம் செய்த வணிகர்கள் அனைவரும் கருப்பர் நகரத்தில்தான் வசித்தார்கள். ஒரு காலத்தில் இங்கு பவள வியாபாரம் கொடி கட்டிப் பறந்ததை இங்கிருக்கும் பவளக்காரத் தெரு இன்றும் நினைவுபடுத்துகிறது.

1746இல் பிரஞ்சுக்காரர்கள் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றியபோது, கருப்பர் நகரத்தை அழித்தார்கள். 3 ஆண்டுகளுக்குப் பின்னர் கோட்டை மீண்டும் ஆங்கிலேயர் கைக்கு வந்தது. பிரஞ்சுக்காரர்கள் திட்டமிட்டு அழித்த கருப்பர் நகரத்தை மீண்டும் புதிதாக உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக முந்தைய நகரத்திற்கு சற்று தள்ளி ஒரு புதிய கருப்பர் நகரம் உதயமானது.

இந்த புதிய கருப்பர் நகரத்தை பாதுகாப்பதற்காக ஒரு மதில் சுவர் கட்டுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் வேலை மட்டும் வேகமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் 1758இல் ஜார்ஜ் கோட்டை பிரஞ்சுப் படையினரால் முற்றுகையிடப்பட்டது, சில வருடங்கள் கழித்து திப்பு சுல்தான் மெட்ராஸ் மீது படையெடுத்தார். இதை எல்லாம் பார்த்த பிறகுதான் கருப்பர் நகரத்திற்கு மதில் சுவர் அத்தியாவசியம் என்பது ஆங்கிலேயர்களுக்கு உரைத்தது.

இதனையடுத்து ஒரு வருட உழைப்பில் ஒருவழியாக புதிய மதில் சுவர் கட்டப்பட்டது. கருப்பர் நகரத்தை சுற்றிலும் 17 அடி அகலத்திற்கு பீரங்கி வைக்கும் வகையில் இந்த பாதுகாப்புச் சுவர் உருவாக்கப்பட்டது. ஆனால் எதிரிகளிடம் இருந்து தங்களை பாதுகாக்க உதவும் இந்த சுவற்றுக்கான செலவை பொதுமக்களே ஏற்க வேண்டும் என கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகிகள் கூறினர். சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி செல்லும் சாலைக்கு வால் டாக்ஸ் சாலை (WALL TAX ROAD) என பெயர் வந்ததன் பின்னணி இதுதான். காரணம், இந்த சாலையை ஒட்டித்தான் கருப்பர் நகரத்தின் மேற்கு பக்கத்து சுவர் அமைந்தது. ஆனால் மக்கள் இந்த வரி விதிப்பை கடுமையாக எதிர்த்ததால், இறுதி வரை அவர்களிடம் இருந்து வரி வசூலிக்கப்படவில்லை. மேற்கே வால் டாக்ஸ் சாலை, கிழக்கே வங்கக்கடல், வடக்கில் நகர எல்லையில் எஞ்சியிருந்த ஒரு இடிந்த சுவர், தெற்கே எஸ்பிளனேடு... இதுதான் புதிய கருப்பர் நகரத்தின் நான்கு எல்லைகளாக இருந்தன.

இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் இளவரசராக இருந்தபோது (1910இல் மன்னரானார்), 1906இல் மெட்ராசிற்கு வருகை தந்தார். அவரின் நினைவாகத்தான் இந்தப் பகுதி ஜார்ஜ் டவுன் என பெயர் மாற்றப்பட்டது. கருப்பர் நகரம் என்ற பெயரை மாற்றிய ஐந்தாம் ஜார்ஜ், இன்றும் பூக்கடை திருப்பத்தில் ஆளுயர சிலையாக நின்று கொண்டிருக்கிறார்.

