என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, April 13, 2013

காணாமல் போன கார்ன்வாலிஸ்


புனித ஜார்ஜ் கோட்டைக்குள் இருக்கும் தலைமைச் செயலகத்திற்கு செல்லும்போதெல்லாம் அருகில் இருக்கும் ஒரு பழமையான கூண்டு கண்ணில்படும். வேலைப்பாடு நிறைந்த பிரமாண்டமான அந்த நினைவுக் கூண்டிற்குள் இன்று எந்த சிலையும் இல்லை. ஒருகாலத்தில் இங்கு சிலையாக நின்ற கனவான் யார்? அவர் காணாமல் போனதன் காரணம் என்ன? என்று தேடியபோது ஊரெல்லாம் சுற்றித் திரிந்த ஒரு சிலையின் கதை கிடைத்தது.

கிழக்கிந்தியாவின் படைத்தளபதி மற்றும் கவர்னர் ஜெனரல் என்ற இரட்டைப் பதவியோடு 1786இல் இந்தியா வந்தார் சார்லஸ் கார்ன்வாலிஸ். அவர் மெட்ராஸ் துறைமுகத்தில் வந்திறங்கிய  நேரம் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம் சீர்குலைந்து போயிருந்தது. கம்பெனி நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது. உண்மையில் அதனை சீர்படுத்தத்தான் கார்ன்வாலிஸை அனுப்பி வைத்திருந்தார்கள்.
கார்ன்வாலிஸ்

மெட்ராசில் இருந்து வங்காளம் சென்ற கார்ன்வாலிஸ், சீர்திருத்த சாட்டையை சொடுக்கினார். நிர்வாக மற்றும் சட்டத்துறைகளில் அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் இந்தியாவின் ஆட்சி முறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தன. இப்படி வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்த கார்ன்வாலிஸூக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார் மைசூரின் திப்பு சுல்தான்.

திப்பு சுல்தானை ஒழித்துக்கட்ட கார்ன்வாலிஸ் பல திட்டங்களைத் தீட்டினார். மெட்ராஸ் நோக்கி பெரும் படையோடு நீண்ட நெடும் பயணங்களை மேற்கொண்டார். ஆனால் எதற்கும் சலைக்காத திப்பு, கார்ன்வாலிஸூக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தார். ஒருவழியாக 1792இல் பல சதிகளின் பின் திப்புவை வளைத்துப் பிடித்தார் கார்ன்வாலிஸ். இதனையடுத்து கிழக்கிந்திய கம்பெனிக்கு ஒரு பெரும் தொகையை தருவதாக திப்பு ஒப்புக் கொண்டார். அது வரை அவரது இரண்டு மகன்களை கார்ன்வாலிஸிடம் பணயமாக ஒப்படைத்தார். இப்படி திப்புவின் பின்னால் அலைந்து கொண்டிருந்ததால், சோர்ந்து போன கார்ன்வாலிஸ், அடுத்த ஆண்டே தாயகம் திரும்பிவிட்டார். பின்னர் சிறிது இடைவெளி விட்டு, 1805இல் அவர் மீண்டும் கவர்னர் ஜெனரலாக இந்தியாவிற்கு வந்தது தனிக்கதை. வந்த சில மாதங்களிலேயே கடுமையான காய்ச்சலால் காசிப்பூர் என்ற இடத்தில் மரணத்தை தழுவிய கார்ன்வாலிஸை அங்கேயே கங்கைக் கரையோரமாக புதைத்துவிட்டார்கள்.
பணயமாக ஒப்படைக்கப்படும் திப்புவின் மகன்கள்
இப்படி இந்திய வரலாற்றில் நிலைத்துவிட்ட லார்ட் கார்ன்வாலிசுக்கு 1799ஆம் ஆண்டு மெட்ராசில் செனடாப் (Cenotaph - எங்கோ புதைக்கப்பட்ட மனிதரின் நினைவாலயம்) ரோட்டில் ஒரு சிலை வைக்கப்பட்டது. கார்ன்வாலிஸ் கடும் வெயில், மழையில் சிக்கி சின்னாபின்னமாகக் கூடாது என்று நினைத்தோ என்னவோ அவரது சிலையை ஒரு கூண்டு வடிவ நினைவுக் கட்டடத்திற்குள் வைத்தனர். ஒரு பெரிய பீடத்தின் மீது அமைக்கப்பட்ட அந்த 14 1/2 அடி உயர சிலையை தாமஸ் பாங்ஸ் என்பவர் வடித்திருந்தார்.
கூண்டுக்குள் இருந்த சிலை

சிலையின் பீடத்தில் திப்பு சுல்தானின் இரண்டு மகன்கள் கார்ன்வாலிசிடம் பணயமாக ஒப்படைக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு வடிக்கப்பட்டிருந்தது. இந்த சிலை அமைக்கப்பட்டிருந்த செனடாப் சாலை அக்காலத்தில் மக்கள் மாலை நேரங்களில் ஓய்வாக நடைபயிலும் இடமாக இருந்தது. அப்போது மெரினா கடற்கரை இப்போதுபோல சீரமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் ஆங்கிலேயர்களுக்கு வாக்கிங் போகும் இடமாக செனடாப் சாலைதான் விளங்கியது. மெரினாவில் நடைபாதை வந்தபிறகு செனடாப்பின் மவுசு குறைந்தது.

இதனிடையே ஒரு நூற்றாண்டு கடந்து செனடாப் சாலையில் காட்சி கொடுத்துக் கொண்டிருந்த கார்ன்வாலிஸை, 1906இல் கோட்டைக்கு இடம்மாற்றினார்கள். இதற்கான காரணம் திட்டவட்டமாகத் தெரியவில்லை. கோட்டையில் உள்ள பரேட் மைதானத்திற்கு எதிரில் இந்த சிலை வைக்கப்பட்டது. அங்கும் கார்ன்வாலிஸால் நிலையாக கால்பதிக்க முடியவில்லை.

1925ஆம் ஆண்டு கார்ன்வாலிஸ் கடற்கரை சாலைக்கு இடம் மாற்றப்பட்டார். வடக்கு கடற்கரைச் சாலையில் இருந்த பெண்டிக் கட்டடத்திற்கு முன்பு அவரது சிலை வைக்கப்பட்டது. ஆனால் உப்புக் காற்றால் சிலை பாதிக்கப்படுவதாகக் கூறி மூன்றே ஆண்டுகளில் அங்கிருந்து தூக்கிவிட்டார்கள். அடுத்ததாக கன்னிமரா நூலகத்திற்கு போனார் கார்ன்வாலிஸ், ஆனால் அதுவும் நிலைக்கவில்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கார்ன்வாலிஸ் இறுதியாக புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் அருங்காட்சியகத்திற்குள் சென்றுவிட்டார். அவர் நின்று கொண்டிருந்த பிரமாண்ட கூண்டு அருங்காட்சியகத்திற்கு வெளியில் நின்றுவிட்டது. அந்த கூண்டினால் ஏற்பட்ட செனடாப் என்ற பெயர் மட்டும், அந்த வீதியில் இன்றும் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறது, கால ஓட்டத்தில் குடும்பத்தை பிரிந்த குட்டிமகனாய்.

நன்றி - தினத்தந்தி

* அமெரிக்க சுதந்திரப் போரை ஒடுக்குவதற்காக, 1776இல் இங்கிலாந்தால் அனுப்பி வைக்கப்பட்ட கார்ன்வாலிஸ் இறுதியில் தோல்வியையே தழுவினார். இந்த தோல்விக்கு பிறகுதான் அவர் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்.
* கார்ன்வாலிஸால் பணயமாக பிடித்து வைக்கப்பட்ட திப்பு சுல்தானின் மகன்கள், மெட்ராசில்தான் வைக்கப்பட்டிருந்தனர்.  அவர்கள் இன்றைய மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி இருக்கும்  டவுட்டன் இல்லத்தில்தான் தங்க வைக்கப்பட்டதாக ஒரு தகவல் சொல்கிறது.

1 comment:

  1. Gambling 101 Casino - Mapyro
    Find your way 공주 출장샵 around the gambling 과천 출장마사지 world with Mapyro. Choose from over 2,000 slots and live dealer games, or 청주 출장마사지 find 울산광역 출장샵 a table game with a live 성남 출장안마 dealer.

    ReplyDelete