என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, June 16, 2012

ஸ்டான்லி மருத்துவமனை


வடசென்னை மக்களின் வாழ்வோடு இரண்டரக் கலந்துவிட்ட ஸ்டான்லி மருத்துவமனை சுமார் இருநூறு ஆண்டுகள் பழமையானது. கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் 17ஆம் நூற்றாண்டில் மெட்ராசில் குடியேறிய பிறகு, அவர்களுக்கு வேலை செய்வதற்காக நிறைய பேர் கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளுக்கு வரத் தொடங்கினர். அப்படி வந்தவர்களால் உருவானதுதான் அன்றைய கருப்பர் நகரம் என அழைக்கப்பட்ட இன்றைய ஜார்ஜ் டவுன் பகுதி.

ஆங்கிலேயர்கள் சென்னையில் காலூன்றியதும், தங்களுக்கான தேவைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பூர்த்தி செய்து கொண்டே வந்தனர். அந்த வரிசையில் நோய்வாய்ப்பட்ட ஆங்கிலேயர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோட்டைக்குள் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அதேசமயம் கோட்டைக்கு வெளியில் இருக்கும் சென்னையின் பூர்வ குடிகளுக்கு மருத்துவம் பார்க்க நவீன மருத்துவர்கள் என்று யாரும் இல்லை. நாட்டு மருத்துவர்கள் தான் அவர்களின் நோய்களுக்கு மருந்து கொடுத்து வந்தனர். எனவே அவர்களுக்கென ஒரு நவீன மருத்துவமனைக்கான தேவை மெல்ல உணரப்பட்டது.

இந்த சூழலில்தான் 1781இல் மெட்ராசில் மிக மோசமான பஞ்சம் தலைவிரித்தாடியது. சென்னையின் சொந்த மக்கள் சோற்றுக்கு வழியில்லாமல் பரிதவித்தனர். இவர்களுக்கு உதவுவதற்காக இன்றைய ஸ்டான்லி மருத்துவமனை இருக்கும் இடத்தில் ஒரு கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து கஞ்சி வாங்கி குடித்து தங்களின் பசியைப் போக்கிக் கொண்டனர். அடுத்த ஓராண்டில் இந்த இடம் ஒரு சத்திரமாக மாறியது.


 
பஞ்சத்தால் வாடியவர்கள் குறிப்பாக முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்த இடம், மணியக்காரர் சத்திரம் என அறியப்பட்டது. நிறைய முதியவர்கள் இருந்ததால், அவர்களுக்கு மருத்துவ வசதியும் தேவைப்பட்டது. எனவே கிழக்கிந்திய கம்பெனி மருத்துவரான ஜான் அண்டர்வுட்டின் (John Underwood) முயற்சியால் இந்த இடத்தில் ஒரு சிறிய மருத்துவமனையும், தொழுநோயாளிகளுக்கான இல்லமும் தொடங்கப்பட்டது. 1799இல் தொடங்கப்பட்ட இதுதான் உள்ளூர்வாசிகளுக்கென பிரத்யேகமாக உருவான சென்னை மாநகரின் முதல் நவீன மருத்துவனை. இதனை உள்ளூர்வாசிகள் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று அழைத்தார்கள்.

காலப்போக்கில் இதற்கு அருகில் வெங்கடகிரி சத்திரம், ராஜா சர் ராமசாமி முதலியார் மகப்பேறு மருத்துவமனை என சில சிறிய கட்டடங்கள் தோன்றின. இவை அனைத்தும் மணியக்காரர் சத்திரத்தின் தலைமையில் இயங்கி வந்தன. இந்த சிறிய மருத்துவமனையில் ஒரு மருத்துவர், மருந்து கொடுப்பவர் ஒருவர், கண்காணிப்பாளர் ஒருவர் என மூன்று பேர் பணியாற்றி வந்ததாக 1889ஆம் ஆண்டு ஆவணங்கள் சொல்கின்றன.

இதனிடையே 1836இல் மெட்ராஸ் பல்கலைக்கழகம், இந்த மருத்துவமனையில் சில மருத்துவப் படிப்புகளை தொடங்கியது. 1903இல் மருத்துவமனை உதவியாளர் என்ற படிப்பும் புதிதாக சேர்க்கப்பட்டது. இங்கு பயின்று வெளிவரும் மாணவர்களுக்கு, 1911ஆம் ஆண்டு முதல் சான்று பெற்ற மருத்துவர் (Licensed Medical Practitioner) என்ற சான்றிதழ் கொடுக்கும் முறை உருவானது.

இப்படி மருத்துவப் படிப்புகள் அதிகரித்துக் கொண்டே வந்த வேளையில், இதனை நவீன மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றது. இதனையடுத்து 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பென்ட்லாண்ட் பிரபு புதிய மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார். ஆனால் அடுத்த வருடமே முதல் உலகப் போர் வந்துவிட்டதால், மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் முடங்கின. இருப்பினும் உலகப் போரால் காயமுற்ற வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இங்கிருக்கும் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் அரும்பணியாற்றினர். சிலர் போர்முனைக்கே சென்றும் மருத்துவம் பார்த்து தங்களின் உயிரையும் பறிகொடுத்தனர். அவர்களை கவுரவிக்கும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்திற்குள் ஒரு நினைவுத் தூண் வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஒருவழியாக 1917இல் புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. அப்போதெல்லாம் இது ராயபுரம் மருத்துவமனை மற்றும் மருத்துவப் பள்ளி என்றுதான் அழைக்கப்பட்டது. பின்னர் 1934ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி தான் இது ஸ்டான்லி மருத்துவப் பள்ளி என பெயர் மாற்றப்பட்டது. அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் பிரெட்ரிக் ஸ்டான்லியின் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது.

பின்னர் 1938இல் இந்த மருத்துவப் பள்ளி மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் மருத்துவத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் டிஎஸ்எஸ் ராஜம் தான் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார். இவரே ஸ்டான்லி மருத்துவப் பள்ளியின் மாணவர் என்பதுதான் இதில் விசேஷமானது.

பின்னர் காலப்போக்கில் மருத்துவத்துறை வேகமாக முன்னேற, அந்த முன்னேற்றங்கள் அனைத்தும் ஸ்டான்லி மருத்துவமனையிலும் எதிரொலித்தன, தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டும் இருக்கின்றன. மொத்தத்தில், மக்களின் பசியாற்றும் சாதாரண கஞ்சித் தொட்டியில் இருந்து உருவான இந்த மருத்துவமனை, இன்று உலக அளவில் சத்தமில்லாமல் பல சாதனைகளைப் புரிந்துகொண்டிருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

சுத்தத்திற்கு முன்னுரிமை

ஸ்டான்லி மருத்துவனையின் சுத்தம் பற்றி நிறைய கதைகள் சொல்லப்படுகின்றன. ஒருமுறை லெப்டினன்ட் கர்னல் டி.ஜி. ராய் என்ற மருத்துவர் ரவுண்ட்ஸ் வரும்போது வெலிங்டன் வார்டில் இருந்த இத்தாலிய மார்பிள் தரையில் வழுக்கி விழுந்து விட்டாராம். இருப்பினும் விழுந்து எழுந்த கையோடு, அந்த தரையை அவ்வளவு பளபளப்பாக துடைத்து வைத்த ஊழியரை அழைத்து வெகுவாகப் பாராட்டினாராம். அந்தளவு அன்றைய மருத்துவர்கள் சுத்தத்தில் மிகவும் கவனமாக இருந்திருக்கின்றனர்.

---------

* ஸ்டான்லி மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக உள்ளனர். ஒரு நாளைக்கு சுமார் 8000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

* ஸ்டான்லி மருத்துவமனை கை மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையிலும், இரைப்பை, குடல் சார்ந்த சிகிச்சையிலும் இந்திய அளவில் சிறந்து விளங்குகிறது. 

2 comments: