என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, June 2, 2012

குஜிலி பஜார்


ஷாப்பிங் என்றால் இன்றைய சென்னைவாசிகளுக்கு முதலில் நினைவுக்கு வரும் இடம் பாண்டி பஜார். காரணம், தலைக்கு கிளிப் முதல் காலுக்கு செருப்பு வரை அனைத்தையும் இங்கு வாங்கி விட முடியும். ஆனால் அந்தக்கால சென்னைவாசிகள் இப்படி ஷாப்பிங் செய்ய வசதி இருந்ததா? அவர்கள் எங்கு போய் தங்களின் ஷாப்பிங் ஆர்வத்தைத் தணித்துக் கொண்டனர்? இதற்கான விடையைத் தேடிய போதுதான் மெட்ராஸின் ஒரு சுவாரஸ்யமான பஜார் பற்றிய செய்திகள் தெரிய வந்தன.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இன்றைய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு பஜார் இருந்திருக்கிறது. இதன் பெயர் குஜிலி பஜார். பாரிமுனை கந்தசாமிக் கோவிலுக்கு அருகில் உள்ள இந்த பகுதியில், அந்த நாட்களில் நிறைய குஜராத்திகள் வசித்து வந்தனர். இங்கிருக்கும் ஏதோ ஒரு இளம் குஜராத்திப் பெண்ணைப் பார்த்து பரவசமாகிப் போன யாரோ ஒரு சென்னைவாசி அந்தப் பெண்ணின் மீது உருகி மருகியதன் விளைவாக உருவானதே குஜிலி என்ற சொல். குஜராத்தி+கிளி என்பதையே மெட்ராஸ் பாஷைக்கே உரிய பாணியில் ரத்தின சுருக்கமாக நசுக்கி பிசுக்கி குஜிலி ஆக்கியிருக்கிறார்கள். குஜிலி ஏரியாவில் இருக்கும் பஜார் என்பதால் குஜிலி பஜார் என்று பெயர் வந்திருக்கலாம் என மொழி ஆய்வாளர்கள் (!!!) கருதுகின்றனர். குஜிலி என்பது உருதுமொழிச் சொல் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.

குஜிலி பஜார் என்பதை மாலை நேரக் கடைத்தெரு என்று வைத்துக் கொள்ளலாம். இந்த பஜாரின் கதாநாயகன் பாட்டுப் புத்தகங்கள்தான். இங்கு கிடைத்த பாடல்கள் வெறும் சினிமாப் பாடல்கள் அல்ல. அந்த காலத்தில் ஏது அத்தனை சினிமா. இங்கு கிடைத்த பாடல்கள் எல்லாம் வேறு ரகம். இவற்றை குஜிலிப் பாடல்கள் என்று அழைத்தார்கள். புகைவண்டி, மின்சார விளக்கு, மண்ணெண்ணெய், சிகரெட், தேநீர் என எந்த பொருள் புதிதாக அறிமுகமானாலும் அதைப் பற்றி பாட்டு எழுதி இருக்கிறார்கள். பொருட்கள் மட்டுமல்லாமல் அன்றாடம் நடந்த கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களையும் பாட்டாக்கியிருக்கிறார்கள். அரை அணா இருந்தால் இந்த வித்தியாச பாடல்கள் அடங்கிய புத்தகங்களை வாங்கிவிடலாம்.

சாதாரண உப்புமாவில் இருந்து உப்பு சத்தியாகிரகம் வரைக்கும் குஜிலிக் கவிஞர்களின் பாடு பொருட்களாக இருந்தன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தலைவர்கள் கைதான போது அரெஸ்டு பாட்டுஎன்றே சில பாடல்கள் எழுதப்பட்டன. இவை மக்கள் மத்தியில் சுடச்சுட விநியோகிக்கப்பட்டன. தேச பக்தர்களுக்கு எதிரானவர்களும் குஜிலியை கும்மி எடுத்திருக்கிறார்கள். அவர்கள் தரப்பிலிருந்து இராஜ விசுவாசக் கும்மிபோன்ற சில புத்தகங்களும் வெளி வந்திருக்கின்றன. இப்படி வெளியான இருதரப்புப் பாடல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல கிராக்கி இருந்தது.

