என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, November 10, 2012

மெட்ராஸை மிரட்டிய எம்டன்


சினிமாவை மிஞ்சும் காட்சிகள் சில நேரங்களில் நிஜ வாழ்விலும் அரங்கேறி விடுகின்றன. 1914ஆம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி இரவு சென்னைவாசிகள் அப்படி ஒரு காட்சியைத்தான் மிரண்டு போய் பார்த்தார்கள். முதல் உலகப் போரால் பல நாடுகளும் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நவராத்திரி கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்த மெட்ராஸ்வாசிகளை அச்சத்தில் உறைய வைத்தது அந்த காட்சி.

1914, செப்டம்பர் 22, இரவு 9.30 மணி... சென்னை துறைமுகத்திற்கு மிக அருகில் திடீரென காட்சி கொடுத்தது ஜெர்மானிய போர்க்கப்பலான எம்டன். பிரிட்டீஷ் கப்பற்படையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு துறைமுகத்தை நெருங்கிய அந்த கப்பல், சென்னை மாநகரை நோக்கி குண்டு மழை பொழியத் தொடங்கியது. துறைமுகத்திற்குள் இருந்த பர்மா ஆயில் கம்பெனியின் எண்ணெய் கிடங்குகள் கொழுந்துவிட்டு எரிந்தன.
எம்டனால் எரியும் எண்ணெய் கிடங்குகள் 
எண்ணெய் டாங்குகளை கபளீகரம் செய்த எம்டன் அடுத்தபடியாக துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய வணிகக் கப்பல் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. கப்பலில் இருந்த 3 பணியாளர்கள் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பிரிட்டன் படைகள் சுதாரித்து எதிர்தாக்குதல் நடத்த அரை மணி நேரம் ஆகிவிட்டது. அதற்குள் மேலும் சில குண்டுகளை சென்னைக்கு பரிசளித்துவிட்டு எம்டன் பத்திரமாக வங்கக் கடலில் விரைந்து மறைந்துவிட்டது.

அடுத்தநாள் காலை, சென்னையில் காட்சிகள் வேகமாக மாறின. எம்டன் வீசிச் சென்ற குண்டுகள் உயர்நீதிமன்றம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சூலை, நுங்கம்பாக்கம் என பல கிலோ மீட்டர் தூரம் சிதறிக் கிடந்தன. மக்கள் இதனை பீதியுடன் பார்த்தனர். எம்டன் பற்றிய செய்தி காட்டுத்தீயாய் பரவியது. மீண்டும் எம்டன் தாக்கலாம் என்ற வதந்தி இறக்கை கட்டிப் பறந்தது. அச்சத்தில் உறைந்த மக்கள் அவசர அவசரமாக நகரை விட்டு வெளியேறத் தொடங்கினர். தினமும் சுமார் 20 ஆயிரம் பேர் நகரை காலி செய்துவிட்டு கிளம்பியதாக அன்றைய செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

ரயில்களில் இடம் கிடைக்காதோர் சாலை மார்க்கமாக பயணித்தனர். எங்கு பார்த்தாலும் மூட்டை முடிச்சுகளோடு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர். கடைகள் அடைக்கப்பட்டன. திறந்திருந்த ஒரு சில கடைகளில் விலைகள் திடீரென விண்ணில் பறந்தன. அடுத்து என்ன எனத் தெரியாத ஒரு குழப்ப மேகம் நகரை சூழ்ந்திருந்தது. வதந்தி கிளப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தும் எந்த பயனும் இல்லை. வதந்திகள் பரவிக் கொண்டே இருந்தன, மக்கள் வெளியேறிக் கொண்டே இருந்தார்கள்.

அப்போதைய மெட்ராஸ் ஆளுநரான லார்ட் பெண்ட்லாண்ட் எம்டன் தாக்குதல் நடத்தியபோது ஊட்டியில் இருந்தார். தகவல் கிடைத்த பிறகும் அவர் உடனே சென்னைக்கு வரவில்லை. பொறுமையாக செப்டம்பர் 25ந் தேதி வந்து தாக்குதல் நடந்த இடங்களைப் பார்வையிட்டார். 'எம்டன் திரும்பி வராது, பயப்படாதீர்கள்' என்று நம்பிக்கை அளித்துவிட்டு, மீண்டும் ஊட்டிக்குத் திரும்பிவிட்டார். 'எம்டன் வராது என்றால் ஆளுநர் இங்கேயே இருக்க வேண்டியதுதானே, ஏன் நகரில் இருப்பதை தவிர்க்கிறார்?' என்று பொதுமக்கள் கேட்டார்கள். ஆனால் பதில் சொல்லத்தான் யாரும் இல்லை.

அந்த காலத்தில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் மகுடமாகக் கருதப்பட்ட இந்தியாவில், அதுவும் அவர்கள் முதன்முதலாக காலடி வைத்த சென்னைக்கே வந்து ஒரு எதிரி தாக்கிவிட்டு பத்திரமாகத் திரும்பியது ஆங்கிலேயப் படைக்கு மிகப் பெரிய அவமானமாக கருதப்பட்டது. இந்த ஒரு காரணத்திற்காக இந்திய மக்கள் எம்டனை ஹீரோவாகப் போற்றினார்கள். அதன்பின்னர் அசகாய சூரர்களை எம்டன் என்று தமிழக மக்கள் அழைக்கத் தொடங்கினர்.

ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த எம்டன், தனது பணிக் காலத்தில் 31 கப்பல்களை மூழ்கடித்திருக்கிறது. தனது வசீகரத் தோற்றத்தால் 'கிழக்கின் அன்னப்பறவை' என எதிரிப் படைகளாலும் வர்ணப்பட்ட பெருமை எம்டனுக்கு உண்டு. ஜெர்மானிய கப்பற்படையில் முக்கிய அங்கம் வகித்த இந்த கப்பலுக்கு, 1913ஆம் ஆண்டு வான் முல்லர் (Karl Von Muller) கேப்டனாக பொறுப்பேற்றார்.
கம்பீரமான எம்டன்
அந்த காலத்தில் இந்துமா சமுத்திரம் முழுவதும் பிரிட்டீஷ் கப்பல்கள் நிறைந்திருக்கும். ஒட்டுமொத்த சமுத்திரத்திலும் தாங்களே ஆதிக்கம் செலுத்தியதால் இந்துமா சமுத்திரத்தை 'பிரிட்டனின் ஏரி' என்று ஆங்கிலேயர்கள் கர்வத்துடன் அழைத்துக் கொண்டிருந்தனர். இந்த கர்வத்திற்குதான் மரண அடி கொடுத்தார் முல்லர். எம்டன் கப்பலில் இருந்த செண்பகராமன் என்ற விடுதலைப் போராட்ட வீரரின் கோரிக்கையை ஏற்றே சென்னை மீது முல்லர் தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி உறுதியான ஆவணங்கள் எதுவும் இல்லை.
ஜலசமாதியாகும் எம்டன்
எம்டனை வீழ்த்த பல நாட்டு கப்பல்களும் எவ்வளவோ முயற்சித்தன. ஆனால் முடியவில்லை. இறுதியில், வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் எம்டனுக்கு போட்டியாக ஒரு கப்பல் களமிறங்கியது. முதல் உலகப் போர் உச்சத்தில் இருந்த போது, ஆஸ்திரேலியாவின் சிட்னி என்ற நவீன போர்க்கப்பலுடன் எம்டன் மோதியது. கடுமையான சண்டைக்குப் பிறகு எம்டன் சுட்டு வீழ்த்தப்பட்டது. கேப்டன் முல்லர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கடலில் பல வெற்றிகளை நிலைநாட்டிய எம்டன், அதே கடலில் அமைதியாக ஜலசமாதியானது.

நன்றி - தினத்தந்தி

* முதல் உலகப் போரின்போது இந்தியாவில் தாக்குதலுக்கு உள்ளான ஒரே நகரம் சென்னை தான்.

* எம்டன் தாக்கியதில் உயர்நீதிமன்ற சுற்றுசுவரின் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்தது. இதன் நினைவாக நீதிமன்றத்தில் இன்றும் ஒரு கல்வெட்டு இருக்கிறது.

* ஜெர்மனியின் எம்ஸ் நதிக்கரையில் உள்ள எம்டன் நகரின் நினைவாக இந்த கப்பலுக்கு எம்டன் எனப் பெயரிடப்பட்டது.

1 comment: