வெள்ளைச்சாமி என்ற
பெயருடன் பளீரென சிரிக்கும் கருப்பு பெரியப்பா மாதிரி தான் இருக்கிறது
திருவல்லிக்கேணி பெரிய தெரு. பேருக்கும் தெருவின் அகலத்திற்கும் சம்பந்தமே இல்லை. இந்த
தெருவின் உண்மையான பெயர் வீரராகவ முதலி தெரு. ஆனால் இந்தப் பெயர் இப்போது பெரும்பாலானோருக்கு
தெரியாது என்றே தோன்றுகிறது. இங்குள்ள பெயர்ப்பலகை கூட BIG STREET (பெரிய தெரு) என்றுதான் இருக்கிறது.
![]() |
திருவல்லிக்கேணி பெரிய தெரு |
திருவல்லிக்கேணியின்
மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த தெருவில் பெரும்பாலும் மேன்ஷன்கள்தான்
இருக்கின்றன. எனவே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வரும்
இளைஞர்களின் சரணாலயமாக இருக்கிறது இந்த தெரு. ஒருவேளை இப்படி பெரிய மனதுடன்
பலருக்கும் அடைக்கலம் தருவதால் இதற்கு பெரிய தெரு என்று பெயர் வைத்துவிட்டார்களோ
என்னவோ.
பெரிய தெருவின் மிக
முக்கிய அடையாளம் இங்கிருக்கும் இந்து மேல்நிலைப் பள்ளி. திருவல்லிக்கேணி என்ற ஊர்
ஆரம்ப நாட்களில் இருந்தே கல்விக்கு முக்கியத்துவம் அளித்துவரும் பகுதியாகவே
இருந்திருக்கிறது. எனவே 17ஆம் நூற்றாண்டிலேயே இந்த பகுதியில் முறையான பள்ளி
வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. விளைவு இரண்டு பள்ளிகள்
தொடங்கப்பட்டன.
தமிழ் பையன்கள்
படிப்பதற்காக 'திராவிட பாடசாலை' என்று ஒன்றும், தெலுங்கு பையன்களுக்காக 'இந்து
ஆந்திர பாலரு பாடசாலையும்' ஆரம்பிக்கப்பட்டன. 1852ஆம் ஆண்டு ஆவணங்களின்படி இவை
இரண்டும் தனித்தனி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தன. தமிழ் பள்ளியில் குறள்,
நைடதம், நன்னூல் கண்டிகை, நிகண்டு, வரலாறு, புவியியல், கணக்கு ஆகிய பாடங்கள்
கற்றுத்தரப்பட்டன. விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் ஆங்கிலம் படிக்கலாம். ஆண்டு
இறுதியில் பொதுத்தேர்வு மூலம் மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு தேர்வு
செய்யப்பட்டார்கள்.
இந்த இரண்டு
பள்ளிகளுமே மக்கள் அளித்த நிதியில்தான் ஓடிக் கொண்டிருந்தன. எனவே ஆசிரியர்களுக்கு
மிகக்குறைந்த ஊதியமே வழங்க முடிந்தது. இருந்தாலும் அவர்கள் கல்வியை சேவையாகக்
கருதி கண்ணும் கருத்துமாக கற்பித்திருக்கிறார்கள். தமிழ் பள்ளிக்கு ஆரம்ப நாட்களில் அரசும்,
பச்சையப்பர் அறக்கட்டளையும் நிதி உதவி அளித்து வந்தன. ஒருகட்டத்தில் இரண்டு
பள்ளிகளுக்கும் நிதி அளிக்க பொதுமக்கள் சிரமப்பட்டதால் இரண்டு பள்ளிகளையும்
ஒன்றாக்கிவிட்டால் என்ன என்று ஆலோசிக்கப்பட்டது. இப்படித்தான் 'திருவல்லிக்கேணி
ஆந்திர திராவிட பாலரு பாடசாலை' உருவானது. 1864ஆம் ஆண்டு இதே நிர்வாகத்தின் கீழ்
பெண்கள் பள்ளி ஒன்றும் தொடங்கப்பட்டது.
1897இல் இது இந்து
உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்து தற்போதைய கட்டடத்தை வந்தடைந்தது. செக்கச்செவேலென
இந்தோ - கோதிக் (Indo Gothic style)
பாணியில் கட்டப்பட்டிருக்கும் இந்த மூன்று மாடிக் கட்டடத்தை ஹென்றி இர்வின் என்ற
ஆங்கிலேய கட்டடக் கலைஞர் வடிவமைத்துக் கொடுத்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்,
அரசு அருங்காட்சியகம் போன்ற பல முக்கிய கட்டடங்களை வடிவமைத்தவர் இவர். இவரது
வடிவமைப்பில் 40 ஆயிரம் சதுர அடியில் நம்பெருமாள் செட்டியால் கட்டப்பட்டது தான்
இன்று பெரிய தெருவில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்து மேல்நிலைப் பள்ளி.
![]() |
இந்து மேல்நிலைப் பள்ளி |
இந்தியாவின் ஆரம்பகால
கூட்டுறவு சங்கங்களில் முக்கியமானதாக கருதப்படும், திருவல்லிக்கேணி நகர்ப்புற
கூட்டுறவு சங்கம் (TUCS) இந்த
தெருவில்தான் உதயமானது. ஸ்ரீனிவாச சாஸ்திரி, சிங்காரவேலர் உள்ளிட்டோர் சேர்ந்து
1904ஆம் ஆண்டு இந்த சங்கத்தை தொடங்கினர். பல்பொருள் அங்காடி முதல் நியாய விலைக்
கடை வரை மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்க வகை செய்த இந்த கூட்டுறவு
சங்கத்திற்கு பெரிய தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலங்கள் இருக்கின்றன.
பல்துறை
கலைஞர்களுக்கும் பெரிய தெரு முகவரியாக விளங்கி இருக்கிறது. ஆண்கள் மட்டுமே
ஹரிகதாகாலட்சேபம் செய்து வந்த காலத்தில் பொது இடத்தில் தைரியமாக களமிறங்கிய முதல்
பெண் பாகவதரான சரஸ்வதி பாய் இந்த தெருவில்தான் வசித்து வந்தார். டிகேஎஸ்
சகோதரர்களும் இங்கு வசித்திருக்கிறார்கள். அதேபோல 1940களில் இசை மேதை எம்.எஸ்.
சுப்புலட்சுமி தமது கணவர் சதாசிவத்துடன் இங்கிருந்த வீடு ஒன்றில்
வாழ்ந்திருக்கிறார். இசைபட வாழ்தல் என்பார்கள், ஆனால் இசையே வாழ்ந்த தெரு இது.
இப்படி இந்த தெருவைப்
பற்றிய வரலாறு இந்த தெருவின் நீளத்தை விட பல மடங்கு அதிகம். இவை அனைத்தையும் விட
சிறந்தது இந்த தெருவின் பன்முகத்தன்மைதான். பல்வேறு மதம் மற்றும் கலாச்சாரங்களை
சார்ந்தவர்களை பல ஆண்டுகளாக ஒன்றிணைத்து தன்னகத்தே வைத்திருக்கும் இந்த தெரு
உண்மையில் 'பெரிய தெரு' தான்.
நன்றி - தினத்தந்தி
* நோபல் பரிசு பெற்ற
எஸ். சந்திரசேகர் முதல் உலக நாயகன் கமலஹாசன் வரை பல சாதனையாளர்களை இந்த பள்ளி
உருவாக்கித் தந்திருக்கிறது.
* பாரதியின் தன்னுடைய
ஞானரதத்தில்-
"கண்ணை விழித்துப் பார்த்தேன். மறுபடி மண்ணுலகத்திலே,
திருவல்லிக்கேணி
வீரராகவ முதலி தெருவில், கிழக்கு முகமுள்ள வீட்டு மேன்மாடத்தில், நானும்
என் பக்கத்தில் சில வர்த்தமானப் பத்திரிகைகள், எழுதுகோல், வெற்றிலைபாக்கு
முதலிய என்னுடைய பரிவாரங்களும் இருப்பது கண்டேன்.'' என்று எழுதி இருக்கிறார்.
"கண்ணை விழித்துப் பார்த்தேன். மறுபடி மண்ணுலகத்திலே,
திருவல்லிக்கேணி
வீரராகவ முதலி தெருவில், கிழக்கு முகமுள்ள வீட்டு மேன்மாடத்தில், நானும்
என் பக்கத்தில் சில வர்த்தமானப் பத்திரிகைகள், எழுதுகோல், வெற்றிலைபாக்கு
முதலிய என்னுடைய பரிவாரங்களும் இருப்பது கண்டேன்.'' என்று எழுதி இருக்கிறார்.
No comments:
Post a Comment