என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Thursday, April 4, 2013

மெட்ராஸ் அச்சகங்கள்


உலகில் இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிமுகமான சில நாட்களிலேயே மெட்ராஸ் மாநகருக்குள் நுழைந்திருக்கின்றன. எலெக்ட்ரிக் டிராம் போன்ற சில விஷயங்கள் லண்டனில் அறிமுகமாவதற்கு முன்பே மெட்ராசில் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. ஆனால் சில விஷயங்களை மெட்ராஸ் கோட்டைவிட்ட வரலாறும் இருக்கிறது. அவற்றில் முக்கியமானது அச்சுத் தொழில். பின்னர்கூட தற்செயலாகத்தான் அச்சுத் தொழில் மெட்ராசிற்குள் நுழைந்தது.

இதில் விசித்திரம் என்னவென்றால், இந்தியாவிலேயே முதன்முதலாக அச்சில் ஏற்றப்பட்ட மொழி தமிழ்தான். ஆனால் அந்த நிகழ்வு உள்நாட்டில் அரங்கேறவில்லை. போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பனில் தமிழ் எழுத்துருக்கள் தயாரிக்கப்பட்டு, 'கார்ட்டிலா' (The 1554 Cartilha in Roman Script) என்ற நூல் அச்சடிக்கப்பட்டது. இங்கிருந்த சிலரை மதமாற்றம் செய்து லிஸ்பனுக்கு அழைத்துச் சென்று கிறிஸ்தவ பாதிரிமார்கள் இந்த முயற்சியை செய்தனர். இதனையடுத்து 1578இல் 'டாக்ட்ரினா கிறிஸ்தியானா' என்ற 16 பக்க நூல் 'தம்பிரான் வணக்கம்' என்ற பெயரில் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது.
டாக்ட்ரினா கிறிஸ்தியானா

வெளிநாடுகளில் அச்சடிக்கப்பட்டு வந்த தமிழை, இந்தியாவிற்குள் கொண்டுவந்தவர் சீகன்பால்க் (Ziegenbalg). மதமாற்ற முயற்சிகளுக்காக தரங்கம்பாடிக்கு வந்த சீகன்பால்க், 1715இல் பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சடித்தார். இதுதான் இந்திய மொழியில் தயாரான முதல் பைபிள்.
சீகன்பால்க்

அச்சுத்தமிழ் இப்படி அலைந்து திரிந்த பிறகு, ஒருவழியாக 1761இல்தான் மெட்ராசிற்கு வந்தது. சென்னையில் முதன்முதலாக அமைந்த அச்சகம், கொள்ளையடித்துக் கொண்டு வரப்பட்டது என்று சொன்னால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். 1761-இல் புதுச்சேரியைக் கைப்பற்றிய கிழக்கிந்தியக் கம்பெனி தளபதி ஐர்கூட், அங்கு சூறையாடிய பொருட்களை மெட்ராசுக்குக் கொண்டு வந்தார். அவற்றில் ஒரு அச்சகத்திற்கு தேவையான கருவிகளும், முக்கியமாகத் தமிழ் எழுத்துருக்களும் இருந்தன. ஆனால் அப்போது மெட்ராசில் யாருக்கும் இதனை எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரியவில்லை.

எனவே அந்த பொருட்கள் புனித ஜார்ஜ் கோட்டையில் ஒரு மூலையில் முடங்கிப் போயின. பின்னர் அவற்றை தமிழ் மொழியை அறிந்திருந்த ஃபெப்ரீஷியஸ் என்பவரிடம் கிழக்கிந்தியக் கம்பெனி ஒப்படைத்தது. அப்படித்தான் மெட்ராசின் முதல் அச்சகமான எஸ்.பி.சி.கே பிரஸ் வேப்பேரியில் தொடங்கப்பட்டது. இதுதான் தற்போது சி.எல்.எஸ் பிரஸ் என்று அறியப்படுகிறது. கம்பெனியின் விருப்பப்படியே ஃபெப்ரீஷியஸ் அந்த அச்சகத்தைக் கிறிஸ்தவ மதப் பிரச்சாரப் பிரசுரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தார்.

அந்நாட்களில் மெட்ராசில் கிறிஸ்தவத்தை பரப்பும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. மிஷனரிகளின் இந்த மதமாற்ற முயற்சிக்கு, புதிய தொழில்நுட்பமான அச்சடித்தல் மிகவும் உறுதுணையாக இருந்தது. எனவே தரங்கம்பாடியில் இருந்து ஒரு அச்சு இயந்திரத்தை வாங்கி வந்தனர். இதனைக் கொண்டு 1772இல் 'மலபார் புதிய ஏற்பாடு' என்ற நூலைத் தயாரித்தனர். கம்பெனி அதிகாரிகளின் தேவைக்காக 1779, 1786ஆம் ஆண்டுகளில் அகராதிகளையும் ஃபெப்ரீஷியஸ் அச்சடித்துக் கொடுத்தார். இப்படித்தான் அச்சு மெட்ராசில் காலூன்றியது. 

ஆரம்ப நாட்களில் துண்டுப் பிரசுரங்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்டு வந்தன. காலப்போக்கில் அவை செய்தித்தாளாக பரிணாம வளர்ச்சி அடைந்தன. சென்னையில் முதன்முதலாக செய்தித் தாளைத் தொடங்கியவர் ஆங்கில அரசாங்கத்தில் வேலைபார்த்த ரிச்சர்டு ஜான்ஸன் என்பவர். மெட்ராஸ் கூரியர்என்ற பெயரில் 1785இல் அவர் தொடங்கிய ஆங்கிலப் பத்திரிகை, நான்கு பக்கங்கள் கொண்டதாக இருந்தது. அரசின் ஆதரவோடு நடந்த அந்தப் பத்திரிகைக்கு அரசு விளம்பரங்கள் குவிந்ததால் விரைவில் பக்கங்கள் ஆறாக அதிகரித்தன.
அச்சுத்தமிழ்

மெட்ராஸ் கூரியருக்கு ஆசிரியராக இருந்த ஹக் பாயிட், பின்னர் சொந்தமாக ஹிர்காராஎன்ற பெயரில் ஒரு பத்திரிகையை 1791இல் தொடங்கினார். ஹிர்காராஎன்றால் தூதுவன் அல்லது ஒற்றன் என்று அர்த்தமாம். ஆனால் ஒற்றன் அதிக நாள் ஓடவில்லை. 1794இல் ஹக் காலமாகிவிட, அவர் தொடங்கிய பத்திரிகையும் சேர்த்து புதைக்கப்பட்டுவிட்டது.

அடுத்ததாக 1795இல் ராபர்ட் வில்லியம் என்பவர் ஒரு அச்சகத்தை நிறுவி, கம்பெனியின் அச்சு வேலைகளைப் பெறுவதில் ஜான்ஸனோடு போட்டியிட்டார். அத்தோடு நிற்காமல், மெட்ராஸ் கூரியருக்குப் போட்டியாக மெட்ராஸ் கெஸட்என்ற பத்திரிகையையும் ஆரம்பித்தார். அரசு தனது வேலைகளை இருவருக்கும் பகிர்ந்தளித்து வந்தது.  இதற்கிடையில் ஜான் கோல்டிங்ஹாம் என்பவரும் கம்பெனி அரசுக்காக அதிகாரபூர்வமாக மெட்ராஸ் அரசாங்க கெஸட்டைத் தொடங்கிவிட்டார். 

இதெல்லாம் போதாது என்று மெட்ராஸ் அரசாங்கமே 1800இல் ஒரு அச்சகத்தை நிறுவியது. அதில் இருந்துமெட்ராஸ் அஸைலம் ஆல்மனாக்என்ற பெயரில் ஓர் இதழ் வெளிவரத் தொடங்கியது. இந்தச் சமயத்தில் அரசின் ஒப்புதலைப் பெறாமலேயே இந்தியன் ஹெரால்டுஎன்கிற பத்திரிகையை ஜி. ஹம்ப்ரீஸ் என்ற ஆங்கிலேயர் ஆரம்பித்தார். ஆனால் இதுசற்றே வித்தியாசமான பத்திரிகை. மற்ற பத்திரிகைகள் எல்லாம் அரசின் விளம்பரங்களை வாங்கிக் கொண்டு ஜால்ரா அடித்துக் கொண்டிருந்த காலத்தில், இதுமட்டும் கம்பனி அரசை கடுமையாக விமர்சித்தது. அதற்காக ஹம்ப்ரீஸ் கைது செய்யப்பட்டு நாட்டைவிட்டே வெளியேற்றப்பட்டார்!

ஒரு குறிப்பிட்ட காலம்வரை ஆங்கிலேயர்களே பத்திரிகைகளை நடத்திக் கொண்டிருந்த நிலையில், காஜுலு லக்ஷ்ம நரசு என்ற தெலுங்கு வணிகர்  இந்த போட்டியில் களமிறங்கினார். ஹிந்துக்களின் உரிமைகளை வலியுறுத்தும் நோக்கத்துடன் க்ரெசன்ட்என்ற பெயரில் 1844இல் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். 1868இல் லக்ஷ்ம நரசு இறந்துவிட, அவரது பத்திரிகையும் நின்று போனது. இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் டைம்ஸ், தி மெட்ராஸ் மெயில், ஸ்பெக்டேடர், தி ஹிந்து, சுதேசமித்திரன் என பல பத்திரிகைகள் தொடங்கப்பட்டு அச்சுத்தொழில் மெட்ராசில் அரியணை போட்டு அமர்ந்துகொண்டது.

மொத்தத்தில் எதேச்சையாக மெட்ராசிற்குள் நுழைந்த அச்சுத் தொழில் இன்று விஸ்வரூபம் எடுத்து விண்ணில் விரிந்து நிற்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் கோட்டை விட்டாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டதால் மெட்ராஸ் இந்திய அச்சு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துவிட்டது.

நன்றி - தினத்தந்தி

* அச்சில் ஏறிய முதல் தமிழ் அகராதியை தயாரித்தவர் ராபர்ட் டி நோபிளி என்ற இத்தாலிக்காரர். இவரை தத்துவ போத சுவாமி என தமிழர்கள் அன்புடன் அழைத்தனர்.
* நமசிவாய முதலியார் என்பவர் அச்சு எழுத்துகள் தயாரிக்கும் முறையை சீரமைத்தார். அவர் உருவாக்கிய புதிய எழுத்துருக்கள் 'நமசிவாய எழுத்து வரிசை' என்றே அழைக்கப்பட்டன.
* நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பர்மாவிலிருந்தும், தாய்லாந்தில் இருந்தும் தமிழகம் திரும்பிய பிறகு, அவர்களில் சிலர் அச்சகங்களையும், பதிப்பகங்களையும் தொடங்கினர்.

No comments:

Post a Comment