என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Thursday, August 26, 2010

பழையனூர் நீலி(2)



சென்ற பதிவின் தொடர்ச்சி....


நீலன், நீலியின் குட்டு வெளிப்பட்டதும், அந்த பேய்க் குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொள்ள பயந்த பெற்றோர், அவற்றை தொட்டிலோடு கொண்டு போய் ஒரு வேல மரத்தில் கட்டி விட்டு வந்துவிட்டார்கள். உடனே இரு குழந்தைகளும் மீண்டும் பழைய உருக் கொண்டன. இனியும் ஒன்றாக இருந்தால் பழிவாங்க முடியாது என்று எண்ணி, பிரிந்து செல்ல முடிவெடுத்தன. நீலன் அந்த வேல மரத்திலேயே தங்கி இருக்க, நீலி திருச்செங்கோடு சென்றுவிட்டாள்.

ஒருநாள் பழையனூரில் உள்ள வேளாளர்கள் உழவிற்கு கலப்பை மரம் தேவைப்பட்டதால், செழிப்பான அந்த வேல மரத்தை வெட்டிக் கொண்டு போய்விட்டார்கள். இப்போது நீலனுக்கு இருந்த வீடும் போய்விட்டது. அந்த ஆத்திரத்தில் அலைந்துகொண்டிருந்த நீலன் அவ்வழியாக வந்த திருவாலங்காட்டு கோவில் குருக்களை அடி பின்னிவிட்டான். இது குறித்து குருக்கள் சிவனிடம் முறையிட, சிவன் தனது கணங்களில் ஒன்றை அனுப்பி நீலனின் கதையை முடித்துவிட்டார்.

இதை அறிந்ததும் அலறி அடித்து ஓடிவந்த நீலி, தனது சகோதரன் சாவிற்கு காரணமான வேளாளர்களையும் பழிதீர்ப்பேன் என சபதமேற்றாள். தக்க தருணத்திற்காக திருவாலங்காட்டிலேயே காத்திருந்தாள்.

இந்த சமயத்தில் தான் காஞ்சியில் இருந்த தரிசனனுக்கு திடீரென பழையனூர் சென்று வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மந்திரக் கத்தி இருக்கும் தைரியத்தில், யார் தடுத்தும் கேளாமல் கிளம்பிவிட்டான். தரிசனன் திருவாலங்காட்டை அடைந்ததும் அவனை நீலி பார்த்துவிட்டது. உடனே கால் கேர்ளாக மாறி வந்து 'சிறப்பு செஞ்சுட்டு போங்க' என்று அழைத்தாள். ஆனால் தரிசனன் இதற்கெல்லாம் மசியவில்லை. மந்திரக் கத்தி வேறு இருந்ததால் அவனை நீலியால் நெருங்கவும் முடியவில்லை.

நீலியின் அடுத்தடுத்த அட்டெம்டுகளும் தோல்வியிலேயே முடிந்தன. உடனே நீலி பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தாள். தரிசனனின் மனைவியைப் போல் உருமாறி, ஒரு பெரிய கள்ளிக் கட்டையை எடுத்து குழந்தையாக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு தலைவிரிகோலமாக பஞ்சாயத்தை கூட்டிவிட்டாள். தன் கணவர் தன்னை பிரிந்து செல்ல நினைக்கிறார், நீங்கள் தான் சேர்த்து வைக்க வேண்டும் என்று உருக்கமாக கண்ணீர் விட்டாள். தரிசனன் எவ்வளவு சொல்லியும் எடுபடவில்லை.

என் கணவர் ரொம்ப கோபக்காரர், நான் பஞ்சாயத்தை கூட்டியதால் என்னைக் கொன்றாலும் கொன்றுவிடுவார். அவர் கையில் உள்ள கத்தியையும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றாள். தரிசனனுக்கு உதறல் எடுத்தது. அய்யா, சாமி இது பேய். என்னைக் கொல்ல வந்திருக்கிறது என்று வாதாடியும் எந்த பயனும் இல்லை.

தரிசனரே, தைரியமாக போங்கள். ஒருவேளை உங்கள் உயிருக்கு ஆபத்து வந்தால், இங்கு பஞ்சாயத்தில் அமர்ந்திருக்கும் நாங்கள் 70 வேளாளர்களும் அப்போதே உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று அருகில் உள்ள சாட்சிபூதேஸ்வரர் கோவிலில் வைத்து சத்தியம் செய்துகொடுத்தனர்.

அப்புறம் என்ன, நீலி தரிசனனின் கதையை முடித்துவிட்டாள். இதை அறிந்த வேளாளர்களும் சாட்சிபூதேஸவரர் ஆலயம் முன்பு தீக்குளித்து தங்கள் வாக்கை காப்பாற்றி விட்டனர். நீலி தன் குழந்தையை காலால் மிதித்து கொன்றதாகவும் கூறப்படுகிறது. இதுதான் பழையனூர் நீலியின் கதை.

விசாரித்துப் பார்த்ததில் சாட்சிபூதேஸ்வரர் கோவில், வேளாளர்கள் தீக்குளித்த இடம் , நீலி குழந்தையை காலால் மிதித்த இடம் எல்லாம் இன்றும் இருப்பதாகச் சொன்னார்கள். விசாரித்துப் போய் சாட்சிபூதேஸ்வரரை பார்த்துவிட்டேன். பழங்கால சிறிய சிவாலயம். ஆங்காங்கே சிதலமடைந்திருக்கிறது. எதிரிலேயே தீக்குளிப்பு மண்டபம் இருக்கிறது. வேளாளர்கள் தீக்குளிப்பது போன்ற சிலையை செய்து வைத்திருக்கிறார்கள்.

அடுத்து நீலி குழந்தையை கொன்ற இடம் எங்கே என்று விசாரித்தேன். அதுதான் நீலி கோவில் என்றார்கள். ஏதோ கோவில் இருக்கும் என்று தேடி அலைந்தவனுக்கு மெயின் ரோட்டின் ஒரு ஓரத்தில் சிறிய சமாதி போன்ற தொட்டி ஒன்றைக் காட்டினார்கள். குப்பைகள் மலிந்து குப்பைத் தொட்டி போன்றே இருக்கிறது. இதற்கு காரணமானவர்களை பழையனூர் நீலி நிச்சயம் பழிவாங்காமல் விடமாட்டாள் பீ... கேர்ஃபுல்...

1 comment:

  1. ஜோ!ன்னு மழைக்காலத்துல,
    கறண்ட்-கட் நேரத்துல,
    கம்பளிக்குள்ளே உட்காந்து கதை கேட்ட அனுபவம்

    அதுவும் "எனக்குத்தான் எல்லாம் தெரியும்" ங்கர ரேஞ்லே
    பெரியண்ணன் இந்த கதைய அரைகுறையா தெரிஞ்சுகிட்டு
    பில்ட்-அப் லே கஞ்சத்தனமே பண்ணாம சொல்லுவாரு

    அருமை !

    ReplyDelete