நன்றி - தினத்தந்தி

---------------

* கருப்பர் நகரில் நிறைய பாரம்பரியக் கட்டடங்கள் இன்றும் இருக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றம், சட்டக் கல்லூரி, பாரியின் டேர் ஹவுஸ், ரிசர்வ் வங்கி, பொது தபால் நிலையம் ஆகியவை அவற்றில் சில.

* கோட்டைக்குள் இருந்தவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக கருப்பர் நகரத்தின் பெத்தநாயக்கன்பேட்டைக்கு வடக்கில் ஏழு கிணறுகள் தோண்டப்பட்டன. அதுதான் ஏழு கிணறு பகுதி.

* இங்கிருக்கும் மின்ட் சாலை சுமார் 4 கி.மீ நீளம் கொண்டது. உலகின் மிக நீளமான சாலைகளில் இதுவும் ஒன்று.

Saturday, December 17, 2011

மெரீனா கடற்கரை

காலையில் கடல் காற்றில் வாக்கிங் போனது...மாலையில் சூடான தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டலுடன் கடலின் அழகில் மனதைப் பறிகொடுத்தது.. என சென்னைவாசிகள் அனைவரிடமும் மெரீனா பற்றிய இனிய நினைவுகள் நிறைந்திருக்கும். மெரீனாவில் வாக்கிங் போகும் வயோதிகர்கள் முதல்... காதலியுடன் கரை ஒதுங்கும் வாலிபர்கள் வரை அனைவரும் நன்றி சொல்ல வேண்டிய ஒருநபர் இருக்கிறார். அவர்தான் மவுண்ட்ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப் (Mountstuart Elphinstone Grant Duff).

காரணம் இவர்தான் மெரீனாவுக்கு பேரும் வைத்து, சோறும் வைத்தவர். ஆமாம், இவர்தான் ஜார்ஜ் கோட்டைக்கும் வங்கக் கடலுக்கும் இடையில் வெறும் மணல்வெளியாக இருந்த பகுதியை அழகிய கடற்கரையாக மாற்றியவர். 1881இல் சென்னை துறைமுகம் கட்டப்படும் வரை, இன்றைக்கு காமராஜர் சாலை இருக்கும் இடம்வரைக்கும் கடல் இருந்தது. கடலை ஒட்டி வெறும் சேறும்சகதியும்தான் நிறைந்து கிடந்தது.

1881இல் இருந்து 1886 வரை சென்னையின் ஆளுநராக இருந்தவர்தான் நம்ம கிராண்ட் டஃப். இவருக்கு வங்கக் கடலையும், அதன் கரையையும் பார்க்கும் போது, மண்டைக்குள் மணியடித்ததன் விளைவு, சென்னைக்கு ஒரு அழகிய கடற்கரை கிடைத்தது. 1884இல் நடைபாதை எல்லாம் அமைத்து மெட்ராஸ்வாசிகளுக்கு ஒரு ஒழுங்கான கடற்கரையை உருவாக்கிக் கொடுத்தார் கிராண்ட் டஃப். அதற்கு 'மெட்ராஸ் மெரீனா' என்றும் பெயர் வைத்தார்.

இத்தாலியில் இருக்கும் சிசிலித் தீவின் நினைவாக இந்தப் பெயரை வைத்ததாக கிராண்ட் டஃப் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மெரீனா (Marine-கடல்) என்றால் "கடலில் இருந்து" என்று அர்த்தம். டஃப் அமைத்துக் கொடுத்த இந்த கடற்கரை அன்றைய மெட்ராஸ்வாசிகளுக்கு ஒரு சொர்க்கபுரியாகவே திகழ்ந்தது.

கோட்டையின் தெற்குப் பகுதியில் இருந்து சாந்தோம் வரை நீண்டு கிடக்கும் இந்த கடற்கரையில் காலாற நடப்பதே ஒரு இனிய அனுபவமாக இருந்தது. அன்னி பெசண்ட் அம்மையார் கூட, தாம் நடத்தி வந்த 'நியூ இந்தியா' பத்திரிகையில் மெரீனாவின் அழகைப் பற்றி விவரித்திருக்கிறார். 1914இல் வெளியான ஒரு கட்டுரையில், 'மெரீனாவைப் போல நீண்ட, அழகிய கடற்கரை இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. மெட்ராஸின் தவிர்க்க முடியாத அழகு மெரீனா' என்று எழுதியிருக்கிறார்.

சுமார் 13 கி.மீ தூரம் நீளும் இந்த கடற்கரை உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாக கருதப்படுகிறது. கடற்கரையில் சிலை வைக்கும் கலாச்சாரம் முதலில் 1959ஆம் ஆண்டுதான் உதித்தது. அந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மெரீனா கடற்கரையில் புகழ்மிக்க உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர், நேதாஜி, சுப்பிரமணிய பாரதி, ஔவையார், கண்ணகி என நிறைய பேர் வந்துவிட்டார்கள். இதில் கண்ணகி மட்டும் சில நாட்கள் விடுமுறையில் அரசு அருங்காட்சியகம் போய் வந்தார். தலைவர்கள் வரிசையில் ஜி.யூ.போப், கான்ஸ்டான்சோ பெஸ்கி எனப்படும் வீரமா முனிவர் என வெளிநாட்டு அறிஞர்களுக்கும் இடம்கொடுத்து கௌரவித்துக் கொண்டிருக்கிறது மெரீனா.

சுமார் 30 ஆண்டு காலம் மெரீனாவில் குடியிருந்த பிறகு, விடைபெற்றுப் போனது சீரணி அரங்கம். 1970இல் கட்டப்பட்ட திறந்தவெளி அரங்கமான இதில் நின்றபடி எத்தனையோ தலைவர்கள் ஏராளமான அரசியல் மற்றும் சமூக உரைகளை ஆற்றி இருக்கிறார்கள். அனல் பறக்கும் அந்த உரைகளால் மாலை நேரக் குளிர்காற்றில் வெப்பநிலையை அதிகரித்துக் கொண்டிருந்த சீரணி அரங்கம், கடற்கரையை நவீனப்படுத்த வசதியாக 2003இல் இடித்துத் தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி, மெரீனாவை இன்னும் கொஞ்சம் மெருகூட்டியது.

மெரீனாவிற்கு வரும் அனைவரும் கடலுக்கு அடுத்தபடியாக கால் பதிக்கும் இடம், பேரறிஞர் அண்ணா மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆகியோரின் நினைவிடங்கள்தான். கடற்கரைக்கு எதிர்புறம் சேப்பாக்கம் மைதானம், சென்னைப் பல்கலைக்கழகம், பிரசிடென்சி கல்லூரி, விவேகானந்தர் இல்லம், குயின் மேரீஸ் கல்லூரி, ஆல் இந்தியா ரேடியோ என பழமையும், புதுமையும் கைகோத்து நிற்கும் சென்னையின் முக்கியக் கட்டடங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

ஒருபுறம் ஆர்ப்பரிக்கும் கடல், மறுபுறம் கண்ணைப் பறிக்கும் கலைநயமிக்க கட்டடங்கள் என இயற்கையின் பிரம்மாண்டத்தையும், உழைப்பின் உன்னதத்தையும் ஒருசேர நினைவூட்டியபடி அமைதியாக நின்று கொண்டிருக்கிறது மெரீனா கடற்கரை.

தினத்தந்தி - பார்த்திபன்

* விடுமுறை நாட்களில் தினமும் சுமார் 50 ஆயிரம் பேர் மெரீனாவிற்கு வருகிறார்கள்.

* சென்னையின் கலங்கரை விளக்கம் தற்போது மெரீனாவில்தான் இருக்கிறது.

* 2004ஆம் ஆண்டு சுனாமியின்போது மெரீனா கடற்கரை கடுமையாக பாதிக்கப்பட்டது.

