என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, September 29, 2012

எலெக்ட்ரிக் தியேட்டர்


சினிமாவில் சேர்வதற்காக எத்தனையோ பேர் கனவுகளோடு தினமும் சென்னையில் வந்து இறங்குகிறார்கள். இதற்கெல்லாம் காரணகர்த்தாவான சினிமா முதன்முதலில் சென்னைக்கு வந்த கதை உங்களுக்குத் தெரியுமா.. அந்த கதையோடு தொடர்புடைய ஒரு கட்டடம் இன்றும் அண்ணாசாலையில் இருக்கிறது என்பது தெரியுமா... இப்படி நிறைய தெரியுமாக்களுக்கு விடையாக நின்று கொண்டிருக்கிறது எலெக்ட்ரிக் தியேட்டர்.
எலெக்ட்ரிக் தியேட்டரின் இன்றைய தோற்றம்

சினிமாவுக்கும் சென்னைக்குமான தொடர்பு ஏறக்குறைய சினிமா கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலேயே தொடங்கிவிட்டது. பிரான்சைச் சேர்ந்த லூமியர் சகோதரர்கள் தான் முதன்முதலில் சலனப்படங்களை உருவாக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்தனர். சினிமாட்டோகிராப் என்ற இந்த கருவியைக் கொண்டு 1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ந் தேதி உலகின் முதல் சினிமாவை பொதுமக்களுக்கு திரையிட்டுக் காட்டினர். அடுத்த இரண்டே ஆண்டுகளில் சினிமா சென்னைக்கு வந்துவிட்டது.
மெட்ராசில் முதன்முதலில் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில்தான் 1897ஆம் ஆண்டு திரைப்படம் என்ற புதிய விஷயம் அரங்கேறியது. அதனை திரைப்படம் என்று கூட சொல்ல முடியாது. நிறைய புகைப்படங்கள் அடுத்தடுத்து ஸ்லைட் ஷோ மாதிரி நகரும் சலனப்படக் காட்சி என்று சொல்லலாம். இதனை எட்வர்டு என்ற ஐரோப்பியர் திரையிட்டார். ஒரு தொழிற்சாலையில் இருந்து ஊழியர்கள் வேலை முடிந்து வெளியேறுவது, ரயில் ஒன்று ரயில் நிலையத்திற்குள் நுழைவது போன்ற சில நிமிடங்களே ஓடக்கூடிய மவுனப் படங்கள்தான் இங்கு திரையிடப்பட்டன. திரையில் விரிந்த இந்த விநோதத்தை சென்னைவாசிகள் விழிகள் விரியப் பார்த்தனர்.
இந்த புதிய கலைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பைப் பார்த்ததும் சென்னையில் சினிமாவிற்கான அடுத்தகட்ட முயற்சிகள் தொடங்கின. தெரு ஓரங்கள், பூங்காக்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் இதுபோன்ற மவுனப் படங்கள் திரையிட்டுக் காட்டப்பட்டன. இப்படி கண்ட இடங்களில் கூட்டம் கூட்டுவதை விட, அதற்கென ஒரு அரங்கைக் கட்டினால் என்ன என இரண்டு ஆங்கிலேயர்களுக்கு தோன்றிய யோசனையின் பலன்தான் எலெக்ட்ரிக் தியேட்டர்.
வார்விக் மேஜர் மற்றும் ரெஜினால்ட் அயர் (Warwick Major & Reginald Eyre) ஆகிய இருவரும் இணைந்து, மெளன்ட் ரோடில் எலக்ட்ரிக் தியேட்டர்என்ற அரங்கை கட்டினார். இந்த தியேட்டர் 1900ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று கூறுப்படுகிறது. இதன் நூற்றாண்டை நினைவு கூறும் வகையில் 2000ஆம் ஆண்டு இந்திய தபால்துறை சிறப்பு தபால்தலை ஒன்றையும் வெளியிட்டது. ஆனால் சினிமா வரலாற்று ஆய்வாளர்கள் இதனை ஏற்க மறுக்கின்றனர்.
எலெக்ட்ரிக் தியேட்டர் 1913ஆம் ஆண்டுதான் கட்டப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் இதற்கு முன்னரே சென்னையில் சில திரையரங்குகள் இருந்திருக்கின்றன. இன்றையே பிராட்வே பகுதியில் குளூக் (Mrs. Klug) என்ற அம்மையார் 1911இல் பயாஸ்கோப் என்ற திரையரங்கை நடத்தியிருக்கிறார். உண்மையாகப் பார்த்தால் இதுதான் சென்னையின் முதல் நிரந்தரத் திரையரங்கம். ஆனால் குளூக் இதனை திரையரங்கமாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டவில்லை. ஏற்கனவே இருந்த ஒரு கட்டடத்தை சற்றே மாற்றியமைத்து திரைப்படங்களை திரையிட்டார். இவர்தான் சென்னைவாசிகளுக்கு மாலையில் சினிமாவிற்கு போகும் பழக்கத்தை ஏற்படுத்தியவர்.
நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து குளூக் தனது தியேட்டரைப் பிரபலப்படுத்தினார். அந்த காலத்திலேயே மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாக விளங்கிய பிராட்வேயில் தியேட்டரை அமைத்ததுடன், நிறைய பேர் பார்க்க வசதியாக ஒரு நூதன முறையையும் குளூக் பின்பற்றினார். அதாவது மாலை நேரம் முழுவதும் படங்கள் தொடர்ந்து திரையிடப்படும். யாருக்கு எப்போது வசதியோ அப்போது வந்து பார்த்து செல்லலாம். அந்த காலத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இதுதான் நடைமுறையில் இருந்தது.
குளூக்கின் இந்த திரையரங்கம் வெறும் 6 மாதங்கள்தான் நீடித்தது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் இத்தனை மாதங்கள் தொடர்ந்து தாக்குப் பிடித்ததே பெரிய விஷயமாக பேசப்பட்டது. குளூக்கிற்கு முன்பே 1907இல் மவுண்ட் ரோடில் மிஸ்குவித் அண்ட் கோ என்ற கட்டடத்தில் (Misquith & Co) லிரிக் (Lyric) என்ற திரையரங்கு இருந்திருக்கிறது. இதனைப் பற்றிய கூடுதல் தகவல்கள் தெரியவில்லை.
இந்த சூழலில் மவுண்ட் ரோடில் அவதரித்ததுதான் எலெக்ட்ரிக் தியேட்டர். திரையரங்கமாக நடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு கட்டப்பட்டது என்பதால் இதனையே சென்னையின் முதல் நிரந்தரத் திரையரங்கம் என எடுத்துக் கொள்ளலாம். அப்படிப் பார்த்தால் தென்னிந்தியாவின் முதல் நிரந்தரத் திரையரங்கமும் இதுதான். உறுதியான இரும்புத் தூண்களும், சாய்வான கூரையும் கொண்ட இந்த கல் கொட்டகைக் கட்டடம் அன்றைய சென்னைவாசிகளின் கனவுகளுக்கு வண்ணம் சேர்த்தது.
தியேட்டர் போஸ்டர்

