என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, March 18, 2012

ராணி மேரிக் கல்லூரி

வங்கக்கடலின் காற்றுக்கு மேலும் குளிர்ச்சி கூட்டியபடி கடற்கரைச் சாலையில், கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் ராணி மேரிக் கல்லூரிதான் மெட்ராசின் முதல் பெண்கள் கல்லூரி. தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் இரண்டாவது பெண்கள் கல்லூரி என்ற பெருமையும் இதற்கு உண்டு. கடலைப் பார்த்தபடி மரங்களுக்கு இடையில் அமைதியாக காட்சியளிக்கும் இந்த கட்டடம் கல்லூரியாக மாறியதே ஒரு சுவாரஸ்யமான கதை.

ஜூலை 1914இல் மதராஸ் மகளிர் கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இது, அதற்கு முன்பு ஹோட்டலாகவும், அதற்கும் முன்பு தனியார் ஒருவரின் வீடாகவும் இருந்தது. கர்னல் பிரான்சிஸ் கேப்பர் (Col. Francis Capper) என்ற ராணுவ வீரர் கடற்கரைக்கு எதிரில் ஒரு வீடு கட்டினார். எனவே இந்த வீடு கேப்பர் இல்லம் (Capper’s House) என அழைக்கப்பட்டது. அவர் இந்தியாவை விட்டு வெளியேறும்போது, இந்த வீட்டை விற்றுவிட்டார். அடுத்து அங்கு ஒரு ஹோட்டல் முளைத்தது. அதையும் மக்கள் கேப்பர் ஹோட்டல் என்றுதான் அழைத்தனர். மெரினா சாலைக்கு வந்த முதல் ஹோட்டல் அதுதான். ஆனால் அந்த ஹோட்டலில் அதிக வருமானம் கிடைக்கவில்லை.

இதனிடையே 1910களில் பெண்களுக்கென ஒரு கல்லூரி தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது. இதற்கான இடம் தேடும் பணியும் ஒருபுறம் நடைபெற்றது. ஹோட்டலிலும் அதிக வருமானம் இல்லாததால் கேப்பர் இல்லத்தையே கல்லூரியாக மாற்றிவிடலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு பின்னணியில் மெட்ராஸ் வர்த்தக சபையின் பங்கு இருந்ததாக கூறப்படுகிறது. காரணம், வர்த்தக சபையின் தலைவர் பியர்ட்செல்ஸின் (WA Beardsells) எக்மோர் இல்லத்தை கல்லூரியாக மாற்றலாம் என்றும் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதனை தவிர்ப்பதற்காக கேப்பர் இல்லத்தை கைகாட்டி விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஒருவழியாக 1914இல் கேப்பர் இல்லத்தில் மதராஸ் மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆரம்பித்தபோது 37 பெண்கள் இதில் சேர்ந்தனர். முதல் முதல்வரான டி லா ஹே (Ms de la Haye) கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டார். அவரது அயராத முயற்சியால் கல்லூரி வளாகத்தில் Pentland House (1915), Stone House (1918), Jeypore House(1921) ஆகிய கட்டடங்கள் கட்டப்பட்டன. இதனிடையே 1917இல் இது ராணி மேரிக் கல்லூரி எனப் பெயர் மாற்றப்பட்டது. கல்லூரிக்கு அருகில் இருந்த நீதிபதி சுப்பிரமணிய ஐயரின் பீச் இல்லம், நீதிபதி சங்கர ஐயரின் இல்லம் ஆகிய இரண்டு கட்டடங்கள் விலைக்கு வாங்கி கல்லூரியுடன் இணைக்கப்பட்டன.

எத்தனை கட்டடங்கள் வந்தாலும், இவற்றிற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட கேப்பர் இல்லம்தான் கல்லூரியின் முக்கியப் பகுதியாக விளங்கி வந்தது. 1990களில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், கேப்பர் இல்லம் சிதிலமடைந்தது. இதனை தொடர்ந்து பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்பதால், அதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது. இங்கிருந்த அலுவலகங்கள் வேறு கட்டடங்களுக்கு மாற்றப்பட்டன.

இதனிடையே 2003இல் ராணி மேரிக் கல்லூரியை இடம் மாற்றிவிட்டு, அங்கு புதிய தலைமைச் செயலகம் கட்டப் போவதாக தமிழக அரசு அறிவித்தது. கல்லூரி மாணவிகள் பொங்கி எழுந்து போராட்டத்தில் குதித்தனர். கையெழுத்து இயக்கங்கள் நடத்தப்பட்டன, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசியல் கட்சிகள் இப்பிரச்னையை கையில் எடுத்தன. இப்படி பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து இந்த முடிவு கைவிடப்பட்டது. இந்நிலையில் தான் ஒருநாள் இரவு கேப்பர் இல்லத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது.

இதனை சீரமைப்பதற்கு பதிலாக, இந்த கட்டடம் ஒட்டுமொத்தமாக இடிக்கப்பட்டு, அங்கு ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதேபாணியில் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டாலும், பழைய கட்டடத்திற்கும் புதியதற்கும் பெரிய ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. 2010ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இந்த கட்டடத்திற்கு கலைஞர் மாளிகை எனப் பெயரிடப்பட்டது. இப்போது இது 'கலை மாளிகை'யாக மாறிவிட்டது.

இங்கிருக்கும் கட்டடங்களின் கதைகளைவிட, இங்கு பயின்று செல்லும் பெண்களின் கதைதான் மிக முக்கியம். அந்த வகையில், மெட்ராசின் முதல் பெண்கள் கல்லூரியாக உருவெடுத்து எத்தனையோ பெண்களின் வாழ்வையே மாற்றி இருக்கிறது இந்த ராணி மேரிக் கல்லூரி. சாமானியர்களாக, சாதாரண குடும்பத்தில் இருந்து படிக்க வந்த ஆயிரக்கணக்கான பெண்கள், சாதனைப் பெண்களாகும் வல்லமையுடன் இங்கிருந்து வெளியில் சென்றிருக்கிறார்கள். இப்படி சத்தமின்றி தொடர்ந்து சரித்திரங்களை படைத்து வரும் இந்த கல்லூரி விரைவில் நூற்றாண்டு விழா கொண்டாடத் தயாராகி வருகிறது.

நன்றி - தினத்தந்தி

* கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய முதல்வர் டி லா ஹேவிற்கு கல்லூரி வளாகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

* அரசு மகளிர் கல்லூரிகளில் ராணி மேரிக் கல்லூரிதான் முதலில் (1987) தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

No comments:

Post a Comment