சென்ற பதிவின் தொடர்ச்சி....
என்னைப் பற்றி...

- பார்த்திபன் (Parthiban)
- சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.
Thursday, August 26, 2010
பழையனூர் நீலி(2)
சென்ற பதிவின் தொடர்ச்சி....
Tuesday, August 24, 2010
பழையனூர் நீலி
Friday, August 20, 2010
பழி வாங்கிய நீலி
Wednesday, August 18, 2010
தியானம்
Wednesday, August 11, 2010
ஹெமீஜி கோட்டை


சிசென் இட்ஸா


பெட்ரா


மலை உச்சி மடாலயம்


நைலின் நதி மூலம்


வேலி போட்ட நகரம்


தேவதைகளின் நகரம்

சூரியக் கோட்டை


மலைக்க வைக்கும் அபு மலை

பூலோகக் கைலாசம்
பொக்கிஷத் தீவு
அசத்தும் அஜந்தா குகைகள்
காற்று மாளிகை

கொலையில் கலை


கேரளத்து யூதக் கோவில்


பண்டைய கிரேக்கர்களின் டூரிங் டாக்கீஸ்


தடை செய்யப்பட்ட நகரம்
எகிப்தில் ஒரு தாஜ்மகால்
Sunday, August 8, 2010
அச்சச்சோ அசோகா
அசோகச் சக்கரவர்த்தி அவைக்குள் நுழைந்ததும் அனைவரும் எழுந்து நின்றனர்.
அவன் மட்டும் அலட்சியமாக அமர்ந்திருந்தான்.
கலிங்கத்தின் மீது போர் தொடுப்பது குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
அவனுக்கு அதில் எந்த அக்கறையும் இருந்ததாகத் தெரியவில்லை. வலது ஓரத்தில் நின்று கொண்டிருந்த சாமரம் வீசும் பெண்ணின் கழுத்துக்கு கீழே பார்வையை ஓடவிட்டுக் கொண்டிருந்தான்.
திடீரெனத் திரும்பிய அசோகரின் பார்வை அவன் மீது நிலைத்தது. அந்த விழிகளில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
அவன் அதற்கும் மசியவில்லை. காலைத் தூக்கி நாற்காலி மீது வைத்துக் கொண்டு கொட்டாவி விட்டான்.
வேறு பக்கம் பார்வையைத் திருப்பிய அசோகர், கலிங்கப் போர் பற்றி தோள்கள் தினவெடுக்க உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்.
அப்போது அவன் செய்த காரியம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. காதில் செருகியிருந்த பீடியை எடுத்து பற்ற வைத்துக் கொண்டு குப்குப்பென்று புகைவிட்டான். அந்த இடம் முழுவதும் பீடி நாற்றம் சூழ்ந்து கொண்டது.
யார்யா அது பீடி புடிக்கிறது. வெளிய போய் புடிய்யா என பின்னால் இருந்து குரல்கள் வந்ததும், சலிப்புடன் எழுந்து தியேட்டர் கதவை திறந்துகொண்டு வெளியில் போனான் அவன்.
சரியான நேரத்தில்
நானும், வேணுவும் குதிரைகளில் வேகமாக பறந்து கொண்டிருந்தோம். நாங்கள் எங்கு இருக்கிறோம், எப்போது இந்த குதிரைகள் மீது ஏறினோம் என்பதெல்லாம் நினைவில்லை. அவை இப்பொழுது முக்கியமும் இல்லை. அவற்றை யோசித்துக் கொண்டிருந்தால், அதற்குள் அவர்கள் தப்பித்து விடுவார்கள். எங்களுக்கு சுமார் 100 அடி முன்னால் மின்னல் வேகத்தில் பறந்துகொண்டிருந்த சாரட்டு வண்டியின் உள்ளே இருந்து ஒரு தேவதை அடிக்கடி வெளியில் எட்டிப் பார்த்து தன்னை காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தால். உள்ளே இருந்து யாரோ அவளை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.
எனக்கு சண்டையிடுவதில் பழக்கம் இல்லை. சிஏ பவுண்டேஷன். இன்டர் என மாய்ந்து மாய்ந்து படிப்பதற்கே நேரம் சரியாக இருந்ததால், தற்காப்புக் கலைகளின் பக்கம் தலைவைத்து கூட படுத்ததில்லை. வேணுவும் என் அலுவலகத்தில் தான் அக்கவுன்டன்டாக பணியாற்றுகிறான். அவனுக்கும் இதெல்லாம் தெரியாது. இருந்தாலும் ஏதோ குருட்டு தைரியத்தில் இருவரும் குதிரையை விரட்டிக் கொண்டிருந்தோம். அந்த தேவதையை நிச்சயம் காப்பாற்றிவிட முடியும் என்று அடிமனதில் மட்டும் ஒரு பலமான நம்பிக்கை இருந்தது.
காட்டுப்பகுதியில் வேகமாக சென்றுகொண்டிருந்த சாரட் வண்டி திடீரென ஒற்றையடிப் பாதை வழியாக பயணித்து பிரதான சாலை ஒன்றில் ஏறியது. நாங்களும் விடாமல் துரத்தினோம். தூரத்தில் காணப்பட்ட ஒரு கோட்டையை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருப்பதை அப்பொழுது தான் கவனித்தோம். இந்த வண்டியைப் பார்த்ததும் கோட்டைக் கதவுகள் திறந்தன. கோட்டை மதில் மேல் இருந்தவர்கள் எங்களைப் பார்த்துவிட்டார்கள். உடனே உள்ளே இருந்து 10 குதிரைகளில் வாளும், ஈட்டியும் ஏந்திய வீரர்கள் எங்களை நோக்கி விரைந்து வந்தார்கள். திரும்பிப் போயிடலாம் கோபால் என்றான் வேணு. அந்த தேவதையை காப்பாற்றாமல் போக என் மனம் இடம்கொடுக்கவில்லை. வருவது வரட்டும் என தொடர்ந்து முன்னேறினேன்.
யார் நீங்கள் என குரல் கொடுத்த படி எங்களை நெருங்கி வந்தவர்கள், என்னை உற்றுப் பார்த்ததும் சடசடவென்று குதிரைகளில் இருந்து கீழிறங்கினார்கள். அவர்களில் தலைவன் போல் இருந்தவன், இளவரசே தாங்களா என்றபடி நெடுஞ்சாணாக விழுந்து வணங்கினான். ஆம், முதலில் அந்த பெண்ணை விடுவியுங்கள் என்றேன். வேணு எல்லாவற்றையும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். விடுதலை பெற்ற தேவதை கண்ணீரும், நன்றியும் மிதக்கும் கண்களுடன் என்னருகில் வந்து மெல்ல வாய் திறந்தாள்...
என்னங்க எழுந்திருங்க, ஆபிஸ்ல ஆடிட்டிங் இருக்கு சீக்கிரம் போகனும்னு சொல்லிட்டு, குறட்டை விட்டு தூங்கிக்கிட்டு இருக்கீங்களே என என் தர்மபத்தினியின் குரல் கேட்டது. சே... அந்த தேவதை என்ன சொல்ல வந்தாள்னு இப்ப எப்படி தெரிஞ்சிக்கிறது.
கிப்ரிஷ்
அதைப் படித்ததில் இருந்து உடனே செயல்படுத்திப் பார்த்துவிட வேண்டும் என எனக்கு வாய் பரபரக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் நினைத்த உடனே அதை அவ்வளவு சுலபத்தில் செயல்படுத்திவிட முடியாது. அதற்கென நேரம், காலம் பார்க்கத் தேவையில்லை என்றாலும், நிச்சயம் வசதியான இடம் பார்த்துதான் ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால் மானமே போய்விடும்.
அம்மா ஞாபகமா இருந்தது, உடனே வந்துட்டேன் என சாக்கு சொன்னாலும் உண்மையில் நான் ஊருக்கு வந்ததே அதை செயல்படுத்திப் பார்க்கத் தான். விஷயம் இதுதான், கொஞ்ச நாட்களாகவே எனக்கு தியானத்தின் மீது ஒரு கண் விழ ஆரம்பித்திருக்கிறது. ஆனால் கண்ணை மூடிக் கொண்டு ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் மணிக்கணக்கில் உட்கார்வதெல்லாம் என்னால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்கள். அப்போதுதான் நாலடியார் (கொஞ்சம் குள்ளமாக இருப்பான்) ஓஷோ புத்தகம் ஒன்றைக் கொடுத்தான். அதில் பல்வேறு தியான முறைகள் விளக்கப்பட்டிருந்தன. அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது தான் ‘கிப்ரிஷ்’.
கிப்ரிஷ் என்றால் அர்த்தமற்ற சத்தம் என்று அர்த்தம். அதாவது எந்தவித அர்த்தமும் இல்லாமல் மனதில் தோன்றியதை எல்லாம் வாய் விட்டு சத்தமாக கத்த வேண்டும். இப்படி தொடர்ந்து சிறிது நேரம் கத்திக் கொண்டே இருந்தால் மனதில் அடைந்து கிடக்கும் உணர்வுகள் கட்டவிழ்ந்து எழுத்துக்களாய் கரைந்து போகும். மனம் லேசாகி வானில் பறக்கும், இதுவரை அனுபவித்திராத ஒரு புதிய அமைதி பிறக்கும் என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் படித்ததில் இருந்து உடனே அதை செய்து பார்க்க வேண்டும் என துடிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் நான் இருக்கும் திருவல்லிக்கேணி மேன்ஷனில் வாய்விட்டு கத்த முடியுமா? மெரினாவில் கத்தலாம் என்றாலும் எல்லா இடத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள். கிப்ரிஷ் சோதனைக்கு சரியான இடம் நம்ம ஊர் வயல்வெளிதான் என மின்னல் வெட்டியதும் வண்டியேறிவிட்டேன்.
நண்பனைப் பார்த்துவிட்டு வருவதாக சொல்லி காலையிலேயே சைக்கிள் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ஊரைத் தாண்டி யாருமற்ற வயல்வெளியில் சாலையோரமாக சைக்கிளை நிறுத்திவிட்டு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இரண்டு புறமும் பார்த்தேன். ஆட்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். லே-அவுட் போடப்பட்ட புதர்கள் நிறைந்த அந்த பொட்டல்வெளியில் சிறிது தூரம் நடந்ததும், நான் எதிர்பார்த்த அந்த இடம் வந்தேவிட்டது. எனக்கான சோதனைக் களம்.
ஆழமாக மூன்று முறை மூச்சை இழுத்துவிட்டேன். ஆரம்பித்தேன் கிப்ரிஷ்ஷை. ஆ...ஊ...ஏய்....மாய்....கோய்... இரண்டே நிமிடம்தான். அடர்ந்த முட்புதருக்குள் இருந்து விருட்டென எழுந்தார் ஓர் விருமாண்டி. தோளில் தொங்கிய டவுசர் அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை அப்பட்டமாக விளக்கியது. கண்ணை உருட்டி என்னை வெறியுடன் வெறித்துப் பார்த்தவர், நாக்கை மடித்து என்னைப் போலவே கிப்ரிஷ்ஷில் ஏதோ சத்தமாக சொல்லிவிட்டு விறுவிறுவென நடையைக் கட்டினார். நான் சைக்கிளை எடுத்துக் கொண்டு சத்தமில்லாமல் வீடு வந்து சேர்ந்தேன்.
கூவம்... நதிமூலம்....




அக்மார்க் சென்னைவாசியான நான் சிறுவயதில் இருந்து கூவம் ஆற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு தான் அழுக்கோடும், துர்நாற்றத்தோடும் ஓடிக்கொண்டிருந்தாலும் அல்லது தேங்கி நின்றுகொண்டிருந்தாலும் அதன் மீது எனக்கு எப்போதுமே ஓர் பிரமிப்பு உண்டு. சென்னையில் பெரும்பாலும் எங்கு சென்றாலும் திடீரென குறுக்கிட்டு ஹாய் சொல்லும் இந்த பிரம்மாண்ட ஆறு? (சாக்கடை!) எங்கிருந்து வருகிறது என பல சமயங்களில் யோசித்ததுண்டு. ஆனால் இதற்காக ஒருநாள் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டி வரும் என்று அப்போது நிச்சயமாக கற்பனை கூட செய்ததில்லை.
சென்னையின் வரலாற்றை கூவத்தை தவிர்த்துவிட்டு எழுத முடியாது என்பது புரிந்தவுடன், கூவம் தொடங்கும் இடத்தை நேரில் சென்று பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன். ஒரு சனிக்கிழமை காலை நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு எனது மோட்டார் சைக்கிளில் கூவத்தின் ஊற்றுக்கண்ணைத் தேடிப் புறப்பட்டேன். அதற்கு முன்னர் அது பற்றி சில தகவல்களை சேகரித்தேன். கூவம் ஆறு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் என்ற கிராமத்தில் தனது பயணத்தை தொடங்குகிறது. இந்த கிராமத்தில் பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது. இங்குள்ள சிவனுக்கு பல நூற்றாண்டுகளாக கூவம் ஆற்றில் இருந்து கொண்டு வரப்படும் நீரில் தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு கூவம் ஆறு இவ்விடத்தில் தூய்மையாக இருக்கும். இவைதான் நான் சேகரித்த தகவல்கள்.
கூவம் கிராமத்திற்கு எப்படி செல்வது என நண்பர்கள் சிலரிடம் விசாரித்தேன். திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் டெல்ஃபை டிவிஎஸ் நிறுவனம் தாண்டியதும் வரும் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி சில கிலோமீட்டர்கள் பயணித்தால் மப்பேடு என்ற இடம் வரும், அங்கிருந்து சுமார் 4 கி.மீ சென்றால் கூவம் கிராமம் வந்துவிடும் என்றார்கள். அதேவழியைப் பின்பற்றி மப்பேடு பகுதியை நெருங்கும்போதே சாலையோரத்தில் ஒரு புராதன கோவில் கண்களில்பட்டது. கூவம் கோவில் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டதா என்ற சந்தேகத்துடன் அந்த கோவிலுக்குள் சென்றோம். ஆனால் அது மப்பேட்டில் உள்ள சிங்கீஸ்வரர் ஆலயம் என்றார் கோவில் சிவாச்சாரியார். ராஜராஜ சோழனின் தமையன் ஆதித்த கரிகாலன் கிபி 967இல் கட்டிய கோவில். பொன்னியின் செல்வனில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவாரே அதே ஆதித்த கரிகாலன்தான். கோவிலை சுற்றிப் பார்த்துவிட்டு கூவம் நோக்கி வண்டியை விரட்டினோம்.
கூவம் எல்லையில் நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிளைச் சாலை பிரிந்து ஊருக்குள் செல்கிறது. வழி நெடுகிலும் பசுமையான வயல்கள் எங்களை தலைசாய்த்து வரவேற்றன. ஒருவழியாக கூவம் திருபுராந்தக சுவாமி கோவிலை மதியம் 12 மணியளவில் சென்றடைந்தோம். கோவில் சிவாச்சாரியார் இப்போதுதான் நடையை சார்த்திவிட்டு கிளம்பினார் என்றார்கள். இந்த கோவிலில் உள்ள திருபுராந்தகசுவாமியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வது கிடையாது. எனவே அவர் தீண்டாத் திருமேனி ஆண்டவர் என்று வழங்கப்படுகிறார் என்றும், இந்த லிங்கம் காலநிலைக்கு ஏற்ப நிறம் மாறும் தன்மையுடையது என்றும் கேள்விப்பட்டிருந்தேன். எனவே திருபுராந்தகரை பார்க்க வேண்டும் என ஆவலுடன் சென்றிருந்தேன். தீண்டாத் திருமேனி ஆண்டவரை காணும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், கோவிலை சுற்றிப் பார்க்கலாம் என்றது சற்று ஆறுதலாக இருந்தது.
சுற்றி வரும் போது கண்ணில்பட்ட கிணறும், அபிஷேக நீர் குடிக்காதீர்கள் என்ற அறிவிப்பும் லேசாக உறுத்தியது. சுவாமிக்கு கூவம் ஆற்றில் இருந்து வரும் நீரில்தான் அபிஷேகம் நடைபெறுவதாக கேள்விப்பட்டேனே என்று உள்ளூர்வாசி ஒருவரிடம் என் சந்தேகத்தை வெளிப்படுத்தினேன். 'அதெல்லாம் ஒருகாலத்தில அப்படி இருந்ததுங்க, இப்ப ஆத்துல தண்ணியே கெடையாது. அப்படி இருந்தாலும் 4 கிலோ மீட்டர் போய் தண்ணி எடுத்துவர ஆள் இல்லை. அதான் கோவில் கிணத்து தண்ணியையே பயன்படுத்துறோம்' என்றார். விசேஷ காலங்களில் மட்டும் ஆற்றில் மணலைத் தோண்டி ஊற்றெடுக்கும் தண்ணீரை எடுத்து வருவோம் என்றார். சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது குறித்து எந்த குறிப்பும் இல்லை. இது திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற ஸ்தலம்.
கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய அழகிய குளம் இருக்கிறது. இந்த குளத்தில் தவளைகள் இருக்காது என்பது இதன் சிறப்பம்சம் என்றார்கள். நானும் சிறிது நேரம் தவளைகளை தேடிப் பார்த்தேன். ஆனால் ஒன்று கூட கண்ணில்படவில்லை. தவளைகளை கணக்கெடுப்பதை விட்டுவிட்டு வந்த வேலையைப் பார்ப்போம் என்று கூவம் ஆற்றைப் பார்க்கப் புறப்பட்டோம். வழியில் ஒருவரிடம் கூவம் ஆறு எங்கு புறப்படுகிறது, அதன் தோற்றத்தை பார்க்க எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டோம்.
கூவம் ஏரியில் இருந்து தான் கூவம் ஆறு புறப்படுகிறது. ஆனால் பல ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் கிடையாது. நரசிங்கபுரம் என்ற ஊருக்கு போனால் அந்த ஏரியைப் பார்க்கலாம் என்றார். உடனே அங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரசிங்கபுரம் கிராமத்திற்கு போனோம். அங்கிருந்த சிலரிடம் கூவம் ஆறு இங்கிருந்துதான் தொடங்குகிறதா என்று கேட்டால் அதெல்லாம் தெரியாது, இங்க ஒரு ஏரி இருக்கு அவ்வளவுதான் என்று கூறிவிட்டு வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். நாங்கள் ஏரியைப் பார்க்கப் போனோம். மிகப் பரந்த ஒரு பொட்டல்வெளி எங்களை வரவேற்றது. கூவம் ஏரிக்குள் தமிழ்நாடு மின்சார வாரியம் வரிசையாக கம்பங்களை நட்டுவைத்திருக்கிறது. ஆடு, மாடுகள் மேய்கின்றன. எப்போதோ நிறைந்து கிடந்த பழைய நினைவுகளை அசைபோட்டபடி கூவம் ஏரி அமைதியாக எங்களைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தது. அதில் இருந்த வேதனை உள்ளுக்குள் என்னவோ செய்தது. நான் தேடி வந்த தூய்மையான கூவத்தின் பிறப்பிடம் இதுதான் என்று மனது நம்ப மறுத்தது.
கனத்த மனதுடன் வெளியில் வந்தபோது எதிர்ப்பட்ட சிலரிடம் கூவம் ஆறு எங்கிருந்து தொடங்குகிறது என்று மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன். ஆனால் இம்முறை வேறு ஒரு புதிய பதில் வந்தது. இங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவு போனால் கேசவரம் அணைக்கட்டு வரும், அங்குதான் கொற்றலை எனப்படும் குசஸ்தலை ஆறும், கூவம் ஆறும் பிரிகிறது. அதுதான் கூவத்தின் பிறப்பிடம் என்றார்கள். கூவத்தின் ஊடாகவே பயணிக்க வேண்டுமென்றால் இங்கிருந்து மாரிமங்கலம் போய், அனக்கட்டாபுத்தூர் வழியாக உறியூர் என்ற ஊருக்கு போங்கள். அங்குதான் அந்த அணை இருக்கிறது என்றார் ஒரு பெரியவர்.
மனந்தளராத விக்கிரமாதித்தனைப் போல கூவத்தின் பிறப்பிடத்தை பார்க்காமல் ஊர் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் பயணத்தை தொடர்ந்தோம். வறண்டு பாலைவனமாகக் கிடக்கும் கூவம் ஆற்றின் கூடவே பயணித்தோம். ஆங்காங்கே ஆழ்துளைகளைப் போட்டு தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே பயணித்து மாரிமங்கலத்திற்குள் நுழையும்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் வந்துவிட்டதாக பெயர்ப் பலகைகள் அறிவித்தன. அடுத்து உறியூரைக் குறிவைத்து முன்னேறினோம். ஒரு இடத்தில் ஆற்றில் இறங்கி ஏறியதும் உறியூர் வந்துவிட்டது. அது வேலூர் மாவட்டம் என்றது அங்கிருந்த பெயர்ப் பலகை. மரத்தடியில் அமர்ந்திருந்த சிலரிடம் கூவம் இங்கிருந்துதான் புறப்படுகிறதா என்று கேட்டோம். 'ஐயையோ, அது கூவம் கிராமத்தில இருந்துல்ல வருது' என்று எங்களை பரிதாபமாகப் பார்த்தார்கள். 'சரிங்க, கேசவரம் அணை எங்கிருக்கு?' என்று கேட்டோம். இன்னும் 3 கிலோமீட்டர் போங்க என்றார்கள். உறியூரில் இருந்தும் 3 கிலோ மீட்டரா? வெயில் மண்டையைப் பிளந்தது, நாக்கு தள்ளியது. இருப்பினும் தொடர்ந்து முன்னேறினோம்.
கடைசியில் ஒருவழியாக கேசவரம் அணைக்கட்டை அடைந்துவிட்டோம். ஆனால் இங்கும் ஒரு சொட்டு நீரைக் கூடப் பார்க்க முடியவில்லை. மழைக்காலங்களில் குசஸ்தலை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் இங்கு இரண்டாகப் பிரித்துவிடப்படுகிறது. ஒன்று புழல் நீர்த்தேக்கத்திற்கும், மற்றொன்று பூண்டி நீர்த்தேக்கத்திற்கும் செல்கிறது. இதில் பூண்டிக்கு செல்லும் ஆறு, கூவம் கிராமத்திற்கு அருகில் வரும்போது கூவம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீருடன் சேர்ந்து கூவம் ஆறாக உருவாகி சென்னையை நோக்கி நகர்கிறது. கூவம் ஆறு என்பது கூவம் கிராமத்தில் தொடங்குகிறது என்றாலும், அதற்கான பிள்ளையார் சுழி கேசவரம் அணைக்கட்டில் போடப்படுகிறது என்பதுதான் அரசு ஆவணங்களிலும் கூறப்பட்டுள்ள தகவல். மொத்தத்தில், கூவத்தின் தொடக்கமாக கூறப்படும் இரண்டு இடங்களையும் பார்த்துவிட்டோம்.
திரும்பும் வழியில் தாகத்தை தணிக்க தண்ணீர் பாக்கெட் வாங்கிக் குடித்த போது, பல நூற்றாண்டுகளாக ஓடிக் கொண்டிருந்த ஒரு ஆற்றைத் தேடி வந்து தண்ணீரையே பார்க்காமல் திரும்பும் அவலம் முகத்தில் அறைந்தது.
நன்றி: புதிய தலைமுறை
ஆதிமனிதனின் வீட்டிற்கு ஒரு விசிட்
கலைஞர் தொலைக்காட்சியின் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் திரு. அருள்பிரேம் தாஸுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகை ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இருப்பதாகவும், அதை சென்று பார்ப்பது ஒரு பரவச அனுபவமாக இருக்கும் என்றும் கூறினார். உடனே புறப்படுவது என்று முடிவெடுத்து அடுத்த நாள் (03-10-09, சனிக்கிழமை) காலை பயணத்தை தொடங்கினேன். காட்டுப் பகுதிக்குள் சுமார் 4 கி.மீ நடக்க வேண்டியிருக்கும், தனியாக போகாதீர்கள் என்று எச்சரித்திருந்ததால் எனது மைத்துனர் திரு. சந்திரசேகரையும் உடன் அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.
சந்துருவின் பைக்கை எடுத்துக்கொண்டு எங்களின் மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கினோம். பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஆதிமனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் அகழ்வைப்பகம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டு முதலில் அங்கு சென்றோம். ஓடு வேய்ந்த ஒரு சிறிய கட்டடம். பெரியவர்களுக்கு ரூ. 5 கட்டணம் வசூலிக்கிறார்கள். சிறுவர்களுக்கு கட்டணம் ரூ. 3. வெளிநாட்டினராக இருந்தால் கட்டணம் ரூ. 50 (சிறுவர்களுக்கு ரூ. 25). வெள்ளிக்கிழமை விடுமுறை.
