என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, August 11, 2010

சூரியக் கோட்டை



சுட்டெரிக்கும் ராஜஸ்தான் பாலைவனத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட கோட்டை தான் ஜெய்சல்மீர் கோட்டை. ஜெய்சல்மீர் நகரின் மையப் பகுதியில் இந்த கோட்டை அமைந்துள்ளது. இப்பகுதியை ஆண்ட ரஜபுத்திர மன்னரான ராஜா ராவல் ஜெய்சால் ஏறத்தாழ கிபி 1156-ல் இந்த நகரை உருவாக்கியதாகக் கூறுகிறார்கள். ஈசால் என்ற துறவியின் கட்டளைப் படி, ராஜா ஜெய்சால் இந்த நகரை உருவாக்கியதாகவும் சில நாட்டுப்புறக் கதைகள் புழக்கத்தில் உள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்திலேயே இரண்டாவது மிகப் பழமையான கோட்டை ஜெய்சல்மீர் கோட்டை தான். இதனை சோலார் கிலா (சூரியக் கோட்டை) என இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். சுமார் 250 அடி உயரமான இந்த கோட்டையைச் சுற்றி 30 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பி கோட்டையைப் பலப்படுத்தியுள்ளனர். இதற்குள் மொத்தம் 99 அரண்மனைகள் உள்ளன. இவற்றில் 92 அரண்மனைகள் கிபி 1633 - 1647 வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டுள்ளன. இவற்றை சுற்றிப் பார்த்தால் பல இடங்கள் ரஜபுத்திர மற்றும் இஸ்லாமிய கட்டடக்

கலையின் கலவையில் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும்.
இன்றைக்கும் ஜெய்சல்மீர் நகரின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இந்த கோட்டைக்குள் தான் வசிக்கிறார்கள். அதேபோல இந்த கோட்டைக்குள் உள்ள கிணறுகளில் இன்றும் தொடர்ந்து தண்ணீர் கிடைக்கிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நடைபெறும் பாலைவனத் திருவிழாவைக் காணவும், ஒட்டக சவாரி செய்யவும் ஏராளமான வெளிநாட்டினர் ஜெய்சல்மீர் வருகின்றனர்.

எகிப்து. அரேபியா, பெர்ஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் இந்தியாவிற்குள் வரும் முக்கியப் பாதையாக விளங்கியதால் ஒரு காலத்தில் ஜெய்சல்மீர் செல்வம் கொழிக்கும் நகராக இருந்தது. ஆனால் 19-ம் நூற்றாண்டில் பம்பாய் போன்ற துறைமுகங்களின் வழியாக வணிகர்கள் வரத் தொடங்கியதும், ஜெய்சல்மீர் தனது பழைய பொலிவை இழந்துவிட்டது. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இந்த பாலைவனப் பகுதி ராணுவத்தினரின் கூடாரமாக மாறி விட்டது.

No comments:

Post a Comment