என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, September 1, 2012

கவர்னரான வைர வியாபாரி


வந்தாரை வாழ வைக்கும் மதராசபட்டினம் எத்தனையோ பேருக்கு வசந்தத்தின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது. சாமானியர்களாய் வந்தவர்களை சரித்திர ஏடுகளில் சாகாவரம் பெற்றவர்களாய் நிலைக்கச் செய்திருக்கிறது. அப்படி மெட்ராசால் மேன்மை பெற்ற ஒருவர்தான் கவர்னர் தாமஸ் பிட்.
தாமஸ் பிட்

1653இல் இங்கிலாந்தில் பிறந்த தாமஸ் பிட், தனது இருபத்தியோராவது வயதில் இந்தியா வந்தார். ஒரிசாவின் பாலாசூர் நகரில் தங்கியிருந்த பிட், கிழக்கிந்திய கம்பெனியின் ஒப்புதலைப் பெறாமலே கிழக்கிந்திய நாடுகளுடன் வணிகம் செய்து வந்தார். இதனால் கம்பெனிக்கும் இவருக்கும் அடிக்கடி முட்டிக் கொண்டது. இவரை ஒடுக்க கம்பெனி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் பிட் அவை அனைத்தையும் வெற்றிகரமாக முறியடித்துக் கொண்டே இருந்தார்.

இதனிடையே 1683இல் இங்கிலாந்து சென்ற பிட்டை அங்கேயே மடக்கிப் பிடித்து, கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான அவரது செயல்களுக்காக 400 பவுண்டுகள் அபராதம் விதித்தார்கள். ஆனால் அதற்குள் பிட் இந்தியாவில் எக்கச்சக்கமாக சம்பாதித்து விட்டதால், அந்த தொகையை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கட்டிவிட்டார். இருந்தாலும் சிறிது காலம் அடக்கி வாசிக்க முடிவு செய்த அவர், இங்கிலாந்திலேயே சில ஆண்டுகள் தங்கி இருந்தார். அங்கு நிறைய நிலங்களை வாங்கிப் போட்ட பிட், எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.

பின்னர் 1693இல் மீண்டும் இந்தியா வந்த தாமஸ் பிட், இம்முறை கிழக்கிந்திய கம்பெனியுடன் சமாதானம் செய்து கொண்டார். அவரது திறமையை புரிந்துகொண்ட கம்பெனி அவருக்கு தலைவர் பதவி கொடுத்து மெட்ராசிற்கு அனுப்பியது. அடுத்த ஆண்டே அவர் புனித ஜார்ஜ் கோட்டையின் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் தளபதியான தாவூத் கான், 1702ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையை மூன்று மாதங்களுக்கும் மேலாக முற்றுகையிட்டிருந்தபோது, கோட்டையின் கவர்னராக தாமஸ் பிட்தான் இருந்தார். அவரது சமரச முயற்சிகளின் பலனாக முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது. பின்னர் வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க உள்ளூர் வீரர்களை கம்பெனியின் படையில் சேர்த்து கோட்டைக்கு வலுசேர்த்தார் தாமஸ் பிட்.

மெட்ராஸ் நகரை முதன்முறையாக துல்லியமாக சர்வே எடுக்க ஏற்பாடு செய்தது போன்ற நடவடிக்கைகளால் தாமஸ் பிட்டின் ஆட்சிக் காலத்தை மெட்ராசின் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1708இல் திருவொற்றியூர், கத்திவாக்கம், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, சாத்தங்காடு ஆகிய கிராமங்களை தாவூத் கானிடம் இருந்து மானியமாகப் பெற்று மெட்ராசுடன் இணைத்ததும் தாமஸ் பிட்தான்.

தனக்கு இவ்வளவு செய்த பிட்டிற்கு, மெட்ராஸ் ஒரு பெரிய வைரத்தை பரிசளித்தது. ஆம், இந்தியாவில் கிடைத்த பெரிய வைரங்களில் முக்கியமானது ரீஜென்ட் வைரம். இந்த வைரத்திற்கு மற்றொரு பெயர் என்ன தெரியுமா?... பிட் வைரம் (Pitt Diamond). இந்த வைரம் கோல்கொண்டாவின் பர்க்கால் சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

வெட்டி எடுத்தபோது 410 காரட்டாக இருந்த இந்த வைரத்தை 1701ஆம் ஆண்டு கவர்னர் தாமஸ் பிட் 48,000 பகோடாக்கள் விலை கொடுத்து வாங்கினார். பின்னர் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு பட்டை தீட்டப்பட்டதும் இது 137 காரட்டாக குறைந்தது.  பிட் வைரம் என்று அழைக்கப்பட்ட இதனை பிரெஞ்சு அரசுக்கு 1,35,000 பவுண்டுகளுக்கு விற்று மிகப் பெரிய ஜாக்பாட் அடித்தார் தாமஸ் பிட்.
ரீஜென்ட் வைரம்

1717-ல் பிரெஞ்ச் மன்னரால் ரீஜென்ட் என்று பெயர் மாற்றப்பட்ட இந்த வைரத்தைத்தான் நெப்​போலியன் தன்னுடைய வாளின் கைப்பிடியில் பதித்து வைத்திருந்தார் என்கிறார்கள். நெப்போலியனுக்கு பணக் கஷ்டம் வந்தபோது, 40 லட்சம் டாலருக்கு இதை அடகு வைத்து பிறகு மீட்டார் என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ ரீஜென்ட் வைரம் தற்போது பாரீஸ் நகரில் உள்ள லூவர் மியூசியத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

1709இல் தனது பதவிக்காலம் முடிந்ததும் பெரும் செல்வத்துடன் இங்கிலாந்து திரும்பிய தாமஸ் பிட், பல பகுதிகளில் அரண்மனை போன்ற வீடுகளை கட்டி அம்சமாக செட்டிலாகிவிட்டார். அப்போதும் சும்மா இல்லாமல் மீண்டும் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துவிட்டார். இதனிடையே அவரது மகனும் எம்.பி.யாகி விட்டதால் அப்பாவும், மகனும் சேர்ந்தே நாடாளுமன்றத்திற்கு சென்று வந்தனர்.

நன்றி - தினத்தந்தி

* இவரது பேரனான வில்லியம் பிட் சீனியரும், கொள்ளுப் பேரனான வில்லியம் பிட் ஜூனியரும் இங்கிலாந்தின் பிரதமர்களாக இருந்தவர்கள்.

* இறுதி நாட்களில் அவர் ஜமைக்காவின் கவர்னராக நியமிக்கப்பட்டார். ஆனால் சில காரணங்களால் பிட் அந்த பதவியில் சேரவில்லை.

1 comment:

  1. அறியாத தகவல் சார்...

    படம் கண்ணைப் பறிக்கிறது...

    ReplyDelete