1920 களிலும் 1930 களின் தொடக்கத்திலும் கிராமபோன் இசைத் தட்டுகள் பிரபலமாகி வந்தன. அது ரேடியோ இல்லாத காலம். எச்.எம்.வீ., கொலம்பியா, ஓடியன் போன்ற இசைத் தட்டுக் கம்பெனிகள் பிரபல நாடக மேடைப் பாடகர்களைக் கொண்டு இசைத் தட்டுக்களை வெளியிட்டன. குஜிலிக் கடைக்காரர்கள் இந்த கிராமபோன் பாடல் வரிகளை அச்சிட்டு காசு பார்த்தார்கள்.

இன்றைக்கு பிரபல பாடகர்களின் பெயரில் தனியாக பாட்டுப் புத்தகம் போடும் வழக்கம் அப்போதுதான் தொடங்கியது. எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ், எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், என்.எஸ். பபூன் சண்முகம் போன்றோருக்கு தனிப் புத்தகங்கள் போடப்பட்டன. அவர்களின் ரசிகர்கள் அவற்றை வாங்கி பொக்கிஷமாகப் பாதுகாத்து பரவசமடைந்தனர். 1960கள் வரை கூட பாட்டுப் புத்தகங்கள், கதைப் பாடல்கள் போன்ற வெகுஜன நாட்டார் இலக்கியங்கள் குஜிலி பஜாரில் கிடைத்து வந்தன. 

குஜிலி பஜாரின் முக்கில், ஒரு வீதி ஈவினிங் பெஜார்என்றும், மற்றொரு வீதி தீவிங் பெஜார்என்றும் அழைக்கப்பட்டது. இதுபற்றி மாதவையா 1925ஆம் ஆண்டு வெளியான தனது பஞ்சாமிர்தம் இதழில் கீழ்கண்டவாறு எழுதி இருக்கிறார்.
''இதை நான் முதலில் கவனித்தபோது, உண்மை எவ்வாறிருப்பினும், ராஜதானி நகரத்திலே ஒரு வீதிக்கு தீவிங் பெஜார் ரோடு“ (அதாவது, திருட்டுக் கடைத் தெரு) என்றிருப்பதுநகரவாசிகளுக்கேனும், போலீஸாருக்கேனும் கௌரவம் தருவதன்று என்று நினைத்து, அப்பொழுது முனிசிபல் கமிஷனராயிருந்த என் நண்பர் மலோனி துரைக்கு அதைப்பற்றி எழுத, அவர், “தீவிங் பெஜார்என்ற பெயரை குஜிலி பெஜார்என்று மாற்றினார்.''
- மாதவையா

குஜிலி பஜாருக்கு அருகிலேயே சைனா பஜார் இருந்தது. அந்தக் கால சைனா பஜார் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ள, 1913இல் வெளியான கட்டுரையின் கீழ்கண்ட பகுதி மிகவும் உதவியாக இருக்கும்.

''சைனா பஜார் வீதி - மாலைக் காலத்தில் எப்போதும் ஜன நெருக்கமுள்ள இவ்வீதியைப் பார்க்க வெகு வினோத விழாவாயிருக்கும். செலவழிக்க மனம் வராதவர்களும் வாங்கக் கூடிய துணிமணிகளும், கண் கவரும் பழ தினுசுகளும், சித்திரப் படங்களும், பொன், வெள்ளி ஆபரணங்களும், செம்பு பித்தளை வெங்கலப் பாத்திரங்களும், வாசனை திரவியங்களும், குடை, ஜோடு, கொம்பு, தடிகளும், மிட்டாய் தினுசுகளும், புஸ்தகங்களும் மற்றும் பல வஸ்துக்களும் விற்கும் கடைகள் எண்ணிறந்தன.
வேடிக்கை பார்ப்பதிலேயே மனம் செலுத்தாமல் அப்போதுக்கப் போது தங்களுடைய ஜேபியிலும் மடியிலும் வைத்திருக்கும் பணப் பைகளை கவனித்து வர வேண்டும். இவ்விடத்தில்  முடிச்சவிழ்க்கும் பேர்வழிகள் அதிகம். இதற்கு விளக்கு வெளிச்சம் போராத குறையொன்றுண்டு. சென்னை நகரசபையார் இதைக் கவனித்து ஜியார்ஜ் அரசரின் உருவச் சிலைக்கு எதிரில் அதிகம்  வெளிச்சம்  தரக்கூடிய கொத்து விளக்கு, ஒன்றை அமைக்கப் பெற்றால் வெகு நலமாயிருக்கும்.''

 - மயிலை கொ. பட்டாபிராம முதலியார்
 `விஷ்ணு ஸ்தல மஞ்சரி` 1913

இப்படி எல்லாம் மெட்ராஸ்வாசிகளின் மாலை நேரங்களை ரம்மியமாக மாற்றிய இந்த குஜிலி பஜார்தான் தற்போது பர்மா பஜாராக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* பர்மாவிலிருந்து வந்து குடியேறியவர்களுக்காக 1960களில் ஒதுக்கப்பட்ட பகுதிதான் பர்மா பஜார்.
* திருட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள் இருந்தன என்பதால், பர்மா பஜாருக்கு வெள்ளைக்காரர்கள் காலத்தில் தீவ்ஸ் பஜார் என்று பெயராம்.

--------
அரெஸ்ட் பாட்டு


ஐந்தாம் ஜார்ஜ் மன்னவரும்
அவர் மனைவி மேரியளும் மைந்தருடன்
பூவுலகில் மகாராஜர் வாழ்கவுமே
கவர்னர் வைசிராயவரும்
கனம் மாண்டேகு மந்திரியும்
புவனமெலாம் போற்ற புண்ணியர்கள் வாழ்கவுமே.

திக்கெங்கும் போர் படைத்த தியாகராஜன் புகழும்
மிக்க புகழ் நாயர் முதல் மேலவர்கள் வாழ்கவுமே.
புதுக்கோட்டை பிரின்ஸ் அவர்கள் பூமான்துரை ராஜா
மதிப்பாயுலகினிலே மன்னவரும் வாழ்கவுமே
ராஜா வெங்கடகிரி ராவ்பகதூரா ராஜரத்தினம்
தேசாபிமானியெல்லாம் தேவரொக்க வாழ்கவுமே
வாழ்க திராவிடரும் வாழ்க அவர் சங்கமதுவும்
வாழ்க பொதுவிற்குழைப்போர் வாழ்க வாழ்க வாழ்கவுமே

ஹோம் ரூல் கண்டன, திராவிட முன்னேற்ற, இராஜ விசுவாசக் கும்மி
[சேலம் ஆசுகவி தி.சு. கணபதி பிள்ளையால் எழுதப்பட்டது (1918).]


3 comments:

  1. அன்பு முரளி,மிக்க நன்றி. எனது பதிவுகள் பற்றிய உங்களின் கருத்துகளை தொடர்ந்து தெரிவியுங்கள். இது எனது பயணத்தை தொடர மிகவும் உதவியாக இருக்கும்

    ReplyDelete
  2. மெட்ராஸ்வாசிகளின் மாலை நேரங்களை ரம்மியமாக மாற்றிய இந்த குஜிலி பஜார்தான் தற்போது பர்மா பஜாராக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.

    சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள் !

    ReplyDelete
  3. மிகவும் சுவாரசியமான பதிவுகள். ரசித்து படித்தேன். பழைய பதிவுகைளயும் படிக்க தூண்டுகிறது.

    நன்றி.

    ReplyDelete