என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, February 23, 2013

ஆங்கிலேயர் கட்டிய பெருமாள் கோவில்


பக்தர்கள்தான் கடவுளைத் தேடிச் செல்வது வழக்கம். ஆனால் பக்தனைத் தேடி தெய்வம் வருவது அதிசயமாக சில நேரங்களில் நிகழ்ந்துவிடுகிறது. புராணக் காலத்தில் அப்படி எல்லாம் நடந்திருக்கலாம், இப்போது சாத்தியமில்லை என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இது போன்றதொரு ஆச்சர்யம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் சென்னையிலேயே நடந்திருக்கிறது.
ஜோசப் கோலட்

1717இல் ஜோசப் கோலட் (Joseph Collett) என்பவர் மெட்ராசின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு உள்ளூர் நிர்வாகத்தில் உதவி செய்வதற்காக வீரராகவர் என்ற பிராமணர் எழுத்தராக பணியமர்த்தப்பட்டார். அலுவல் காரணமாக இருவரும் மணிக்கணக்கில் விவாதிக்க வேண்டி இருந்தது. பல்வேறு விஷயங்களில் இருவரும் ஒத்த கருத்துடையவர்களாக இருந்ததால் காலப்போக்கில் கோலட்டும், வீரராகவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். ஆனாலும் வீரராகவரிடம் கோலட்டிற்கு ஒரு பிரச்னை இருந்தது.

வீரராகவர் தீவிர பெருமாள் பக்தர். காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாளை தரிசிப்பதற்காக அடிக்கடி சென்றுவிடுவார். இதனால் பல சமயங்களில் அலுவலகத்திற்கு தாமதமாக வருவார். இது கோலட்டை மிகவும் எரிச்சல்படுத்தியது. வீரராகவரின் கடவுள் பக்தி முட்டாள்தனமானது என்று நினைத்த கோலட், இதனை வீரராகவரும் உணரும்படி செய்ய வேண்டும் என முடிவெடுத்தார். ஆனால் அவர் ஒன்று நினைக்க விதி ஒன்று நினைத்தது.

ஒருமுறை வீரராகவரை அழைத்த கோலட், நீங்கள் பெருமாளுக்காக இப்படி உருகுகிறீர்களே, இந்த நிமிடம் காஞ்சிபுரத்தில் உங்கள் பெருமாள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்ல முடியுமா? என்று கேட்டார். ஒருநிமிடம் கண்களை மூடிய வீரராகவர், பெருமாள் தற்போது தேரில் உலா வந்து கொண்டிருப்பதாகவும், இந்த நொடியில் அவரது தேர்ச் சக்கரம் சேற்றில் சிக்கிக் கொண்டதால் அதனை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

வீரராகவர் சொன்ன தகவல்கள் சரியா என கோலட் காஞ்சிபுரத்தில் இருந்த அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டார். அவர்கள் சொன்ன பதில் கோலட்டை வாயடைத்துப் போகச் செய்தது. உண்மையிலேயே வீரராகவர் சொன்ன அந்த தருணத்தில் பெருமாளின் தேரை சேற்றில் இருந்து மீட்கும் முயற்சி தான் நடந்திருக்கிறது. சிலிர்த்துப் போன கோலட், வீரராகவரின் பக்திக்கு மரியாதை செலுத்தும்விதமாக அவரது வீட்டிற்கு அருகிலேயே ஒரு பெருமாள் கோவிலைக் கட்டிக் கொடுத்தார். அதுதான் திருவொற்றியூருக்கு அருகே காலடிப்பேட்டையில் இருக்கும் கல்யாண வரதராஜபெருமாள் கோவில். இங்குள்ள மூலவர் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் இருக்கும் மூலவரைப் போல அச்சுஅசலாக செய்யப்பட்டிருக்கிறார்.
கல்யாண வரதராஜ பெருமாள் கோவில்

காலடிப்பேட்டை என்ற இந்த ஊரே ஜோசப் கோலட்டால் உருவாக்கப்பட்டதுதான். கிழக்கிந்திய கம்பெனியின் பிராதன தொழில் இங்கிருந்து துணிகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான். இந்த பணியை மேற்கொள்வதற்காக நிறைய நெசவாளர்களும், சாயம் தோய்ப்பவர்களும் தேவைப்பட்டனர். எனவே மெட்ராஸ் மாகாணம் முழுவதும் பரவிக் கிடந்த அவர்களை ஒன்று திரட்டி கோட்டைக்கு அருகில் சில இடங்களில் குடியமர்த்தினர். அந்த வகையில் கோலட், தான் திரட்டியவர்களை இந்த பகுதியில் குடியேறச் செய்தார். 1719ஆம் ஆண்டு டிசம்பர் 28ந் தேதி கோலட் தனது அதிகாரிகளுக்கு அளித்த அறிக்கை ஒன்றில், இந்த பகுதியில் 104 வீடுகளும், 10 கடைகளும், ஒரு கோவிலும், மொத்தமாக 489 ஆட்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை அனுப்பிய கையோடு கோலட் பணியில் இருந்து ஓய்வுபெற்று இங்கிலாந்து திரும்ப விரும்பினார். போவதற்கு முன், தான் ஏற்படுத்திய குடியிருப்புக்கு தனது பெயரையே வைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் விரும்புவதாக (?) ஜார்ஜ் கோட்டையில் உள்ள கவுன்சிலுக்கு தெரிவித்தார். இதனை ஏற்று அந்த பகுதிக்கு கோலட்பெட் (COLLETPET) என்று பெயரிடப்பட்டது. ஆனால் இது காலப்போக்கில் மருவி காலடிப்பேட்டை என்றாகிவிட்டது.

கோலட் ஆளுநராக இருந்தபோது, நிலவரி மற்றும் அடிமைகளுக்கான வரி ஆகியவற்றில் சில திருத்தங்களை செய்தார். அதேபோல கறுப்பர் நகரத்தில் இருக்கும் வீடுகள் மற்றும் தோட்டங்கள் அனைத்தையும் கண்டிப்பாக அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என்றும் சட்டம் இயற்றினார். ஆனால் இதற்கான பதிவுக் கட்டணத்தை தங்களால் செலுத்த இயலாது என சில வறியவர்கள் ஆளுநரிடம் முறையிட்டனர். இதனைப் பொறுமையாகக் கேட்ட கோலட், 50 பகோடாக்களுக்கும் (அந்தக்கால நாணயம்) குறைவான மதிப்புடைய சொத்துகளை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். இப்படி ஏழைகளிடம் அவர் காட்டிய பரிவும், மக்கள் அவரது பெயரை தங்களின் பகுதிக்கு வைக்க வேண்டும் எனக் கேட்டதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இப்படி பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்ட கோலட், 1720ஆம் ஆண்டு ஜனவரியில் தாயகம் திரும்பினார். கோலட் போய் கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவரது பெயர் இன்றும் வடசென்னை வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.

நன்றி - தினத்தந்தி

*  கர்நாடக சங்கீத ஜாம்பவான் டைகர் வரதாச்சாரி காலடிப்பேட்டையில்தான் பிறந்தார்.

* இராமலிங்க அடிகளார் இந்த பகுதியில் உலா வந்ததால், அவரது 'காலடி பட்ட பேட்டை' என்ற வகையில் காலடிப்பேட்டை என்ற பெயர் பொருத்தமானதுதான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

No comments:

Post a Comment