* பாதுகாப்பு கருதி மெரீனாவில் குளிப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

Saturday, December 10, 2011

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தனது 150ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. ஆனால் இதன் விதையும், அதற்கான கதையும் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது. கிழக்கிந்திய கம்பெனியார் சென்னையில் கால்பதித்து 1640இல் ஜார்ஜ் கோட்டையை கட்டிய உடனே, நீதிமன்றமும் வந்துவிட்டது. சிறிய வழக்குகளை விசாரிப்பதற்காக 'சத்திரம் நீதிமன்றம்' எனத் தொடங்கப்பட்ட அதில், சிவில், கிரிமினல் என இருவகை வழக்குகளும் விசாரிக்கப்பட்டன.

பின்னர் மேயர் கோர்ட் (1688), கட்சேரி கோர்ட் (1793), ரிக்கார்டர் கோர்ட் (1798) என சென்னை பல நீதிமன்றங்களைக் கண்டது. இவற்றின் உச்சம்தான், 1801இல் உருவான மெட்ராஸ் உச்சநீதிமன்றம். இது சுமார் 60 ஆண்டுகள் செயல்பட்டது. பின்னர் 1861ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் ஆணையின்பேரில், மெட்ராஸ், கல்கத்தா மற்றும் பம்பாய் உயர்நீதிமன்றங்கள் உருவாகின.

1862, ஆகஸ்ட் 15ந் தேதி மெட்ராஸ் உயர்நீதிமன்றம் முறையாக தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சரியாக 85 ஆண்டுகளுக்கு முன்பே, ஆகஸ்ட் 15ல் நீதி வெல்லும் என்பதை சொல்லாமல் சொன்னதுபோல இது அமைந்திருந்தது.

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆரம்ப நாட்களில் ராஜாஜி சாலையில் இருக்கும் சிங்கார வேலர் மாளிகையில் அமைந்திருந்தது. பின்னர் 1888இல் உயர்நீதிமன்றத்திற்கென ஒரு அழகான கட்டடம் கட்டும் பணி தொடங்கியது. சுமார் 4 ஆண்டுகால உழைப்பில், ஜே.டபிள்யூ. பிரசிங்டன் (J.W. Brassington) தயாரித்த வடிவமைப்பில், ஹென்றி இர்வின், ஜே.எச். ஸ்டீபன்ஸ் போன்ற கலைஞர்களின் கைவண்ணத்தில், இந்தோ - சாராசனிக் பாணியில் இன்றைய உயர்நீதிமன்றக் கட்டடம் வானளாவ உருவானது. இதற்காக அந்த காலத்திலேயே ரூ.12 லட்சம் செலவானது.

இந்த கட்டடத்தின் அழகில் மயங்கி செஞ்சி ஏகாம்பர முதலியார் என்ற கவிஞர், 'ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து' என்ற பெயரில் ஒரு புத்தகமே போட்டிருக்கிறார். அதில் இந்தோ - சாராசனிக் பாணி உயர்நீதிமன்ற கட்டடத்தை பற்றிய அவரின் விவரிப்பில் சில வரிகள்...

'அண்டா போல் ஒரு கூண்டு சண்டமாக கட்டி

அடுத்தசுத்திலும் பெருங் கொடத்தை போல வெகுகூட்டி

கண்டவர் பிரம்மிக்க கலசமதிலே மாட்டி

கண்கள் சிதரும்படி தங்ககிலுட்டுவூட்டி...'

இப்படி பார்ப்பவரை பரவசத்தில் ஆழ்த்திய சென்னை உயர்நீதிமன்ற கட்டடம், பய நிமிடங்களை சந்தித்த சம்பவங்களும் இருக்கின்றன. முதல் உலகப் போரின்போது, 1914, செப்டம்பர் 22ஆம் தேதி இரவு அது நிகழ்ந்தது. எம்டன் என்ற ஜெர்மானியக் கப்பல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மீது குண்டு வீசியது. இதில் நீதிமன்ற சுற்றுசுவரின் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்தது. இதன் நினைவாக நீதிமன்றத்தில் இன்றும் ஒரு கல்வெட்டு இருக்கிறது.

