என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, August 4, 2012

சேத்துப்பட்டு


சென்னையின் முக்கிய பகுதியாக இருக்கும் சேத்துப்பட்டின் பெயரைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு மழைக்காலம் ஞாபகம் வந்துவிடும். ஒரு சிறிய மழைக்கே சென்னை தெருக்கள் சேறும் சகதியுமாகி விடுவதைப் பார்க்கிறோம். அப்படி ஒரு சேற்றுப்பகுதிதான் பேச்சுவழக்கில் சேத்துப்பட்டு என மாறியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இதுபற்றி ஆராய்ந்தபோது, நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

முதல் சுவாரஸ்யம், இந்த பகுதிக்கு ஏன் சேத்துப்பட்டு எனப் பெயர் வந்தது என்பது பற்றியது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இது ஒரு அக்மார்க் கிராமமாகத் தான் இருந்திருக்கிறது. பின்னர், கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மெட்ராசில் மெல்ல வேர் பரப்ப ஆரம்பித்தபோது கோட்டைக்கு அருகில் இருந்த கிராமங்களை வாங்கத் தொடங்கினர். திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர் ஆகிய கிராமங்களின் வரிசையில் மெட்ராசுடன் இணைந்ததுதான் சேத்துப்பட்டு. ஆனால் அப்போது இதன் பெயர் என்ன என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை.
சேத்துப்பட்டு கிராமம்

இப்படி வாங்கப்பட்ட பகுதியில் ஆங்கிலேயர்கள் பெரிய பெரிய மாளிகைகளையும் தோட்ட வீடுகளையும் கட்டி வசிக்கத் தொடங்கினர். இப்படி ஏறத்தாழ 200 ஆண்டுகாலம் இந்த பகுதியில் நிம்மதியாக வாழ்ந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு மூட்டை முடிச்சுகளோடு இங்கிலாந்திற்கு கப்பல் ஏறினர். அப்போது இங்கிருந்த அவர்களின் வீடுகளை செல்வச் சீமான்களான செட்டியார்கள் அதிகளவில் வாங்கினர். இதனால் செட்டியார்கள் நிறைந்த பகுதியாக இது மாறியதால் செட்டியார்பேட்டை அல்லது செட்டிப்பேட்டை என அழைக்கப்பட்டு அதுவே காலப்போக்கில் சேத்துப்பட்டு என நிலைத்திருக்கிறது.

இங்கு வசித்த செட்டியார்களில் மிகவும் முக்கியமானவர், 19ஆம் நூற்றாண்டில் சென்னையின் மிகப் பெரிய கட்டட காண்ட்ராக்டரான நம்பெருமாள் செட்டி. விக்டோரியா ஹால், சென்னை உயர்நீதிமன்றம்சட்டக்கல்லூரிஎழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரிஅருங்காட்சியகம்கன்னிமாரா நூலகம் என மெட்ராஸ் மாநகரின் பல முக்கிய கட்டடங்கள் இவரது கைவண்ணத்தில் உருவானவைதான்.

இந்தோ சராசனிக் பாணியில் கட்டடங்களை வடிவமைத்த பிரபல ஆங்கிலேய கட்டடக் கலைஞர்கள் அனைவருமே தங்களின் கனவுகளுக்கு உருவம் கொடுக்கும் பொறுப்பை நம்பெருமாள் செட்டியிடம் தான் ஒப்படைத்தார்கள். இந்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காகவே இவர் பச்சையப்பன் கல்லூரிக்கு அருகில் ஒரு பிரத்யேக செங்கல் சூளையை வைத்திருந்தாராம். இதேபோல கட்டடப் பணிக்கு தேவையான மற்ற பொருட்களும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார் நம்பெருமாள் செட்டி. இதற்காக சில பொருட்களை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்து பயன்படுத்தி இருக்கிறார்.

