என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Monday, October 4, 2010

குகைக் கரடி


ஐரோப்பாவில் சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரம்மாண்ட உயிரினங்களில் ஒன்றுதான் குகைக் கரடி. இவை இன்றைய கரடிகளை விட பெரிதாக இருக்கும். அதாவது 12 அடி உயரமும், சுமார் 500 கிலோ எடையும் இருக்கும். இந்த எடை ஆண் கரடிகளுக்கு தான் பொருந்தும், பெண் கரடிகள் வெறும் 250 கிலோ எடை தான் இருக்கும். இந்த வகை கரடிகள் பெரும்பாலும் குகைகளிலேயே வாழ்ந்ததால்தான் அவற்றிற்கு குகைக் கரடி என பெயர் கொடுத்து விட்டார்கள்.

இந்த கரடிகள் ஐரோப்பா கண்டத்தில் ஸ்பெயின், இத்தாலி, கிரேக்கம், பெல்ஜியம், ஹங்கேரி, ரோமானியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தன. பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி போன்ற நாடுகளின் சில பகுதிகளிலும் இவை வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. மேலே குறிப்பிட்ட நாடுகளில் உள்ள குகைகளில் இருந்து இதுவரை ஆயிரக்கணக்கான குகைக் கரடி எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. ரோமானியாவில் கரடிக் குகை என்றே ஒரு குகை உள்ளது. இங்கிருந்து மட்டும் 1983ஆம் ஆண்டு 140 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

2005ஆம் ஆண்டு மே மாதம் கலிபோர்னிய விஞ்ஞானிகள் சிலர் இந்த கரடிகளின் டி.என்.ஏ.க்களை ஆய்வு செய்து பல அரிய தகவல்களை வெளிக் கொண்டு வந்தனர். இவை பெரும்பாலும் புல், காய்கறி, செடி போன்ற சைவ உணவுகளையும், அரிதாக சிறு விலங்குகளையும் உட்கொண்டு வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றின் அழிவுக்கும் இதையே காரணம் காட்டுகின்றனர். இந்த வகை கரடிகள் சுமார் 27,800 ஆண்டுகளுக்கு முன் முற்றிலுமாக அழிந்துவிட்டன. அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட பருவநிலை மாற்றங்கள் காரணமாக தாவரங்கள் வளர்வது கடுமையாக பாதிக்கப்பட்டதால், உணவு கிடைக்காமல் பட்டினி கிடந்தே இந்த இனம் அழிந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இதனை சில ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு முன்பே இதுபோன்ற பருவநிலை மாற்றங்களை குகைக் கரடிகள் சந்தித்திருப்பதால், இவை அவற்றின் அழிவிற்கு காரணமாக இருக்க முடியாது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்கள் வேட்டையாடியே இந்த கரடிகளை கொன்றிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் வேறு ஒரு சாரார் இதனை கடுமையாக மறுக்கின்றனர். அதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் இரண்டு. முதல் காரணம், சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களின் எண்ணிக்கையே மிகக் குறைவு. இரண்டாவது காரணம்தான் மிக முக்கியமானது.

குகைக் கரடிகளின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பல குகைகளில் அவற்றின் ஓவியங்கள் பாறைகளில் வரையப்பட்டுள்ளன. மேலும் இவற்றின் எலும்புகளும் குகைகளில் குறிப்பிட்ட வடிவத்தில் பரப்பிப் போடப்பட்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது அக்கால நியாண்டர்தால் மனிதர்கள் குகைக் கரடிகளை தெய்வமாக வணங்கியிருக்க வேண்டும் என இந்த ஆய்வாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர். குகைக் கரடிகள் அழிந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இந்த வாதங்கள் முற்றுப் பெறாமல் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

No comments:

Post a Comment