என்னைப் பற்றி...

- பார்த்திபன் (Parthiban)
- சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.
Thursday, September 30, 2010
அறிவிப்பு
Monday, September 27, 2010
சிவன் நடனமாடும் காடு

சிவபெருமானுக்கும் காளிக்கும் ஒருமுறை நடனப் போட்டி நடைபெற்றது. போட்டி உச்சகட்டத்தை எட்டிக்கொண்டிருந்தது. காளியின் கையே ஓங்கியிருந்த நிலையில் சிவனின் காதில் இருந்த தோடு திடீரென கழன்று விழுந்தது. சிவன் நடனமாடியபடியே அதனை தனது இடது கால் விரல்களால் பற்றி எடுத்து காதில் அணிந்துகொண்டார். இவ்வாறு காலை உடம்புடன் ஒட்டியபடி தலை வரை தூக்கி ஆடும் நடனம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். பெண்ணான காளியால் இவ்வாறு ஆட முடியாததால் போட்டியில் சிவனிடம் தோல்வியுற்றார். இந்த போட்டி நடந்த இடம் தான் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு. இங்கு சிவனுக்கும், காளிக்கும் தனித்தனியாக கோவில்கள் இருக்கின்றன.
காரைக்கால் அம்மையார் சிவனைத் தரிசிக்க திருவாலங்காட்டிற்கு வந்தபோது, அந்த இடம் முழுவதுமே சிவன் ரூபமாக காட்சியளித்ததால் கால் வைக்கத் தயங்கி, தலையால் நடந்து வந்து சிவனை வழிபட்டதாகவும் ஒரு கதை உண்டு. காரைக்கால் அம்மையார் இந்த தலத்தில்தான் முக்தி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த கோவிலில் காரைக்கால் அம்மையாருக்கும் ஒரு சந்நிதி உள்ளது. இங்கு எழுந்தருளி இருக்கும் இறைவன் வடாரண்யேசுவரர், ஊர்த்துவ தாண்டவர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டு அப்பர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் வண்டார் குழலம்மை.
கிழக்கு நோக்கி இருக்கும் இந்த கோவிலின் 5 நிலை ராஜகோபுரம் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். வலதுபுறம் உள்ள சந்நிதியில் வள்ளி, தெய்வானையுடன் அருள்மிகு சண்முகர் எழுந்தருளியுள்ளார். நுழைவு வாயிலைத் தாண்டியதும் பலி பீடம், கொடி மரம், நந்தி மண்டபம் மற்றும் 3 நிலைகளையுடைய இரண்டாவது கோபுரம் காட்சியளிக்கிறது. இதிலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறம் காரைக்கால் அம்மையார் வரலாறும், வலதுபுறம் மீனாட்சி திருக்கல்யாண வரலாறும் அழகிய சுதைச் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும் இரண்டாவது சுற்றுப் பிரகாரம் வருகிறது. வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மையின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில். இந்த வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளன. இதில் இத்தலம் ரத்தின சபை என்றும், இதுவே முதன்மையான சபை என்றும் குறிக்கப்பட்டுள்ளது. நேரே உள்ளே சென்றால் கருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்கிறது இந்த கோவிலின் தலப் புராணம். இத்தலத்தில் உள்ள உற்சவர் நடனமாடியபடி காட்சியளிப்பதால் ரத்தின சபாபதி என்று அழைக்கப்படுகிறார்.
நடராஜர் சந்நிதிக்கு மேல் தாமிரத்தினால் விமானம் வேயப்பட்டுள்ளது. நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி உள்ளது. இந்த தலத்தின் பெருமையை அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். கோவிலுக்கு வெளியே மிகப்பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் காளிக்கென தனிக்கோவில் உள்ளது. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இறங்கியும் கோவிலுக்கு வரலாம். பேருந்து வசதியும் உண்டு.
தமிழக சரித்திரத்தின் முக்கியமான பகுதிகளை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்துள்ளன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த 22 செப்பேடுகள் சோழ வரலாறு குறித்து பல அரிய தகவல்களைச் சொல்கின்றன. இவை தற்போது சென்னை அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
Thursday, September 23, 2010
பாவம் பெரிய ஓக்

பெரிய ஓக்குகள் ஒரு காலத்தில், கனடாவுக்கு அப்பாலுள்ள தீவுகளிலும், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, அயர்லாந்து மற்றும் பிரிட்டன் போன்ற இடங்களில் பெருமளவில் காணப்பட்டன. 75 முதல் 85 சென்டி மீட்டர் உயரம் கொண்ட இந்த பறவை சுமார் 5 கிலோ எடை இருக்கும். பெரிய ஓக்குகள் நன்றாக நீந்தக் கூடியவை. சிறகுகளை பயன்படுத்தி நீருக்கடியில் அருமையாக நீந்தும். இவை 25 வயது வரை உயிர்வாழும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே இடுகின்றன.
சிறிய கழுத்து, குட்டி கால்களுடன் மெல்ல அசைந்து அசைந்து நடந்து வரும் பெரிய ஓக் பெயரளவில் பறவைதான் என்றாலும் இதனால் பறக்க முடியாது. இதுவே இவற்றின் அழிவிற்கு முக்கிய காரணமாகிவிட்டது. சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பெரிய ஓக்குகள் மனிதர்களுக்கு அறிமுகமாகியிருக்கின்றன. 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஸ்பெயின் நாட்டில் உள்ள எல் பிண்டோ குகைகளில் இவற்றின் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.
8 ஆம் நூற்றாண்டிலிருந்து இவை, உணவுக்காகவும், மெத்தைகள் செய்வதற்காகவும் மனிதர்களால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வந்தன. இவை முற்றிலுமாக அழிந்து போகும் வரை மனிதர்கள் ஓயவில்லை. இவ்வினத்தின் கடைசி ஜோடி, 1844, ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் கொல்லப்பட்டன.
பெரிய ஓக்குகள் வெல்ஷ் மொழியில், அவற்றின் தலையிலுள்ள வெள்ளை நிறத்தை வைத்து, "வெண் தலை" எனப் பொருள்படும் பென் க்வின் என அழைக்கப்பட்டன. இதுவே "பென்குயின்" என்ற பெயருக்கு அடிப்படை. கடற்பயணங்களின் போது பெரிய ஓக்கை ஒத்த பறவைகளைக் கண்ட பயணிகள் அவற்றையும் அதே பெயரிலேயே அழைத்தனர்.
பெரிய ஓக்குகள் பரலோகம் போய்விட்ட நிலையில் இப்போது பென்குயின்கள் மட்டுமே நமது பார்வைக்கு எஞ்சியிருக்கின்றன.
Monday, September 20, 2010
சிரிக்கும் ஆந்தை

"சிரிக்கும் ஆற்றலை இயற்கை மனிதர்களுக்கு மட்டும்தான் கொடுத்திருக்கிறது என்று யார் சொன்னது, எங்களுக்கும்தான் அளித்திருக்கிறது" என்கின்றன நியுசிலாந்து நாட்டில் காணப்படும் ஒரு வகை ஆந்தைகள். இவற்றின் பெயரே சிரிக்கும் ஆந்தைகள்தான். சிரிப்பென்றால் அப்படியொரு சிரிப்பு, பைத்தியம் பிடித்தவன் நிறுத்தாமல் வெறித்தனமாக சிரிப்பது போல இவற்றின் சிரிப்பு இருக்கும் என்கிறார்கள் காதுகொடுத்து கேட்டவர்கள். இவை கூட்டமாக கூடிச் சிரிப்பதைக் கேட்டு அலறி அடித்து ஓடியவர்கள் ஏராளம்.
சுமார் 15 இன்ச் உயரம் இருக்கும் இந்த ஆந்தை, சிவப்பு நிற உடலோடும் வெள்ளை நிற முகத்தோடும் காட்சியளிக்கும். இதனால் இதனை வெள்ளை முக ஆந்தை என்றும் அழைப்பார்கள். இதில் வடக்குத் தீவு ஆந்தைகள், தெற்குத் தீவு ஆந்தைகள் என இருவகைகள் இருக்கின்றன. தெற்குத் தீவு ஆந்தைகள் சற்று பெரியதாக இருக்கும். ஆனால் இரண்டு வகைகளிலும் ஆண் ஆந்தைகள் பெண்களை விட சிறியதாக இருக்கும். இவை பெரும்பாலும் மழை குறைவான, மலைப்பாங்கான இடங்களில் தங்கியிருக்கும். பல்லி, பூச்சிகள், சிறு பறவைகள் போன்றவைதான் இதன் டயட். பாறை இடுக்குகள், பெரிய பாறைகளுக்கு அடியில் போன்ற பாதுகாப்பான இடங்களில் காய்ந்த புற்களைப் பரப்பி அதன் மீது முட்டையிடும். ஒரு சமயத்தில் இரண்டு முட்டைகள்தான் இடும்.
"டாக் வைல் வாக்" விளம்பரம்போல இந்த ஆந்தையார் பறக்கும்போது தான் சவுண்ட் விடுவார். பெரும்பாலும் இருள் சூழ்ந்த நேரத்தில் அல்லது மழை வருவதற்கு முன் அல்லது தூறல் போடும் இரவுகளில் ஆந்தையாரின் கச்சேரியை நாம் ரசிக்கலாம். இது தூரத்தில் இருக்கும் யாரையோ அழைப்பதற்கு கூவுவதற்கு போலவும், ஒரு குட்டி நாய் குரைப்பது போலவும், வேதனை கலந்த வீறிடல் போலவும் இருப்பதாக கேட்டவர்கள் கூறுகிறார்கள்.
1880களுக்கு பிறகு அரிதாகிப் போன இந்த வகை ஆந்தைகள் 1914ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் அழிந்துபோனதாக கருதப்படுகிறது. காரணம் அப்போதுதான் நியுசிலாந்தின் கான்டர்பரி என்ற பகுதியில் கடைசி ஆந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதன் பிறகு சிரிக்கும் ஆந்தையின் அடிவயிற்றைக் கலக்கும் சிரிப்பைக் கேட்டதாக பல இடங்களில் பலர் கூறியிருந்தாலும், அதற்கான நிரூபிக்கக் கூடிய ஆதாரம் எதுவும் இல்லை. ஐரோப்பியர்களின் வருகையால் நியுசிலாந்தில் மரநாய், கீரி, பூனை போன்ற விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்ததும், அவை ஆந்தையின் உணவில் கை வைத்ததும் இவை அழிந்துபோனதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் இன்றும் இரவு நேரத்தில் மலைப் பிரதேசங்களில் பயணிப்பவர்கள் சிரிக்கும் ஆந்தையின் குரலைக் கேட்பதாகக் கூறுகிறார்கள்.
இது தமிழ் சினிமாக்களில் இரவில் சோகமாக பாடிக் கொண்டே செல்லும் ஆவிகளைப் போல, அழிந்து போன ஆந்தைகளின் ஆவிக் கச்சேரியா அல்லது ஆய்வாளர்களின் கண்ணில் படாமல் கண்ணாமூச்சி ஆடும் மீதமிருக்கும் ஆந்தைகளின் அக்மார்க் அலறலா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
Thursday, September 16, 2010
மதராசப்பட்டினம்


