என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, August 11, 2010

கேரளத்து யூதக் கோவில்



கேரள மாநிலம் கொச்சினில் உள்ள அந்த குறிப்பிட்ட பகுதிக்குள் நுழையும் அனைவரும் திடீரென சற்று குழம்பித் தான் போவார்கள். இந்த குழப்பத்துக்கு காரணம் அங்கு உள்ள சினகாக் எனப்படும் யூதக் கோவில். நீங்கள் பாலஸ்தீனத்தில் இருப்பது போன்ற தோற்றதை உருவாக்கும் இந்த யூதக் கோவில்தான், காமன்வெல்த் நாடுகளில் இருப்பதிலேயே மிகப் பழமையானது. கொச்சின் மன்னர் ராம வர்மா தானமாக வழங்கிய நிலத்தில் மட்டன்சேரி அரண்மனைக்கு பக்கத்தில் 1568-ம் ஆண்டு இந்த புராதன கோவில் கட்டப்பட்டது. அங்கு வாழ்ந்த யூதர்கள், டச்சுக்காரர்களின் உதவியுடன் இதைக் கட்டியதால் இதற்கு பரதேசி (வெளிநாட்டினர்) கோவில், கொச்சின் யூதக் கோவில், மட்டன்சேரி கோவில் என பல பெயர்கள் உள்ளன.

படகு மூலம் வேம்பனாடு ஏரியைக் கடந்து சென்றால் யூதத் தெருவில் அமைந்துள்ள இந்த அற்புத கோவிலை சென்றடையலாம். உள்ளே நுழைந்ததும் ஒரு சிறிய அருங்காட்சியகம் போன்ற அறை உள்ளது. இதில் கேரள பூமிக்குள் யூதர்கள் நுழைந்தது முதல் இந்த கோவில் கட்டப்பட்டது வரை பல அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கி.மு. 992-ல் பாலஸ்தீனத்தை சாலமன் மன்னர் ஆண்ட காலத்தில் இருந்தே யூதர்களுக்கும் மலபார் மக்களுக்கும் வர்த்தக தொடர்புகள் இருந்திருக்கின்றன. பின்னர் ரோமானியர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யூதர்கள் உலகின் பல மூலைகளுக்கும் சிதறிய போது ஒரு பிரிவினர் கேரளாவில் தஞ்சம் அடைந்தனர்.
கட்டிடக் கலையிலும் இந்த யூதக் கோவில் சிறந்து விளங்குகிறது. தரையில் பதிக்கப்பட்டுள்ள அழகிய சீனத்து நீலம் மற்றும் வெள்ளை கற்களில் பல்வேறு ஓவியக் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. கூரைகளை பெல்ஜியத்தின் பிரம்மாண்ட சரவிளக்குகளால் அலங்கரித்துள்ளனர். அறையின் நடுவில் அலங்கரிக்கப்பட்ட பித்தளைத் தூண்களால் சூழப்பட்ட பிரசங்க மேடை, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கிறது. பெண்கள் அமர்ந்து கேட்பதற்கு வசதியாக தனியாக பால்கனி ஒன்றும் உள்ளது.

யூதர்களின் புனித நூலாக கருதப்படும் ‘டோரா’ இங்கு பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி 2000 ஆண்டுகளுக்கு முன்னால் மலபார் பகுதியில் வாழ்ந்த யூதர்களுக்கு மலபார் மன்னர் வழங்கிய செப்புப் பட்டயங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெள்ளி, சனி மற்றும் யூத விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் இந்த கோவில் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கிறது.

1 comment: