என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Monday, October 11, 2010

விடாக்கண்டன் கொடாக்கண்டன்

ஒரு விஷயம் சரியா இருக்கும்போதே, தப்பா இருக்கும். அதேபோல ஒரு விஷயம் தப்பா இருக்கும்போதே, சரியா இருக்கும். இதைத் தான் ஆங்கிலத்தில் பேரடாக்ஸ் (Paradox) என்கிறார்கள்.

ஒரு விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதையை சொன்னால் இதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். அந்தக் காலத்தில் ஒரு வாத்தியார் இருந்தார். அவர் வாதம் புரியும் கலையில் கில்லாடி. அதனால் பல ஊர்களில் இருந்தும் நிறைய பேர் வந்து அவரிடம் படித்து பாரிஸ்டர் பட்டம் வாங்கிக் கொண்டு போவார்கள். அப்புறம் அவங்கவங்க ஊர் ஆலமரத்தடி முதல் நீதிமன்றம் வரை வழக்காடி சூப்பரா கல்லா கட்டுவாங்க. அவரது மாணவர்களை யாராலும் அவ்வளவு சுலபத்தில் வழக்காடி ஜெயித்துவிட முடியாது.

ஒருநாள் காலையில் ஒரு பையன் அவர் வீட்டு வாசல்ல வந்து பாடம் கத்துக்கணும்னு நின்னான். நம்மாளு ஃபீஸை சொன்னாரு. பையன் மிரண்டு போயிட்டான். ஐயா, இப்போதைக்கு அவ்வளவு பணம் என்கிட்டே கிடையாது. வேணும்னா ஒரு ஒப்பந்தம் போட்டுக்கலாம்னான். அதாவது, நான் படிச்சு முடிச்சு போனதும் எடுத்துக்கிற முதல் கேசுல ஜெயிச்சா நீங்க கேட்ட ஃபீஸை உடனே கொடுத்துடுவேன், தோத்துட்டா கொடுக்க மாட்டேன், ஓ.கே.வான்னான் பையன். நம்ம சிஷ்யன் நிச்சயம் தோற்க மாட்டான்ற தைரியத்துல ஒப்பந்தத்துக்கு ஒத்துக்கிட்டார் குரு.

பையன் நல்லா படிச்சான், கோர்ஸை முடிச்சான், ஊருக்கு போயிட்டான். ஆனா பல மாசம் ஓடியும் காசு மட்டும் வரலே. கடுதாசி போட்டுப் பார்த்தாரு குரு. பதில் கடுதாசி தான் வந்தது. ஐயா, நான் இன்னும் கேஸே எடுத்துக்கல. முதல் கேஸ் வரட்டும் பார்க்கலாம்னுட்டான் அந்த தில்லாலங்கடி. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த குரு ஒருகட்டத்திலே வெறுத்துப் போய் அவன் மேலேயே ஒரு கேஸைப் போட்டார். இவன் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காம ஏமாத்துறான்றதுதான் கேஸ்.

பையன் அவன் சார்பா அவனே ஆஜரானான். இதுதான் அவன் ஆஜராகும் முதல் கேஸ். குருவுக்கு பணம் தரணும்ன்னு நீதிபதி தீர்ப்பு சொல்லிட்டா, பையன் கேஸ்ல தோத்துருவான். அதனால ஒப்பந்தப்படி பணம் தரத் தேவையில்லை. தர வேண்டாம்னு சொல்லிட்டா, அதுதான் நீதிபதியே சொல்லிட்டாருல்லன்னு நடையை கட்டிருவான். ஆக, எப்படி பார்த்தாலும் பணம் தர முடியாதுன்னுட்டான் அந்த கில்லாடி கில்மா.

குரு லேசுப்பட்டவரா? நீதிபதி பணம் தரச் சொன்னா, தீர்ப்புப்படி பணம் தரணும். தர வேண்டாம்னு சொன்னா, நீ மொத கேஸ்ல ஜெயிச்சுருவ, அதனால ஒப்பந்தப்படி பணம் தரணும். ஆக எப்படி பார்த்தாலும் பணம் தரணும் மகனேன்னாரு.

இரண்டு பேரும் இப்படி கிடுக்கிப்பிடி போடுவதை பார்த்த நீதிபதி பாவம் என்ன பண்ணுவாரு. மயங்கி விழுந்திட்டாரு. இப்போ புரியுதா, இதுதான் பேரடாக்ஸ்.

2 comments:

  1. அருமையான மூளைக்கு வேலை கதை.

    ReplyDelete