தருமமிகு சென்னையாக இருந்து தற்போது சிங்காரச் சென்னையாக மாற முயற்சித்து வரும் இந்த மாநகரின் பெயர், பல நூற்றாண்டுகளாக மெட்ராஸ்தான். இதனை மெட்ராஸ்பட்னம், மதராபட்னம், மத்ராஸ்படான், மதராஸ்படம், மதரேஸ்பட்னம், மத்தராஸ், மதராஸ், மதரேஸ்படான், மதராஸாபடான், மாத்ரிஸ்பட்னம், மதேராஸ், மதிராஸ் என ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் அவரவர் வசதிக்கேற்ப அழைத்திருக்கிறார்கள். இந்த மெட்ராஸ் அல்லது மதராஸ் என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன.
1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி, பிரான்சிஸ் டே என்ற கிழக்கிந்திய கம்பெனி ஏஜெண்ட் சோழமண்டலக் கடற்கரையில் ஒரு துண்டு பொட்டல் நிலத்தை வாங்கினார். ஓராண்டுக்கு பின்னர் பிரிட்டீஷார் அந்த இடத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர். கோட்டையை சுற்றி மெல்ல வளர்ந்து விரிவடைந்ததுதான் இன்றைய சென்னை மாநகரம். இதுதான் சென்னையின் 'சுருக்' வரலாறு.
பிரான்சிஸ் டே வாங்கிய நிலம், சில மீனவக் குடும்பங்களும், இரு பிரெஞ்சு பாதிரியார்களும் வசித்த சிறிய கிராமத்திற்கு தெற்கே இருந்தது. அந்த கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் பெயர் மாதராஸன் என்றும், எனவே அந்த கிராமம் மாதராஸ்பட்னம் என்றும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தலையாரியின் வாழைத் தோட்டத்தை, தொழிற்சாலை அமைப்பதற்காக டே வாங்கினார். நிலத்தை கொடுக்க அவர் முரண்டு பிடித்ததால், அங்கு அமையவிருக்கும் தொழிற்சாலைக்கு மாதராஸன்பட்னம் எனப் பெயரிடுவதாக வாக்களித்து, டே நிலத்தை வாங்கினாராம்.
மதராஸ் என பெயர் வந்ததற்கு வேறு ஒரு சுவையான காரணமும் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு முன்பே சாந்தோம் பகுதியில் போர்த்துகீசியர்கள் வசித்து வந்தனர். இங்கு பிரான்சிஸ் டேவிற்கு ஒரு காதலி இருந்தார். அவருக்கு அருகிலேயே வசிக்க வேண்டும் என்பதாலேயே டே அந்த துண்டு நிலத்தை தேர்வு செய்தார் என்று ஒரு கதை உள்ளது. டேவின் காதலி சாந்தோமில் அந்நாட்களில் செல்வாக்குடன் வாழ்ந்துவந்த மாத்ரா குடும்பத்தை சேர்ந்தவர். கடற்கரை ஓரத்தில் இருந்த நிறைய குப்பங்கள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தன. எனவே, டே தனது காதலியின் குடும்பப் பெயரை சூட்டியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எக்மோர் ஆற்றுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம், சந்திரகிரி ராஜாவிற்கு சொந்தமானது. அதனை வாங்க அவரது உள்ளூர் நாயக்குகளான தாமர்லா சகோதரர்களிடம் பிரான்சிஸ் டே பேரம் பேசினார். அவர்கள் தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை, புதிதாக அமையவிருக்கும் குடியிருப்புக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்நிலத்தை கிழக்கிந்திய கம்பெனிக்கு பட்டா எழுதிக் கொடுத்தனர். இதனால் அந்த பகுதிக்கு சென்னப்பட்டினம் எனப் பெயர் சூட்டப்பட்டது. மதராஸபட்டினம் வடக்கிலும், சென்னப்பட்டினம் தெற்கிலும் இருந்த இருவேறு பகுதிகள். பின்னர் காலப்போக்கில் இரண்டையும் ஒருங்கிணைத்து மதராஸ் என ஆங்கிலேயர்கள் அழைக்கத் தொடங்கினர்.
பிரபலமான இந்த பெயர் காரணங்கள் தவிர வேறு பல காரணங்களும் கூறப்படுகின்றன. சோழமண்டல கடற்கரையில் வரும் இப்பகுதி, சோழப் பேரரசின் சிற்றரசர்களான முத்தரையர்கள்வசம் கொஞ்ச காலம் இருந்ததால், இது முத்தராசபட்டினம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது முத்தராசா, முத்ராஸ், மத்ராஸ் என மருவியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆற்காடு நவாப்புகள் மதராஸ்பட்டினத்தில் இருந்த மதராஸா எனும் சமயப் பள்ளிகளுக்கு பல தலைமுறைகளாக காப்பாளர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். மதராஸா என்றால் சமயப்பள்ளி என்று பொருள். அதனால் மதராஸா என்ற சொல்லிலிருந்துதான் மதராஸ் எனும் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.
இதேபோன்று சென்னை பெயருக்கு பின்னாலும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் சென்னையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் செம்மை நிறத்தில் காணப்பட்டன. அதனால் அந்தப் பகுதிக்கு செம்மை என்று பெயர் வைக்கப்பட்டது. நாளடைவில் செம்மை என்பது சென்னையாக மாறிப்போனது என்பது ஒரு கருத்து.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மிக அருகிலேயே காளிகாம்பாள் கோயில் இருந்ததால் பக்தர்களுக்கு பல சிரமங்கள் ஏற்பட்டன. அதனால் தம்பு செட்டித் தெருவில் ஒரு புதிய கோயிலைக் கட்டி அம்மனை அங்கு மாற்றினார்கள். ஏற்கனவே, கோட்டைப் பகுதிக்குள் கோயில் இருந்ததால் கோட்டையம்மன் என்ற பெயரும் அதற்கு உண்டு. இந்தக் காளிகாம்பாள் அம்மனுக்கு செந்தூரம் பூசி வழிபட்டார்கள். எனவே அம்மனை ‘சென்னம்மன்’ என்று அழைத்தார்கள். ‘சென்னம்மன்’ குடியிருக்கும் அந்த இடம் படிப்படியாக வளர்ச்சி கண்டது. நாளடைவில் சென்னம்மன் சென்னையாக மாறியதாக ஒரு தரப்பினர் சொல்கின்றனர். சென்னம்மன் என்பதை செம் அன்னை என்றும் சிலர் அழைத்தனர். இந்தச் செம் அன்னை தான் சென்னை என மாறியதாக கூறப்படுகிறது.
சென்னைப் பகுதியில் சென்னக் கேசவப் பெருமாள் கோயில் எனும் பெயரில் ஒரு கோயில் இருந்தது. இப்போதும் இருக்கிறது. இந்தக் கோயில் நகரத்தின் முதன்முகப்பில் இருந்ததால், இக்கோயில் இருந்த நகரத்திற்கு சென்னை என்ற பெயர் வந்ததாகச் சிலர் கூறுகின்றனர். சென்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா, இல்லை சின்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா எனத் தெரியவில்லை. ‘சின்ன’ என்ற சொல் ‘சென்ன’ என்று மாறிப் போனதாகவும் செய்திகள் உள்ளன.
இப்படி தனது பெயருக்கு பின்னால் ஏராளமான மர்மங்களை ஒளித்து வைத்தபடி, ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றும், தமிழில் சென்னை என்றும் அழைக்கப்பட்டு வந்த இந்நகரம், இனி அனைத்து மொழிகளிலும் சென்னை என்றே அழைக்கப்படும் என 1996ஆல் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று புதுப்பொலிவு பெற்றது.
Wednesday, September 15, 2010
உயிர்த்தெழுந்த குதிரை