இரண்டாம் உலகப் போரையும் பார்த்தது இந்த கட்டடம். 1942இல் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வழக்கத்திற்கு மாறாக முன்னதாகவே நீதிமன்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு, முக்கிய கோப்புகள் அனைத்தும் கோவைக்கும், அனந்தபூருக்கும் கொண்டு செல்லப்பட்டன. விடுமுறைக் கால நீதிமன்றம் கோவையிலேயே செயல்பட்டது. கொஞ்சம் பதற்றம் தணிந்த பிறகு சென்னை திரும்பினாலும், தி.நகரில் இருந்த ஆங்கிலோ இந்தியப் பள்ளி ஒன்றில்தான் உயர்நீதிமன்றம் சில காலம் செயல்பட்டது.

வெறும் கட்டடங்களால் மட்டுமின்றி இங்கு பணிபுரிந்த தலைசிறந்த நீதிபதிகளாலும், வழக்கறிஞர்களாலும் பல பெருமைகளைப் பெற்றிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் நீதிமன்ற வளாகத்தில் இன்று சிலையாக நின்றுகொண்டிருக்கும் நீதிபதி சர் டி. முத்துசாமி ஐயர். ஏழைக் குடும்பத்தில் பிறந்து தெருவிளக்கில் படித்த திருவாரூர் முத்துசாமி ஐயர், 1878இல் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியானார். இதன் மூலம் முதல் இந்திய நீதிபதியை அளித்த பெருமை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு கிடைத்தது.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி என்ற பெருமைக்குரியவர் டாக்டர் ராஜமன்னார். இவர் 1948இல் இருந்து 1961 வரை சுமார் 13 ஆண்டுகள் தலைமை நீதிபதியாக இருந்தார். இப்படிப் பல்வேறு மரியாதைக்குரிய நீதி அரசர்களின் கால் தடங்களுடன், 150 ஆண்டுகளைக் கடந்து நீதியின் பாதையில் தொடர்ந்து கம்பீரமாகப் பயணிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

நன்றி - தினத்தந்தி


* சென்னையின் முதல் கலங்கரை விளக்கம் இங்குதான் இருந்தது. நீதிமன்றம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு இரண்டாவது கலங்கரை விளக்கம் இதன் உச்சியில் அமைக்கப்பட்டது.

* வ.உ.சிதம்பரனாருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வாலிஸ் இரட்டை ஆயுள்தண்டனை வழங்கினார். பின்னாளில் அவரே தண்டனையைக் குறைக்க உதவியதுடன், வ.உ.சி.யின் வழக்கறிஞர் பட்டத்தையும் மீட்டெடுக்க உதவினார். இதனால் தனது கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி

* இது உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகமாகக் கருதப்படுகிறது.

* 2004இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தொடங்கப்பட்டது.

Sunday, December 4, 2011

பச்சையப்பன் கல்லூரி

பச்சையப்பன் கல்லூரி... பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மரங்களுக்கு இடையில் மறைந்திருக்கும் இந்த கல்வி நிலையத்திற்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. இன்றிலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, 1800களில் தொடங்குகிறது இதன் கதை.

தென்னிந்தியாவிலேயே ஆங்கிலேயரின் நிதி உதவி இல்லாமல் தொடங்கப்பட்ட முதல் கல்வி நிலையம் என்ற பெருமை இந்த கல்லூரிக்கு உண்டு. அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களே கல்வி நிலையங்களைத் தொடங்கி நடத்தி வந்த நிலையில், 1842ஆம் ஆண்டு இந்து மாணவர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் பச்சையப்பன் கல்லூரி.

