என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, December 31, 2011

மவுண்ட் ரோடு

ஞாயிற்றுக்கிழமை மத்தியான நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக காட்சியளிக்கும் மவுண்ட் ரோடு எனப்படும் அண்ணா சாலையைப் பார்க்கும்போது, மனம் மெல்ல பின்னோக்கிச் செல்கிறது. இது சுமார் 400 ஆண்டுகால ஃபிளாஷ்பேக். ஆம், சென்னையின் இந்த முக்கியமான சாலை 370 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் இன்று வரை மவுண்ட் ரோட்டின் மாறுபட்ட காட்சிகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம், தொடர்ந்து பார்த்தும் வருகிறோம். இன்று நவீன ரக கார்களும், சொகுசுப் பேருந்துகளும் ஓடும் இந்த சாலையில் ஒரு காலத்தில் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும், டிராம் வண்டிகளும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தன.

கிழக்கிந்திய கம்பெனியார் சென்னை நகரில் கோட்டை கட்டிக் குடியேறிய உடனே உருவான வெகு சில விஷயங்களில் இந்த சாலையும் ஒன்று. ஜார்ஜ் கோட்டைக்கு தெற்கே கூவம் ஆற்றிற்கு அருகில் தொடங்கி பரங்கிமலை வரை சுமார் 15 கி.மீ நீளத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் புனித தோமையார் மலையில் சென்று வழிபாடு நடத்துவதற்கு வசதியாக இந்த அகன்ற சாலை அமைக்கப்பட்டது. 1781-1785 காலகட்டத்தில் சார்லஸ் மெக்கார்டினி (Charles MaCartney) என்பவர் மெட்ராஸ் ஆளுநராக இருந்தபோதுதான், மவுண்ட் ரோடு இன்றைய வடிவத்தைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்த சாலையின் இருபுறமும் வணிக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் முளைக்கத் தொடங்கின. இந்து பத்திரிகை அலுவலகம், ஹிக்கின்பாதம்ஸ், ஆயிரம் விளக்கு மசூதி, பிரிட்டீஷ் கவுன்சில், அண்ணா அறிவாலயம் என இந்த பட்டியல் மிக நீளமானது. சென்னையின் முதல் 14 மாடிக் கட்டடமான எல்ஐசியும் இந்த சாலையில் தான் இருக்கிறது.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சில கட்டடங்கள் கடந்துபோன காலத்தை நினைவுபடுத்தியபடியே இன்றும் நின்று கொண்டிருக்கின்றன. 'தி மெயில்' பத்திரிகை அலுவலகம், சிதிலமடைந்து காணப்படும் பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம் ஆகியவை அவற்றில் சில. இங்கிருக்கும் பி.ஆர் அண்டு சன்ஸ் கடிகார கம்பெனி இன்றும் தனது புராதனக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

மவுண்ட் ரோட்டின் மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம், இங்கிருக்கும் சிலைகள். சாலையின் ஆரம்பத்திலேயே இருக்கிறது மேஜர் ஜெனரல் சர் தாமஸ் மன்றோவின் சிலை. 1820 - 1827இல் சென்னையின் ஆளுநராக இருந்தவர் மன்றோ. லண்டனின் எஃப் சான்ட்ரீ என்பவர் 1838இல் உருவாக்கிய இந்த சிலைக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. அதாவது, பண்டைய ரோம சிற்ப சாஸ்திர அடிப்படையில் இந்த சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

மன்றோவைத் தொடர்ந்து காமராஜர், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், முத்துராமலிங்கத் தேவர், ராமசாமிப் படையாச்சி, தீரன் சின்னமலை, நேரு என மக்கள் மனதில் நின்ற தலைவர்கள் இந்த சாலை நெடுகிலும் சிலைகளாக நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த சாலையில் இருக்கும் ஜெமினி மேம்பாலம்தான் சென்னையின் முதல் மேம்பாலம்.

அண்ணா, சாந்தி, தேவி என சினிமா ரசிகர்களுக்கும் இந்த சாலை விருந்து படைக்கிறது. அருகில் இருக்கும் காஸினோ திரையரங்கில் அந்தக் காலத்தில் படம் பார்க்க டிக்கெட் கிடைக்காதவர்கள் பக்கத்து சந்துகளில் நின்றுகொண்டு படத்தின் வசனங்களையும், பாடல்களையும் கேட்பார்களாம். இதற்கு அருகில் இருந்த சென்னையின் பழமையான கெயிட்டி திரையரங்கு இன்று இடிக்கப்பட்டு விட்டது. இதேபோன்று ஆனந்த், குளோப், வெலிங்டன், சஃபயர் காம்பிளக்ஸ் போன்ற திரையரங்குகளும் மவுண்ட் ரோட்டில் இருந்து மறைந்துவிட்டன.

ஒருகாலத்தில் மவுண்ட் ரோட்டில் இரவில் ரிக்ஷாவில் போனால் பிசாசு பின்தொடரும் என்ற பயம் இருந்ததாம். அருகில் இருக்கும் பெரிய கிறிஸ்தவ இடுகாடு, கவர்ன்மென்ட் எஸ்டேட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆகியவை இந்த பயத்தின் பின்னணியாக இருக்கலாம் என தன்னுடைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் அசோகமித்திரன்.

இப்படி மவுண்ட் ரோடாக உருவாகி இன்று அண்ணா சாலையாக மாற்றம் பெற்றிருக்கும் இந்த சாலையைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. அவற்றை எல்லாம் பட்டியலிட்டால் அது முடிவுறாமல் நீண்டு கொண்டே செல்லும்.

நன்றி - தினத்தந்தி

* மெட்ரோ பணிகள் நடைபெறுவதையொட்டி இந்த சாலையில் விரைவில் ரயில்களும் பயணிக்க இருக்கின்றன.

* இந்த சாலையில் இருந்த ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் என்பவரின் சிலை மக்கள் போராட்டம் காரணமாக 1937இல் நீக்கப்பட்டுவிட்டது.

* அண்ணாசாலை தபால் நிலையத்தில் தற்போது சிறப்புத் தபால் தலைகள் காப்பிடமாக இயங்கும் கட்டடத்தில்தான் நூறாண்டுகள் முன்பு எலெக்ட்ரிக் தியேட்டர்இருந்தது. தமிழகத்தின் முறையானமுதல் சினிமாக் கொட்டகை இதுதான்.

No comments:

Post a Comment