என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, February 3, 2013

சாந்தோம் தேவாலயம்


மெட்ராஸ் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச அளவில் புகழ்பெற்ற நகரமாக விளங்கியது. இதற்கு முக்கியக் காரணம் இங்கிருந்த ஒரு சிறிய தேவாலயம். இதனை தரிசிப்பதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தனர், இன்னும் வந்து கொண்டிருக்கின்றனர். இப்படி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அதுதான் சாந்தோம் தேவாலயம்.

இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் கிபி 52இல் கேரளாவிற்கு வந்தார். அங்கு தீவிர மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், பின்னர் மெட்ராசிற்கு வருகை தந்தார். இங்கும் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், கிபி 72இல் இன்றைய புனித தோமையார் மலையில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார். அவரது சமாதியின் மீது எழுப்பப்பட்டதுதான் சாந்தோம் தேவாலயம்.
புனித தாமஸ்

பண்டைய கிறிஸ்தவ ஆசிரியர்களின் குறிப்புகள்படி, தோமையார் இறந்ததும் அவரது உடல் அவரே கட்டியிருந்த சிறு கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கிறிஸ்தவர்கள் சற்று பெரிதாக ஒரு கோவில் கட்டினார்கள். 1292இல் மயிலாப்பூருக்கு வருகை தந்த இத்தாலிய பயணி மார்க்கோ போலோ, புனித தோமாவின் கோவில் மற்றும் கல்லறை பற்றி எழுதி இருக்கிறார்.

பின்னர் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மெட்ராசிற்கு வந்த போர்த்துகீசியர்கள், தோமா கோவில் பாழடைந்து கிடந்ததாகவும், "பெத் தூமா" ("தோமாவின் வீடு") என்று அழைக்கப்பட்ட ஒரு சிற்றாலயம் மட்டும் தோமாவின் கல்லறையை அடையாளம் காட்டியது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதனையடுத்து 1523இல் போர்த்துகீசியர் தோமா கல்லறைமீது பெரிய அளவில் ஒரு கோவிலைக் கட்டினார்கள். அதோடு தங்கள் குடியிருப்பைப் பாதுகாக்க ஒரு கோட்டையையும் கட்டினார்கள். ஆனால் அது பின்னாட்களில் டச்சுக்காரர்களால் தகர்க்கப்பட்டது.
பழைய சாந்தோம் தேவாலயம்

சுமார் 300 ஆண்டுகள் இந்த கோவில் கடலின் உப்புக் காற்றை தாங்கி நின்றதால் மெல்ல பழுதடையத் தொடங்கியது. எனவே பழைய கோவில் இடிக்கப்பட்டு, 1893ஆம் ஆண்டு புதிய கோவில் வேலை தொடங்கியது. மயிலாப்பூரில் தங்கியிருந்த கேப்டன் பவர் (Captain J.A. Power) என்ற ஆங்கிலேய பொறியியல் வல்லுநர், புதிய கோவிலுக்கு வடிவம் கொடுத்தார். அவர் 'புதிய கோத்திக்' என்னும் கட்டடப் பாணியில் உயர்ந்த கோபுரங்களை எழுப்பி பிரம்மாண்டமான ஒரு கோவிலை வடிவமைத்தார்.

இந்த தேவாலய ஜன்னல்களில் கிறிஸ்தவ சமயம் தொடர்பான காட்சிகள் அடங்கிய அழகிய வண்ணக் கண்ணாடிகள் (stained glass) பொருத்தப்பட்டுள்ளன. இவை ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்டவை. இதுமட்டுமின்றி விசாலமான வழிபாட்டு அரங்கம், உயரமான மேற்கூரை என பார்த்துப் பார்த்து கட்டிய புதிய கோவில், 1896ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.

இந்த தேவாலயத்தில் மேரி மாதாவின் பழைய மரச்சிற்பம் ஒன்று உள்ளது. மயிலை மாதா என அழைக்கப்படும் இந்த மூன்றடி சிற்பத்தை பல முக்கியப் பிரமுகர்கள் வழிபட்டுள்ளனர். உலகப் புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சேவியர், 1545இல் இங்கு வந்தபோது, மேரி மாதா முன்பு மணிக்கணக்கில் பிரார்த்தனையில் ஈடுபடுவாராம்.

தேவாலய வளாகத்தில் புனித தோமையாரின் கல்லறைக்கு மேல் ஒரு சிறிய வழிபாட்டுத் தலம் அமைக்கப்பட்டுள்ளது. அமைதி நிறைந்த இந்த இடத்தில் ஏராளமானோர் நெஞ்சுருகப் பிரார்த்தித்து இறைஅனுபவம் பெற்றுச் செல்கின்றனர். இந்த கல்லறை இதுவரை நான்கு முறை திறக்கப்பட்டுள்ளது. தோமையார் அற்புதங்கள் நிகழ்த்தும் புனிதராக கருதப்பட்டதால் அவரது உடல் புதைக்கப்பட்ட மண் கூட சக்திவாய்ந்ததாக கருதப்பட்டது. எனவே அப்போது மயிலாப்பூர் பகுதியை ஆண்ட மகாதேவன் என்ற அரசரின் மகன் உடல்நலம் பெறுவதற்காக தோமையாரின் கல்லறையில் இருந்து மண் எடுக்கப்பட்டது.

கிபி 222க்கும் கிபி 235க்கும் இடைப்பட்ட காலத்தில் மீண்டும் ஒருமுறை கல்லறையைத் திறந்து புனித தோமையாரின் உடல் எச்சங்களை எடுத்து இத்தாலியில் உள்ள ஒர்த் தோனா என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்றும் இத்தாலியில் அவை பாதுகாக்கப்படுகின்றன. 1523இல் போர்த்துகீசியர்கள் கோவிலை புனரமைத்தபோது, கல்லறை மூன்றாவது முறையாகத் திறக்கப்பட்டது. கடைசியாக 1729ஆம் ஆண்டு கல்லறையை திறந்து மண் எடுத்து பக்தர்களுக்கு விநியோகித்தனர்.
தாமஸை கொன்ற ஈட்டி முனை

கிறிஸ்தவர்களின் புனிதத்தலமாக விளங்கும் இந்த தேவாலயத்தில், ஓர் அருங்காட்சியகமும் உள்ளது. புனித தோமையார் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தோமையாரை குத்திக் கொன்ற ஈட்டியின் தலைப் பகுதியும், அவரின் எலும்புகளும் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அமைதியான ஒரு மதிய நேரத்தில் இந்த அருங்காட்சியகத்தில் தனியாக நிற்கும்போது, திடீரென காலம் நம்மை 2000 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கி வீசியதைப் போல இருக்கிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் கடவுளாக வழிபடப்படும் ஏசுநாதருடன் பேசிப் பழகிய, அவரது நேரடி சீடர் ஒருவரின் எலும்புகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே சிலிர்க்க வைக்கிறது. வெளியில் வந்த பிறகும் நீண்ட நேரம் அந்த இனிய அதிர்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

நன்றி - தினத்தந்தி

* ஏசுவின் மூன்று சீடர்களின் கல்லறைகள் மீதுதான் தேவாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஒன்று ரோமில் உள்ள புனித ராயப்பர் பேராலயம், இரண்டாவது ஸ்பெயினில் உள்ள புனித யாகப்பர் பேராலயம். மூன்றாவது சாந்தோம் பேராலயம்.
* தேவாலயத்திற்கு பின்புறம் கடற்கரைக்கு செல்லும் வழியில் தோமாவின் கம்பம் ஒன்று உள்ளது. கடல்நீர் உட்புகுந்து மனித உயிர்களைப் பறிப்பதை தடுக்க புனித தோமா இதை நிறுவியதாக ஒரு பாரம்பரிய கதை உள்ளது.
* இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால், 2006ஆம் ஆண்டு இது தேசிய வழிபாட்டுத்தலமாக அறிவிக்கப்பட்டது.

1 comment:

  1. அதென்ன தோமையர் மலை ?

    அதன் முந்தைய பெயரென்ன ?

    ReplyDelete