கருப்பர் நகரம் என்று அழைக்கப்பட்ட அன்றைய பிராட்வேயில் முதலில் ஒரு பள்ளிக் கூடமாகத் தொடங்கப்பட்ட இது, பச்சையப்பா மத்தியக் கழகம் என்ற பெயரில் இயங்கி வந்தது. பின்னர் 1850இல் இப்போதைய கல்லூரி இருக்கும் இடத்திற்கு மாறியது. அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் ஹென்றி பொட்டிங்கர் இதனைத் தொடங்கிவைத்தார். ஏராளமான இந்திய மற்றும் ஐரோப்பிய பிரமுகர்கள் கலந்துகொள்ள, இதன் தொடக்க விழா மிகப் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது.

ஆனால் பச்சையப்பர் என்ற ஏழைதான் இவ்வளவு பிரம்மாண்டமான கல்லூரிக்கு அடித்தளம் அமைத்தவர் என்று சொன்னால் நம்புவதற்கு சற்று கடினமாகத் தான் இருக்கும். வறுமையில் பிறந்த பச்சையப்பன், தமது கடின உழைப்பாலும், அறிவுத் திறனாலும் வள்ளல் பச்சையப்பராக விஸ்வரூபம் எடுத்த கதை, நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிகப் பெரிய பாடம்.

காஞ்சிபுரத்தில் விசுவநாத முதலியாருக்கும் பூச்சியம்மாளுக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் பச்சையப்பர். இவர் கருவில் இருந்தபொழுதே, விசுவநாத முதலியார் இறந்துவிட்டார். அவருடைய நண்பர் ரெட்டிராயர் என்பவர், சென்னைக்கு அருகில் உள்ள பெரியபாளையத்தில் செல்வாக்குடன் வாழ்ந்து வந்தார். எனவே அவருடைய ஆதரவை நாடி, பச்சையப்பரை வயிற்றில் சுமந்தபடி பெரியபாளையம் போனார் பூச்சியம்மாள். 1754 இல் பச்சையப்பர் அங்கு தான் பிறந்தார்.

ஆர்க்காடு சுபேதாரின் காரியக்காரராக இருந்த ரெட்டிராயரிடம் ஐந்து வயது வரை வளர்ந்தார். இராயர் மரணமடைந்தவுடன் பூச்சியம்மாள் பச்சையப்பரையும், இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, சென்னைக் கோட்டைக்கு மேற்கே ஒற்றைவாடை சாமி மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு சிறு சந்து வீட்டில் குடியேறினார்.

அடுத்து பூச்சியம்மாள் நெய்தவாயல் பெளனி நாராயண பிள்ளை என்பவரிடம் ஆதரவு கேட்டார். மொழிபெயர்ப்பாளரான அவரிடம் ஆங்கிலம் கற்ற பச்சையப்பர், பீங்கான் கடையில் வேலைக்குச் சேர்ந்து பொருள் வாங்க வரும் ஐரோப்பியர்களுக்கு மொழிபெயர்ப்பாளரானார். பின்னர் நிக்கல்ஸ் என்ற ஆங்கில அதிகாரியிடம் மொழிபெயர்ப்பாளராக இருந்து அப்படியே கிழக்கிந்தியக் கம்பெனியின் மொழிபெயர்பாளராக தம்மை உயர்த்திக் கொண்டார். அதுமட்டுமின்றி திறமையாக பலவகை வணிகத்திலும் ஈடுபட்டார்.

தொழிலுக்கு வசதியாக சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, கோமளேஸ்வரன்பேட்டை ஆகிய இடங்களிலும், தஞ்சாவூரிலும் பச்சையப்பர் குடியிருந்தார். அக்கா மகளை மணந்துகொண்டார். குழந்தை இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அங்குதான் விதி விளையாடியது. இரண்டு மனைவிகளுக்கும் இடையில் ஓயாத சண்டை. விளைவு, நிம்மதியைத் தொலைத்தார் பச்சையப்பர். உடல் நலம் கெட்டது. 1794 மார்ச் 31 இல் திருவையாறில் இறந்தார்.

