என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Friday, September 23, 2011

சென்னை அரசு பொதுமருத்துவமனை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில், மருந்து வாசனையோடு பிரம்மாண்டமாக நின்று கொண்டிருக்கும் பச்சைக் கட்டடத்திற்கு ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் இருக்கிறது. தினமும் பல உயிர்களை காப்பாற்றிக் கரை சேர்த்துக் கொண்டிருக்கும் இந்த கட்டடத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. அரசு பொதுமருத்துவமனைக்கான அடிக்கல், கிழக்கிந்திய கம்பெனி சென்னையில் கால்பதித்த காலத்திலேயே நாட்டப்பட்டு விட்டது.

1639இல் மெட்ராசில் குடியேறிய ஆங்கிலேயர்கள் முதலில் தங்களுக்கென ஒரு கோட்டையை கட்டிக் கொண்டனர். பின்னர் மற்ற வசதிகளை ஏற்படுத்தத் தொடங்கிய அவர்கள், தங்களுக்கென ஒரு மருத்துவமனை அவசியம் என்பதை உணர்ந்தனர். இதன் விளைவாக சர் எட்வர்ட் விண்டர் என்பவர் புனித ஜார்ஜ் கோட்டைக்குள் ஒரு அரசு பொது மருத்துவமனையைத் தொடங்கினார். கிழக்கிந்திய கம்பெனி வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1664ஆம் ஆண்டு நவம்பர் 16ந் தேதி சிறிய அளவில் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது.


சர் எலிஹூ யேல் கவர்னராக இருந்தபோது, 1690இல் இந்த மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டது. பிரெஞ்சுப் படைகளுடனான யுத்தத்திற்கு பிறகு 1772இல், இந்த மருத்துவமனை கோட்டையைவிட்டு வெளியேறி தற்போதைய இடத்திற்கு வந்து சேர்ந்தது. அதன் பின்னர் இதன் வளர்ச்சி வேகம் எடுக்கத் தொடங்கியது. சிகிச்சை அளிப்பதோடு மட்டும் நின்று விடாமல், நவீன மருத்துவத்தை பிறருக்கு கற்றுத் தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இங்கு பயிற்சி பெற்றவர்கள் அன்றைய மெட்ராஸ் ராஜதானியின் மாவட்ட தலைமையகங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.


பிப்ரவரி 2, 1835இல் அப்போதைய மெட்ராஸ் கவர்னராக இருந்த சர் ஃபிரெட்ரிக் ஆடம்ஸ் இதையே முறையான மருத்துவப் பள்ளியாகத் தொடங்கி வைத்தார். இது அரசு பொது மருத்துவமனையோடு இணைக்கப்பட்டது. மருத்துவமனையும், மருத்துவப் பள்ளியும் ஒன்றாக இணைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1850, அக்டோபர் 1ஆம் தேதி, இந்த பள்ளியின் பெயர் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் என மாற்றப்பட்டது. இப்படிப் பல பரிமாண வளர்ச்சிகளுக்கு பிறகு மெட்ராஸ்வாசிகளுக்கு ஒருவழியாக முறையான ஒரு மருத்துவக் கல்லூரி கிடைத்தது.

நிறைய மாணவர்களை மருத்துவர்களாக மாற்றி அனுப்பிக் கொண்டிருந்த இந்த கல்லூரியின் வரலாற்றில் 1875ஆம் ஆண்டு மறக்கமுடியாததாக மாறியது. ஆம், அந்த ஆண்டில்தான் இந்தக் கல்லூரி உலக வரலாற்றில் நிரந்தரமாக இடம்பிடித்தது. அதற்கு காரணம் மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப் (Mary Ann Dacomb Scharlieb) என்ற 30 வயது பெண்மணி. இவர் தான் உலகிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்த முதல் மாணவி. அந்த காலத்தில் உலகின் அனைத்து நாடுகளிலும் ஆண்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.


இந்த தருணத்தில்தான் மேரிக்கு வாசல் திறந்து உலகிற்கே முன்னுதாரணமாக மாறியது மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி. பின்னர் இங்கிலாந்து சென்று மருத்துவத்தில் மேல் படிப்பு முடித்த மேரி, இந்தியாவிற்கு திரும்பி ஒரு மருத்துவமனையை ஆரம்பித்தார். அதுதான் திருவல்லிக்கேணியில் தற்போது இயங்கி வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை. உலகின் முதல் பெண் மருத்துவரால் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பிரத்யேக மருத்துவமனை.