"தாட்டிகொண்ட நம்பெருமாள்' செட்டி என அழைக்கப்பட்ட இவர், ஆரம்ப காலத்தில் ஜார்ஜ் டவுனில் உள்ள தனது பரம்பரை வீடான ஆனந்த பவனத்தில் (தற்போது மைசூர் கஃபே) தான் வசித்து வந்தார். பின்னர் 1905இல் சேத்துப்பட்டில் 'க்ரையாண்ட்' என்ற வீட்டை விலைக்கு வாங்கி குடியேறினார். ஹாரிங்டன் சாலையில் உள்ள இந்த வீட்டுடன் சேர்த்து நம்பெருமாள் செட்டிக்கு சொந்தமாக 99 வீடுகள் இருந்தன. 100வது வீட்டை வாங்கினால் துரதிர்ஷ்டம் வந்துவிடும் என நம்பியதால், செட்டியார் செஞ்சுரி அடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. சேத்துப்பட்டு பகுதியில் இவருக்கு மொத்தம் 2000 கிரவுண்டு நிலம் இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட சேத்துப்பட்டின் பெரும்பகுதியை வாங்கிப் போட்டதாலேயே இவரின் நினைவாக அந்த பகுதிக்கு சேத்துப்பட்டு எனப் பெயர் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கணிதமேதை ராமானுஜம் தனது இறுதி மூச்சை இங்குதான் சுவாசித்தார் என்பது சேத்துப்பட்டிற்கு பெருமை சேர்க்கும் மற்றொரு விஷயம். காசநோய் அதிகமாகி இங்கிலாந்தில் இருந்து திரும்பிய ராமானுஜத்தை நம்பெருமாள் செட்டியார் தனது க்ரையண்ட் இல்லத்தில் தங்க வைத்து சிறப்பு வைத்தியங்களுக்கு  ஏற்பாடு செய்தார். பின்னர் ராமானுஜத்தின் வசதிக்காக க்ரையண்டிற்கு எதிரில் இருந்த கோமேத்ரா என்ற தன்னுடைய இன்னொரு வீட்டில் தங்க வைத்தார். ஆனால் சிறிது காலத்திலேயே ராமானுஜம் காலமானார். ராமானுஜம், கடல் கடந்து வெளிநாடு சென்றதால், அவரது உடலைக்கூட உறவினர்கள் ஏற்கவில்லை. எனவே, நம்பெருமாள் செட்டிதான் ராமானுஜத்தின் ஈமச் சடங்குகளை செய்தார்.

சேத்துப்பட்டு ஏரி
அன்றைய மெட்ராசில் வெளிநாட்டுக் கார் (French Dideon) வைத்திருந்த முதல் இந்தியர் செட்டியார்தான். கார் என்ன பெரிய விஷயம், அவர்தன் சொந்த உபயோகத்திற்காக, நான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயிலே வைத்திருந்தார். திருவள்ளூரில் இருக்கும் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதற்கு செட்டியார் இந்த ரயிலை பயன்படுத்தினார்.

சேத்துப்பட்டின் மற்றொரு முக்கிய விஷயம், 15 ஏக்கருக்கும் அதிகமாக பரந்துவிரிந்திருக்கும் ஏரி. அனேகமாக சென்னைக்குள் இருக்கும் பெரிய நீர்நிலை இதுவாகத் தான் இருக்கும். ஆக்ரமிப்புகள் காரணமாக தற்போது இதில் சிறிதளவே நீர் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் ஓய்வு நேரத்தில் இந்த ஏரியில் மீன் பிடித்து உல்லாசமாக பொழுது போக்கியிருக்கிறார்கள். ஆனால் இப்போது அதெல்லாம் பழங்கதையாகிவிட்டன.

மொத்தத்தில் கடந்த நூற்றாண்டு வரை இயற்கை எழில் சூழ, ரம்மியமாகத் திகழ்ந்த இந்த சேத்துப்பட்டு பகுதி, இப்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த கான்கிரீட் காடாகக் காட்சி அளிக்கிறது. இருப்பினும் இன்றும் எஞ்சி இருக்கும் ஒரு சில பழங்கால கட்டடங்கள் அந்த அழகிய நினைவுகளை அசைபோட உதவுகின்றன.

நன்றி - தினத்தந்தி

* நம்பெருமாள் செட்டியின் சேத்துப்பட்டு வீடு இப்போதும் அவரது குடும்பத்தினர் வசம் உள்ளது. இங்கு சீனா, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட பீங்கான் கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

* சென்னையின் பழைய வண்ணான்துறைகளில் முக்கியமான சேத்துப்பட்டு வண்ணான்துறை, இந்தியாவின் இரண்டாவது பெரிய வண்ணான்துறையாக கருதப்படுகிறது.

* ராமானுஜம் காசநோயால் இறந்த சேத்துப்பட்டில், காசநோய் ஆராய்ச்சி மையம் ஒன்று இருக்கிறது.

1 comment: