என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, January 14, 2012

லஸ் தேவாலயம்

கிழக்கிந்திய கம்பெனியார் சென்னையில் கால்பதித்து மெட்ராஸ் என்ற நகரம் உருவாவதற்கு முன்பே இப்பகுதியில் கட்டப்பட்டதுதான் லஸ் தேவாலயம். ஆங்கிலேயர்களே வராத காலத்தில் இதனை யார் கட்டினார்கள்? எதற்காக இங்கு கட்டினார்கள்? இந்த கேள்விகளுக்கான விடையை அறிந்துகொள்ள நாம் சுமார் 500 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.

ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் பல நூற்றாண்டுகளாக கடல் வழி வணிகம் நடைபெற்று வந்தாலும், அந்த கப்பல்கள் எல்லாம் பல நாடுகளை சுற்றிக் கொண்டே வர வேண்டியிருந்தது. எனவே இந்தியாவிற்கான சுருக்கமான நேரடி கடல் வழியைக் கண்டறியும் முயற்சிகள் 15ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்டன. ஸ்பானியரும், போர்த்துகீசியரும் இதில் அதிக ஆர்வம் காட்டினர். கடைசியில் ஜெயித்தது போர்த்துகீசியர்கள்தான். ஆம், 1498 மே மாதம் 17ஆம் தேதி, போர்த்துகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா வெற்றிகரமாக கேரளத்தின் கோழிக்கோட்டை வந்தடைந்தார்.

அவர் கண்டுபிடித்த வழியில் பயணித்து, போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் இருந்து 8 பாதிரிமார்கள் 1500இல் கோழிக்கோடு வந்தனர். அவர்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சியவர்கள் கொச்சின் சென்று மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சில ஆண்டுகள் கழித்து, மேலும் தெற்கு நோக்கி அவர்கள் பயணித்தபோது கடும் கடல்சீற்றம் காரணமாக அவர்களின் கப்பல் அலைக்கழிக்கப்பட்டது.

தங்களை பத்திரமாக கரை சேர்க்குமாறு அவர்கள் மேரி மாதாவிடம் வேண்டிக் கொண்டபோது, தூரத்தில் வானில் ஒரு ஒளி தோன்றியதாகக் கூறப்படுகிறது. அதனைப் பின்பற்றி கப்பலைச் செலுத்திய அவர்கள் ஒரு நிலப்பகுதியை அடைந்தனர். அந்த ஒளியை மேலும் பின்தொடர்ந்து சென்றபோது, அது ஒரு காட்டுப் பகுதியில் திடீரென மறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

தங்களுக்கு வழிகாட்டி பத்திரமாக கரைசேர்த்த மேரி மாதாவிற்கு நன்றி பாராட்டும்விதமாக பாதிரிமார்கள், அந்த காட்டுப் பகுதியிலேயே ஒரு தேவாலயத்தை எழுப்பினர். அதுதான் லஸ் தேவாலயம். லஸ் என்றால் போர்த்துகீசிய மொழியில் ஒளி என்று அர்த்தம். அதனால்தான் இதனை பிரகாச மாதா தேவாலயம் (Church of Our Lady of Light) என்று அழைக்கிறார்கள். ஒரு காலத்தில், இது அடர்த்தியான காட்டுப் பகுதியாக இருந்ததால், உள்ளூர் மக்கள் இதனை காட்டுக் கோவில் என்றும் அழைத்தார்கள்.

கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக முதல் நூற்றாண்டில் இந்தியா வந்த புனித தோமையாருக்கும் இந்த பகுதிக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரைப் பகுதிகளில் தமது பிரச்சாரத்தை துவங்கிய செயிண்ட் தாமஸ், சைதாப்பேட்டைக்கு அருகில் உள்ள சின்னமலைக்கு செல்லும் முன்பாக இன்றைய லஸ் பகுதியில் இருந்த மாந்தோப்பில் ஓய்வெடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது காணப்படும் லஸ் தேவாலயம் 1516இல் கட்டப்பட்டது. சென்னையின் முதல் தேவாலயமான இது, 16ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய பாணியில், அதாவது கூர்மாட (Gothic) அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இத்தாலியில் 16ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமாக இருந்த பாரோக் (Baroque architecture) கட்டட அமைப்பில் இந்த தேவாலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான முறையில் இருந்து வேறுபட்டு பல புதுமைகளுக்கு இடம் அளிப்பதால் இந்த கட்டட அமைப்பு அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த சிறிய தேவாலயத்தின் உள்ளே மேரி மாதாவின் சிலைக்கு மேல் இருக்கும் மாடத்தின் உட்புறத்தில் தங்க நிறத்தில் அழகிய பூ வேலைப்பாடுகள் கண்ணைப் பறிக்கின்றன. அதேபோல இந்த தேவாலயத்தில் இருக்கும் சிலைகளை சுற்றியும் நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு தரையில் பதிக்கப்பட்டிருக்கும் கற்கள் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது.

இந்த தேவாலயம் இருமுறை கடும் சேதங்களை சந்தித்தது. 1662 - 1673 காலகட்டத்தில் கோல்கொண்டா படைகள் இதனை சேதப்படுத்தின. அடுத்து அதே வேலையை 1780இல் ஹைதர் அலியின் படைகள் செய்தன. அவற்றை எல்லாம் மீறி சுமார் 500 ஆண்டுகால வரலாற்றை சுமந்தபடி இன்றும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது லஸ் தேவாலயம்.

நன்றி - தினத்தந்தி

* 1516இல் பெத்ரோ தெ அடோங்கியா என்ற பாதிரியாரால் கட்டப்பட்டது என்ற செய்தியுடன் பழைய ஐரோப்பிய கல்வெட்டு ஒன்று இங்கிருக்கிறது. இதுவே இந்த தேவாலயத்தின் காலத்திற்கான சாட்சியாக கருதப்படுகிறது.

* 1547 முதல் 1582 வரை இந்த தேவாலயத்தில் மறுகட்டுமானப் பணிகள் நடைபெற்றன.

* மைலாப்பூரின் லஸ் கார்னர் என்ற பெயருக்கு இந்த தேவாலயமே காரணம்.

No comments:

Post a Comment