தொல் பழங்காலத்தைப் பற்றி மட்டும் தனியாக விளக்கும் வகையில் அமைந்துள்ள தொல்லியல் அகழ்வைப்பகம் இந்தியாவிலேயே இது ஒன்றுதானாம். இந்தியாவிலேயே பூண்டிக்கு அருகில் உள்ள அதிரம்பாக்கத்தில் தான் அதிக அளவில் பழைய கற்கால கருவிகள் கிடைத்திருப்பதால் இந்த அகழ்வைப்பகத்தை இப்பகுதியில் அமைத்துள்ளனர்.
இங்கு பழைய கற்கால (Paleolithic Age) கருவிகள் உரிய விளக்கங்களுடன் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல நுண்கற்காலம் (Microlithic Age), புதிய கற்காலம் (Neolithic Age), பெருங்கற்காலம் (Megalithic Age) ஆகியவற்றைச் சேர்ந்த பிற தொல்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அகழ்வைப்பகத்தின் காப்பாட்சியர் திரு. துளசிராமனிடம் நாங்கள் ஆதிமனிதர்களின் குகையைக் காண வந்திருப்பது பற்றி கூறினோம். மிகுந்த உற்சாகத்துடன் எங்களை வரவேற்ற அவர், அகழ்வைப்பகத்தில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் நிதானமாகவும், விரிவாகவும் விளக்கினார். இங்கு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பலவகை கைக்கோடாரிகள், கிழிப்பான்கள், சுரண்டிகள், வட்டுகள், துளைப்பான்கள், சிறு கத்திகள், அம்பு முனைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 80 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லுயிர் எச்சங்களும் இங்கு காணக் கிடைப்பது இந்த அகழ்வைப்பகத்தின் சிறப்பம்சம். இந்த வரிசையில் மிகப் பெரிய நத்தை ஒன்று கண்ணாடி பெட்டிக்குள் அமைதியாக சுருண்டபடி நம்மைப் பார்த்து 'என்னடா பேராண்டி, எப்படி இருக்கிறே?' என்கிறது.
அகழ்வைப்பக கட்டடத்திற்கு வெளியே 'தொல்மாந்தர் வாழ்வகம்' என்ற பெயரில் பழைய கற்கால மனிதர்களின் ஆளுயர மாதிரி சிலைகள் நான்கும், பாறை குகை மாதிரி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
திரு. துளசிராமனிடம் விடைபெறும் போது, சிறப்பு ஆணையர் திரு. ஸ்ரீ. ஸ்ரீதரை பதிப்பாசிரியராகக் கொண்டு, தான் எழுதிய 'தமிழகத் தொல் பழங்காலமும் பூண்டி அகழ்வைப்பகமும்' என்ற நூலில் ஆதிமனிதர்களின் வாழ்க்கை முறை, தமிழக அகழ்வாராய்ச்சிப் பணிகள் பற்றிய பல அரிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டோம். (விலை ரூ.30). மேலும் நாங்கள் பார்க்கப்போகும் குடியம் குகை (குடியம் என்ற ஊருக்கு அருகில் இருப்பதால் இந்த பெயர்) அல்லிகுழி மலைத்தொடரில் அமைந்திருப்பதாகவும், அதைப் போல 16 குகைகள் அந்த மலைத்தொடரில் இருக்கின்றன என்றும் கூறினார். ஆனால் மற்ற குகைகளை இனங்காணுவது கடினம் என்றார்.
அங்கிருந்து குடியம் குகையைத் தேடிப் புறப்பட்டோம். ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் சீத்தஞ்சேரி என்ற இடத்தில் இடப்பக்கம் திரும்ப வேண்டும் என்று சொல்லியிருந்தார் திரு. அருள்பிரேம் தாஸ். அதேபோல் திரும்பி தூரத்தில் தெரியும் மலைகளை நோக்கி சென்றுகொண்டே இருந்தோம். முடிவே இல்லாதது போல சாலை நீண்டு கிடந்தது. இடையிடையே மிகச் சிறிய கிராமங்கள் குறுக்கிட்டன.
வழியில் தொல்லியல் துறை வைத்துள்ள போர்டு நம்மை வலப்பக்கம் செல்லும்படி வழிகாட்டியது. ஒரு சிறிய கிராமத்திற்குள் நுழைந்தோம். சாலையோரத்தில் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த சிறுவர்களிடம் கொஞ்சம் தண்ணீர் வாங்கி தாகத்தை தணித்துக் கொண்டோம். இந்த பாட்டிலை கொண்டு போங்கண்ணா... என்று ஒரு பாட்டில் தண்ணீரை நீட்டினார்கள் அந்த பெரிய மனதுக்காரர்கள். பரவாயில்லை, தாகம் தீர்ந்துவிட்டது என்று தெம்பாக கிளம்பினோம். மிகப்பெரிய தவறு செய்கிறோம் என்று அப்போது எங்களுக்கு உறைக்கவில்லை.
இன்னும் சிறிது தூரம் சென்றதும் சாலை முடிவுற்றது. அருகில் இருந்த வீட்டில் குகைக்கு வழி கேட்டோம். மனிதர்கள் போன வழித்தடம் இருக்கும் அதைப் பின்பற்றி போக வேண்டியதுதான் என்றார் அந்த வீட்டுக்காரர். இரு சக்கர வாகனத்தில் வந்திருப்பதால் இன்னும் சிறிது தூரம் வரை வண்டியிலேயே போகலாம். முடிந்த வரை போங்கள், பிறகு இறங்கித்தான் நடக்க வேண்டும் என்றார். இங்கிருந்து குகைக்கு வெறும் நான்கு கிலோ மீட்டர் தான் என்று சொல்லிவிட்டு, பாதியில் விட்டு வந்த தொலைக்காட்சித் தொடரை பார்க்க மீண்டும் உள்ளே சென்றுவிட்டார்.
மதியம் 1 மணி. வெயில் மண்டையைப் பிளந்தது. மிகப் பெரிய காடு வாயை அகல திறந்துகொண்டு எங்களை விழுங்க காத்திருப்பது போல் இருந்தது. வனவிலங்குகள் இருக்குமா என்று கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றும் கிடையாது, கரடி, நரி மட்டும் இருக்கும், தைரியமா போங்க என்று வழியில் சிலர் சொன்னது இப்போது ஞாபகம் வந்தது. லேசான பயம் கலந்த விறுவிறுப்புடன் உள்ளே நுழைந்தோம். வாயில் இருந்து தொண்டைக்கு போவது போல் பாதை குறுகியது, வெயிலும், அதனால் வெளிச்சமும் சற்று குறைந்தது. கரடுமுரடான கூழாங்கற்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையில் சந்துரு வாகனத்தை லாவகமாக செலுத்திக் கொண்டு போனார். பாறைகளால் போடப்பட்ட ஒற்றையடிப் பாதையில் குலுங்கியடி மெதுவாக ஊர்ந்து சென்றோம். ஓரிடத்தில் ஒரு ஸ்பிளண்டர் வாகனம் நின்று கொண்டிருந்தது. எங்களுக்கு முன் ஒரு சாகச விரும்பி வந்து சைட் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியிருந்தார். அன்னாரின் அடியொற்றி நாங்களும் எங்கள் வாகனத்தை அங்கேயே பார்க் செய்தோம். காட்டிற்குள் பார்க் என்று கிண்டலடித்தபடி நடக்கத் தொடங்கினோம்.
கூழாங்கல் பாதை எங்களை வழிநடத்தி அழைத்துச் சென்றது. மிகவும் அடர்த்தியான காடு என்று சொல்ல முடியாது. ஆனால் சில இடங்களில் 10 அடி தொலைவிற்கு அப்பால் இருப்பது தெரியாத அளவு புதர்கள் அடர்ந்திருந்தன. ஏதோ பெயர் தெரியாத குருவி விட்டுவிட்டு கத்தும் சத்தம் மட்டும் கேட்டது. உயரமான புதர்கள் நிறைந்த காடாக இருக்கிறது. நமக்கு பரிச்சயமான மரங்கள் எதுவும் காணப்படவில்லை. பூஞ்சை பிடித்த நிலையில் இருந்த சில சப்பாத்தி கள்ளிச்செடிகள் பால்யத்தை நினைவூட்டின.
மெல்ல சுற்றிப் பார்த்தால் நான்கு புறமும் பெரிய பெரிய குன்றுகளுக்கு இடையில் நின்று கொண்டிருப்பது புலப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்தோம். நடக்க, நடக்க பாதை நீண்டது. நாக்கு வறண்டது. தண்ணீர் பாட்டில் தானத்தை ஏற்காதது எவ்வளவு பெரிய தவறு என்பது இப்போது நன்றாகவே புரிந்தது. வியர்த்து வழிந்தாலும் விடாமல் நடந்தோம். சில இடங்களில் இரண்டு பாதைகள் பிரிந்தன. எதில் போவது எனத் தெரியவில்லை. மேலே ஒரு சுனை இருப்பதாக கேள்விப்பட்டிருந்தோம். அதற்கான வழியாக அவை இருந்திருக்கலாம். ஆனால் நாங்கள் குகையைப் பார்ப்பதிலேயே ஆர்வமாக இருந்தோம். வழிகாட்டவும் ஆளில்லை. குடியம் குகையில் ஒரு அம்மன் சிலையை வைத்து அங்குள்ள மக்கள் வழிபடுவதாகவும், அதற்காக அந்த குகைக்கு மனிதர்கள் அடிக்கடி வந்து போவதாகவும் கேள்விப்பட்டிருந்தோம். இந்த தகவல் தான் எங்களுக்கு வழி கண்டுபிடிக்க பெரிதும் உதவியது.
