
என்னைப் பற்றி...
- பார்த்திபன் (Parthiban)
- சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.
Wednesday, March 30, 2011
மறுபிறவி

Saturday, February 19, 2011
புலி வேஷம் போட்ட பூனை
Ice Age படத்தில் வரும் Diego எனப்படும் கோரைப் பல் புலி (Saber Tooth Tiger), 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் உலா வந்து கொண்டிருந்தது. புலி என அழைக்கப்பட்டாலும் உண்மையில் இது புலி இல்லை. புலி மாதிரி, இல்லை இல்லை சிங்கம் மாதிரி. குழப்பமா இருக்கா?உண்மையை சொன்னால், இது ஒரு பூனை. கொஞ்சம் பெரிய சைஸ் பூனை. அதாவது கிட்டத்தட்ட இன்றைய சிங்கம் அளவுக்கு, ஆனால் கொஞ்சம் குண்டா இருக்கும். சில கோரைப் பல் புலிகள் 15 அடி நீளம் இருக்குமாம். ஆனால் இவற்றால் புலிகளைப் போல வேகமாக ஓட முடியாது. அதனால் வேகமாக ஓடும் சிறிய மிருகங்கள் இதற்கு சுலபமாக அல்வா கொடுத்துவிடும்.
இதன் தொண்டையில் ஒரு விசேஷ எலும்பு இருக்கிறது. இதனைக் கொண்டு இவற்றால் சிங்கத்தைப் போல கர்ஜிக்க முடியும். தொலைவில் இருக்கும் தனது சகாக்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இது உதவும்.
இதனோட பலமே கடைவாய் பகுதியில் காட்சியளிக்கும் கோரைப் பல் தான். வாயின் இரண்டு பக்கமும் சுமார் 7 அங்குலம் நீளத்திற்கு பயங்கரமா இரண்டு பற்கள் இருக்கும். இதை இந்த பூனைகள் கத்தி மாதிரி பயன்படுத்தும். காட்டெருமை, மான், குதிரை என அன்றைய மெனு கார்டில் இருக்கும் மிருகத்தின் கழுத்து அல்லது வயிற்றுப் பகுதியில் இந்த பற்களால் ஆழமா குத்தி கிழித்துவிடும். அந்த பயங்கர கத்திக் குத்தில் பிடிபட்ட விலங்கு பிராணனை விட்டதும், பொறுமையாக ஏதாவது புதருக்குள் இழுத்துக் கொண்டு போய் ஆற அமர ஸ்வாகா செய்யும்.
கோரைப் பல் புலிகள் ஆரம்பத்தில் ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் தான் சுற்றிக் கொண்டிருந்தன. பின்னர் மெல்ல மெல்ல அமெரிக்க கண்டத்திற்கும் பயணப்பட்டன. கலிபோர்னியா மாகாணத்தில் கோரைப் பல் புலியின் தொன்மங்கள் (fossils) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பருவ நிலை மாற்றமும், மனிதர்களின் கைவரிசையும் தான் இவை அழிந்து போனதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவை சின்னச் சின்ன மிருகங்களை வேட்டையாட முடியாது என்பதால் பெரிய விலங்குகளை நம்பியே வாழ்ந்து வந்தன. அந்த பெரிய விலங்குகளும் மெல்ல பூமியில் இருந்து மறைந்துவிட்டதால், பசிக் கொடுமையாலேயே இவற்றில் பாதி பரலோகம் போயிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. எது எப்படியோ, உண்மையில் உலா வந்து கொண்டிருந்த ஒரு உயிரினத்தை அழித்துவிட்டு, அனிமேஷனில் அதனை திரையில் உலவ விட்டு ரசித்துக் கொண்டிருக்கிறோம்.
Tuesday, January 25, 2011
நினைவுகள்
Monday, January 24, 2011
பொன்மாலைப் பொழுது
Saturday, January 1, 2011
மலை ஆட்டின் மறுஅவதாரம்

மண்ணில் இருந்து முற்றிலுமாக மறைந்துபோன ஒரு உயிரினத்தை விஞ்ஞானத்தின் உதவியால் மீண்டும் உயிர்த்தெழ வைத்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். அப்படி மறுஅவதாரம் எடுத்து உலகையே வியக்க வைத்த விலங்குதான் பைரீனியன் ஐபெக்ஸ் (Pyrenean Ibex) என்ற மலை ஆடு.
இந்த பைரீனியன் ஐபெக்ஸ்கள் ஒரு காலத்தில் பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் மலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்தன. இலை, தழையையும் புல்லையும் மேய்ந்து விட்டு அப்பாவியாய் அலைந்துகொண்டிருந்த இந்த ஆட்டு மந்தையின் எண்ணிக்கை பல காரணங்களால் மெல்ல மெல்ல குறைந்து வந்தது. 1900களில் கணிசமாக குறைந்த இதன் எண்ணிக்கை, 1910ஆம் ஆண்டிற்கு பிறகு 40ஐ கூடத் தாண்டவில்லை.
இப்படி மெல்ல அழிந்துவந்த ஐபெக்ஸ் இனத்தின் கடைசி உறுப்பினராய் வலம் வந்துகொண்டிருந்த சிலியா என்ற பெண் ஆடு, 2000ஆம் ஆண்டு ஜனவரி 6ந் தேதி ஒரு மரக்கிளை முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்து பரலோகம் போய்ச் சேர்ந்தது. இயற்கையின் படைப்பில் ஒரு இனம் முற்றிலுமாக அழிந்துபோனதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நேரத்தில்தான் குளோனிங் தொழில்நுட்பம் விஞ்ஞானிகளுக்கு கை கொடுத்தது. 1996ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் 'டாலி' என்ற ஆட்டுக் குட்டியை குளோனிங் மூலம் உருவாக்கி சாதனை படைத்திருந்தனர். இதன் அடுத்தகட்ட ஆராய்ச்சிக்காக அவர்கள் சிலியாவின் திசுக்களை 1999ஆம் ஆண்டு எடுத்து வைத்திருந்தனர். 2000ஆம் ஆண்டில் ஸ்பெயின் அரசின் அனுமதி கிடைத்ததும், இந்த திசுக்களைக் கொண்டு மற்றொரு சிலியாவை உருவாக்கும் முயற்சி தொடங்கியது.
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து இந்த ஆராய்ச்சியில் இறங்கினர். அழிந்துபோன பைரீனியன் ஐபெக்ஸிற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் அவர்களின் முதல் முயற்சி தோல்வி அடைந்தது. மனந்தளராத விஞ்ஞானிகள் விடாமுயற்சியுடன் மீண்டும் போராடினர்.
சிலியாவின் தோல் சாம்பிளில் இருந்து விஞ்ஞானிகள் குளோன் எம்பிரியோ எனப்படும் குளோனிங் மூலம் தயாரான சினை முட்டைகளை முதலில் உருவாக்கினர். பின்னர் அவற்றை 208 சாதாரண ஆடுகளின் உடலில் செலுத்தினர். அவற்றில் 7 ஆடுகள் மட்டும் கருவுற்றன. ஆனால் ஒன்றே ஒன்றுதான் இறுதியில் குட்டி போட்டது. 2009ஆம் ஆண்டு சிலியாவின் திசுவில் இருந்து குளோனிங் மூலம் உருவான பெண் ஆட்டுக்குட்டி வெற்றிகரமாகப் பிறந்தது.
ஆனால் அந்த ஆட்டுக் குட்டி சுவாசக் கோளாறு காரணமாக 7 நிமிடங்களிலேயே இறந்துவிட்டது. இருப்பினும், அழிந்துபோன உயிரினத்தில் இருந்து உருவான முதல் உயிர் என்ற பெருமையுடன் அந்த ஆட்டுக் குட்டி வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