டர்பன் என்ற காட்டுக் குதிரையின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. சுமார் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தெற்கு பிரான்ஸ், ரஷ்யா, ஸ்பெயின் என ஐரோப்பிய காடுகளில் காற்றைக் கிழித்திக் கொண்டு பறந்து கொண்டிருந்தது இந்த டர்பன் குதிரை. டர்பன் என்றால் துருக்கிய மொழியில் காட்டுக் குதிரை என்று அர்த்தம்.
கட்டுக்கடங்காத இந்த காட்டுக் குதிரையை ரஷ்யாவில் சைந்தியன் என்ற நாடோடிக் குழுவினர் பழக்கிப் பயன்படுத்தி வந்தனர். பிரான்சிலும், ஸ்பெயினிலும் ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகைகளில் டர்பனின் ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரிய தலையும், குட்டைக் கால்களையும் கொண்ட டர்பன்களின் உடலில் அடர்த்தியான ரோமங்கள் இருந்தன. இவைதான் ரஷ்யாவின் கடுங்குளிரில் இருந்து அவற்றை பாதுகாத்தன.
ரஷ்ய உயிரியல் பூங்கா ஒன்றில் பராமரிக்கப்பட்டு வந்த டர்பன் ஒன்று, 1909ஆம் ஆண்டு தனது மூச்சை நிறுத்திக் கொண்டு டர்பன் இனக் குதிரைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், காடுகளில் இருந்த டர்பன்களின் கதை 1875 - 1890 காலகட்டத்திலேயே முற்றிலுமாக முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. காட்டில் இருந்த கடைசி டர்பன், அதனைப் பிடிக்க நடந்த முயற்சியில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது.
பின்னர் இந்த இனக் குதிரைகளை மீண்டும் உருவாக்க, 1930களில் இருந்து விஞ்ஞானிகள் மூன்று முறை முயற்சித்தனர். ஆனால் மூன்று முயற்சிகளும் முழுமையாக வெற்றி பெறவில்லை. அதேசமயம் இந்த முயற்சிகளின் மூலம் டர்பனின் பல குணாம்சங்கள் பொருந்திய ஹெக், ஸ்ட்ரோபெல் போன்ற குதிரைகள் உருவாக்கப்பட்டன. டர்பன் என்ற காட்டுக் குதிரைகள் இந்த பூமியில் ஒருகாலத்தில் வாழ்ந்தன என்பதை பறைசாற்றியபடி இவை உலா வந்து கொண்டிருக்கின்றன.
Monday, September 13, 2010
நூல்.. நூல்.. நூடுல்ஸ்

இன்றைய குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடும் உணவுகளில் நூடுல்சும் ஒன்று. நூல், நூலாக வளைந்து, நெளிந்து தட்டில் நிறைந்து கிடக்கும் இந்த உணவு, இன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டதல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நூடுல்ஸை ருசித்திருக்கிறார்கள். ஆனால் இதை யார் கண்டுபிடித்தார்கள் என்பதில் குழப்பம் நிலவுகிறது.
சீனர்கள் இதனை தாங்கள் தான் கண்டுபிடித்ததாக கூறுகிறார்கள். ஆனால் 13ஆம் நூற்றாண்டில் மார்க்க போலோ இத்தாலியில் இருந்து சீனாவிற்கு சென்ற போது இந்த உணவை தன்னுடன் கொண்டு சென்றதாக இத்தாலியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையில் மார்க்க போலோ சீனாவில் நூடுல்ஸை பார்த்து வியந்து, அதனை தன்னுடன் இத்தாலிக்கு எடுத்துச் சென்றதாக சீனர்கள் மறுக்கின்றனர்.
நீண்ட பாலைவனங்களில் பயணிக்கும்போது எளிதில் கெட்டுப் போகாத உணவுகளை கொண்டு செல்ல வேண்டி இருந்ததால், நூடுல்ஸை கண்டுபிடித்ததாக அராபியர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மன் என பல நாடுகள் நூடுல்ஸ் தங்களுடைய கண்டுபிடிப்பு தான் என சொந்தம் கொண்டாடுகின்றன. இந்த சூழ்நிலையில் தான், சீன தொல்பொருள் ஆய்வாளர்கள் 4000 ஆண்டுகள் பழமையான நூடுல்ஸ் நிறைந்த பாத்திரம் ஒன்றை சீனாவின் வடமேற்கு பகுதியில் கண்டெடுத்திருக்கின்றனர். இதன் மூலம் சீனர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பே நூடுல்ஸை ஒரு கை பார்த்திருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது.
நூடுல்ஸ் நீண்ட நூல் போல் இருப்பதால், இதனை சாப்பிடுவதன் மூலம் தங்கள் ஆயுளும் அதுபோல நீளும் என சீனர்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது. அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கூட கேக்கிற்கு பதிலாக இந்த நூடுல்ஸை தான் பரிமாறுகின்றனர். ஜப்பானிலும் நூடுல்ஸ் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே இருக்கிறது. இப்படியே பல நாடுகளுக்குள்ளும் நுழைந்து, உலக உருண்டையை சுருட்டிவிட்டது நூடுல்ஸ். இன்று ஏறத்தாழ அனைத்து நாட்டு மக்களும் நூடுல்ஸை ரசித்து, ருசித்து சாப்பிடுகின்றனர்.
நூடுல்ஸ் சாப்பிடுவதன் மூலம் ஆயுள் நீளும் என்ற சீனர்களின் நம்பிக்கை உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடரும் நூடுல்ஸின் ஆயுள் மிக மிக... நீளம் என்பது மட்டும் உண்மை.
Saturday, September 11, 2010
ஐஸ்கிரீமின் கதை

'அடிக்குற வெயிலுக்கு ஒரு ஹாக்கி பாக்கி சாப்பிடலாம் வாங்க' என்று நண்பர்களை கூப்பிடுங்கள். உங்களை ஒருமாதிரி ஏற இறங்கப் பார்ப்பார்கள். அட, நாம ரசித்து ருசித்து சாப்பிடும் ஐஸ்கிரீமின் பெயர் தாங்க அது. ஐஸ்கிரீம் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் அதை எல்லாரும் ஹாக்கி பாக்கி என்று தான் அழைத்துக் கொண்டிருந்தார்கள்.
Friday, September 10, 2010
பிட்சா பிறந்த கதை

பீட்சா, பிட்சா, பிசா, பிச்சா என பலவிதங்களில் அழைக்கப்படும் பிட்சா நாகரீக இளைஞர்களின் அடையாளங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் பிட்சா ஏதோ இன்று நேற்று பிறந்த உணவல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதனை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இத்தாலி ராணியின் கடைக்கண் பார்வை கிட்டிய பிறகுதான் இதற்கு உலகப் புகழ் கிடைத்தது என்பது ஓர் சுவாரஸ்யமான கதை.
Thursday, September 9, 2010
காணாமல் போன மகாராஜா

Wednesday, September 8, 2010
பாப்கார்ன்

Tuesday, September 7, 2010
கருப்பு வெள்ளை வாத்து

பக்.. பக்... பக்... என்று வட அமெரிக்கப் பகுதிகளில் பரிதாபமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தவர் தான் திருவாளர். லேப்ரடார் வாத்து (Labrador Duck). இவருக்கு கருப்பு வெள்ளை வாத்து என்றும் ஒரு பெயர் உண்டு. ஆனால் வளர்ந்த ஆண் வாத்து மட்டும் தான் கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். சிறிய வாத்துகளும், வளர்ந்த பெண் வாத்துகளும் பிரவுன் நிறத்தில் சிறிதளவு வெள்ளை இறக்கைகளுடன் காட்சியளிக்கும். இருப்பினும் ஆணாதிக்கப் பார்வை வாத்துகளையும் விட்டு வைக்காததன் விளைவு, கருப்பு வெள்ளை பட்டம்.
கடலில் வாழ்ந்த இந்த வகை வாத்துகளுக்கு மீன்கள், நத்தை, சிப்பி மற்றும் கடலில் மிதக்கும் நுண்ணுயிர்கள் தான் டயட். இவற்றை உடைத்து, வடிகட்டி சாப்பிட வசதியாக இவற்றிற்கு மிக அகலமான அலகுகள் இருந்தன. இந்த அலகுகள் தான் இவற்றை மற்ற வாத்துகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டின. இந்த வாத்துகளைப் பற்றி அதிகளவு ஆராய்ச்சிகள் நடைபெறுவதற்குள் இவை பூமியில் இருந்து மறைந்துவிட்டன. 1870களில் இவை அழிந்து போயிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த வகை வாத்துகளை கடைசியாக 1878ல் நியூயார்க்கில் பார்த்ததாக குறிப்புகள் உள்ளன. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று சுற்றிக்கொண்டிருந்த இந்த வாத்துகளின் அழிவிற்கு என்ன காரணம் என உறுதியாகத் தெரியவில்லை.
Sunday, September 5, 2010
பிஸ்கெட் பிறந்த கதை

உலகம் முழுவதும் அறியப்பட்ட உணவுப் பொருட்களில் பிஸ்கெட்டிற்கு முக்கியமான ஓர் இடம் உண்டு. இன்று எத்தனையோ சுவைகளிலும், வகைகளிலும், வடிவங்களிலும் பிஸ்கெட்டுகள் கிடைக்கின்றன. சாக்லெட் சாப்பிட்டால் பல் சொத்தையாகிவிடும் என்று எச்சரிக்கும் பெரியவர்கள்கூட, அதற்கு மாற்றாக பரிந்துரைப்பது பிஸ்கெட்டுகளைத் தான்.
பிஸ்கெட் என்றால் பிரெஞ்சு மொழியில் இரண்டு முறை சுட்டது என்று அர்த்தம். ஐரோப்பிய கப்பல்கள் அந்த காலத்திலேயே டன் கணக்கில் பிஸ்கெட்டுகளை சுமந்துகொண்டு பயணம் புறப்படுமாம். பிஸ்கெட்டுகள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாது என்பதுதான் காரணம்.
அமெரிக்கர்கள் முதலில் பிஸ்கெட்டை திடீர் ரொட்டி என்று அழைத்தனர். பேக்கிங் சோடா மூலம் தயாரிக்கப்படும் ரொட்டியைத் தான் பிஸ்கெட் எனக் குறிப்பிட்டனர். முதல் உலகப் போரின் போது வீரர்களின் உடல்நலனைக் காக்க நீண்ட நாட்கள் கெட்டுப் போகாத, அதேசமயம் சுவையான பிஸ்கெட்டைக் கண்டுபிடிக்க ஆஸ்திரேலியர்கள் முயற்சித்தனர். அதன் விளைவு தான் அன்ஸாக் (Anzac) வகை பிஸ்கெட்டுகள். இது பிற்காலத்தில் பிரபலமடைந்து விற்பனையில் சக்கைபோடு போட்டது.
1877ல் ஜான் பாமன் என்பவர்தான் முதன்முதலில் இயந்திரம் மூலம் பிஸ்கெட் தயாரித்தார். இவர் தயாரித்த பிஸ்கெட்டுகள் டீ கப்பின் சாஸர் வடிவத்தில் பெரியதாக இருந்தன. இது தான் பிஸ்கெட்டுகளின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டது. இன்று பிஸ்கெட் நமது அன்றாட மெனுவில் இடம்பிடித்துவிட்டது.
பிஸ்கெட் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப்பொருள்தான் என்றாலும், அதை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில், பிஸ்கெட்டை அடிக்கடி சாப்பிட்டால் அதில் உள்ள சர்க்கரை பற்களில் ஒட்டிக் கொள்ளும். நிறைய பேர் பிஸ்கெட்டுடன் டீயும் அருந்துவதால், டீயில் உள்ள சர்க்கரையும் அதனோடு இணைந்து கொள்ளும். அதனால்தான் அதிகம் பிஸ்கெட் சாப்பிடுபவர்களின் பற்கள் கறைபடிந்து காணப்படுகின்றன. சூப்பரான பிஸ்கெட்டை சாப்பிடுவதால் கறை படிந்தால் படியட்டும், 'கறை நல்லது தான்' என்று டயலாக் விடும் அஞ்சா நெஞ்சர்களுக்கு நோ தடா.
Friday, September 3, 2010
பயணிப் புறா

வட அமெரிக்காவின் மலைப் பகுதிகளில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தவை தான் பயணிப் புறா (Passenger Pigeon) எனப்படும் காட்டுப் புறாக்கள். நம்ம ஊர் காக்கையைப் போல இவை காணும் இடங்களில் எல்லாம் நிறைந்திருந்தன. வட அமெரிக்காவில் கோடிக்கணக்கில் வாழ்ந்து கொண்டிருந்த இந்த புறாக்கள், கூட்டமாக வானில் பறக்கத் தொடங்கினால் அந்த கண்கவர் ஊர்வலம் முடிய பல மணி நேரம் ஆகுமாம்.
1873ஆம் ஆண்டு, ஏப்ரல் 8ந் தேதி, மிச்சிகன் நகரின் வான்வெளியில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய புறா ஊர்வலம் ஒன்று மாலை 4.00 மணிக்கு தான் நிறைவு பெற்றதாக உள்ளூர்வாசி ஒருவர் எழுதி வைத்த குறிப்பு இருக்கிறது. அண்ணாந்து பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பயணிப் புறாக்கள் சாரை சாரையாக வந்துகொண்டே இருக்கும் காட்சிகள் அந்நாட்களில் சர்வ சகஜமான ஒன்றாக இருந்திருக்கிறது. வான்வெளியை அடைத்துவிடும் இந்த மெகா ஊர்வலங்களால் அந்த பகுதியே கடும் மேக மூட்டத்திற்கு உள்ளானதைப் போல் மாறிவிடுமாம்.
இப்படி பார்ப்பவர் கண்ணை உறுத்தும் அளவுக்கு பறந்து பறந்து காட்டியது தான் கடைசியில் இவற்றிற்கு எமனாக அமைந்துவிட்டது. வட அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் இந்த புறாக்களை வேட்டையாடத் தொடங்கினர். ஆரம்ப நாட்களில் குடியேறியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வேட்டையும் குறைவாக இருந்தது. பின்னர் இது அதிகரிக்க அதிகரிக்க, வேட்டையாடப்படும் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இவற்றை வேட்டையாடுவதும் ஒன்றும் கடினமாக இருக்கவில்லை. வலையை விரித்தால் கொத்து கொத்தாக வந்து சிக்கின. துப்பாக்கியால் சுட்டால் சத்தம் கேட்டே பல புறாக்கள் மூச்சை நிறுத்திக் கொண்டன. கூட்டமாக பறக்கும்போது சும்மா ஒரு கட்டையை வீசி எறிந்தே பல புறாக்களை வீழ்த்தியிருக்கிறார்கள்.
வட அமெரிக்காவில் அக்காலத்தில் இருந்த மொத்த பறவைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு இந்த பயணிப் புறாக்கள் இருந்திருக்கின்றன. தோராயமாக 5 பில்லியன் பறவைகள் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். பல பறவைகள் ஒரே மரத்தை ஆக்கிரமித்ததால், அவற்றின் பாரம் தாங்காமல் மரங்களின் கிளைகளும், சமயங்களில் மரங்களுமே முறிந்துவிழுந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன. இப்படி நிறைந்து கிடந்த பயணிப் புறாக்கள், ரயில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மிக வேகமாக அழிவை நோக்கிச் சென்றன.
இவற்றை அதிகமாக கொன்று குவித்து ரயில் மூலம் நியூயார்க் போன்ற இடங்களுக்கு அனுப்பத் தொடங்கினர். கப்பல் மூலமும் புறா வர்த்தகம் லாபகரமாக நடைபெற்று வந்தது. புறாக்கறி விலை மலிவாகக் கிடைத்ததால், இதற்கு அமெரிக்கர்கள் மத்தியில் ஏகப்பட்ட கிராக்கி. இதனை முழு நேரப் பணியாகவே செய்து புறாக்களை வேக வேகமாக பரலோகம் அனுப்ப ஆரம்பித்தார்கள். 1855ஆம் ஆண்டு நியூயார்க் நகருக்கு மட்டும் 3 லட்சம் புறாக்கள் பார்சல் செய்யப்பட்டன. இது அசுர வேகத்தில் அதிகரித்து 1869ஆம் ஆண்டு மிச்சிகன் நகரில் இருந்து வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளுக்கு 75 லட்சம் புறாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
பொதுவாக ஒரு பெண் புறா ஆண்டுக்கு ஒரு முட்டை தான் இடும். எனவே அழிக்கப்படும் வேகத்திற்கு, அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை. அதேபோல வட அமெரிக்காவில் குடியேறியவர்களால் அவற்றின் உணவு ஆதாரங்களும் வெகுவாகக் குறைந்துவிட்டன. இதுபோன்ற காரணங்களால் பயணப் புறா 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது பயணத்தை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. உலகின் கடைசி பயணப் புறாவான மார்த்தா, சின்சினாட்டி உயிரியல் பூங்காவில், 1914ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி மதியம் 1.00 மணிக்கு தன் மூச்சை நிறுத்தியது.
வரிவிலக்கு குதிரை

Thursday, September 2, 2010
காணாமல் போனவர்கள்
காலை எழுந்தவுடன் நல்ல காப்பி
