என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, March 31, 2013

செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல்


பார்த்தவுடன் பரவசப்படுத்தி நம்மை பல நூற்றாண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்லும் ஆற்றல் சில கட்டடங்களுக்கு உண்டு. சென்னைக்குள் இந்த வாக்கியத்தை சோதித்துப் பார்க்க விரும்புகிறவர்கள், அமெரிக்க துணைத்தூதரகத்திற்கு அருகில் அமைந்திருக்கும் செயின்ட் ஜார்ஜ் கதீட்ரலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள்.

சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயம், கிமு 500களில் கிரேக்கர்கள் பயன்படுத்திய ஐயானிக் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கோண கூரையும் அதனைத் தாங்கும் வேலைப்பாடுகள் நிறைந்த உயரமான தூண்களும்தான் ஐயானிக் பாணியின் அடையாளங்கள். கிரேக்கர்களால் மிகவும் ஸ்டைலான மாடலாக கருதப்பட்ட இந்த வடிவமைப்பை செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்காக தேர்ந்தெடுத்தவர், கிழக்கிந்திய கம்பெனியின் மூத்த பொறியாளரான கர்னல் கால்ட்வெல்.
செயிண்ட் ஜார்ஜ் தேவாலயம்

கிரேக்கக் கலையோடு, ஐரோப்பிய கட்டடக் கலையையும் கலந்து உயரமான கோபுரத்துடன், ஒரு பிரம்மாண்டமான தேவாலயத்தை அவர் வடிவமைத்துக் கொடுக்க, அதனை கட்டி முடித்தார் அவரது உதவியாளரான கேப்டன் டி.ஹாவிலேண்ட். இந்த மெகா தேவாலயத்தை 1815இல் கட்டி முடிக்க ரூ.2 லட்சத்து 7000 செலவானதாம். இந்த மொத்தத் தொகையையும் மக்களே திரட்டி அளித்ததாக கூறப்படுகிறது. இவ்வளவு செலவு செய்து கட்டப்பட்ட இந்த ஆலயம், லண்டனுக்கு வெளியே அமைந்துள்ள மிக நேர்த்தியான ஆங்க்லிகன் தேவாலயமாக அந்நாட்களில் போற்றப்பட்டது.

அதெல்லாம் சரி, இப்படி கலைநயமிக்க ஒரு தேவாலயத்தை இங்கு அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்விக்கு விடை தேடியபோது, மெட்ராசின் வரைபடத்தையே மாற்றிய ஒரு கதை கிடைத்தது. ஒருகாலத்தில், தீவுத்திடலில் இருந்து செனடாப் ரோடு வரை மவுண்ட் ரோட்டின் இருபுறமும் வெறும் மைதானமாகத்தான் இருந்தது. பெரிய சத்திரச் சமவெளி என இந்த பகுதி அழைக்கப்பட்டது.

கிழக்கிந்திய கம்பெனி இந்த பகுதியை வாங்கிய பிறகு, மெட்ராசில் மேயராக இருந்த ஜார்ஜ் மெக்கே என்பவர் 1785இல் இங்கு ஒரு பெரிய தோட்ட வீட்டைக் கட்டினார். ஆயிரம் விளக்கு மசூதிக்கு அருகில் இருக்கும் இந்த பகுதி இன்றும் மெக்கேஸ் கார்டன் என அழைக்கப்பட்டு வருகிறது. கோட்டைக்குள் சிறிய வீடுகளில் குடியிருந்த ஆங்கிலேயர்கள், இப்படி பரந்துவிரிந்த தோட்ட வீடுகளுக்கு இடம்பெயர்வதை விரும்பினர். விளைவு மெக்கேவைத் தொடர்ந்து நிறைய பேர் இந்த பகுதியில் குடியேறத் தொடங்கினர்.