ஆண்களால் நடத்தப்படும் மருத்துவமனைகளுக்கு பெண்கள் செல்லத் தயங்குவார்கள் என்பதால் டாக்டர் மேரி இந்த மருத்துவமனையைத் தொடங்கினார். இதற்காக ராணி விக்டோரியாவிடம் அனுமதி பெற்று அவரது பெயரை இந்த மருத்துவமனைக்கு சூட்டினார். இந்த மருத்துவமனை முதலில் நுங்கம்பாக்கத்தில்தான் இயங்கி வந்தது.


பின்னர் 1890இல் மெட்ராஸ் அரசு இந்த மருத்துவமனைக்காக சேப்பாக்கத்தில் ஒரு இடத்தை தானமாக வழங்கி, ரூ10,000 நன்கொடையும் கொடுத்தது. இதுமட்டுமின்றி ஓராண்டுக்கு தேவையான மருந்துகளும் இலவசமாக அளிக்கப்பட்டன. தற்போது இருக்கும் மருத்துவமனையின் பிரதான கட்டடம், வெங்கடகிரி ராஜா கொடுத்த ஒரு லட்ச ரூபாய் நன்கொடையில் கட்டப்பட்டது.
இவரைப் போல இன்னும் நிறைய பெண் மருத்துவர்களை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி பெற்றெடுத்தது. அவர்களில் முக்கியமானவர் கிருபை சத்தியநாதன். அவர்தான் இங்கு பயின்ற முதல் இந்திய மாணவி. ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக அவர் முதல் ஆண்டுடன் தனது படிப்பை கைவிட வேண்டியதாகிவிட்டது. பின்னர் அவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராக உருவெடுத்தார். 1884ஆம் ஆண்டு அபலா தாஸ், ரோஸ் கோவிந்தராஜூலு, குர்தியால் சிங் ஆகிய மூன்று இந்திய மாணவிகள் இந்த கல்லூரியில் சேர்ந்து வெற்றிகரமாக தங்கள் LMS படிப்பை முடித்தனர்.


இந்த கல்லூரியில் இருந்து 1912இல் MBBS பட்டம் பெற்று வெளியேறிய முதல் இந்திய மாணவிதான் புகழ்பெற்ற டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி. அவர் தொடங்கியதுதான் அடையாரில் இருக்கும் புற்றுநோய் மருத்துவமனை. இப்படிப் பல பெருமைகளைப் பெற்ற மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி 1938 வரை ஆங்கிலேயே முதல்வர்களால் தான் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டாக்டர் சர் ஆர்காடு லட்சுமணசாமி முதலியார். முதல் இந்திய முதல்வரான டாக்டர் ஏ.எல். முதலியாரின் சிலை கல்லூரி வளாகத்தில் இன்றும் நம்மை வரவேற்றுக் கொண்டிருக்கிறது.
1996இல் மெட்ராஸ் நகரம் சென்னை என பெயர் மாற்றம் அடைந்தபோது, இந்த கல்லூரியின் பெயரும் சென்னை மெடிக்கல் காலேஜ் என மாறியது. ஆனால் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் என்பது தான் உலகம் முழுவதும் அறியப்பட்ட பெயராக இருந்ததால், விரைவிலேயே அது மீண்டும் தனது பழைய பெயருக்கே திரும்பிவிட்டது.


சென்னை அரசு பொதுமருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் கால ஓட்டத்தில் நிறைய மாற்றங்களை சந்தித்திருந்தாலும், சுமார் 340 ஆண்டுகளைக் கடந்தும் மனித சமூகத்திற்கு சேவையாற்றும் அதன் தாயுள்ளம் மட்டும் மாறவே இல்லை. கிட்டத்தட்ட சென்னை நகரம் பிறந்தபோது, கூடவே பிறந்து வளர்ந்த இந்த மருத்துவ மையம், சென்னையின் நாடியை இன்றும் அக்கறையுடன் பிடித்துப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது.
----------------------------
* இந்தியாவிலேயே கம்பவுண்டர் என்ற பதவியை 1897ஆம் ஆண்டே உருவாக்கி அதற்கான படிப்பை கற்றுத் தந்த முதல் கல்லூரி என்ற பெருமையும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிக்கு உண்டு.




* டாக்டர் ஏ.எல். முதலியார் எழுதிய மருத்துவப் புத்தகங்கள் லண்டன் பல்கலைக்கழகத்தில் இன்றும் பாடப் புத்தகங்களாக இருக்கின்றன.




* எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, கண் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை என 8 மருத்துவமனைகள் இந்த கல்லூரியின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.

