என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, September 15, 2012

புனித ஜார்ஜ் பள்ளி


அண்மைக் காலமாக சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வரும் புனித ஜார்ஜ் இலவசப் பள்ளிதான் இந்தியாவிலேயே முதன்முதலாக நிறுவப்பட்ட மேற்கத்திய பாணி பள்ளிக்கூடம். அவ்வளவு ஏன், அந்தக் கால சிவப்புக் கட்டடங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இதுதான் ஆசியாவிலேயே பழைய மேற்கத்திய பாணிப் பள்ளி என்றும் சொல்லப்படுகிறது. 300 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த பள்ளியின் ஆரம்பப் புள்ளி புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்துதான் தொடங்கியது.
புனித ஜார்ஜ் பள்ளி
கிழக்கிந்திய கம்பெனியார் வியாபாரம் செய்வதற்காகத்தான் மெட்ராஸ் என்ற நிலப்பகுதியில் குடியேறினர். எனவே ஆரம்ப நாட்களில் அவர்களின் கவனம் முழுவதும் வியாபாரத்தில் தான் இருந்தது. மற்ற எதைப் பற்றியும் அவர்கள் அதிகமாக கவலைப்படவில்லை. இந்நிலையில் வெள்ளையர் நகரத்தில் வசித்த எப்ரைம் என்ற பிரெஞ்சுப் பாதிரியார் தனது வீட்டிலேயே ஒரு சிறிய பள்ளியை தொடங்கினார்.

மெட்ராசில் குடியேறிய புதிதில் கிழக்கிந்திய கம்பெனியில் மணமாகாத இளைஞர்களே பெருமளவில் இருந்ததால் கம்பெனி ஊழியர்களின் குழந்தைகள் கோட்டைக்குள் குறைவாகவே இருந்தனர். இதனிடையே ரோமன் கத்தோலிக்கர்கள் சிலரும் பள்ளிகளைத் தொடங்கினர். இதனால் அச்சமடைந்த பிராடஸ்டன்டுகள், தங்கள் குழந்தைகளுக்கென ஒரு ஆசிரியர் தேவை என இங்கிலாந்து நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். இதனை ஏற்று பிராடஸ்டன்ட் பிரிவைச் சேர்ந்த ரால்ப் ஒர்டே என்ற திறமையான ஆசிரியர் 1677இல் அனுப்பி வைக்கப்பட்டார். இவர் குழந்தைகளுக்கு கிறிஸ்துவ பிராடஸ்டன்ட் பிரிவுக் கொள்கைகளை கல்வியோடு சேர்த்து போதித்தார். இதுதான் ஆங்கில அரசு இந்தியாவில் கல்விப் பணியில் எடுத்து வைத்த முதல் அடி.

சுமார் 40 ஆண்டுகாலம் இந்த பள்ளி நடைபெற்று வந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து சென்னையில் குடியேறிய பிராடஸ்டன்ட் குழந்தைகளுக்காக அரசே ஒரு புதிய இலவசப் பள்ளியை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன்படி கோட்டையின் பாதிரியாராக இருந்த வில்லியம் ஸ்டீவன்ஸன் 1715இல், 'புனித மேரி தேவாலய தர்ம பள்ளி'-யைத் தொடங்கினார்.

இந்த காலகட்டத்தில் பிரெஞ்சுப் படை கிழக்கிந்திய படையுடன் அடிக்கடி மோதி வந்தது. எனவே கோட்டைக்குள் இருப்பது பாதுகாப்பானது அல்ல என சொல்லப்பட்டதால் பள்ளியை கோட்டைக்கு வெளியே மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பள்ளி செயல்பட்டு வந்த இடம் அரசுக்கு 300 பகோடாக்களுக்கு (அந்தக்கால பணம்) விற்கப்பட்டது. அரசு இழப்பீடாக மேலும் 400 பகோடாக்களைத் தந்தது. இதனைக் கொண்டு கோட்டைக்கு வெளியே 1751இல் தீவுத்திடலில் ஒரு வாடகை இடத்திற்கு பள்ளி மாற்றப்பட்டது.

இதனிடையே ஏற்கனவே சென்னையில் இயங்கிக் கொண்டிருந்த ஆண், பெண் ஆதரவற்றோர் இல்லங்களுடன் இந்த பள்ளி இணைக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் எண்ணிக்கை 100க்கும் அதிகமாக உயர்ந்ததால் அந்த இடம் போதவில்லை. எனவே இப்போது எழும்பூர் ரயில் நிலையம் இருக்கும் இடத்திற்கு பள்ளி இடம்மாறியது. இப்படியே சில ஆண்டுகள் கழிந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் எழும்பூர் ரயில் நிலையத்தை விஸ்தரிக்க விரும்பியதால் மீண்டும் ஒரு இடப்பெயர்ச்சிக்கு ஆளானது இந்தப் பள்ளி. அப்படித்தான் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் இந்த இடத்திற்கு கடைசியாக வந்து சேர்ந்தது புனித மேரி இலவசப் பள்ளி.

பிரிகேடியர் கான்வே என்ற ஆங்கிலேய அதிகாரிக்கு சொந்தமான 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம், அந்தக் காலத்தில் 29,750 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. கான்வேயின் பளிங்கு சிலை ஒன்று கோட்டைக்குள் இருக்கும் புனித மேரி தேவாலயத்தில் இன்றும் இருக்கிறது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள தேவாலயம் 1883 - 84 -ம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கிலாந்தின் ஒரு கிராமப்புற தேவாலயம் போல தோற்றமளிக்கும் இதனைக் கட்ட அந்தக் காலத்திலேயே 16,000 ரூபாய் வரை செலவானதாம்.

இரண்டாம் உலகப் போருக்கும் இந்த பள்ளிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. காரணம் போரின் போது, ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்காக இந்த பள்ளி ஒதுக்கப்பட்டது. எனவே 1945- 46 -ம் ஆண்டில் அரசு உத்தரவின்படி, கோவையில் இயங்கி வந்த ஸ்டேன்ஸ் பள்ளி வளாகத்துக்கு இந்த பள்ளி மாற்றப்பட்டது. இறுதியாக, 1954 - ல் கோவையிலிருந்து மீண்டும் சென்னைக்கு மாற்றப்பட்ட பிறகுதான் இது புனித ஜார்ஜ் பள்ளி மற்றும் ஆதரவற்றோர் இல்லம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

உருண்டோடிய இந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு கல்வி பெற்றுச் சென்றுவிட்டனர். எத்தனையோ கல்விமான்கள் இங்கு தங்களின் அறிவை அடுத்த தலைமுறைக்கு அளித்துச் சென்றுள்ளனர். ஆங்கிலேய ஆதிக்க நாட்கள், சுதந்திரப் போராட்ட நாட்கள், சுதந்திரத்திற்கு பிந்தைய சுகமான நாட்கள் என வரலாற்று சிறப்புமிக்க பல நினைவுகளை சுமந்தபடி இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்த சிவப்புக் கட்டடங்களுக்கு இடையே நடைபயிலும்போது, மெட்ராசின் சரித்திரம் சக பயணியாக உடன் வருவது போலவே இருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* ஆரம்ப நாட்களில் இந்த பள்ளியில் ஆங்கிலேயர்களின் குழந்தைகள் மட்டுமே கல்வி கற்றனர்.
* விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான மாணவர்களோடு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் இன்று 1500க்கும் அதிகமானோர் பயில்கின்றனர். 

No comments:

Post a Comment