இப்படி பல்கிப் பெருகிய ஆங்கிலேயர்களின் வசதிக்காகத்தான் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கதீட்ரல் கட்டப்பட்டது. இந்த பகுதியின் அடையாளமாகவே இந்த தேவாலயம் விளங்கியதால், இந்த சாலையே கதீட்ரல் சாலை என அழைக்கப்பட்டது. இந்த கட்டடம் மட்டுமின்றி இங்கு நடைபெற்ற நிறைய காரியங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

அவற்றில் சிலவற்றை என்னோடு பகிர்ந்துகொண்டார், இந்த தேவாலயத்தின் அருட்தந்தை இம்மானுவேல் தேவகடாட்சம். தென்னிந்திய திருச்சபை என அழைக்கப்படும் சிஎஸ்ஐ பிரிவு, 1947ஆம் ஆண்டு இந்த தேவாலயத்தில்தான் நிறுவப்பட்டது. நீண்ட நெடிய முயற்சிகளுக்கு பிறகு, கிறிஸ்துவத்தின் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைத்த இந்த நிகழ்வு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இங்குள்ள சுவர்களில் பளிங்குச் சிலைகளாகவும், பத்திரங்களாகவும் நிறைய நினைவுக் குறிப்புகள் இடம்பிடித்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்கு பின்னாலும் ஒரு கண்ணீர் கதை இருக்கிறது. இந்த தேவாலயத்தின் மற்றொரு முக்கியமான அம்சம், இங்கிருக்கும் சித்திர வேலைப்பாடு நிறைந்த கண்ணாடிகள். கருவறையின் இருபுறமும் ஏசுபிரானின் வாழ்வைச் சொல்லும் வண்ணக் கண்ணாடிகளின் வழியே சூரிய ஒளி தேவாலயத்திற்குள் ஊடுருவதைப் பார்ப்பதே பரவச அனுபவமாக இருக்கிறது.
சித்திரக் கண்ணாடி

தேவாலயத்திற்கு அருகிலேயே ஒரு கல்லறைத் தோட்டம் இருக்கிறது. தேவாலயத்தை கட்டிய கேப்டன் டி.ஹாவிலேண்டின் மனைவிதான் இங்கு புதைக்கப்பட்ட முதல் நபர். அவரைத் தொடர்ந்து அந்தக்கால சென்னையின் பல முக்கியப் பிரமுகர்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். கல்லறைத் தோட்டத்தைச் சுற்றி உள்ள வேலியை உருவாக்க பயன்பட்ட நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து கைப்பற்றப்பட்டவையாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இப்படி வேலியில் தொடங்கி உள்ளிருக்கும் கல்லறைகள் வரை சென்னையின் 200 ஆண்டுகால சரித்திரம் இங்கு உறைந்து கிடக்கிறது.
விநோத இசைக்கருவி

பாரம்பரியமிக்க கோபுரக் கடிகாரம், ராட்சத மணிகள், காற்றுக்கு இனிமை சேர்க்கும் குழலிசைக் கருவி என வரலாறு பேசும் பல்வேறு பொருட்கள் இங்கு நிறைந்துகிடக்கின்றன. இவ்வளவு சிறப்புகளோடு அமைதியாக நிற்கும் இந்த தேவாலயத்தை ஒவ்வொருமுறை பார்க்கும்போதும், நமது தாத்தா பாட்டிகள் பாசமுடன் அளிக்கும் பரிசுப் பொருட்களால் ஏற்படும் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் ஒருசேர உற்பத்தியாகிறது.

நன்றி - தினத்தந்தி

* நான்காம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த ஜார்ஜ் என்ற புனிதரின் நினைவாகத்தான், இந்த தேவாலயத்திற்கு செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் எனப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
* கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் உள்ள ஏதெனா கோவில் ஐயானிக் பாணி கட்டடத்திற்கு சிறந்த உதாரணம். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் வடக்கு வாசலும் ஐயானிக் பாணியில் கட்டப்பட்டதுதான்.

No comments:

Post a Comment