என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, September 23, 2012

சர்ச்சை நாயகன் எலிஹூ யேல்


அமெரிக்காவின் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாக இருந்ததே மெட்ராஸ்தான். ஆம், மெட்ராஸ் வாரித் தந்த செல்வத்தில் இருந்து ஒரு பகுதியைக் கொண்டுதான் இந்த பல்கலைக்கழகம் வளர்ந்தது. இதற்கு நன்கொடை அளித்ததன் மூலம் சரித்திரத்தில் தனது பெயரை ஆழமாகப் பதித்துக் கொண்ட எலிஹூ யேலின் கதை மிகவும் விறுவிறுப்பானது.

இங்கிலாந்தைச் சேர்ந்த யேலின் குடும்பம் உள்நாட்டு குழப்பம் காரணமாக அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தது. அங்குதான் 1649இல் எலிஹூ யேல் பிறந்தார். பின்னர் இங்கிலாந்தில் இயல்புநிலை திரும்பியதால், யேலுக்கு மூன்று வயதாகும்போது அவரின் குடும்பம் மீண்டும் தாயகத்திற்கே வந்துவிட்டது. சற்றே வசதியான குடும்பத்தைச் சேர்ந்த எலிஹூ யேல், 1671 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு செல்லும் கிழக்கிந்திய கம்பெனியின் கப்பலில் ஏறினார். அந்தப் பயணம் தனது வாழ்வையே மாற்றப் போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது.

எலிஹூ யேல்
24 வயதில் சாதாரண எழுத்தராக மெட்ராசிற்கு வந்த யேல், 15 வருட உழைப்பில் மெட்ராசின் இரண்டாவது கவர்னராக உயர்ந்தார். 1687இல் இருந்து 1692 வரை ஆளுநராக இருந்த யேல் (1684இல் ஆறுமாத காலம் தற்காலிக ஆளுநராக பொறுப்பு வகித்தார்), மெட்ராசின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருந்தார். மராட்டியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பரங்கிப்பேட்டை, கடலூர், குனிமேடு போன்ற இடங்களில் ஆங்கிலேயர்கள் குடியிருக்கவும், வியாபாரம் செய்யவும் உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் யேல். முகலாயர்களிடம் இருந்து மசூலிப்பட்டினம், விசாகப்பட்டினம் போன்ற சோழமண்டலத் துறைமுகங்களின் உரிமைகளையும் யேல் பெற்றுத் தந்தார்.

1689இல் முதல் இந்தியப் பட்டாளத்தை உருவாக்கிய யேல், திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளின் உரிமைகளைப் பெற தீவிரமாக முயற்சித்தார். ஆனால் அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஓராண்டுக்கு பிறகுதான் இது சாத்தியமானது. இந்தப் பகுதிகள் எல்லாம் இன்று சென்னையின் முக்கிய அங்கமாகத் திகழ்வதற்கு அஸ்திவாரம் போட்டவர் எலிஹூ யேல்தான். அவரது காலத்தில்தான் இந்தியாவின் முதல் மாநகராட்சியான சென்னை மாநகராட்சி உருவானது. ஆனால் இது யேலுக்கு எதிரான நடவடிக்கையின் பலனாகப் பிறந்தது.

யேல், கவர்னராக இருந்தபோது கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குனராக ஜோசைய்யா சைல்டு என்பவர் இருந்தார். அவர், யேலின் தன்னிச்சையான நிர்வாகத்தை அடக்கவும், அதிகாரத்தைக் குறைக்கவும், நகராட்சி போன்ற அமைப்பு  வேண்டும் என கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பரிந்துரை கடிதம் எழுதினார். அதற்காக வழங்கப்பட்ட உரிமை சாசனத்தால்தான் 1688 செப்டம்பர் 29-ம் தேதி சென்னை கார்ப்பரேஷன் உருவானது.

யேல் கவர்னராக இருந்த போதுதான் சென்னை அரசு பொது மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டது. எலிஹூ யேலின் திருமணம், ஜார்ஜ் கோட்டையில் உள்ள புனித மேரி தேவாலயத்தில்தான் நடந்தது. இப்படி யேலை நினைவு கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

யேலின் திருமணச் சான்றிதழ்

ஆனால் யேலின் சாதனைகளைவிட அவர் மீதான சர்ச்சைகளே அதிகம். இளமையிலேயே இறந்துபோன யேலின் மகன் டேவிட்டின் உடல் சென்னையில்தான் அடக்கம் செய்யப்பட்டது. மகனின் நினைவாக கடலூர் அருகே உள்ள தேவனாம்பட்டினத்தில் டேவிட் கோட்டை என்ற பெரிய கோட்டை ஒன்றை இரண்டு மில்லியன் செலவில் யேல் கட்டினார். அந்தப் பணம் முறைகேடாக சம்பாதித்தது என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி, யேல் பதவி இழந்தார். ஆனால் அதற்குள் எக்கச்சக்கமாக சொத்து சேர்த்துவிட்டார். 27 ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றிய யேலின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் மேல் என்கிறார்கள்.

