என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, January 28, 2012

கோடம்பாக்கம்

வானவீதிக்கு அடுத்தபடியாக நட்சத்திரங்கள் அதிகம் வலம் வரும் இடம் கோடம்பாக்க வீதிகள். தென்னிந்தியாவின் ஹாலிவுட் எனப் புகழப்படும் கோலிவுட்டின் கதை என்ன? தமிழகத்தின் கனவுத் தொழிற்சாலையாக கோடம்பாக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?

முதலில் கோடம்பாக்கம் என்ற பெயர் எப்படி வந்தது என்று பார்ப்போம்? இதற்கு இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. ஒன்று வரலாற்று ரீதியானது, மற்றொன்று புராண ரீதியானது. ஆங்கிலேயர்கள் ஜார்ஜ் கோட்டையில் குடியேறிய பிறகு, அருகில் இருக்கும் கிராமங்களை வாங்கி மெட்ராஸ் என்ற பகுதியை விஸ்தரிக்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது இங்கு நிறைய நிலப் பகுதிகள் கர்நாடக நவாப்புகளின் ஆதிக்கத்தில் இருந்தன. அப்படிப்பட்ட ஒரு பகுதிதான் கோடம்பாக்கம்.

அந்தக் காலத்தில் ஆற்காடு நவாப்பின் குதிரை லாயங்கள் இங்கிருந்திருக்கின்றன. காட்டுப் பகுதியாக இருந்த கோடம்பாக்கம், நவாப்பின் குதிரைகளுக்கு நல்ல மேய்ச்சல் நிலமாக இருந்திருக்கிறது. இதனால் உருது மொழியில் 'கோடா பாக்' அதாவது குதிரைகளின் தோட்டம் என்று இதனை அழைத்திருக்கிறார்கள். அதுவே பின்னர் மருவி கோடம்பாக்கம் ஆகிவிட்டது.

இப்போது அடுத்த கதைக்கு வருவோம். நவாப்புகள் எல்லாம் வருவதற்கு முன்பே இந்த பகுதியில் மக்கள் வசித்திருக்கிறார்கள். இதற்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகால வரலாறு இருக்கிறது. தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியான இது, அந்தக் காலத்தில் புலியூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. புலிகள் நிறைந்த காட்டுப் பகுதி என்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம்.

இங்கு வியாக்ரபுரீஸ்வரர் அல்லது வேங்கீசர் ஆலயம் என்ற பழைய சிவாலயம் இருக்கிறது. வேங்கை பூசித்த ஈசர் என்பதால் வேங்கீசர் என்று கூறப்படுகிறது. சரி, இதற்கும் கோடம்பாக்கம் பெயருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள்.

இந்த வேங்கீசர் ஆலயத்தில் கார்கோடகன் என்ற பாம்பின் சிலைகள் இருக்கின்றன. இந்து புராணங்களில் வரும் இந்த கார்கோடகன் இந்த பகுதியில் சிவபெருமானைப் பூஜித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இந்த பகுதி கார்கோடகன் பாக்கம் (பாக்கம் என்றால் ஊர்) என்று அழைக்கப்பட்டு, பின்னர் கோடம்பாக்கம் ஆகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் கோடம்பாக்கம் கனவுகள் தயாரிக்கும் பகுதியாக ரசவாதம் பெற்றது. சினிமா கண்டுபிடிக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆன பிறகும் மெட்ராசில் முறையான ஸ்டூடியோக்கள் எதுவும் இல்லை, பம்பாய் அல்லது கல்கத்தாவிற்குதான் செல்ல வேண்டும். தென்னிந்தியாவின் முதல் ஸ்டூடியோவான ஸ்ரீனிவாசா சினிடோன் 1934ஆம் ஆண்டு முளைத்தது. ஆனால் அது ஆரம்பிக்கப்பட்ட இடம், கோடம்பாக்கம் அல்ல கீழ்ப்பாக்கம். நாராயணன் என்பவர் தொடங்கிய இந்த ஸ்டூடியோவில் தான், தமிழின் முதல் பேசும் படமான ஸ்ரீனிவாச கல்யாணம் எடுக்கப்பட்டது.

ஏவி மெய்யப்ப செட்டியார் கூட 1946இல் முதலில் காரைக்குடியில் தான் ஸ்டூடியோ தொடங்கினார். இரண்டாம் உலகப் போர் காலத்தில் சென்னையில் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவியதால், சொந்த ஊரில் ஸ்டூடியோ தொடங்கினார். பின்னர் 1948இல் இப்போதிருக்கும் இடத்திற்கு ஏவிஎம் இடம்பெயர்ந்தது. பி.என். ரெட்டி தொடங்கிய வாகினி ஸ்டூடியோவும் அருகில்தான் இருக்கிறது.

மெய்யப்ப செட்டியாரும், பி.என். ரெட்டியும் கோடம்பாக்கத்தை தேர்வு செய்ததற்கு என்ன காரணம் தெரியுமா? ஸ்டூடியோ என்றால் பிரம்மாண்டமான செட்டுகள், லேப் என விஸ்தாரமான இடம் வேண்டும். கோடம்பாக்கம் என்ற காட்டுப் பகுதி அதற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. இதனை அடுத்து நிறைய ஸ்டூடியோக்கள் கோடம்பாக்கத்தில் உருவாகின. சினிமா உலகின் தவிர்க்க முடியாத அங்கமாக கோடம்பாக்கம் மாறியது.

தென்னிந்திய படங்கள் அனைத்துமே மெட்ராசில் மட்டுமே எடுக்கப்பட்ட காலங்கள் இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் மலையாள நட்சத்திரங்களும் கோடம்பாக்க வீதிகளில் வலம் வந்து கொண்டிருப்பார்கள். பாரதிராஜாவின் 16 வயதினிலே வரும்வரை, கோடம்பாக்க செட்களில் தான் தமிழ் சினிமா குடியிருந்தது.

கோடம்பாக்கத்தின் மற்றொரு சினிமா அடையாளம், இங்கிருந்த லிபர்டி திரையரங்கம். சென்னையின் பழைய தியேட்டர்களில் ஒன்றான இதில், திரை நட்சத்திரங்கள் பலர் ரசிகர்களுடன் அமர்ந்து தங்களின் படங்களைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். எத்தனையோ உதவி இயக்குநர்கள் இங்கு படங்களைப் பார்த்து தங்களின் சினிமா கனவுகளுக்கு உரம் போட்டிருக்கிறார்கள். இப்படி கனவு வளர்த்த கட்டிடம் இன்று இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டுவிட்டது.

மொத்தத்தில் சினிமாவும் கோடம்பாக்கமும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல பின்னிப் பிணைந்திருக்கின்றன. எனவேதான் ஆஸ்கர் நாயகன் ரஹ்மான் முதல் சினிமாவில் கால்பதிக்கத் துடிக்கும் இளைஞன் வரை பலரின் முகவரியாக இன்றும் கோடம்பாக்கம் திகழ்கிறது.

நன்றி - தினத்தந்தி

* கோடம்பாக்கத்தில் இன்றும் புலியூர் என்ற பகுதி இருக்கிறது.

* 1921 வரை கோடம்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் இருந்தது.

* 1937இல் மகாத்மா காந்தி கோடம்பாக்கம் ஹரிஜன தொழிற்பள்ளியில் உரையாற்ற வந்திருக்கிறார்

* இங்கிருக்கும் மீனாட்சி மகளிர் கல்லூரி சர்வதேச மகளிர் ஆண்டான 1975இல் தொடங்கப்பட்டது.

1 comment:

  1. I came across this blog when I was randomly searching for what happened to Liberty theatre. Being a resident of Kodambakkam ever since ‘97, when I was born, I am so fascinated by the rich history that Kodambakkam has. I live 1 minute away from where Liberty theatre used to be. When I was really little, I used to see that place and think why no one tried to revamp such a historically important theatre. Thank you so much for writing about Kodambakkam and for giving me such interesting and fascinating info about my home sir✨

    ReplyDelete