சமுதாயத்திற்காக
உழைத்து மக்கள் மனதில் நின்றவர்களை வருங்கால சந்ததியினர் மறக்காமல் இருப்பதற்காக
அவர்களின் பெயர்களை தெருக்களுக்கு சூட்டுவது வழக்கம். ஆனால் சென்னையில் பல பிரபல
தெருக்கள் இன்றும் நாம் கேள்விப்படாத ஆங்கிலேயர்களின் பெயர்களைத் தாங்கி
நிற்கின்றன. உண்மையில், இவர்கள் யார்? சமூகத்திற்கு என்ன செய்தார்கள்? என்று
தேடியபோது நிறைய சுவாரஸ்யத் தகவல்கள் கிடைத்தன.
அவற்றை ஆராய்வதற்கு
முன் நாம் ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கிழக்கிந்திய கம்பெனி
இருந்த காலத்தில், சென்னையில் இவ்வளவு பேர் இல்லை. எனவே ஆங்கிலேயர்கள் மிகப்பெரும்
நிலப்பரப்புகளில் தோட்ட வீடுகள் அமைத்து வசதியாக வாழ்ந்திருக்கிறார்கள். காலப்போக்கில்
அங்கு மற்றவர்களும் குடியேறும்போது, அப்பகுதி அந்த தோட்ட வீட்டுக்காரரின் பெயரில்
அழைக்கப்பட்டு அப்படியே நிலைத்துவிடுகிறது.
இதற்கு சிறந்த உதாரணம்
போயஸ் கார்டன். போ (poe) என்பவர் கதீட்ரல் சாலைக்கு
தென்புறம் ஒரு பெரிய தோட்ட வீட்டில் வாழ்ந்திருக்கிறார். இதனால் அது போவின்
தோட்டம் (poe's garden) என்று
அழைக்கப்பட்டது. இது காலப்போக்கில் அப்படியே தமிழில் உச்சரிக்கப்பட்டு 'போயஸ் கார்டன்'
ஆகிவிட்டது. ஜான் சைமன் என்ற ஆங்கிலேயர் 1833ஆம் ஆண்டு எழுதிய டைரிக் குறிப்பில்,
இதுபற்றி குறிப்பிட்டிருக்கிறார். சைமன் தனது குறிப்பில் மேலும் சில ஆங்கில
கனவான்களின் இருப்பிடங்கள் பற்றிய தகவல்களையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
சென்னையின் பிரபல சாலைகளான
ஹாடோஸ் ரோடும், ஹாரிங்டன் ரோடும் இரண்டு அரசு ஊழியர்களின் பெயர்களைத் தாங்கி
நிற்கின்றன. ஜார்ஜ் ஜான் ஹாடோ (George John Haddow) 1805ஆம் ஆண்டு முதல் கிழக்கிந்திய கம்பெனியில்
பணியாற்றியவர், 1827ஆம் ஆண்டுவாக்கில் இவர் வசித்த தெருதான் தற்போது ஹாடோஸ் ரோடு என
அழைக்கப்படுகிறது. அதேபோல, 1784இல் கிழக்கிந்திய கம்பெனியில் இணைந்த வில்லியம்
ஹாரிங்டனுக்கு (William Harrington)
1796இல் சேத்துப்பட்டில் 10 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. அந்த நிலத்தில்தான்
பயணிக்கிறது இன்றைய ஹாரிங்டன் ரோடு. ஹால்ஸ் ரோடு, ஹாரிஸ் சாலை, சேமியர் சாலை,
டெய்லர்ஸ் ரோடு என பல சாலைகளின் கதையும் கிட்டத்தட்ட இதேதான்.
நுங்கம்பாக்கத்தின்
பிரதான சாலையான ஸ்டெர்லிங் ரோடு ஒருகாலத்தில் மாட்டு வண்டிகள் பயணிக்கும் ஒற்றையடி
பாதையாக இருந்தது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்த பகுதியில் ஒரு இடத்தை
வாங்கினார் ஸ்டெர்லிங் (L. K. Sterling). ஆங்கிலேயப் படையில் சாதாரண சிப்பாயாக சேர்ந்த இவர், படிப்படியாக
முன்னேறி செஷன்ஸ் நீதிபதியாகிவிட்டார். அந்த நீதிமானின் நினைவாகத் தான் இன்றும்
நீண்டு கிடக்கிறது ஸ்டெர்லிங் சாலை.