Friday, September 16, 2011

கெயிட்டி திரையரங்கம்

அண்ணாசாலையில் இருந்து புதுப்பேட்டைக்கு திரும்பும் வழியில் இருந்த கெயிட்டி திரையரங்கம் அந்தக் கால மெட்ராஸ்வாசிகளின் சொர்க்கபுரிகளில் முக்கியமானது. இந்தியாவில் சினிமா அடியெடுத்து வைத்த காலத்திலேயே அதனை மெட்ராஸ்வாசிகளுக்கு அறிமுகம் செய்துவைத்த சிறப்பு இந்த திரையரங்கிற்கு உண்டு. கெயிட்டி உருவான கதை அதில் திரையிடப்பட்ட சினிமாக்களின் கதையைவிட மிகவும் சுவாரஸ்யமானது.

மெட்ராசில் முதன்முதலில் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில்தான் 1897ஆம் ஆண்டு திரைப்படம் திரையிடப்பட்டது. அதனை திரைப்படம் என்று கூட சொல்ல முடியாது. நிறைய புகைப்படங்கள் அடுத்தடுத்து ஸ்லைட் ஷோ மாதிரி நகரும் சலனப்படக் காட்சி என்று சொல்லலாம். இதனை எட்வர்டு என்ற ஐரோப்பியர் திரையிட்டார்.

அதன் பிறகு வார்விக் மேஜர் என்ற ஆங்கிலேயர், மெளன்ட் ரோடில் எலக்ட்ரிக் தியேட்டர்என்ற அரங்கை கட்டினார். இதில் சில ஆண்டுகள் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்தன. இந்தக் கட்டிடம் தற்போது தலைமை தபால்நிலைய அலுவலக வளாகத்தின் உள்ளே இருக்கிறது. இதுதான் மெட்ராசில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு. இது மெட்ராசில் இருந்த ஆங்கிலேயர்களின் மாலைப் பொழுதை இனிமையாக்கி வந்தது.

இந்த சூழலில்தான், 1909ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஐந்தாம் ஜார்ஜ் மெட்ராஸ் வந்தார். அவரது வருகையை கொண்டாடும் விதமாக ஒரு பிரம்மாண்ட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஒலியுடன் கூடிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதற்காக பிரிட்டன் கம்பெனி ஒன்று 'க்ரோன்-மெகாபோன்' என்ற கருவியை கொண்டு வந்திருந்தது. இது கிராமபோன் பொருத்தப்பட்ட படப் புரொஜக்டர். திரையில் படம் ஓடும்போது, அதற்கேற்ப ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலி கிராமபோனில் இருந்து ஒலிக்கும். எனவே நடிகர்களின் உதட்டசைவும், திரையில் வரும் ஒலியும் ஒத்திசைவுடன் இருக்காது. இருப்பினும் திரையில் மனிதர்கள் பேசுவதையும், வண்டிகள் ஓடுவதையும் மெட்ராஸ்வாசிகள் வாயைப் பிளந்து பார்த்தனர்.

இதனை ரகுபதி வெங்கய்யா என்ற புகழ்பெற்ற ஸ்டில் போட்டோகிராபர் பார்த்தார். அவரது வணிக மூளைக்கு ஏதோ பொறி தட்டியது. கண்காட்சி முடிந்ததும் அந்த கருவியை பிரிட்டன் நிறுவனத்திடம் இருந்து ரூ.30,000 கொடுத்து வாங்கிவிட்டார்.

அந்த கருவி வெங்கய்யாவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு அருகில் ஒரு கொட்டகை போட்டு அந்த கருவியை வைத்து படம் காட்டினார். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். பின்னர் அதனை எடுத்துக் கொண்டு இந்தியா முழுவதும் சுற்றி, படங்களை திரையிட்டார். இதனைத் தொடர்ந்து இலங்கை, பர்மா ஆகிய நாடுகளுக்கும் தனது கருவியுடன் படை எடுத்தார். அலாவுதீனின் அற்புத விளக்கைப் போல 'க்ரோன் - மெகாபோன்' வெங்கய்யாவிற்கு பணத்தைக் கொட்டியது.

கிடைத்த லாபத்தை வைத்து சென்னையில் மவுனப்படம் திரையிடும் ஒரு நிரந்தர சினிமா தியேட்டரை கட்டினார். தென் இந்தியாவில் இந்தியர் ஒருவர் கட்டிய முதல் தியேட்டர் என்ற பெருமையைப் பெற்ற அதுதான், 1914இல் உதயமான கெயிட்டி திரையரங்கம். கெயிட்டிக்கு மக்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, வெங்கய்யா மெட்ராசில் அடுத்தடுத்த தியேட்டர்களை கட்டினார்.

தங்கச்சாலை சந்திப்பில் கிரவுன் தியேட்டரும், அதற்கு அடுத்த ஆண்டு புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் க்ளோப் தியேட்டரும் பிறந்தன. க்ளோப் தியேட்டர் தான் பின்னர் ராக்சி என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த மூன்று தியேட்டர்களுமே மவுன படங்களை திரையிட்டு வந்தன.

Million Dollar Mystery, Mysteries of Meera, Clutching Hand, Broken Coin, Raja's casket, Peral fish, Great Bard போன்ற மவுனப் படங்களை வெளிநாடுகளில் இருந்து வரவழைத்து தனது மூன்று தியேட்டர்களிலும் திரையிட்டார். இதன்மூலம் ஹாலிவுட் சினிமாக்களை அந்தக் காலத்திலேயே மெட்ராஸ்வாசிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் வெங்கய்யா.

இந்த காலக்கட்டத்தில்தான் இந்தியாவில் ஹரிச்சந்திரா, கீசகவதம் போன்ற மவுனப்படங்கள் வெளியாகின. வெங்கையா இந்த இரண்டு படங்களையும் தனது மூன்று தியேட்டர்களிலும் மாறி மாறி திரையிட்டார். இவற்றின் வெற்றியைத் தொடர்ந்து படத்தயாரிப்பில் இறங்க முடிவெடுத்தார். தனது மகன் ரகுபதி சூர்ய பிரகாஷை லண்டனுக்கு அனுப்பி திரைப்படத் துறையில் பயிற்சி பெறச் செய்தார்.

அப்படியே ஜெர்மனிக்கும், ஹாலிவுட்டிற்கும் போன பிரகாஷ், திரும்பி வரும்போது 35 எம்எம் வில்லியம்சன் மவுனப் படக் கேமரா ஒன்றை வாங்கி வந்தார். இதனைக் கொண்டு வெங்கய்யாவும், பிரகாஷும் 'மீனாட்சி கல்யாணம்' என்ற திரைப்படத்தை எடுத்தனர். புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் போன்ற மூடநம்பிக்கைகளால், இதில் நடிக்க தமிழ் நடிகர்கள் யாரும் முன்வரவில்லை. எனவே மெட்ராசில் இருந்த ஆங்கிலோ - இந்தியர்களை நடிக்க வைத்தனர்.

படத்தை முடித்து திரையிட்டுப் பார்த்தவர்களுக்கு பயங்கர அதிர்ச்சி. காரணம், திரையில் நடிகர்கள் யாருக்கும் தலை இல்லை. ஆங்கிலோ இந்தியர்களை கடவுள் பாத்திரங்களில் நடிக்க வைத்ததால் கடவுள் கோபம் கொண்டு அனைவரின் தலையையும் எடுத்துவிட்டதாக மெட்ராஸ்வாசிகள் பரபரப்பாக பேசிக் கொண்டார்கள். ஆனால் லென்சில் ஏற்பட்ட கோளாறு தான் இந்த பிரச்னைக்கு காரணம் என பிரகாஷ் கண்டறிந்தார். பின்னர் அவர்கள் நிறைய படங்களை எடுத்தனர்.

1932இல் வெங்கய்யா தனது மூன்று தியேட்டர்களிலும் பேசும் படங்களை திரையிடும் நவீன கருவிகளைப் பொருத்தினார். பின்னர் இங்கு பல படங்கள் பேசின. இப்படியாக அந்தக் கால மெட்ராஸ்வாசிகளின் கனவுகளுக்கு கதவு திறந்துவிட்டன வெங்கய்யாவின் திரையரங்குகள்.

1914இல் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் கெயிட்டி திரையரங்கு, மெட்ராஸ்வாசிகளின் கனவுகளுக்கு விதை போட்டது. 2005இல் இதில் படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. பின்னர் சில ஆண்டுகள் இங்கு செட் போட்டு திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. தற்போது இந்த திரையரங்கு இடிக்கப்பட்டு, அங்கு ஒரு வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

கெயிட்டி திரையரங்கு மெட்ராசில் இருந்து மறைந்ததைப் போல அதைக் கட்டிய வெங்கய்யாவின் நினைவும் மறைந்துவிட்டது. ஆம், மெட்ராஸ்வாசிகளுக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியதில் முக்கிய பங்காற்றிய ரகுபதி வெங்கய்யாவை தமிழ் சினிமா இன்று மறந்துவிட்டது. ஆனால் ஆந்திரா நினைவில் வைத்திருக்கிறது. தெலுங்கு பட உலகில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு அம்மாநில அரசு ரகுபதி வெங்கய்யா பெயரில் விருது வழங்கி கவுரவிக்கிறது.