இரண்டு பாதைகள் பிரியும் இடங்களில் சிறிது தூரம் சென்று பார்ப்போம். கூழாங்கல் பாதையில் கால்தடத்தை வைத்து வழி கண்டுபிடிக்க முடியாது. சிகரெட் அட்டை, ஸ்வீட் பாக்ஸ் மூடி என ஏதேனும் வழியில் தென்படும். அந்த பாதையில் தொடர்ந்து நடப்போம். சில இடங்களில் சிறு பாறைகளைக் குவித்துவைத்து பொங்கல் வைத்த அடையாளங்கள் தென்பட்டன. குகையை நெருங்கிவிட்டோம் என்ற எண்ணம் தோன்றியதும் உள்ளத்தில் இனம்புரியாத படபடப்பு. ஒரு இடத்தில் பாதை வளைந்தது, அந்த சிறிய கொண்டைஊசி வளைவில் நுழைந்து திரும்பியபோது, லட்சக்கணக்கான ஆண்டுகளை கண்ட அந்த குகை எங்கள் முன் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. ஒரு கணம் மூச்சுவிட மறந்துவிட்டோம். நமது மூதாதையர்கள் வாழ்ந்த அந்த குகைக்குள் காலடி எடுத்து வைக்கும்போது வார்த்தைகளில் வடிக்க முடியாத ஒரு பரவசம்.
5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வேட்டையாடுவதை தொழிலாக கொண்ட மனிதர்கள் வாழ்ந்த குகை. மரப்பட்டைகளையும், விலங்குகளின் தோலையும் ஆடையாக அணிந்திருந்த அவர்களுக்கு நெருப்பின் பயன்பாடு கூடத் தெரியாது. தங்கள் கூட்டத்தில் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் உடலை இயற்கையாக அழியும்படி அப்படியே விட்டுவிடும் அளவிற்கு இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதர்களின் குகை. அப்படியே கண்களை மூடி 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வேகமாகப் பயணித்தேன். குகைக்குள் அமர்ந்திருந்த அந்த கற்கால மனிதர்கள் கள்ளம் கபடமில்லாமல் சிரித்தபடி என்னை கனிவுடன் பார்த்தனர். இதையாவது விட்டுவிடுங்கள் என்று மன்றாடுவது போலவும் அந்த பார்வை இருந்தது. அந்த குகையின் எளிய கம்பீரமும், காடு கொடுத்த கனத்த மௌனமும் எங்களை சூழ்ந்துகொண்டன.
குகைக்குள் நுழைந்தபோது தாயின் அரவணைப்பில் இருப்பது போல இருந்தது. எதிரில் உள்ள பாறைகளில் வெயில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, இந்த குகையில் மட்டும் குளிர்ச்சி நிறைந்திருந்தது. சுமார் 200 பேர் அமரக் கூடிய அளவிற்கு உள்ளே இடமிருந்தது. மூன்று புறமும் பெரிய பெரிய பாறைகள் அணிவகுத்திருப்பதால் மிகவும் பாதுகாப்பான இடம் என இதனைத் தேர்வு செய்திருப்பார்கள் போலிருக்கிறது.
சிலர் இந்த குகைக்குள் ஒரு அம்மன் சிலையை வைத்து, மதமற்ற மனிதர்கள் வாழ்ந்த இடத்தை ஒரு மதத்திற்கு உரியதாய் மாற்ற முயற்சித்திருக்கிறார்கள். அந்த அம்மனுக்கு அடிக்கடி வழிபாடு நடப்பது அங்கிருக்கும் பொருட்களைப் பார்க்கும் போது புரிகிறது. குகையின் வெளிப்புறத்தில் பெரிய பெரிய தேன் கூடுகள் காற்றில் மெல்ல அசைந்து நமக்கு பீதியூட்டின. குகையின் உட்புறமும் நிறைய தேன் கூடுகள் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. சிறிது நேரம் குகைக்குள் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தோம். வாழ்வின் அரிய பெரிய தத்துவங்களை அந்த குகை நொடிப்பொழுதில் அநாயாசமாக எடுத்து வீசியது. அங்கு வெறுமனே அமர்ந்திருப்பதே ஒரு பெரிய வாழ்வானுபவத்தை கொடுத்தது.
தாத்தா, பாட்டி வீட்டிற்கு வந்த சிறுவர்கள், விடுமுறை முடிந்ததும் வேறு வழியின்றி வீடு திரும்புவதைப் போல, மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். நிறைவும், ஏக்கமும் கலந்த கலவையாக மனம் மாறிப் போனதை உணர முடிந்தது. ஒரு பட்டாம்பூச்சி வழிகாட்டியபடியே முன்னால் பறந்து சென்றது. தங்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர்களை அந்த ஆதிமனிதர்களே மிகுந்த கருணையோடு காட்டிற்கு வெளியே வரை வந்து வழியனுப்புவது போல அது இருந்தது.