ராயப்பேட்டை
மணிக்கூண்டிற்கு அருகில் தொடங்குகிறது வைட்ஸ் சாலை (Whites Road). சுதந்திரத்திற்கு பிறகும் ஏன் இன்னும் இந்த
வெள்ளைக்கார சாலை இருக்கிறது என்று விசாரித்ததில், வைட் (J. D. White) என்ற ஆங்கிலேயர், கம்பெனி தனக்கு அளித்த
நிலத்தில் இங்கு வீடு கட்டி குடியிருந்தது தெரியவந்தது. இந்த வைட் சாலையை அண்ணா
சாலையுடன் இணைக்கிறது பட்டூலாஸ் சாலை. இதற்கு காரணகர்த்தா ஆங்கிலப் படையில்
கேப்டனாக இருந்த எர்ஸ்கின் பட்டூலா (Archibald Erskine Patullo). இவரும் இந்த பகுதிவாசிதான்.
இதேபகுதியில்
இருக்கிறது வுட்ஸ் ரோடு (Wood's Road). ஆங்கிலேய அரசின் தலைமைச் செயலாளராக இருந்த எட்வர்ட் வுட்டின் வீடு இங்கு
இருந்ததே இதற்கு காரணம். 1822இல் எட்வர்ட் இந்த வீட்டில் தங்கி இருந்தார். பின்னர்
அந்த வீடு கேஸ்டல் ஹோட்டலாக (Castle Hotel) மாறிவிட்டது. ஸ்பென்சர் பிளாசாவுக்கு அருகில், பின்னி நிறுவனத்தின் ஜான்
பின்னி வாழ்ந்த வீடு இருந்த தெரு, இன்றும் பின்னி சாலை என்றுதான்
அழைக்கப்படுகிறது. இப்படி முக்கியப் புள்ளிகள் வசித்த தெருக்களுக்கு எல்லாம்
அவர்களின் பெயர்களை வஞ்சனை இல்லாமல் வைத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள்.
சென்னையில் ஒரு
சிலரின் பதவி கூட தெருப் பெயராக மாறி இருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம்,
எழும்பூரில் இருக்கும் கமாண்டர் இன் சீஃப் (Commander-in-Chief) சாலை. 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில்
இங்கிருந்த ஒரு வீட்டில், ஒரு பெயர் தெரியாத கமாண்டர் இன் சீஃப் வாழ்ந்து, இந்த
பெயருக்கு காரணமாகிவிட்டார். இந்த வீடு பின்னர் விக்டோரியா ஹோட்டலாக மாறிவிட்டது.
ஒருகாலத்தில்
சென்னையில் அனைத்து தெருக்களுமே ஆங்கிலேயர்களின் பெயர்களுடன்தான் இருந்தன. பின்னர்
இவற்றில் பலவற்றை மாற்றி தமிழ் அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் சமூகப் போராளிகளின்
பெயர்களை வைத்தனர். இருப்பினும் இதில் தப்பிப் பிழைத்து இன்றும் தாக்குப்
பிடிக்கிறார்கள் சில ஆங்கிலக் கனவான்கள். கொஞ்சம் நின்று நிதானித்துப் பார்த்தால்,
இதுபோன்ற ஒவ்வொரு பெயர்ப் பலகைக்கு பின்னும் ஒரு கதை கருப்பு வெள்ளையில் ஓடிக்
கொண்டிருப்பது தெரியும்.
நன்றி - தினத்தந்தி
* ஹென்ரி சுலைவன் கிரீம்
என்ற அரசு ஊழியர் வாழ்ந்த சாலைதான் கிரீம்ஸ் ரோடு. கிரீமின் சாலை (Graeme's
Road) என்பதுதான் இப்படி மருவிவிட்டது.
* சாந்தோம் பகுதியில்
இருந்த ஹாமில்டன் பாலம் (Hamilton Bridge) நம்மாட்கள்
வாயில் நுழையாததால் அம்பட்டன் வாராவதி ஆகிவிட்டது. பின்னர் இது மீண்டும் மொழிமாற்றப்பட்டு
பார்பர்ஸ் பிரிட்ஜ் (Barbers Bridge)
ஆனது தனிக்கதை.
No comments:
Post a Comment