என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, October 27, 2010

பிரம்மாண்ட கடல் தேள்


புராணத் திரைப்படங்களில் சில கதாபாத்திரங்கள் திடீரென விண்ணை முட்டும் அளவுக்கு விஸ்வரூபம் எடுப்பதைப் பார்த்து பிரமித்திருக்கிறோம். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களைப் போன்ற உயிரினங்கள் பல அடி உயரத்திற்கு வாட்டசாட்டமாக வலம் வந்திருப்பதைப் பற்றி புத்தகங்களில் படித்து வியந்திருக்கிறோம். ஆனால் இன்று குட்டியூண்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு உயிரினம், சுமார் 39 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இப்போதிருப்பதை விட பல மடங்கு பெரிதாக இருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா?

நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார்கள் பிரிட்டனில் உள்ள பிரிஸ்டோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் ஜெர்மனியில் பிரம் என்ற இடத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து பிரம்மாண்ட தேளின் கொடுக்கின் புதை படிவத்தை கண்டெடுத்துள்ளனர். இந்த கொடுக்கின் நீளம் எவ்வளவு தெரியுமா? 46 செ.மீ. சுமார் 39 ஆண்டுகள் பழைமையான பாறை ஒன்றை ஆய்வு செய்தபோதுதான் இந்த பிரம்மாண்ட கொடுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து இந்த கொடுக்கிற்கு சொந்தக்காரரான மிஸ்டர். தேள், சுமார் 8 அடி இருந்திருப்பார் எனக் கணக்கிட்டுள்ளனர். அதாவது நமக்கு பக்கத்தில் நின்றால் நாம் அவரை அண்ணாந்துதான் பார்க்க வேண்டும். தரையில் குனிந்து தேடும் தேளை, அண்ணாந்து பார்க்கும் அனுபவத்தை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த வகை தேள்கள் டைனோசர்கள் காலத்திற்கும் முந்தையவை என்றும், அவை கடலில் வாழ்ந்தவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த கடல் தேள்கள் பல லட்சம் ஆண்டுகள் பூமியில் வலம் வந்திருக்கின்றன. பின்னர் காலப்போக்கில் மிகப் பெரிய மீன் வகையால் இவை அழிக்கப்பட்டதாக ஜெர்மனியின் பிரிபெர்க் மைனிங் அகாடமியைச் சேர்ந்த தொல்லியலாளரும், பேராசிரியருமான ஜார்ஜ் சச்னேடர் தெரிவித்துள்ளார். அந்த காலத்தில் இருந்த இயற்கைச் சூழல், வாழ்க்கை முறை காரணமாக பல உயிரினங்கள் வஞ்சனையில்லாமல் வளர்ந்து ஓங்குதாங்காக உலா வந்திருக்கலாம் என்றும், இந்த நிலை மாற மாற அவற்றின் உருவத்திலும் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த கடல் தேளைப் போன்றே அந்த காலகட்டத்தில் வாழ்ந்த அட்டைப் பூச்சி, கரப்பான்பூச்சி, பொன்வண்டு போன்ற உயிரினங்களும் இப்போதிருப்பதைவிட பன்மடங்கு வளர்ச்சியுடன் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தால், உலகமே நமக்குத் தான் சொந்தம் என்ற அறியாமையில் அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் மனிதர்களின் நிலை என்ன ஆகும்? நினைத்துப் பார்த்தால், பயங்கரமான ஆங்கிலத் திரைப்படம் பார்த்த திகில் தான் மிஞ்சுகிறது.

No comments:

Post a Comment