அந்த காலத்தில் கவர்னர் பதவிக்கே வெறும் 100 பவுண்ட்தான் சம்பளமாக வழங்கப்பட்டது. அப்படி இருக்க, 100 கோடி ரூபாயை யேல் எப்படி சம்பாதித்தார்?  இதற்கு முக்கியக் காரணம் அந்த காலத்தில் சென்னையில் நடைபெற்ற அடிமை வணிகம். இதன் மூலம் யேலுக்கு நிறைய வருவாய் கிடைத்தது. இதுமட்டுமின்றி யேல், வருவாயை அதிகப்படுத்திக்கொள்ள பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களிலும் இறங்கினார். கம்பெனிக்கு தெரியாமல் வைர வணிகத்திலும் ஈடுபட்டார். உள்ளூர் வரியை மிதமிஞ்சி உயர்த்தியதோடு மக்களைக் கடுமையாகத் தண்டிக்கவும் செய்தார். இவரது குதிரை லாயத்தில் வேலை செய்த ஒருவன் குதிரையைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தக் காலத்​தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

யேல் பல்கலைக்கழகம்
பதவி பறிக்கப்பட்டதும் யேல் இங்கிலாந்து திரும்பினார். 1718-ம் ஆண்டு அவரின் 69-வது வயதில் காட்டன் மதேர் என்பவர்அமெரிக்காவின் கனெடிக்கெட் பகுதியில் உள்ள தங்களது இறையியல் நிறுவனத்தை கல்வி நிலையமாக மாற்ற நிதி அளிக்குமாறு வேண்டினார். யேலும்தாராள மனதுடன் தன்னிடம் இருந்த புத்தகங்கள்ஜார்ஜ் மன்னரின் ஒவியம்உடைகள், மரச் சாமான்கள் போன்றவற்றை பரிசாக அளித்தார். இவற்றை ஏலத்தில் விட்டதன் மூலம் கிடைத்த 562 டாலர் பணத்தைக் கொண்டு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அந்த கல்வி நிறுவனத்துக்கு அவரின் பெயரும் சூட்டப்பட்டது. அதன் பிறகுஅது பெரிய பல்கலைக்கழகமாக வளர்ச்சி அடைந்தது. 1745-ம் ஆண்டு முதல் அந்தப் பல்கலைக்கழகத்துக்கே யேலின் பெயர் சூட்டப்பட்டுவிட்டது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் யேலை விட அதிகமான நிதி அளித்தவர் ஜெரேமியா டம்மர் என்பவர். அவரது பெயரைத்தான் பல்கலைக்கழகத்துக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. டம்மர் என்றால் வாய் பேச முடியாதவர் என்று பொருள். ஆகவேபல்கலைக்கழகத்துக்கு டம்மரின் பெயரை வைக்காமல் தவிர்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது. 

யேலின் கல்லறை

மொத்தத்தில் யேல் மெட்ராசில் அடித்த கொள்ளைக்கு அமெரிக்காவில் தேடிய பிராயச்சித்தம்தான் யேல் பல்கலைக்கழகம். ஆனால் கடைசியில் அதிலும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

நன்றி - தினத்தந்தி

* இந்தியாவில் யூனியன் ஜாக் கொடியை 1687-ம் ஆண்டு யேல்தான் முதன்முறையாக பறக்கவிட்டவர்.

* புனித ஜார்ஜ் கோட்டையில் இவர் நட்டுவைத்த 50 அடி உயர கொடிக் கம்பம்தான் இந்தியாவில் மிகப் பெரிய கொடிக் கம்பமாக விளங்கியது.

* அறிஞர் அண்ணா அமெரிக்கா சென்றபோது புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்தில் உரையாற்றி இருக்கிறார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார். உடனடியாக ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அண்ணா. இவை எதிலும் மேற்சொன்ன நான்கு எழுத்துகளும் வராது. ஆனால் நூறு என்பதை ஆங்கிலத்தில் சொன்னால் ’D’ என்ற எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தபோது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார். 

No comments:

Post a Comment