என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, November 3, 2012

கொள்ளைக்காரன் ராபர்ட் கிளைவ்


வரலாறு வெற்றியாளர்களாக பதிவு செய்திருக்கும் சிலர் சொந்த வாழ்க்கையில் படுதோல்வியடைந்து பரிதாபத்திற்குரியவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆழமாக காலூன்ற மிக முக்கியக் காரணகர்த்தா என்று ஆங்கிலேயர்களால் கொண்டாடப்பட்ட ராபர்ட் கிளைவ் அப்படிப்பட்ட ஒருவர்தான். மிக இளம் வயதிலேயே வாழ்வின் உச்சங்களைத் தொட்ட கிளைவ், திடீரென ஒரு நாள் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதே இதற்கு சாட்சி.
ராபர்ட் கிளைவ்
இங்கிலாந்தின் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ராபர்ட் கிளைவ், 17 வயதில் கிளர்க் வேலைக்காக பாய்மரக் கப்பல் ஒன்றில் இந்தியாவுக்கு பயணமானார். பயணத்தின் போது, குடித்துவிட்டு கலாட்டா செய்த கிளைவ் சொந்த ஊரில் இருந்தபோதும் கிட்டத்தட்ட அதையேதான் செய்து கொண்டிருந்தார். எனவேதான் அவரது தந்தை ரிச்சர்ட் கிளைவ் பையன் கொஞ்சம் உருப்படட்டுமே என்ற எண்ணத்தில் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் கிளைவ் இந்தியாவை உருப்பட விடாமல் செய்யப் போகிறார் என்பது அந்த தந்தைக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

துடுக்குத்தனத்தைப் போலவே இளைஞர் கிளைவிடம் நிறையவே புத்திசாலித்தனமும் இருந்தது. லத்தீனும் ஆங்கிலமும் கற்றிருந்த கிளைவ், புயலால் சேதமடைந்து கப்பல் சில மாதங்கள் பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நின்றபோது, போர்த்துக்கீசிய மொழியையும் கற்றுக் கொண்டார். அது, மெட்ராஸில் அவருக்கு பெரிதும் கை கொடுத்தது.

18 மாத நீண்ட பயணத்திற்கு பிறகு, ஒரு வழியாக 1744இல் மெட்ராஸில் காலடி வைத்த கிளைவ், குறுகிய காலத்திலேயே இந்திய வரலாற்றிலும் அழுத்தமாக கால் பதித்தார். வாழ்வில் முன்னேற குறுக்கு வழிதான் சுலபமானது என முடிவெடுத்த கிளைவ், அந்த வழியில் மிக வேகமாக தனது பயணத்தை தொடர்ந்தார். கொடுக்க வேண்டியதைக் கொடுத்து காரியங்களை சாதித்தார். இதன் மூலம் கிளர்க் வேலையில் இருந்து ராணுவப் பணிக்கு மாறிய கிளைவ், பதவிப் படிகளில் கிடுகிடுவென ஏறினார். 1749இல் பிரெஞ்சுப் படையினரைத் தோற்கடித்து ஆற்காடு பகுதியைக் கைப்பற்றினார். அடுத்தடுத்து போர்களை நடத்தி தென்னிந்தியாவின் பல பகுதிகளை ஆங்கிலேய வசமாக்கினார் ராபர்ட் கிளைவ்.

வெற்றிகளைக் குவித்த கிளைவ், சொந்த வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவெடுத்தார். தனது நண்பரின் சகோதரியான மார்க்ரெட்டைக் கரம் பிடித்தார். வரலாற்று சிறப்புமிக்க அந்த திருமணம் 1753-ம் ஆண்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது.

திருமணம் ஆனதும் மனைவியுடன் கிளைவ் தாயகம் திரும்பினார். ஆனால் அவரால் அங்கே அதிக காலம் இருக்க முடியவில்லை. இதனிடையே வங்காளத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பிரெஞ்சுப் படைகளுடனான போரில் வெற்று பெற ஒரு திறமையான தளபதி வேண்டும் என்று நினைத்த ஆங்கிலேயர்கள் கிளைவிற்கு அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்ற கிளைவ் 1756இல் மீண்டும் இந்தியா வந்தார்.

மெட்ராசில் இருந்து படை திரட்டிக் கொண்டு கல்கத்தா சென்றார். அங்கே யுத்தக் கைதியாகப் பிடிபட்ட கிளைவ், லஞ்சம் கொடுத்து சிறையில் இருந்து தப்பினார். பணத்தின் பலத்தை நன்றாகப் புரிந்துகொண்ட கிளைவ், பலரையும் 'கவனித்து' சரித்திரப் புகழ்பெற்ற பிளாசி யுத்தத்தில் வெற்றியை 'வாங்கினார்'. இந்த வெற்றிதான் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை நிலைநிறுத்த உதவியது.
பிளாசி யுத்தம்
வளமான வங்காளத்தின் ஆளுநரான கிளைவ், தனிப்பட்ட முறையிலும் எக்கச்சக்கமான செல்வத்தைக் குவித்தார். இப்படி முப்பது வயதுக்குள் கிழக்கிந்திய கம்பெனியின் பெரும் பதவிகளை வகித்து, லட்சக்கணக்கில் பணத்தையும் வைரங்களையும் குவித்த கிளைவ் 1760இல் பெரும் செல்வந்தராக நாடு திரும்பினார். இருக்கும் பணத்தைக் கொண்டு பல தோட்ட வீடுகளை வாங்கிய கிளைவ் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகி பேரும் புகழும் அடைந்தார். ஆனால் இதுவும் நீடிக்கவில்லை. 1764இல் காலம் மீண்டும் கிளைவை இந்தியாவிற்கு அனுப்பியது.

மூன்றாவது பயணத்திலும் முடிந்த வரை கொள்ளையடித்தார் கிளைவ். பெரும் செல்வத்துடன் நாடு திரும்பிய கிளைவிற்கு அங்கு ஒரு சோதனை காத்திருந்தது. அதிகாரத்தைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இங்கிலாந்து நாடாளுமன்றம் அவர் மீது விசாரணை நடத்தியது. அன்றைய வங்காளத்தின் மொத்த வருமானம் 1 கோடியே 30 லட்சத்து 66,761 ரூபாய். செலவு 9 லட்சத்து 27,609 ரூபாய். இதில் ராபர்ட் கிளைவ் அடைந்த ஆதாயம் 2 லட்சத்து 50,000 ரூபாய் என்று அந்த குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மகத்தான ஊழல் விசாரணையில் தப்பித்துவிட்டாலும், அவரால் மனசாட்சியிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை.

கிளைவின் உடல்நலம் நலிவடையத் தொடங்கியது. ரத்தக் கொதிப்பால் தூக்கமின்றி அவதிப்பட்ட கிளைவிற்கு பித்தப்பை கோளாறும் இருந்தது. தூக்கம் வருவதற்காக தினமும் போதை ஊசி போட்டுக் கொண்டதால் நரம்புத் தளர்ச்சி அதிகமானது. வலியாலும் வேதனையாலும் அழுது கதறிய கிளைவ், தன்னைக் கொன்று விடும்படி மன்றாடினார். இறுதியில் 1774-ம் ஆண்டு 49-ம் வயதில் தனது பகட்டான பண்ணை வீடு ஒன்றில் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட பரிதாபமாக செத்துப் போனார் ராபர்ட் கிளைவ்.

படுக்கையில் சிந்திக் கிடந்த ரத்தத்தில், கிளைவ் இந்தியாவில் செய்த பாவங்கள் அமைதியாக பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

நன்றி - தினத்தந்தி

* கிளைவ் முதன்முறையாக இந்தியா வந்தபோது, கப்பலில் இருந்து கடலில் விழுந்துவிட்டார். உடன் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றியதால் உயிர் பிழைத்தார்.

* கிளைவ் இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற அரிய கலைப் பொக்கிஷங்கள் இங்கிலாந்தில் உள்ள கிளைவ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

* சுமார் 260 ஆண்டுகளுக்கு முன் கிளைவ் தனது மனைவியுடன் வசித்த வீடு, புனித ஜார்ஜ் கோட்டைக்குள் 'கிளைவ் இல்லம்' என்ற பெயரில் இன்றும் இருக்கிறது.

4 comments:

  1. வரலாற்றுத் தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete
  2. அருமையான வரலாற்று பதிவு....

    ReplyDelete