நன்றி - தினத்தந்தி

Saturday, September 10, 2011

விவேகானந்தர் இல்லம்

தொலைவில் இருந்து பார்த்தால் பிரம்மாண்டமான பிறந்தநாள் கேக் போல காட்சியளிக்கும் இது சென்னையின் புராதன கட்டிடங்களில் ஒன்று. ஐஸ் அவுஸ் என்று அழைக்கப்பட்டு இன்று விவேகானந்தர் இல்லமாக மாறியிருக்கும் இந்த கட்டிடத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானது, குளிர்ச்சி நிறைந்ததும் கூட. ஆம், இந்தியாவிற்கு வந்து இறங்கிய ஐஸ் கட்டிகள் இங்குதான் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

ஆங்கிலேயர் காலத்தில் ஃபிரெட்ரிக் டூடர் (Fredric Tudor) என்று ஒருவர் இருந்தார். இவருக்கு ஐஸ் மகாராஜா என்றும் ஒரு பட்டப் பெயர் உண்டு. ஐஸ் கட்டி வியாபாரத்தில் கொடிகட்டி பறந்ததுதான் இதற்கு காரணம். ஐஸ் வியாபாரியான டூடர், 1833ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து கிளிப்பர் டுஸ்கானி (Clipper Tuscany) என்ற கப்பலில் இந்தியாவிற்கு ஐஸ் கட்டிகளை கொண்டு வந்தார். இப்படித்தான் வெளிநாட்டில் இருந்து முதன்முறையாக ஐஸ் கட்டிகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன.

டூடர், ஐஸ் வியாபாரியாக மாறியதே ஒரு சுவாரஸ்யமான கதைதான். கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, ஊர்சுற்றிக் கொண்டிருந்த டூடர் ஒருமுறை கியூபா சென்றார். அந்நாட்டில் நிலவிய கடுமையான வெயிலில் வாடி வதங்கினார். இந்த கொடுமையில் இருந்து தப்பிக்க எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம் போலிருக்கே என்று உச்சி வெயிலில் உச்சு கொட்டியபோது உதித்ததுதான் இந்த ஐஸ் வியாபார யோசனை. கடும் வெயில் நிலவும் நாடுகளுக்கு அமெரிக்காவில் வீணாகப் போகும் ஐஸ் கட்டிகளை ஏற்றுமதி செய்து காசு பார்த்துவிடுவது என முடிவெடுத்தார். அப்படி அவரது பட்டியலில் இடம்பெற்ற முக்கியமான நாடு இந்தியா.

ஐஸ் கட்டிகளை பத்திரமாக பல மாதங்கள் கரையாமல் பாதுகாப்பதற்காக டூடர் இந்தியாவில் மூன்று கட்டிடங்களை கட்டினார். பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் என மூன்று நகரங்களில் அவர் கட்டிய கட்டிடங்களில் மற்ற இரண்டு கட்டிடங்களும் காலத்தில் கரைந்துவிட, மெட்ராஸ் கட்டிடம் மட்டும்தான் இன்று மிஞ்சியிருக்கிறது. அதுதான் ஐஸ் அவுஸ்.

ஐஸ் அவுஸ் 1842ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஐஸ் கட்டிகளை பாதுகாப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் அதனை ஐஸ் அவுஸ் என்று மக்கள் அழைத்தார்கள். கப்பல்களில் வந்திறங்கும் ஐஸ் கட்டிகளை உடனே சேமித்து வைப்பதற்காக கடற்கரைக்கு எதிரிலேயே இந்த கட்டிடம் கட்டப்பட்டது. இந்த ஐஸ் கட்டிகள்தான் ஆங்கிலேய அதிகாரிகளின் மாலை நேர மது விருந்துகளை சிறப்பித்தன. வாங்கிச் செல்லும் ஐஸ் கட்டிகள் உடனடியாக கரைந்துவிடாமல் தடுக்க, ஐஸ் கட்டிகள் மீது போர்த்தும் கனமான போர்வைகளையும் டூடர் விற்பனை செய்தார். சுமார் 40 ஆண்டுகாலம் சக்கை போடு போட்ட இந்த வியாபாரம், 1880களில் இந்தியாவிலேயே நீராவி முறையில் ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் உத்தி கண்டுபிடிக்கப்பட்ட பின் கலகலத்துப் போனது.

இதனால் வியாபாரத்தை மூட்டை கட்டிவிட்டு, அந்த கட்டிடத்தை பிலிகிரி அய்யங்கார் என்ற மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞருக்கு விற்றுவிட்டார் டூடர். குடோனாக இருந்த அதனை வட்டமான வராண்டாக்களையும், நிறைய ஜன்னல்களையும் வைத்து வீடாக மாற்றினார் பிலிகிரி. தனது நண்பரும், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பிரபல நீதிபதியுமான கெர்னனின் நினைவாக, தனது வீட்டிற்கு கெர்னன் கோட்டை (Castle Kernan) எனவும் பெயரிட்டார். இதன் ஒரு பகுதியில் ஏழை மாணவர்களையும் பிலிகிரி தங்க வைத்திருந்தார். ஆனால் போதிய காற்றோட்டம் இல்லாததால் அந்த கட்டிடத்தால் ஒரு நல்ல வீடாக விளங்க முடியவில்லை.

இந்நிலையில்தான் அந்த கட்டிடத்திற்கு எதிர்பாராத வகையில் ஒரு வரலாற்றுப் பெருமையும், அடையாளமும் கிடைத்தது. சிகாகோ மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற உரையை ஆற்றிவிட்டு பெரும் புகழுடன் தாய்நாடு திரும்பிய சுவாமி விவேகானந்தர், ஊருக்கு செல்லும் வழியில் சென்னை வந்தார். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அவருக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விவேகானந்தரின் சீடரான பிலிகிரி அய்யங்கார், சுவாமிகள் தனது வீட்டில் தங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். விவேகானந்தரும் இதனை ஏற்றுக் கொண்டதை அடுத்து, அவர் ஊர்வலமாக ஐஸ் அவுஸ் கட்டிடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

1897ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-14ந் தேதி வரை அங்கு தங்கிய சுவாமி விவேகானந்தர், எழுச்சி மிக்க ஏழு உரைகளை ஆற்றினார். அவர் ஊருக்கு கிளம்பும்போது அவரிடம் சென்ற சென்னை பக்தர்கள், சுவாமிகளின் ஆன்மீகப் பணிக்காக சென்னையிலேயே ஒரு நிரந்தர மையத்தை அமைக்குமாறு வேண்டிக் கொண்டனர். இதனையடுத்து ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஐஸ் அவுஸ் கட்டிடத்திற்குள் ஒரு கோயில் கட்டப்பட்டது. அதுதான் மெட்ராசில் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண மடத்தின் முதல் கிளை.

1906ல் பிலிகிரி அய்யங்கார் இறந்த பிறகு, விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஜமீன்தார் ஒருவர் அந்த கட்டிடத்தை விலைக்கு வாங்கினார். பின்னர் 1917இல் அரசாங்கம் அதனை அவரிடம் இருந்து வாங்கி, பிராமண விதவைகளுக்கான ஹாஸ்டலாக மாற்றியது. பின்னர் அது முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கான தங்கும் விடுதியாகவும், பி.எட்., பயிற்சி பெறுபவர்களின் விடுதியாகவும் சில காலம் செயல்பட்டது.

1963இல் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரசு அந்த கட்டிடத்தின் பெயரை விவேகானந்தர் இல்லம் என்று மாற்றியது. 1997இல் அந்த கட்டிடமும், அதன் அருகில் உள்ள நிலத்தின் ஒரு பகுதியும் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு லீசுக்கு விடப்பட்டது. இதனையடுத்து அங்கு சுவாமி விவேகானந்தர் மற்றும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் பற்றிய நிரந்தர கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விவேகானந்தரின் அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஒருவரால், ஐஸ் குடோனாக கட்டப்பட்ட கட்டிடம், காலத்தின் சுழற்சியில் ஒரு தேசத்தின் கலாச்சார மையமாக உருமாறி, இன்றும் கம்பீரமாக நின்றுகொண்டு இருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

Sunday, September 4, 2011

மூர் மார்க்கெட்

அந்தக் கால மெட்ராசில் புத்தகப் பிரியர்களின் புதையல் சுரங்கமாய் திகழ்ந்தது மூர் மார்க்கெட். புத்தகங்கள் மட்டுமின்றி பழமையான கலைப் பொருட்கள் முதல் பல்பொடி வரை இங்கு கிடைக்காததே கிடையாது என்பார்கள். அப்பா, அம்மாவைத் தவிர அனைத்தும் கிடைக்கும் இடம் என்று மூர் மார்க்கெட்டைப் பற்றி அன்றைய மெட்ராஸ்வாசிகள் பெருமை அடித்துக் கொள்வார்கள்.

சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த சிவப்பு நிறக் கட்டிடத்தில் மூர் மார்க்கெட் இயங்கி வந்தது. இந்த மார்க்கெட் உருவானதற்கு ஒரு வரலாறு உண்டு. அந்தக் காலத்தில் சென்னை பிராட்வேயில் ஒரு மெயின் மார்க்கெட் இருந்தது. அந்தப்பகுதி சாக்கடைகள் தேங்கி சுகாதார குறைவாகக் காணப்பட்டது. அப்போது முனிசிபாலிடி தலைவராக இருந்த லெப்டினட் கர்னல் சர் ஜார்ஜ் மூர், சென்னை நகரத்தின் மேம்பாட்டிலும், சுகாதாரத்திலும் மிகுந்த அக்கறை காட்டினார். அதனால் பிராட்வேயில் உள்ள மெயின் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற மூர் திட்டமிட்டார். எனவே சென்ட்ரல் ஸ்டேஷன் அருகில் குஜ்லி பஜார் இருந்த இடத்தில் மூர் மார்க்கெட் கட்ட, 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜார்ஜ் மூர் அடிக்கல் நாட்டினார். 1900 நவம்பரில் கட்டி முடிக்கப்பட்டு, அப்போதைய கவர்னர் ஆர்தர் ஹேவ்லாக்கால் மூர் மார்க்கெட் திறந்து வைக்கப்பட்டது. கடைகள் வியாபாரிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு வாடகை வசூலிக்கப்பட்டு வந்தது.

மெட்ராசில் வசிப்பவர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வந்து போவோரும், தவறாமல் கால்பதிக்கும் இடமாக மூர் மார்க்கெட் திகழ்ந்தது. இந்தோ சாரசானிக் பாணியில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் பார்க்கும்போதே பரவசத்தில் ஆழ்த்தக் கூடியதாக இருந்தது. நுழைவாயில்களில் கருங்கல்களாலான வளைவுகளும், கூரைக் கைப்பிடிச் சுவர்களில் இடம் விட்டு இடமாய் கோயில் கலசங்களின் வடிவில் கல் கலசங்களும் காட்சியளித்தன. இன்று அல்லிக் குளத்தின் மேல் எழுப்பப்பட்டுள்ள புதிய மூர்மார்கெட் அங்காடியின் மாடிச் சுவர்களில் இந்த கல் வடிவங்கள் பத்திரப்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

அந்தக் காலத்து அசல் மூர் மார்க்கெட்டின் (இன்றைய சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம்) உள்ளே, மத்தியில் மரங்களுக்கிடையில் அழகிய நீரூற்று ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. மூர் மார்க்கெட்டில் பழைய பொருளும் கிடைக்கும், புதிய பொருளும் கிடைக்கும். பழைய புத்தகங்கள், புதிய புத்ககங்கள், எல்லா மொழிகளிலும் புத்தகங்கள், பத்திரிகைகள் என புத்தகப் பிரியர்களின் சொர்க்க லோகமாகவே இந்த மார்க்கெட் திகழ்ந்தது. அந்தக் கால மஞ்சள் பத்திரிகைகள் கூட இங்கு கிடைக்கும்.

மூர் மார்க்கெட்டில் கிடைத்த மற்றொரு முக்கியமான பொருள் கிராமஃபோன் இசைத்தட்டுக்கள். எல்லா மொழிகளிலும் வெளிவந்த சாதாரண இசைத் தட்டுக்கள் முதல் எல்.பி ரெக்கார்டுகள் வரை இங்கு வாங்கலாம். கர்னாடக இசை, இந்துஸ்தானி இசை, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள சினிமாக்களின் இசைத்தட்டுக்கள் என அனைத்து இசைகளையும் வசப்படுத்தி வைத்திருந்தது இந்த கலை மார்க்கெட். ஆங்கிலோ - இந்தியர்கள் மேனாட்டு இசைத் தட்டுக்களை விற்கவும், வாங்கவும், ஒன்றைக் கொடுத்துவிட்டு இன்னொன்றை பரிமாறிக் கொள்ளவும் எப்போதும் இங்கே அலைந்து கொண்டிருப்பார்கள். இங்கு நம்மிடமுள்ள இசைத் தட்டுக்களை கொடுத்துவிட்டு, அதற்குப் பதில் சொற்பக் காசை மட்டும் கொடுத்து வேறு இசைத் தட்டை பேரம் பேசி எடுத்துச் செல்லலாம்.

மூர் மார்க்கெட்டில் பொருட்களை பேரம் பேசி வாங்குவதே ஒரு தனிக்கலை. ஆயிரங்களில் தொடங்கி அணாக்களில் முடியும் அதிர்ச்சி தரும் பேரங்கள் எல்லாம் இங்கு சர்வசாதாரணம். மார்க்கெட் வாசலிலேயே இசைத் தட்டுகளுக்கான தரகர்கள் காத்திருப்பார்கள். இப்போது சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் ஆட்டோகாரர்கள் செய்யும் வேலையை அப்போது அவர்கள் செய்து கொண்டிருந்தனர். என் கடைக்கு வா, உன் கடைக்கு வா.. என கையைப் பிடித்து இழுப்பார்கள்.

மூர் மார்கெட் வளாகத்தில் நிரந்தரக் கடைகள், தற்காலிகக் கடைகள் என இருவகை கடைகள் இருக்கும். நிரந்தர கடைகளில் பழைய பர்மா தேக்கில் நேர்த்தியாய்ச் செய்து கண்ணாடிச் சட்டமிட்ட கதவுகளைக் கொண்ட பிரம்மாண்டமான பீரோக்களில் அரிதான வெளிநாட்டு - உள்நாட்டு நூல்களை அடுக்கி வைத்திருப்பார்கள். அச்சுக்கலை கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களைக் கூட இங்கு வாங்கிவிட முடியும்.

மற்றொரு வகை விற்பனையாளர் ''கேர் ஆஃப் பிளாட்பாரம்'' தினுசு. இவர் மூர் மார்க்கெட் வெராண்டாக்களில் நிரந்தர கடைக்காரர்களின் தயவில் கடை விரித்திருப்பார். பெரும்பாலும் பேப்பர் பேக் நூல்களும் பழைய பத்திரிகைகளுமாயிருக்கும். விற்காமல் தேங்கிப் போகும் நூல்களையும் பத்திரிகைகளையும் அவற்றின் தகுதியறிந்து கூறு,கூறாகப் பிரித்து அம்பாரமாக்கிக் குவித்து, ''இதெல்லாம் பத்து ரூபாய் இதெல்லாம் ஐந்து ரூபாய் அதெல்லாம் எது எடுத்தாலும் ஒரு ரூபாய் எது எடுத்தாலும் எட்டணா'' என்று எழுதிய அட்டைகளைக் குத்தி வைப்பார்கள்.

புத்தகக் கடைகள் மட்டுமின்றி ரெடிமேடு துணிக்கடைகள், பொம்மைக் கடைகள், என அனைத்து வகையான கடைகளும் இங்கிருக்கும். வண்ண மீன்கள், கிளிகள், முயல்கள் போன்ற உயிரினங்களும், அவற்றை வளர்ப்பதற்கான தொட்டி, கூண்டு என சகலமும் கிடைக்கும். கடைசி பகுதிக்கு சென்றால் ஆட்டுக்கறி, கோழிக்கறி கடைகள் இருக்கும். சுருங்கச் சொன்னால் அந்தக் கால மெட்ராசின் ஒரு பிரம்மாண்ட ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்தான் மூர் மார்க்கெட்.

சென்ட்ரல் ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக மூர் மார்க்கெட் முழுவதையுமே வேறு இடத்துக்கு மாற்ற அரசாங்கம் திட்டமிட்டது. ஆனால் இதற்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில்தான் 1985ஆம் ஆண்டு ஒரு நள்ளிரவில் மூர் மார்க்கெட் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. இரவு நேரம் என்பதால் தீ பிடித்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. கட்டிடம் முழுவதும் கொழுந்துவிட்டு எரியும் போதுதான் தெரியவந்தது. தீயணைப்பு படையினர் 20 தீயணைப்பு வண்டிகளுடன் வந்து ராட்சத ஏணி கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தி 11 மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள்.

ஆனால் அதற்குள் தீயின் நாக்குகள் அந்த பிரம்மாண்ட மார்க்கெட்டை அப்படியே சுருட்டி வாயில் போட்டுக் கொண்டன. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு ஓரிரு கடைகளே தப்பின. கடைகள் எல்லாம் இடிந்த நிலையில் மூர் மார்க்கெட்டின் உள் பகுதியில் வியாபாரிகள் சோகமே உருவாக உட்கார்ந்து இருந்தனர். படையெடுப்பிற்குப் பிறகு அழிந்து போன நகரம் போல மூர் மார்க்கெட் காட்சி அளித்தது. இப்படி 85 ஆண்டுகாலம் மிகவும் பரபரப்பாக இயங்கி, தங்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட மூர் மார்க்கெட் திடீரென தீயில் மாயமானதை நம்ப முடியாமல் மெட்ராஸ்வாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் ரூ.10 கோடி என்று அப்போதைய அரசு தெரிவித்தது. ஆனால், கடைசி வரை தீ விபத்துக்கான உண்மைக் காரணம் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விட்டது.

நன்றி - தினத்தந்தி