மயக்கம் தரும் மெல்லிய விளக்கு வெளிச்சமும், கையால் சுற்றப்படும் புரொஜெக்டரும், மெல்ல விலகும் நீல நிற சாட்டின் துணியும், திரையில் வந்து போகும் மவுனப் படக் காட்சிகளும், அரங்கின் ஒரு மூலையில் இருந்து உயிர் கசியும் பியானோ இசையும்... அன்றைய மெட்ராஸ்வாசிகளை அப்படியே அலேக்காகத் தூக்கி ஒரு கனவு உலகத்தில் உலவ விட்டது என்றே சொல்ல வேண்டும்.
படம் பார்க்க வரும் ரசிகனுக்காக வார்விக் இன்னும் சில வசதிகளையும் ஏற்படுத்தித் தந்திருந்தார். திரையரங்கிற்கு பின்புறம் குடிமகன்களுக்காக பாரும், விளையாடி மகிழ பில்லியர்ட்ஸ் டேபிள் ஒன்றும் இருந்தது. அன்றைய மெட்ராசின் புகழ்பெற்ற உணவுக் கலைஞரான டி ஏஞ்ஜெலிஸ் அருகிலேயே ஹோட்டல் வைத்திருந்ததால், அருமையான உணவு வகைகளும் எலெட்ரிக் தியேட்டரின் திறந்தவெளி பாரில் கிடைத்தன.
இத்தனை வசதிகள் இருந்தும் எலெட்ரிக் தியேட்டரின் பயணம் இரண்டு ஆண்டுகளுக்கு (21 மாதங்கள்) மேல் தொடரவில்லை. இதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று 1914இல் இதன் அருகிலேயே தொடங்கப்பட்ட கெயிட்டி தியேட்டர். ரகுபதி வெங்கைய்யா என்பவர் தொடங்கிய கெயிட்டிதான் தென்னிந்தியாவில் இந்தியர் ஒருவரால் கட்டப்பட்ட முதல் திரையரங்கம். இப்படி சில பல காரணங்களால் வார்விக் மேஜர் 1915ஆம் ஆண்டு தனது எலெக்ட்ரிக் தியேட்டரை தபால் துறைக்கு விற்றுவிட்டார். அன்று முதல் இன்று வரை இது இந்திய தபால் துறையின் வசம் இருக்கிறது.
தற்போது மவுண்ட் ரோடு தபால்நிலைய வளாகத்தில் இருக்கிறது இந்த பழமையான தியேட்டர். தபால்நிலைய வளாகத்திற்குள் நுழைந்ததுமே அந்தக்கால வீடு பாணியில் நம்மை எதிர்கொள்ளும் இந்த கட்டடத்தில் இப்போது அரிய தபால்தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த கட்டடத்திற்குள் இப்போது நுழைந்தாலும் எங்கிருந்தோ மெல்லிய பியானோ இசை கசிவதைப் போலவே இருக்கிறது. ஒருவேளை, இல்லாத திரைகளில் இப்போதும் அந்த கருப்பு வெள்ளைப் படங்கள் ஓடிக் கொண்டே இருக்கலாம்.
நன்றி - தினத்தந்தி

* உலகின் முதல் தபால் தலையான பென்னி பிளாக் (Penny Black) முதல் பல அரிய தபால் தலைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

* இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் இந்த தியேட்டர் 1900ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகத்தான் குறிக்கப்பட்டுள்ளது.

* இந்த கட்டடத்தின் சில பகுதிகள் 1980களில் இடிக்கப்பட்டுவிட்டன.

3 comments:

  1. பலர் அறிய பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    ReplyDelete
  2. சின்ன வேண்டுகோள் : Comment Approval வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Comment Moderation-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... நன்றி... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை publish செய்ய முடிந்தது...)

    (New Interface : Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    தவறாயின் மன்னிக்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்த Comment Moderation-யை எப்படி எடுப்பது எனத் தெரியவில்லை. தயவுசெய்து உதவினால் நன்றாக இருக்கும்.

      Delete