மரணம் வரப் போவதை அறிந்தோ, அறியாமலோ, இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு உயில் எழுதினார் பச்சையப்பர். தன் குடும்பத்தினருக்கு எழுதிவைத்த சொத்துப் போக, மீதியை அறக்காரியங்களுக்கு ஒதுக்கி, அதை நாராயணப்பிள்ளை நிர்வகிக்க வேண்டும் என உயிலில் குறிப்பிட்டிருந்தார். பச்சையப்பருக்கு வாரிசு இல்லை என்பதால் உறவினர்கள் சொத்துக்கு உரிமை கோரி நீதிமன்றத்திற்கு போனார்கள்.

பச்சையப்பர் இறக்கும்போது, அவரது சொத்து சுமார் ஒரு லட்சம் பகோடாக்கள், அதாவது சுமார் ரூ.3 1/2 லட்சம். சொத்துச் சண்டை காரணமாக நீதிமன்றத்தில் 47 ஆண்டுகள் இருந்த இந்தப் பணம் பின்னர் சுமார் 8 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. பச்சையப்பர் உயில்படி இதில் மூன்றரை லட்சம் ரூபாய் கோவில் மற்றும் தர்ம பணிக்களுக்கென ஒதுக்கப்பட, மீதித் தொகையை கல்வி வளர்ச்சிக்கு செலவிட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை, காஞ்சி, சிதம்பரம் ஆகிய இடங்களில் முதலில் உயர்நிலைப் பள்ளிகள் தோன்றின. சென்னையில் இருந்த பள்ளி, 1880 இல் கல்லூரியாக உயர்ந்தது. இப்படித்தான் பச்சையப்பர் பெயரில் கல்வி நிலையங்கள் உருவாகின.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் கிழக்கு நுழைவாயில் அருகே பச்சையப்பர் கல்வி நிறுவனங்கள் பற்றிய கல்வெட்டு ஒன்று இருக்கிறது. 'மேற்படி லட்சம் வராகன் போக மற்ற மிகுதிப் பணத்துக்கு வரப்பட்ட வட்டியில் அனுகூலமாகும்போது மேற்படி இடத்தில் இந்துப் பிள்ளைகளுக்கு இந்த தேசத்தில் வழங்கா நின்ற விவகார சாஸ்திரங்கள் கற்பிக்கிறதற்கு மாதம் ஒன்றுக்கு 10 வராகன் சம்பளத்தில் ஒரு பண்டிதரையும், இங்கிலீஸ் பாஷை கற்பிக்கிறதற்கு 5 வராகன் சம்பளத்தில் ஒரு உபாத்தியாயரையும் நியமித்து வித்தியாசாலை ஏற்படுத்தப்படும்' என்கிறது அந்த கல்வெட்டு.

வறுமையில் பிறந்ததற்காக வாடி நிற்காமல், கடின உழைப்பால் தம்மையும் உயர்த்திக் கொண்டு, கல்வி நிலையங்கள் அமைத்து லட்சக்கணக்கானோரின் வாழ்வையும் உயர்த்திய உயர்ந்த மனிதரை இன்றும் நினைவுபடுத்தியபடியே நிற்கிறது பச்சையப்பன் கல்லூரி.

நன்றி - தினத்தந்தி

* சீனுவாச ராமானுஜம், பம்மல் சம்பந்த முதலியார், அறிஞர் அண்ணா என இந்தக் கல்லூரியின் மாண்புமிகு மாணவர்கள் பட்டியல் மிக மிக நீளமானது.

* 1947ஆம் ஆண்டு வரை இங்கு இந்து மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.

* பச்சையப்பர் தினமும் காலையில் கூவத்தில் (அப்போ கூவம் நல்லா இருந்தது) குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக அவருடைய டைரிக் குறிப்பு சொல்கிறது.